இலங்கைக் கடற்படைக்கு பயிற்சிகளை வழங்க திருகோணமலைக்கு வந்தது இந்திய ‘நிரீக்ஷக்’ கப்பல்

இலங்கைக் கடற்படையினருக்கு ‘கலப்பு வாயு’ பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

டைவிங் பயிற்சி வழங்கலுக்கு ஏதுவான இந்தக் கப்பல், கடற்படையின் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கைக் கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

இலங்கையை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்தியக்கப்பலின் கட்டளை அதிகாரி, இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியக்கப்பல் இலங்கையில் தரித்துநிற்கவுள்ள எதிர்வரும் 10 நாட்களில் வழங்கத்தக்க டைவிங் பயிற்சிகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான மேற்படி ‘நிரீக்ஷக்’ கப்பல், ஆறுபேருக்கு ஏதுவான கப்பல் தளங்கள் இரண்டையும் மூவருக்கான டைவிங் வசதி ஒன்றையும் கொண்டமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி வசதியான மீட்பு வசதிகளையும் இக்கப்பல் உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கைக் கடற்படையினருக்கு இதனைப்போன்ற பயிற்சிகளை வழங்குவதற்காக இக்கப்பல் ஏற்கனவே கடந்த 2019 ஆம் அண்டு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.

இவ்வாறு இலங்கைக் கடற்படையுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவது இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் ஓரங்கமாகும் என்று இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நீதி வேண்டிப் போராடும் பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருடன் நேரில் சந்திப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று (28) நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தால் ஆதரிப்பேன் – திஸ்ஸ விதாரண

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்த நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் பலர் கடந்த காலங்களில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினார் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகின்றன.

உலகில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளி;ல் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் நடைமுறையில் இல்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் தீவிரவாத கொள்கைகள் ஏதும் கிடையாது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

‘தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்த்துள்ளார்.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 1979ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலே தற்காலிகமாக பயங்கரவாத தடைச்சட்டமானது கொண்டுவரப்பட்டாலும் 1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழீழத்திற்கான ஆணையைக் கேட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; மக்கள் பிரதிநிதிகள்கூட இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற விமர்சனம் தற்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று போராடுவது இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கக்கூடாது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுக்கொண்டு வந்தார்கள்.

எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டம் நடத்தி அடிஉதை பட்டார்கள். எமது இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்த நேரம் அவர்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற நோக்கத்தில் கொண்வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது இன்றும் இந்த நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது.

ஒருகாலத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் எம்மை அடக்கி ஒடுக்கும் ஒரு சட்டமாகவே நான் இதனை பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்தச் சட்டமானது இந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அதாவது இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கும் சட்டமாக இது இருக்கக்கூடாது கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றது என்றும் கூறலாம். ஏனென்றால் இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நாங்கள் மீள்பரிசீலணை செய்வோம் என்று கூறியிருக்கின்றார்கள். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமல் போனால் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமான நிலைக்குச் செல்லும் என்பது இந்த அரசுக்குத் தெரியும்.

அந்த வகையில் இந்த அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அதாவது சிறுசிறு மாற்றங்களை கொண்டுவருவதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர் இன்று ஜெனஜவாவில் ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரமும் உள்ளடங்கப்பட்டுள்ளதுடன், மார்ச் மாதம் 3ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

இதன்போது, மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர், இலங்கை தொடர்பான அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார் .

2021 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான கௌரவம் உள்ளிட்டவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் அவதானிப்புகள், பரிந்துரைகள் உள்ளிட்டவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பதிலும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் சார்பில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி, ஆகியோர் ஜெனீவாவுக்கு சென்றுள்ளனர். அதே நேரம் நாளை தினம் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக 46/1 என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்பத குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் சு.க. ஆதரவாளர்களை திரட்டி வீதிக்கு இறங்குவோம் – தயாசிறி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் அதற்கு எதிராக அனைத்து சு.க. ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி வீதிக்கு இறங்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து மாநாடுகளை நடத்துவதால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும் அந்த சவால்களைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம்.

எனினும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவினர் எம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

எவ்வாறிருப்பினும் பொலன்னறுவை மக்கள் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர்.

எனினும் அவர் எந்த பதவிகளையும் ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

2023 மார்ச் 23 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் செப்டெம்பர் முதல் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வசமாகும்.

