பொலிஸ் மா அதிபர் நேரில் அழைக்கப்பட்டு பொதுஜன பெரமுனவினர் கடும் விசனம் : ஜனாதிபதி கோட்டாவும் பாய்ச்சல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையில் சனிக்கிழமை (14) நடைபெற்ற சந்திப்பின்போது பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன நேரில் அழைக்கப்பட்டு அவர் மீது கடுமையான விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற தொனியில் பொலிஸ்மா அதிபரைக் கடிந்து பேசியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவந்துள்ளதாவது,

கடந்த திங்கட்கிழமை அப்போது பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக ஒன்றுகூடியவர்கள் காலிமுகத்திடலுக்குச் சென்று அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக போரடிக்கொண்டவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியதால் பாரிய வன்முறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தாமதித்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் மா அதிபர் முன்னிலையில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அசலுவலகங்கள் என்பன அடித்து நொருக்கப்பட்டதோடு, தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின.

அதனைவிடவும், முக்கியமான பொருட்கள் சூறையாடப்பட்டும் இருக்கின்றன.

இவ்வாறு நிலைமைகள் பாரதூரமடைகின்றபோது பொலிஸ்துறை அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுஜனபெரமுனவின் உறுப்பினர்கள் பொலிஸ்மா அதிபரிடத்தில் கேள்விகளைத் தொடுத்துள்ளனர்.

அதனையொத்த வினாவையே ஜனாதிபதி கோட்டாபயவும் பொலிஸ்மா அதிபரிடத்தில் கோரியுள்ளார்.

20-க்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

20 ஆம் திருத்தம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹாரிஸ், பைசல் காசிம், எம்.எஸ் தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்திற்கு இனி ஆதரவு வழங்குவதில்லையென இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அறிவித்திருந்த நிலையில், எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக இதன்போது கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌஃபீக் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி,

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் – வெளிவிவகார அமைச்சர்,

தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்.

காஞ்சனா விஜேசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்.

எரிவாயு கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று (14) பல பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாவின்ன, கொம்பனித்தெரு, மட்டக்குளி ஆகிய பகுதிகளில் எரிவாயு வழங்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிவாயு விநியோகம் செய்யப்படும் என பொலிசார் அறிவித்ததையடுத்து, கொம்பனித்தெரு காவல் நிலையம் முன்பு ஏராளமானோர் திரண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

Posted in Uncategorized

SLPP ரணில் தலைமையிலான அரசுக்கு ஆதரவு!

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதியுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

அரசியல் சூழ்நிலை குறித்து அநுரவுடன் கலந்துரையாடினார் அமெரிக்கத் தூதர்

அமெரிக்கத் தூதர் ஜூலி சங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க தூதர், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜே.வி.பி.யின் விஜித ஹேத்தும் உடனிருந்தார்.

Posted in Uncategorized

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது- சி.சிறிதரன்

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்றுகொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

70வதுகளில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டினி போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையில் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.

முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக ஒரு ஆசனத்துடன் பாராளுமன்ற வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.

அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு அதே ராஜபக்ச அரசியல் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறுதான் செய்திகள் வந்தன.

ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும்போதுதான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.

அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டுசெல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்

இந்த நிலையில் போராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை தொடர்ந்து விசாரணைகளிற்கு பிரதமர் இடமளிக்கக்கூடாது-அருட்தந்தை மா.சத்திவேல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து விசாரணைகளிற்கு புதிய பிரதமர் இடமளிக்கக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்போடு முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மிகவும் உணர்வு பூர்வமாக ஈகை சுடரேற்றும் நிகழ்வு நடாத்தபடவுள்ளது. அந்நாளில் அரசியல் பிரகடனமும் செய்யப்படும். இதற்கு

எந்த வகையிலும் எவராலும் தடைகளோ, அதனை நடத்துகின்றவர்களுக்கு நிகழ்வை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதற்கோ புதிய பிரதமர் இடமளிக்கக்கூடாது. “கோட்டா கோ கம ( கோட்டா போ கிராமம்) போராட்டத்திற்கு தடை ஏற்படாது” என கூறியதைப் போன்று முள்ளிவாய்க்கால் சுடரேற்றும் நிகழ்வுக்கும் தடைகள் ஏற்படாது அதனை நடத்துவதற்கு இடம் அளிப்பது ஜனநாயகமாகும்.

