அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் – வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்

அரசாங்கத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினம் என வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்  தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய பீடத்திற்குச் சென்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“கூட்டணி அமைத்துள்ள அரசாங்கத்திற்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். இது இயல்பான ஒன்று. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. என்ன தான் இருந்தாலும் இறுதியில் அரசாங்கமே நிலைபெறுகின்றது.

ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எமது நாட்டில் சக்தியுள்ளது. மக்கள் எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அந்த விசுவாசத்தையும் அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டும்.

பல்வேறு தரப்பினரின் தியாகம், அர்ப்பணிப்பில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும். சில நேரங்களில் அரசாங்கத்தை அமைப்பதைவிட அமைத்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது கடினமானது.

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது இலகுவானது. அரசாங்கத்திற்குள் பிரச்சினை இருப்பது இயல்பானது. அதனை தீர்த்துக் கொள்ள முடியும். பிரச்சினையில்லாத அரசாங்கம் இந்த நாட்டில் இருந்துள்ளதா? எனவே இதனைக் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

எல்லைமீறும் சர்வதேசம்! இருண்ட யுகத்தை நோக்கி நகரும் இலங்கை – தேரர் எச்சரிக்கை

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு என்பது எல்லைகடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கிச் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்  தெரிவித்துள்ளார்.

குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பல்லின சமூகத்தினர் வாழ்கிறார்கள். இருப்பினும் இன நல்லிணக்கம் இதுவரையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக காணப்படுகிறது. கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடுகளினால் ஒரு தரப்பினர் பயன்பெற்றுக் கொண்டதனை பல்வேறு சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லை கடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கில் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அத்துடன் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மத தலைவர்களுக்கு உண்டு மத தலைவர்கள். சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு மத கொள்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பா மீண்டும் கோவிட் தொற்றின் கேந்திரமாக மாறலாம் : உலக சுகாதார அமைப்பு

ரோப்பா மீண்டும் கோவிட் தொற்று நோயின் கேந்திர நிலையமாக மாறலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் பயணக்கட்டுப்பாடுகள் துரிதமாக தளர்ப்பட்டுள்ளமை மற்றும் போதுமானளவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமை என்பன இதற்கு காரணம் என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையல், எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மேலும் 5 லட்சம் கோவிட் மரணங்கள் ஏற்படக் கூடும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

53 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல் கடிதத்துடன் ஜனாதிபதி சந்திக்க சென்றுள்ள அலி சப்ரி?

நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சு பதவி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகும் கடிதத்தை தயார் செய்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அவர் அந்த கடிதத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை எதிர்த்து அலி சப்ரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

விடுதலைப் புலிகளின் தலைவர் தந்த வாக்குறுதி: -காலம் கடந்து ஹக்கீம் எம்.பி வெளியிட்ட தகவல்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” என விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னிடம் கூறியதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெரு, முஹம்மதியா ஜூம்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

. இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி சந்தித்தேன். நோர்வே ஏற்பாட்டாளர்கள் மூலமாக எதிர்பாராத விதத்தில் எங்களுக்கு அவரை சந்திப்பதற்காக அறிவிப்பு வந்திருந்தது.

விசேட வானூர்தியில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு எனது தலைமையில் கிளிநொச்சியில் அவரை சந்திப்பதற்காகச் சென்றோம். புதுக்குடியிருப்பில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் ஒருங்கு செய்யப்பட்டிருந்தன.

ஏறத்தாழ 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நாங்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு நேருக்கு நேர் அமர்ந்து தமிழ், முஸ்லிம் விவகாரம் தொடர்பில் கதைத்திருந்தோம். அப்போது எங்களுடன் அன்டன் பாலசிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.

அவர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை ஒரு “துன்பியல் சம்பவம்” எனக் கூறியிருந்தார். அதை நாங்கள் பேசுமளவுக்கு அவர்கள் வைக்கவில்லை. அந்த அளவிற்கு அவர்கள் உணர்வுபூர்வமாக அதனைக் கூறினார்கள்.

அந்தப் பேச்சுவார்த்தையின் போது உத்தியோகப்பூர்வமாக அரசாங்கத்தின் தூதுக்குழுவில் 6 தடவைகள் வெளிநாடுகளில் இடம்பெற்ற சந்திப்புக்களில் நானும் கலந்துக் கொண்டவன் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் நடந்த விடயத்தை பற்றி பேசுவதற்கே அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

அதனை எவ்வாறாவது மீள சரி செய்துவிட வேண்டும் என்பதற்காக என்ன செய்ய வேண்டுமென்பதில் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்களிடம் பல விடயங்களை பேசினோம். இதன்போது, நான் மிக முக்கியமாக ஒரு விடயத்தை விடுதலைப் புலிகளின் தலைவரோடு பேசினேன்.