அதற்கு முன்னர் ஜூனில் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்குமாயின் அதற்கும் சு.க. தயாராகவே இருக்கிறது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இது தொடர்பில் சு.க. தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துரையாடவுள்ளோம். அதற்கமை உத்தேச உள்ளூராட்சி தேர்தலில் சு.க. பாரிய கூட்டணியுடன் வெற்றிபெறும் என்று உறுதியளிக்கின்றேன்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார். அவர்களது தொகுதிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிகளவான வாக்குககளை வழங்கி மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். எனவே அபிருத்திகளால் மக்கள் பலத்தை பெற்றுவிட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அதனை விட அரசியல் பலம் மேலானதாகும். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு மாற்று வழியுடன் பயணிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து கொண்டே அவருக்கான அதிகாரங்களை குறைத்துக் கொண்டார்.

எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அதனை செய்யவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதாகக் கூறியதை நிறைவேற்றிக் காட்டிய ஒரேயொரு தலைவர் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தனக்கு அது தொடர்பில் முன்கூட்டியே எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்துக் கூறினார்.

மனசாட்சியின் பிரகாரமே அவர் அதனைக் கூறினார். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை சிறைபிடிக்க முயற்சித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் அனைவருடனும் வீதிக்கு இறங்கவும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியின் தலைவருக்கு எதிரான சதியின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியுமே உள்ளன, எனவே எம்மை மீண்டும் அவர்களுடன் இணைக்க எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.

Posted in Uncategorized

இலங்கை அகதிகள் ​ஜேர்மனியின் 50 நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம்!

ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்துமாறு ஜேர்மன் அதிகாரிகளை வலியுறுத்தியும் இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

‘தமிழீழத்திற்கான மனித உரிமைகள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை அவர்கள் ஏந்தி இருந்தனர்.

கடந்த ஆண்டு, ஜேர்மனி 50 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகளை இலங்கைக்கு நாடுகடத்தியது.

ஜேர்மன் குடிவரவு அலுவலகங்களில் வழக்கமான நியமனங்களின் போது, ​​அகதிகள் அடிக்கடி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் காவலில் வைக்கப்பட்டுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

“எங்கள் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன, எங்கள் இரங்கல் குற்றமாக்கப்பட்டுள்ளன” மற்றும் ‘திட்டமிடப்பட்ட இனப்படுகொலை’, ‘நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன’, ‘கலாச்சாரங்கள் அழிக்கப்படுகின்றன’ போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தனர்.

மார்ச் 2021 இல், ஜேர்மன் அதிகாரிகள் பாரிய சோதனைகளை நடத்தி நாடு முழுவதும் 100 தமிழ் அகதிகளை தடுத்து வைத்தனர்.

வீடுகளை சோதனையிட்டதுடன், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்களுடைய அனுமதியைப் புதுப்பிக்குமாறு அதிகாரிகள் அழைத்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் கட்டிடத்திற்கு வந்தவுடன், அவர்கள் காவல்துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களின் தொலைபேசிகளைப் பறிமுதல் செய்தனர் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் தொடர்புகொள்வதைத் தடுத்தனர்.

கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பான பிரேரணையை உருவாக்குவதிலும் இணை அனுசரணை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்த போதிலும் ஜேர்மனி நாடு கடத்தல்களை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடமாடும் சேவை ஏமாற்று வேலை – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

நடமாடும் சேவை ஏமாற்று வேலை: வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணிப் பிரச்சனை தொடர்பான நடமாடும் சேவையால் மக்கள் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அதனை தீர்ப்பதற்கு அமைச்சரவை நேரடியாக கையாளும் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (27) இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவையில் கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த நடமாடும் சேவை என்பது வரவேற்கத்தக்கவிடயம். ஆனால் எமது மக்கள் இந்த சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக அந்தந்த பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் மக்களுக்கு சொல்லும் பதிலையே இப்போதும் சொல்லப்போகின்றார்கள். எனவே மக்கள் இதில் தீர்வைப்பெற்று கொள்ள முடியும் என்பதில் வாய்ப்பே இல்லை.

பலவருடமாக தீராதுள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியும் என்ற ஆர்வத்தோடு மக்கள் வந்துள்ள நிலையில், இந்த நடமாடும் சேவையினுடைய செயற்பாடு நல்லதாக இருக்கவில்லை என்பது எனது கருத்து. இந்த நடமாடும் சேவைகள் தொடர்ச்சியாக ஒரே தவறையே விட்டுக்கொண்டிருக்கின்றது. அதனை நிறுத்துவதென்றால் அமைச்சரவை ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும். இந்தகாணி பிரச்சனையை நேரடியாக கையாளுகின்ற ஒரு வழிமுறையை அவர்கள் செயற்படுத்த வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க, இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்!