கடந்து 2015ஆம் ஆண்டைத் தொடர்ந்து மைத்திரி மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பாரியதடைகள் இருக்கவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்து கோத்தா ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நடந்தது.

இதனை ஒழுங்கு செய்தவர்கள், பங்கேற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு காரணமின்றி விசாரணைக்கும் அழைக்கப்பட்டனர். இது போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டவர்களை கூட்டாக நினைவு கூறுவதையும் வலி சுமக்கும் மக்கள் ஆறுதல் அடைவதையும் தடுக்கும் அநாகரிக செயலாயும் அமைந்தது. இது இனியும் நடக்கக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏனெனில் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து கொந்தளிக்கும் அடித்தட்டு மக்கள் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டம் நடத்துவதோடு கொழும்பில் காலிமுகத்திடலில் இளைஞர்களால் தொடர் போராட்டம் நிகழ்த்தப்படுகின்றது.

அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் அறிவித்த நிலையிலும் போராட்டம் தொடர்வதை தமிழ் மக்கள் அவதானித்து வருகின்றனர். இவற்றிற்கு பாரிய அளவில் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை முன்னால் பிரதமரின் அடவாடித்தனத்தைத் தவிர நடத்துபவர்களை விசாரணை என அழைக்கவில்லை.

இதனைவிட தற்போதைய புதிய பிரதமர் “கோட் கோ கம” ( கோட்டா போ கிராமம்) மீது கை வைக்க மாட்டேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது அவரின் அடுத்த கட்ட அரசியல் இராஜதந்திர செயற்பாடாக இருக்கலாம். எனினும் இக் கூற்று போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. போராட்ட சுதந்திரத்தையும் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே.

காலிமுகத்திடல் நடக்கும் போராட்டமும் அதனையொட்டி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் போராட்டம் வயிறு மற்றும் பொருளாதாரம் சார்ந்தது. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிவிட்டால் போராட்டம் நகரும், அதற்கு ஆயுள் இல்லை என பிரதமர் நினைத்திருக்கலாம். ஆதலால் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கலாம்.

ஆனால் வடகிழக்கு மக்களின் போராட்டம் தமிழர்களின் வாழ்வோடும், உயிரோடும், இரத்தத்தோடும் கலந்த நீண்டகால அரசியல் போராட்டமாகும். இன அழிப்பு, இனப்படுகொலை, உடைமைகள் இழப்பு, அவர் இழப்பு என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள், இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் கொலைகளை நேரில் பார்த்தனுபவித்தவர்கள் அரசியல் இலக்கை அடைவதில் உறுதியோடு மக்கள் சக்தியாக திரண்டு வருடா வருடம் மே பதினெட்டில் ஈகைச்சுடர் ஏற்றுகின்றனர். இது தமிழர்களின் அரசியல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வித்திட்டு ஆதரவளித்தவரும் தற்போதைய பிரதமரே இவர் பிரதமராக தலைமையேற்று இருக்கும் இக் காலகட்டத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ, கோசங்களோ இன்றி அமைதியான முறையில் உயிர்த்தியாகமானவர்களை நினைந்து அவர்களுக்கு ஈகைச் சுடரேற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்துவது ஏற்படுத்துவதற்கும் இடமளிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களை அணுகவும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெற்கின் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் வடக்கின் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தம்முடைய துயர் போக்கவும் வலிகளை ஆற்றிக் கொள்வதற்கும் துணை நிற்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

”அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை”: ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்!

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார்.

நேற்று (12) ஜனாதிபதி அனுப்பியிருந்த கடித்திற்கு பதில் வழங்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராக மக்களுக்கு பணியாற்ற அர்ப்பணிப்பு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள  விருப்பமில்லையென்று கூறவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களின் இறையாண்மை மீது மேற்கொள்ளப்படும் தாக்குல் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தில்  அமைக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல்,உதய, வாசு தலைமையிலான அணியினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட ஏனைய மலையகக் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சிலருடன் நேரடியாக தொலைபேசியிலும் உரையாடியுள்ளார்.  எனினும் ரணிலின் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்துள்ளதுடன் ஒரு சிலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Posted in Uncategorized