டெலோ சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கின்றது – செல்வம் அடைக்கலநாதன் பா.உ

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிக்கின்றது என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ புறக்கணிக்கின்றது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டும்படியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். தற்போதும் அவ்வாறான நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டுகின்ற பட்சத்திலே மேற்கொண்டு சிந்திக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றோம்.

தற்போது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருக்கினற இந்த தருணத்திலே நாங்கள் அதனையும் புறக்கணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போது அங்கிருக்கின்ற பொலிசாரால் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தற்போது வடக்கு கிழக்கை நோக்கியே அமைச்சர்களின், அரச பிரதிநிதிகளின் பயணங்கள் இருக்கின்றது. காரணம் சிங்கள மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளார்கள். இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியிலே வந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுகின்ற போது சிங்கள மக்கள் தங்களுக்குச் சார்பாக மாறுவார்கள் என்ற யுத்தியோடு தமிழ்ப் பிரதேசங்களிலே வந்து புத்த கோயில்களை அமைப்பதும், எமது மக்களின் போட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவை நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அடிப்படையாகப் பொருளாதார ரீதியிலே தன்னை ஒருபோதும் நிவர்ததி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது. வெளிநாடுகளில் இவ்வாறான நிலைமைகள், தேர்தல் தோல்விகள் என்பன ஏற்பட்டால் அதன் தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விடுவார்கள். இதேபோல் இன்றைக்கு மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்ற இந்த நாட்டின் தலைவர்கள் இராஜினாமா செய்வதுதான் சாலச் சிறந்தது என்பதோடு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

களுதாவளையில் சிறி சபாரெத்தினம் ஞாபகாத்த பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பு மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் பயணிகள் நிழற்குடையொன்று அமைக்கப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான ஞா.யோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா), உபதலைவர் இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபைப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், களுதாவளை தேசியப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

களுதாவளை தேசியப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச மக்களின் நன்மை கருதி அவர்கள் பயன்பெறும் வகையில் களுதாவளை தேசியப் பாடசாலைக்கு அருகாமையில் இப் பயணிகள் நிழற்குடை கட்சியின் சுவிஸ் கிளையின் நிதியுதவியில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் அவர்களுக்கு பயனளிக்கும் முகமாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் – ரவூப் ஹக்கீம்

கொரோனா வைரஸால் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கதரக்கதர எரித்த சாபத்தையே இந்த ஆட்சியாளர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாட்டினுடைய பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்களை படுபாதாளத்துக்குள் அரசாங்கம் தள்ளியுள்ளது. நாட்டு மக்களின் சாபத்தைப் பெற்ற அரசாங்கமாக இது இருக்கிறது. வீட்டுக்குப் போங்கள் என்று சொல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்கள் மாறியுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் காங்கிரஸின் 5ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை இளைஞர் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் இந்தியா ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்திற்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு எந்த நாட்டில் போய் வாங்குவது.

மீண்டும் இவ்வாறான நெருக்கடி ஏற்படும். இவ்வாறான நிலைமை கடந்த காலங்களில் கிரேக்கத்திலும், லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டிருந்தன. அந்த நாடுகளில் அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சியை அமைத்தாலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தன. அவ்வாறான நிலைமைதான் எமது நாட்டுக்கும் ஏற்படப் போகின்றது” என்றார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியாது: இந்திய நிறுவனமான IOC அறிவிப்பு

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முன்னர் எதிர்பார்த்து இருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக வேறு விநியோகஸ்தரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“ஜனாதிபதியுடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை”-ஜனா

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஜனாதிபதியினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும் எனதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு,திருப்பழுகாமத்தில் வைத்தியர் க.விஸ்வலிங்கம் அவர்களின் ‘நோய் நிவாரணி’ நூல் வெளியீடும்,சித்த வைத்திய முகாமும்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசுகின்றேன் என்று எங்களை அழைத்து எங்களை பகடைக்காய்களாக மாற்றி சர்வதேச அழுத்தங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறான நாடகத்தினை நடாத்துகின்றார் என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகயிருக்கின்றது.

இதேபோல சர்வகட்சி மாநாட்டை கூட்ட நடவடிக்கையெடுக்கப்படுகின்றது. சர்வகட்சி மாநாடும் ஒன்றுதான் பாராளுமன்றமும் ஒன்றுதான்.அதில் பங்குபற்றுவது குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பார்கள். ஜனாதிபதி தமிழ் மக்களுக்கான தீர்வுக்கான ஒரு பேச்சுவார்த்தையினை நடாத்தவேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினையுள்ளது அதற்கு தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏற்றுக்கொண்டன் பின்னரே அரசியல் தீர்வு குறித்து பேசமுடியும்.

மேலும் ஒரு அரசியல் தீர்வினை இந்த பாராளுமன்றம் ஊடாக கொண்டு வர வேண்டுமானால், அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமானால் பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும் பான்மையிருக்கவேண்டும். ஜனாதிபதியுடன் இருந்த 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகிச்சென்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் இல்லை. எனவே ஜனாதிபதியினால் ஒரு அரசியலமைப்பினை கொண்டுவரமுடியாது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எவ்வாறு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்கமுடியும். அவருடன் பேசுவதன் மூலம் எதுவும் நடைபெறப்போவதில்லை” என்றார்.