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

ஈழத்தமிழர்கள்!

ஈழத்தமிழர் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதிய அறிக்கை ஒன்றை நேற்று முன்நாள் வெளியிட்டிருக்கிறது.

இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எதற்கும் தீர்வு கிடைக்காத நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

போர்க்குற்றங்கள்!

போர்க்குற்றங்களை இழைத்தவர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதிரான குற்றங்களை மேலும், மேலும் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

குடிமைப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 31 அமைப்புகளை இலங்கை இராணுவம் தான் நிர்வகிக்கிறது. காவல் துறையின் பணிகளையும் இராணுவமே மேற்கொள்வதால் வடக்கு மாநிலத்தில் வாழும் தமிழ்ப் பெண்கள் கொடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் புத்தமத பாரம்பரிய சின்னங்களைக் காப்பது, காடுகளை காப்பது என்ற பெயரில் தமிழர்களுக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு நவம்பர் வரை நிலம் சார்ந்து 45 மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்து ஆலயங்களில் புத்தர் சிலை சட்டவிரோதமாக நிறுவப்படுகிறது.

அனைத்தும் அதிர்ச்சி!

தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றனர் என்பன உள்ளிட்ட ஏராளமான குற்றச்சாட்டுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் அதிர்ச்சி அளிப்பவையாகும்.

ஐயமில்லை!

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாங்களாகவே நடவடிக்கை எடுக்கப் போவதாக 2 ஆண்டுகளுக்கு முன் மனித உரிமைப் பேரவையில் வாக்குறுதி அளித்த இலங்கை, அதை நிறைவேற்றவில்லை. மாறாக, தமிழர்களை அச்சுறுத்தி அடிமைப்படுத்தும் பணிகளைத் தான் செய்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பது, அவர்களை அவர்களின் சொந்த பூமியிலிருந்து வெளியேற மறைமுகமாக அழுத்தமும், மிரட்டலும் விடுப்பது போன்ற செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. பன்னாட்டு விதிகளின்படி இவையும் இனப்படுகொலைக்கு ஒப்பான செயல்கள் தான் என்பதில் ஐயமில்லை.

மன்னிக்க முடியாத குற்றங்கள்!

மன்னிக்க முடியாத அளவுக்கு போர்க்குற்றங்களை இழைத்த ஒரு நாடு, அது குறித்த குற்ற உணர்வே இல்லாமல் தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களை நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதிலும் குறிப்பாக உணவுக்கும், எரிபொருளுக்கும் வழி இல்லாமல் தவிக்கும் இலங்கைக்கு உதவிகளை வாரி வாரி வழங்கும் இந்திய அரசு, இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் குற்றச்சாட்டை வேடிக்கை பார்க்கக் கூடாது. இலங்கைக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்காமல், அதன் இனவெறித் தாக்குதல்களைத் தடுக்காமல் உதவிகளை மட்டும் வழங்குவது இலங்கையின் செயல்களுக்கு இந்தியா துணை போவதாகவே பார்க்கப்படும்.

தந்தை நாடு!

பொதுவான கடமைகளைக் கடந்து ஈழத்தமிழர்களின் தந்தை நாடு என்ற வகையில், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் சிறப்புக் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. அதனால், ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும். அதைத் தான் உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஐ.நா.மனித உரிமை!

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கை வரும் மார்ச் 3ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதத்தில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கைக்கு பாதிப்பு; தேயிலை ஏற்றுமதியிலும் தாக்கம் ஏற்படும் – நிதி ஆய்வாளர்கள்

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளால் இலங்கை நேரடியாக பாதிக்கப் படும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையின் முன்னணி தேயிலை இறக்குமதி யாளர்களில் ஒன்றான ரஷ்யாவுடனான ஒப்பந்தங்களில் இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் கிடைப் பதில் சிக்கல் ஏற்படும் என்றும், ஐரோப் பிய நாடுகள் ரஷ்ய வங்கி அமைப்புடன் தனித்தனி யாக கொடுக்கல் வாங்கல் செய்தால் இலங்கைக்கு எதிர்மறையான அணுகுமுறையே ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அண்மைக் காலமாக இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து வந்துள்ளனர். அந்தத் தொகை அண்ணளவாக 30% ஆகும். யுத்த சூழ்நிலையால் எண்ணிக்கை குறைவது தவிர்க்க முடியாததாகி விடும்.