கோட்டாபய பதவி விலக வாய்ப்பு உள்ளதா? முன்னாள் தேர்தல் ஆணையாளர் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பினால் தனது பதவியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

1953 ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பின்னர் 69 வருடங்களில் தென்பகுதியில் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அழுத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவி விலகினால் செயற்படுவதற்கு ஏதுவாக ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தினால் ஒருவர் நியமிக்கப்படும் வரை பிரதமரே ஜனாதிபதியாக செயற்பட முடியும்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்து- தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? என்பது குறித்தும் சிக்கல் உள்ளது.

மீண்டும் அவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்றால் சபாநாயகருக்கு ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதிகாரம் உள்ளது என்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும்- மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறித்த பிரேரணை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனக் கடிதங்கள் நேற்று, (07) பிற்பகல் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

நிதித் துறையில் அனுபவமிக்க கலாநிதி வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பணிப்பாளர், துணை ஆளுநர் மற்றும் சிரேஷ்ட பிரதி ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமானி பட்டப் பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் மலேசியாவின் சியசன் மத்திய நிலையத்தின் வருகைதரு ஆராய்ச்சி பொருளியலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் க்ரோஃபர்ட் இல் பொதுக்கொள்கை, பிரயோகப் பேரினப் பொருளியல் பகுப்பாய்வு மையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

கே.எம்.எம். சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

நிதி அமைச்சின் அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்துள்ளார்.

சிறிவர்தன அவர்கள், பேரினப் பொருளாதார முகாமைத்துவம், பேரினப் பொருளாதார முன்கணிப்பு, நிதிக் கொள்கை, மத்திய வங்கியியல், அரச நிதி மேலாண்மை, அரச கடன் முகாமைத்துவம், நிதி செயற்பாட்டியல் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சர்வதேசப் பயிற்சியைப் பெற்றுள்ளார்.

இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர் – சஜித் பிரேமதாச

வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது. எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம் என தலவாக்கலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, தேசிய சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனை பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலை தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம். அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும். மலையக மக்களின் எழுச்சிக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியாக மாறிய பொருளாதார வளர்ச்சி-ஆசிய அபிவிருத்தி வங்கி

2022 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைவு. 2021ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருக்கும். கடன், குறைந்த அன்னிய கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) அடுத்த ஆண்டு 2.5% சிறிதளவு முன்னேற்றம் இருக்கும் என்று கணித்துள்ளது

Posted in Uncategorized

ஜனாதிபதி இராஜினாமா செய்யும்வரை எந்தப் பிரேரணையையும் ஏற்கத் தயாராக இல்லை-அனுரகுமார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் வரை இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது செய்யப்படும் எந்தவொரு பிரேரணையும் மக்களின் வன்முறைப் போராட்டங்களைத் தணிக்காது, ஏனெனில் மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

Posted in Uncategorized

அமைச்சர்கள் இராஜினாமா ஒரு அரசியல் நாடகம் – அதிகார போராட்டத்தில் பசில்

இலங்கையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ச நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்த போதிலும், பசில் ராஜபக்ஷவே அரசாங்கத்தின் நிதிகளை நிர்வகித்து வருகிறார். நிதியமைச்சர், மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பொது நிதிக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் இல்லாத போதிலும், பணம் அச்சிடுதல் தொடர்கிறது.

ஏப்ரல் 6, 2022 (நேற்று) மட்டும் இலங்கை மத்திய வங்கி 119.08 பில்லியன் ரூபாய்யை அச்சிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், பசில் ராஜபக்ஷ இன்னும் அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்கி அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரங்களை பிரயோகித்து வருகின்றார்.

பல அமைச்சர்கள் இராஜினாமா தொடர்பான பொதுப் பதிவேட்டில் கையொப்பமிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைத்துள்ள போதிலும், அமைச்சர்கள் பலர் தமது தனிப்பட்ட அலுவலகங்கள் ஊடாக அமைச்சுக் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜினாமா செய்ததாகக் கூறும் அமைச்சர்கள் எவரும் இதுவரை தங்களின் உத்தியோகபூர்வ வாகனங்களையோ, அரச சொத்துக்களையோ ஒப்படைக்கவில்லை

பசில் ராஜபக்ச எதிர்வரும் சில தினங்களில் நிதியமைச்சில் மீண்டும் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதாகவும், ஜனாதிபதி பதவி விலகினால் ஜனாதிபதி பதவியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கைப்பற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்சவும் அவர் ஊடாக நாட்டை ஆட்சி செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகார பரிமாற்றத்திற்கு தேவையான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் மேலும் பெறுவதற்காக அரசாங்கத்தின் பல சுயேச்சை உறுப்பினர்கள் மற்றும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக அவர் தனிப்பட்ட பேச்சுக்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம் தெரிவிப்பு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்.7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்ட முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்வர் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும் நுவரலியா வழியாகவும் ஹட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.

அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்தனர்.

தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. அவர் அங்கு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கை நிலைவரங்கள் குறித்து நியூசிலாந்து உன்னிப்பாக அவதானம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதனால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நியூசிலாந்து பிரமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்தார்.

இலங்கை தலைவர்களின் நடவடிக்கைககளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டுவருகின்றார்கள்.

இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை தலைவர்களை தாங்கள் கண்டிங்கின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜெசிந்தா சில நிமிடம் தாமதித்தார். பின்னர் இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியாக இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம் என தெரிவித்ததார்.

இதேவேளை, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுதா கூறுகையில், பேச்சு சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்ற ஜனநாயக விழுமியங்களை நியூசிலாந்து அரசு மிகவும் உறுதியாக கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நியூசிலாந்து மிகுவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், சகல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இலங்கையில் நிலையான தீர்வுக்கு பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை , அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இலங்கை மக்களுக்க ஆதரவாக புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது உலகளாவிய ரீதியில் கவனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.