அந்த நேரத்தில் எங்களுக்கு இருந்த பிரச்சினைகளுள் ஒன்று தான் முழு தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்ட பிறகு, எல்லா இடங்களிலும் சாரிசரியாக மக்கள் பொங்கு தமிழ் நிகழ்வுகளை மேற்கொண்டு புலிகளை மக்கள் வரவேற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருபுறம் பீதியும், மறுபுறம் அச்சமும், விடுதலையும் என எல்லாம் கலந்துவிட்ட மாதிரியான ஒரு நிலைவரம் நிலவிய காலப்பகுதியில் பல இடங்களில் முஸ்லிம்களின் எதிர்காலம் தொடர்பில் பாரிய அச்சம் ஏற்பட்டிருந்தது.
புலிகளின் ஊடுருவலை தொடர்ந்து முஸ்லிம் வர்த்தகர்களிடம் கப்பம் எடுக்கும் நிலைமை காணப்பட்டது.

அரசாங்கத்தின் மூலம் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு சர்வதேசத்திடமும் அதற்கான அனுசரணையைப் பெற்றுக்கொண்ட பின்னர் கூட, இவ்வாறு வரி செலுத்த வேண்டும் என்ற நிலைமை கடுமையாகத் தளைத்தோங்கி இருந்தது.

மேற்படி சம்பவத்தையும் ஓர் அம்சமாக எடுத்து தலைவர் பிரபாகரனிடம் பேசி இருந்தேன். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் இப்போது தான் கிழக்கில் அவர்கள் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் அவர்களிடத்தில் வரி அறவிடுவது நியாயமற்றது என்பதை முறையிட்டோம்.

அதற்கு அவர், அருகிலிருந்த அன்டன் பாலசிங்கத்தோடு கதைத்துவிட்டுச் சொன்னார், “தமிழ் வர்த்தகர்களிடமும் இவ்வாறு வரி வசூலிக்கவே செய்கின்றோம். ஆகவே தான் முஸ்லிம்களிடத்திலும் அதனை கேட்கின்றோம்.

இத்தனை போராளிகள் எங்களிடத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய செலவுகள், பிரச்சினைகள் எல்லாவற்றையும் நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்காகவே இத்தகைய வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்களிடத்தில் வரி விதிக்காமல் போனால் தமிழர்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவர்களிடத்திலும் வரி வசூலிக்கின்றோம்” என்றார்.

அதற்கு நான் அவரிடத்தில் சொன்னேன் “முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் தமிழீழ விடுதலை புலிகள் முஸ்லிம்களின் சார்பில் எதுவும் செய்துவிடவில்லை. போதாக்குறைக்கு இருந்த முஸ்லிம்களையும் விரட்டிவிட்டீர்கள் என்பதே பாதிக்கப்பட்ட எங்களுடைய மக்களின் மனப்பதிவாகவுள்ளது.

மீண்டும் அவர்கள் இக்கட்டுக்களுக்கு மத்தியில் வியாபாரங்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களிடத்தில் கோரப்படும் வரிப் பணத்தை ஒரு கப்பம் மாதிரியாகவே பார்க்கின்றார்கள்” என்றேன்.

அதற்கு அவர் உடனே “ நீங்கள் கூறுவது சரி. அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாளையிலிருந்து முஸ்லிம் வர்த்தகர்களிடத்தில் நாங்கள் வரி அறவிட மாட்டோம். அதனை நீங்கள் என்னுடைய வாக்குறுதியாக எடுக்கலாம்” என உறுதியளித்தார்” என்றார்.

Posted in Uncategorized

ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் இம்மாதம் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏனைய துறைகளின் தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாக 2022 வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் ‘சுபோதினி அறிக்கை’ மூலம் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவால் முன்மொழியப்பட்ட தொகையை செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சுக்கு எதிரே இன்று (05) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அனைத்துப் பல்கலைக்கழக வல்லுநர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

‘சுபோதினி அறிக்கை’ பரிந்துரைத்தபடி, நாட்டின் தலைவர்கள் காலதாமதமான தொகையை ஒரே கட்டணத்தில் செலுத்துவதை உறுதிசெய்ய மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், பணம் வீணாகப் போவதில்லை என்றார்.

Posted in Uncategorized

மதிய உணவு வேளை போராட்டத்துக்கு மனோ அழைப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள், மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஜ.ம.மு இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோரை, இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகளான வண. யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர், இன்று(04) சந்தித்து உரையாடினார்கள்.

அதன்போது இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பிரதிநிதிகளுக்கு, இன்று தோட்ட தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் விரிவாக எடுத்து கூறினர்.

எதிர்காலத்தில்  தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளையும் பொது தேசிய தொழிற்சங்க வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என இரு தரப்பினரும் இணங்கினர்.

Posted in Uncategorized

சீன இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையமாக இலங்கை மாற இடமுள்ளது: பென்டகன் ஆய்வறிக்கை

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளை சீனா இதற்காக பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லா கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். என்னை பொறுத்தவரையில், அகில இலங்கை தமிழரசு கட்சி மட்டுமல்ல, இந்த பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே என எண்ணுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆனால், அகில இலங்கை தமிழரசு கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்த கட்சி உள்வாங்கப்பட வேண்டுமெனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் நண்பர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துக்கொண்டோம். அடைக்கலநாதன் எம்பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் நான் எண்ணுகிறேன்

ஆனால், இத்தகைய உரையாடல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

COVID தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமானது.

காலை 05.30-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மாலை 06.10-க்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பகல் 01.15-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் நகர்சேர் கடுகதி ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized