அப்பாவி தமிழ் இளைஞர்களை கைதுசெய்யும் பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுங்கள்-றிசாட்

அப்பாவி இளைஞர்களை கைது செய்யும் மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றி மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக உருவாக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“பயங்கரவாத தடைச் சட்டமானது இலங்கையிலே ஒரு அவசரத்திற்காக தற்காலிகமாக கொண்டுவரப்பட்டது. அந்தச்சட்டத்தினை பயன்படுத்தியே பாராளுமன்ற உறுப்பினரான என்னை கைதுசெய்தார்கள். அதே போல கிளிநொச்சி முல்லைத்தீவுஇ மட்டக்களப்பு பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் இரண்டு வருடம் என சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்கின்றார்கள் என்ற அடிப்படையில அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்களிடம் பணம் இல்லை அதனால் சட்டத்தரணிகளை நியமிக்கும் வாய்ப்பில்லாமல் மிகவும் கஸ்ரப்படுகின்றார்கள். அதேபோல 300வரையான முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் 40 பேருக்கு வழக்குத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஏனையவர்களுக்கு வழக்குத்தாக்கல் எதனையும் செய்யாமல் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழே சிறையிலே வாடுகின்றார்கள்.

எனவே இந்தச்சட்டத்திலே உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று உலகமே வேண்டி நிற்கின்றது. இந்த நாட்டிலே ஆகப்பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக ஆடைத்தொழிற்சாலைகள் இருக்கின்றது. எனவே அதனால் கிடைக்கின்ற ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிபந்தனையாக வைத்து இந்த சட்டத்தை மாற்றி சர்வதேசத்தோடு உள்ள சட்டங்களாக உருவாக்குமாறு கேட்டிருக்கின்றார்கள். அந்த வரிச்சலுகை கிடைக்காமல் போனால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி வரக்கூடிய ஆபத்து ஏற்படும். எனவே நாம் இந்தமோசமான பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து மனிதர்களுக்கு ஏற்ற சட்டமாக மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்றார்.

அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்திவைப்பு-பெப்ரல் அமைப்பு

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை தெளிவாக உள்ளது. கோவிட்19 வைரஸ் தாக்கத்தினால் தேர்தல் பிற்போடப்படவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். நாட்டின் தேர்தல் முறைமை ஆட்சியாளர்களினால் தொடர்ச்சியாக மாற்றியமைப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சருக்கு தேர்தல் சட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒரு வருட காலத்துக்கு பிற்போடும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட்19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 வைரஸ் பரவல் தாக்கம் செலுத்தும் வேலையில் பாராளுமன்ற தேர்தலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சிறந்த முறையில் நடத்தியது. தற்போதைய அரசாங்கம் கடந்த வருடங்களில் எதிர்க் கட்சி பதவியில் இருக்கும் போது உரிய நேரத்தில் தேர்தலை நடாத்துவதற்கு பல போராட்டங்களை முன்னெடுத்தது. அவர்களின் போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் பெப்ரல் அமைப்பு முழு ஒத்துழைப்பையும் வழங்கியது.

தேர்தலை நடத்துவதால் கோவிட் பரவல் தீவிரமடையுமா? தேர்தலுக்கு செலவாகும் 6000 ஆயிரம் மில்லியன் முதல் 10000 ஆயிரம் மில்லியன் வரையிலான நிதி தற்போது அரசாங்கத்திடம் உள்ளதா? தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமை தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கப் பெறுமா? பல மில்லியன் செலவழித்து தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் மீது மக்கள் முதலில் நம்பிக்கை கொண்டுள்ளார்களா ஆகிய கேள்விகள் தோற்றம் பெற்றுள்ளன.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என்பது தெளிவாக உள்ளது. நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு முற்பட்ட அரசாங்கமும் இவ்வாறான தன்மையில் செயற்பட்டன. நாட்டின் தேர்தல் முறைமையை ஆட்சியாளர்கள் குறுகிய தேவைக்கேற்ப செயற்படுத்திக் கொள்வது ஜனநாயகத்துக்கு முரணானது. சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாக்குரிமை மறுக்கப்படுவது அடிப்படை உரிமைக்கு முரணானது” என்றுள்ளது.

சீனாவின் எட்டு நிறுவனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதித்த அமெரிக்கா

டி.ஜே.ஐ டிரோன் (ஆளில்லா விமானம்) நிறுவனம் உட்பட, எட்டு சீன நிறுவனங்கள் மீது சில புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களின் பங்குகளை குடிமக்கள் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

டி.ஜே.ஐ ஆளில்லா விமான தொழிநுட்ப நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள்இ சீனாவில் உள்ள வீகர் இஸ்லாமியர்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இது ஓர் அடையாள ரீதியிலான தடையாகவே கருதப்படுகிறது. காரணம் டி.ஜே.ஐ பொதுவெளியில் வர்த்தகமாகும் நிறுவனமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கர்கள் டி.ஜே.ஐ நிறுவனத்தின் ஆளில்லா விமானங்களை வாங்கலாம். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயமென்னவெனில்இ 900-க்கும் மேற்பட்ட அமெரிக்காவில் உள்ள பொது பாதுகாப்பு முகமைகள் டி.ஜே.ஐ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றன.

இதில் நியூயார்க் நகர காவல்துறையும் அடக்கம். கடந்த ஆண்டுஇ அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஆளில்லா விமான சந்தையில் கிட்டத்தட்ட 80மூ சந்தையை பிடித்துள்ளது டி.ஜே.ஐ என துறை சார் தரவுகள் கூறுகின்றன.

Posted in Uncategorized

நீதி, நிருவாகம், சட்டவாக்கல் ஆகிய துறைகள் இலங்கையில் இன்று சீர்குலைந்துள்ளன – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நேற்றைய தினம் பொத்துவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்றது. பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையங்களின் ஊடாக இவ்வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த விடயத்தைப் பார்க்கும் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வழக்காக அது தென்படவில்லை. ஏனெனில் ஏற்கனவே திட்டமிட்டு இந்தப் பொலிஸ் நிலையங்களினால் 32 பெயர்கள் அடங்கிய ஒரே பெயர்ப்பட்டியலைக் கொண்டு இரண்டு பொலிஸ் நிலையங்களிலும் அதே பெயர்கள் உள்வாங்கப்பட்டு இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரபலமான சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளாத சிலருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதில் விசேடம் என்னவென்றால் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதிலிருந்து தெரிகின்ற விடயம் ஒன்றே தமிழ் மக்கள் அவர்களது உரிமைகளைக் கேட்டுப் போராடும் போது அவர்களை நசுக்குவதற்காக திட்டமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்னமே சிலரது பெயர்களைத் தெரிந்தெடுத்து அவர்களுக்கெதிராக வழங்குத் தொடர்ந்திருக்கின்றாhர்கள். இந்த நாட்டின் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை நீதித் துறையினூடாக அடக்கும் ஒரு அடக்குமுறையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எந்தவொரு நாடும் நீதித்துறை நிருவாகத் துறை, சட்டவாக்கல் துறை ஆகிய மூன்று துறைகளினால் ஆளப்பட வேண்டும். இந்த மூன்று துறைகளும் இன்று இலங்கையில் சீர்குலைந்து, ஸ்தம்பிதம் அடைந்திருக்கின்றன. ஏனெனில் நீதித்துறை ஒழுங்காகக் செயற்படவில்லை என்பது இவ்hறான வழங்குகள் மூலம் தெரிகின்றது. சட்டவாக்கல் துறை ஒழுங்கில்லை என்பது பாராளுமன்ற நடவடிக்கைகள் குழு பராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கு ஜனவரி 11ம் திகதி என ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தும், ஜனாதிபதி தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கூட்டத்தொடரை 18ம் திகதி ஒத்திவைத்திருக்கின்றார். இதனூடாகச் சட்டவாக்கல் துறையும் ஒரு சீரான நிலையில் இல்லை என்பது புரிகின்றது.

நிருவாககத் துறையும் இந்த நாட்டடில் மோசமான நிலையில் இருக்கின்றது என்பது எமது மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் நியமனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சீர்கேட்டினைக் கொண்டு அறிய முடியும்.

அத்துடன், ஜனாதிபதியின் செயலாரால் தான் இந்த நாட்டில் நிருவாகம் சிர்குலைந்திருக்கின்றது. நாடு எதிர்நோக்கும் கஸ்டமான சூழ்நிலைகள் அனைத்திற்கும் காரணம் ஜனாதிபதியின் செயலாளர் கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்ற ரீதியில் அவரை மாற்றுங்கள் அல்லது தன் பதவியை இராஜனாமா செய்யப் போவதாக நாட்டின் ஜனாதிபதியின் சகோதரரும், அமைச்சருமான சமல் ராஜபக்ச அவர்கள் உள்ளிட்ட சிரேஸ்ட அமைச்சர்கள் வேண்டுகொள் விடுத்துள்ளார்கள்.

மட்டக்களப்பு மாநசபையைப் பெருத்த மட்டில் கடந்த முதலாம் திகதி ஆளுநரால் மாநகரசபைக்குப் புதிய ஆணையாளர் நியமிக்கப்படுகின்றார். இருந்த பழைய ஆணையாளருக்கு இடம்மாற்றம் வருகின்றது. புதிய ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்று அன்று பிற்பகலிலே திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். மீண்டும் இரண்டு நாட்களுக்குப் பின்பு பழைய ஆணையாளர் திருகோணமலைக்கு அழைக்கப்படுகின்றார். அதேவேளை புதிய ஆணையாளர் காலையில் தன்னுடைய கடமைகளைப் பொறுப்பேற்று தனது உத்தியோகபூர்வ நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபடுகின்றார். அன்று பிற்பகலில் புதிதாக ஒரு தொலைநகல் வருகின்றது. புதிய ஆணையாளர் மீண்டும் திருகோணமலைக்குச் செல்ல பழைய ஆணையாளர் மீண்டும் மாநகரசபைக்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றார்.

ஒரு நிருவாகத்தை அரசியல் எந்தளவுக்குக் குழப்புகின்றது என்பதற்கு உதாரணமாக எதிரணி உறுப்பினர் ஒருவரைப் பார்த்து அந்த ஆணையாளர் நமது தலைவர் சாதித்து விட்டார் எந்தவொரு அரசியல்வாதியும் செய்யாத கைங்கரியத்தைச் செய்துள்ளார் என்று கூறுவது இணையத்தளங்களில் பரவியிருக்கின்றது.

அது என்ன கைங்கரியம் ஒரு துஸ்பிரயோகம் நடத்தும் ஆணையாளரை மீண்டும் கொண்டு வந்ததுதான் அந்தக் கைங்கரியம். ஒரு நாட்டின் நிருவாகம் சீர்குiலைந்தால் அந்த நாடு எவ்வாறு அபிவிருத்தியை அடையும் என்பதற்கு இந்த மாநகரசபையில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அமைத்திருக்கும் அந்த ஆட்சியைக் குழப்புவதற்காகவும், இந்த மாவட்டத்திலே மாநகரசபையினால் செய்யப்படும் அபிவிருத்தியைக் குழப்புவதற்காகவும் இப்படியொரு நிருவாக சீர்கேட்டைச் செய்திருக்கின்றார்கள். இது மிகவும் வருந்தத் தக்கதுடன், மாநகர மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்றாகும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளார்! மாகாணசபை தேர்தல்களை பிற்போட முடியாது!

அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்களை பிற்போடுமாறு அமைச்சரவை தேர்தல் ஆணையகத்தை கேட்டுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் சட்டத்தில் இல்லை எனவும் அவர் கூறினார்.

எனினும் உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடலாம் எனவும் அவர் கூறினார். மாகாணசபைகளிற்கான தேர்தல்களை மேலும் ஒருவருட காலத்திற்கு பிற்போடுவதற்கான அனுமதியை கோரும் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணையாளர் இதனை கூறினார்.

தேர்தலை பிற்போடுவது தொடர்பான அமைச்சரவையின் முடிவை தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாகாணசபை தேர்தல்களை ஒத்திப்போடுவது தொடர்பாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ளதன் மூலம் இராஜாங்க அமைச்சர் தவறிழைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வழக்கில் ரெலோ செயலாளர் நாயகம் ஜனா பா.உ நீதிமன்றத்தினால் பிணை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் பொலிஸாரினால் பெறப்பட்ட நீதிமன்றத் தடையுத்தரவை மீறி கலந்து கொண்டமை தொடர்பில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா மற்றும் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் உள்ளிட்டோர் மீது திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய தினம் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்ற அழைப்பாணையின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா, பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி செல்வராணி, சமூக செயற்பாட்டாளர் பிரதீபன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் சயனொளிபவன் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் 2022 மார்ச் மாதம் 02ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அவர்கள் பிணையில் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இது முடிவு மாத்திரமல்ல, ஆரம்பமும் தான் – மன்னாரில் சீன தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை இன்று (17) கண்காணித்தார்.

அங்கு நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களாக வட மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை இன்று முற்பகல் சென்றடைந்தார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்திருந்தனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றில் ஏறினர்.

17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டனர்.

சுமார் 20 நிமிடங்களாக இராமர் பாலத்தில் இருந்த இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட் இராஜதந்திரிகள் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்.

மன்னார் – தாழ்வுபாடு பகுதியிலுள்ள கடற்படை முகாமிற்கு திரும்பிய சீனத் தூதுவரிடம் இந்த பயணம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோது, ”இதுவே முடிவு, ஆனால் ஆரம்பமும் கூட” என பதிலளித்தார்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும் ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றது.

இந்த 16 மணல் திட்டுக்களில் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் எஞ்சிய 8 இந்தியாவிற்கும் உரியவையாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பாரத பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென ட்விட்டர் பதிவொன்றில் வினவியிருந்தார்.

இதனிடையே, மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கான சீனத் தூதுவர் மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் அமைந்துள்ள ரின் மீன் தயாரிப்பு தொழிற்சாலையையும் இன்று முற்பகல் பார்வையிட்டிருந்தார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் சீரமைக்கப்பட வேண்டும்: ஐ.நா-வின் 7 விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு ஆலோசனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய நிலைவரத்தை மாற்றியமைப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமுள்ளது.

இலங்கையில் மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏனைய சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை வரியின்றி ஐரோப்பிய சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

ஆகவே உரியவாறான நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறும் அதுவரை அதன் பயன்பாட்டை இடைநிறுத்துமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையில், இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி மேலும் கூறியிருப்பதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கூறியபோது, அதில் ஓரளவு நம்பகத்தன்மை காணப்பட்டது.

இருப்பினும் இவ்வருட ஆரம்பத்தில் விசாரணைகளின்றி நீண்டகாலத்திற்குத் தடுத்துவைக்கக்கூடியவாறான சட்டத்தை உருவாக்குவதற்கு அவர் முற்பட்டார்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்ட வலுவான அழுத்தங்களையடுத்து, பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்கென போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் படையணிக்குத் தலைமைதாங்கியவரும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான பாதுகாப்புச்செயலாளர் கமால் குணரத்ன தலைமையிலான குழுவொன்று அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டது.

அக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத போதிலும், நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அப்பரிந்துரைகள் சிவில் சமூக அமைப்புக்களின் அர்த்தமுள்ள கரிசனைகளையும் ஆலோசனைகளையும் உள்வாங்கத்தவறியிருப்பதாகத் தோன்றுகிறது.

அதுமாத்திரமன்றி தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த செயன்முறை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதுடன், இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஏற்கனவே அச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் மாறாக மிகமோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடியவாறான குறைபாடுகள் (பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள்) குறித்து இப்பரிந்துரைகளில் அவதானம் செலுத்தப்படவில்லை என்றும் அவர்கள் அண்மையில் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோன்று இலங்கை கொண்டிருக்கக்கூடிய சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைக்கும் போது மிகமுக்கியமாக அவதானம் செலுத்தப்படவேண்டிய 5 விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இலங்கையைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களைப்போன்று அவர்களும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான மதிப்பீடுப்பணிகள் ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வரிகளைச் செலுத்தாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சந்தைகளைச் சென்றடைவதற்கான இலங்கையின் இயலுமை ஜி.எஸ்.பி வரிச்சலுகையிலேயே தங்கியிருக்கின்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இலங்கை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக்கொண்டபோது, ஏற்கனவே நிறைவேற்றப்படாமல் இருக்கும் பல்வேறு மனித உரிமைகள்சார் கடப்பாடுகளில் ஒன்றான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாகவோ அல்லது அதில் உரியவாறான திருத்தங்களை மேற்கொள்வதாகவோ வாக்குறுதியளித்தது.

மேலும் இலங்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் தொடர்பில் அர்த்தமுள்ள மறுசீரமைப்பு இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜுன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் அத்தீர்மானம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டிருக்கக்கூடிய உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே அதன் விளைவுகள் அமையும். ஆகவே தற்போது அடைந்துகொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கத்தைப் பூர்த்திசெய்யாத மேலோட்டமான பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தத்தினால் தாம் ஏமாற்றப்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக்கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் கரிசனைக்குரிய வகையில் மிகமோசமாகச் சரிவடைந்துவரும் சூழ்நிலையில், அதனை மாற்றியமைப்பதுடன் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தின்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான மிகமுக்கிய வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் வசமிருக்கின்றது.

இலங்கையில் மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட மேலும் இரு படைவீரர்களுக்கு எதிராகக் கடந்த வாரம் அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இலங்கையில் மேலும் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுக்கக்கூடிய வகையில் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேசமட்ட பங்காளிகளுடன் இணைந்து செயலாற்றுவது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

திருக்கோவில் சந்தியில் அமைந்திருந்த பிள்ளையர் சிலை உடைத்து சேதம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில குடியிருப்புக்கள் இல்லாத பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன பிள்ளையார் சிலை ஒன்றை அமைத்ததையடுத்து அதனை அந்த பிரதான வீதி ஊடாக பிரயாணிக்கும் மக்கள் வழிபட்டுவந்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த பிள்ளையர் சிலையின் கை, தும்பிக்கை போன்றவற்றை இனந்தெரியாத விசமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

வௌிநாடுகளிலுள்ள 3 இலங்கை தூதரகங்கள் மூடப்படுகின்றன

வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேவையின் தேவை மற்றும் செலவீனங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிணங்க, நைஜீரியாவிற்கான தூதுவர் மியன்மாருக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, சைப்பிரஸிற்கான கன்சியூலர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.