Posted in Uncategorized

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எதுவும் தெரியாது- ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்த விபரத்தை நான் சொந்த ஊரில் இருந்த போது தெரிந்து கொண்டேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் உள்ளது என்று எனக்கு தெரியாது.

அவருக்கு என்ன சிகிச்சை வழங்கப்பட்டது, எந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்றும் எனக்கு தெரியாது. மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை விபரங்களை தலைமை செயலாளரிடம் தான் கேட்டு தெரிந்துக் கொள்வேன்.

சிகிச்சை பெற்ற போது ஒருமுறை கூட ஜெயலலிதாவை நான் நேரில் பார்த்ததில்லை. கடைசியாக மெட்ரோ ரெயில் திறப்பு விழாவில் தான் கடைசியாக பார்த்தேன். அதன் பின் அவரை பார்க்கவில்லை என அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி இன்று ஆஜரானார்.

அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது 75 நாட்களும் நான் மருத்துவமனைக்கு சென்றேன். அதில் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்தேன். சசிகலா தான் உடன் இருந்து கவனித்துக்கொண்டார் என வாக்குமூலம் அளித்தார்.

தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த, கோட்டாபயவால் ஒருபோதும் வெல்லவே முடியாது – சரத் பொன்சேகா

தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவருக்கான தேர்தலின்போதே மகிந்த ராஜபக்சவை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் வெறுத்துவிட்டார்கள். அந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வடக்கில் எனக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. அதற்காக வடக்கு மக்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது

மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

இதேவேளை சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார்.

அரசியற் தீர்வு குறித்து பேசவா ஜனாதிபதி அழைக்கின்றார்? –ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.கேள்வி

ஜனாதிபதியிடம் இருந்து சாதகமான சமிஞ்சை கிடைக்காத வரையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.

கட்சியின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி முதலில் இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டு வெளிப்படையாக கூறினால் மாத்திரமே பேசசுவார்த்தைக்கு செல்வோம் என அவர் கூறினார்.

மேலும் கட்சியின் நிலைப்பாடு குறித்து பங்காளிக் கட்சிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர்களும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் புத்தர் சிலை நிறுவுகின்ற செயற்பாடு நேற்றும் நடைபெற்ற நிலையில் இந்த அரசாங்கம் இக்கட்டான நிலைமையில் இருக்கின்ற சந்தர்ப்பத்திலே அவர்களை காப்பாற்றும் செயற்பாட்டில் ஈடுபடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற நாடுகளினுடைய ஒட்டுமொத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம் என்ற வாய்ப்பினை ஜனாதிபதி பெறப்போகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அரசியற் தீர்வுக்காத்தான் அழைக்கின்றார் என்று நாம் கற்பனையில் இருந்தாலும் எதற்காக பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார் என்ற விடயம் ஜனாதிபதி செயலக நிகழ்ச்சி நிரலில் கூடச் சொல்லப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

1988ன் பின் தொடர்ச்சியாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சி ரெலோ மாத்திரம் தான்- செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் ஜனா பா.உ

1988ல் அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ற்கு முன்பு இருந்த கூட்டமைப்பு வேறு, 2009ற்கு பிற்பாடு இருக்கும் கூட்டமைப்பு வேறு. 2009ற்குப் பின்னர் தனிக் கட்சி, தனிமனித கௌரவம் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு பிளவுபட்டிருக்கின்றது. 2010 தேர்தலுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 2015 பாராளுமன்றத் தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது. வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்களே அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.

இன்று மூன்று கட்சிகள் தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன. அதிலும் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றது. தமிழரசுக் கட்சி கூட 2001 கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே அதில் அங்கம் வகித்தது. 2004லே ஆனந்த சங்கரி அவர்கள் கூட்டமைப்பின் அப்போதைய சின்னமான உதயசூரியனை கொண்டு சென்றமையால் சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம் தூசு தட்டி எடுக்கப்பட்டதுதான் வரலாறு.

எனவே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பு தொடங்கியதில் இருந்து இன்று வரைக்கும் இருப்பது மாத்திரமல்லாமல் 1988ம் ஆண்டு அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான். 2015ம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த நாங்கள் தற்போது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதில் சக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தாங்கள் ஒரு பெரியகட்சி என்று மக்கள் மத்தியில் தங்கள் பெயரைக் கொண்டு செல்வதற்காக இந்த வேலைத்திட்டத்தைச் செய்வதாகக் கூறியிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பெரிய கட்சிதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு 3 பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு வெறுமனே ஐந்து உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள். ஆறாவது உறுப்பினரான தேசியப் பட்டியல் உறுப்பினரை எம்முடன் கலந்தாலோசிக்காமல் அவர்களே பெற்றுக் கொண்டார்கள். அந்த தேசியப் பட்டியல் எமக்குக் கிடைத்திருந்தால் நாங்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.

கூட்டமைப்பைச் சிதைப்பதற்கு அல்லது அதிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு கூட்டமைப்பினை மேலும் பலவீனமாக்குவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். பல உதாசீனங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதன் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009ற்குப் பின்னர் இந்தளவிற்கு பின்னடவைச் சந்தித்திருக்கின்றது.

ஏனெனில் 2004லே 24 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் படிப்படியாக 18, 16 என்றாகி இன்று தேசியப் பட்டியலுடன் சேர்த்து 10ற்கு வந்து நிற்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு எங்களது மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.