லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்த 8 கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள 8 கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ஆலோசனையளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினால் அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 8 கைதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வருகை தந்து, தாம் உள்ளிட்ட சில கைதிகளை சிறைக்கூடத்தில் இருந்து வௌியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்தமையினூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டன.

மனுக்கள் தொடர்பிலான எழுத்துமூல ஆட்சேபனையை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, நீதியமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஆர். அஜித் உள்ளிட்டோர் வழக்கின் பிரதிவாதிகளாவர்.

ஷ்ரிங்லாவை சந்தித்த தமிழ் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய இல்லத்திலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் 80 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக‍ இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 110 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நான்கு வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம்  80,055 பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நேற்றைய தினம் 1,718 வாகனங்களில் பயணம் செய்த 2,596 நபர்கள்பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் உரிய காரணமின்றி 52 வாகனங்களில் பயணித்த 99 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சீனா – இந்தியா – அமெரிக்காவிற்கு தாரைவார்க்கப்படும் சிறிலங்கா!

நாட்டின் பெறுமதி மிக்க இடங்களை சீனாவுக்கு விற்பனை செய்தது மாத்திரம் அல்லாமல் மறுபுறம் இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்த மிகுதியுள்ள வளங்களையும் அரசாங்கம் விற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின்  ஆட்சி காலத்தில் ஷங்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய இராணுவ தலைமையகத்தின் இடத்தையும் மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்திருந்தார்.

இன்று இரண்டு வருடங்கள் செல்லும் முன்னர், எல்லாம் தலைகீழாகியுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில   மற்றும் விமல் வீரவன்ச   உள்ளிட்டவர்கள் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக அறிந்தோம்.

எனவே, இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயமானது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பெறுவதற்கும் ஐ.ஓ.சி  எரிபொருள் நிறுவன ஒப்பந்தத்தை நீடிப்பதற்கே.

யுகதனவி மின்சக்தி ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியதால், எமது நாட்டில் மின்துண்டிப்பை கூட அமெரிக்க அரசாங்கமே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தான் எரிபொருளின் ஏகபோக உரிமையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, ராஜபக்‌ச   குடும்ப நிறுவனம் இந்த நாட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் எமது நாட்டு வளங்களின் ஏகபோக உரிமையை வழங்கினால், எமது குழந்தைகளின் எதிர்காலம் அல்லது எமது நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Posted in Uncategorized

பூகம்பமாய் வெடித்துள்ள “பென்டோரா பேப்பர்ஸ்” விவகாரம்! உடனடி விசாரணைக்கு அழைப்பு

உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய தகவல் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் கசிந்துள்ளன. இரகசிய ஆவணங்கள், நிதித் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களே இவ்வாறு கசிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பல அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் கதி கலங்கிப்போயுள்ளனர்.

இந்த நிலையில், பென்டோரா ஆவணத்தில் (Pandora Papers) வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என Transparency International Sri Lanka நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பென்டோரா வௌிப்படுத்திய நிதி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது தொடர்பில் விரிவான உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகிலுள்ள முக்கிய அரசத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் நிதித் தொடர்பான இரகசிய தகவல், இரகசிய ஆவணங்கள் “பென்டோரா பேப்பர்ஸ்” என்ற பெயரில் கசிந்து உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள மற்றும் முன்னாள் அரச தலைவர்கள் 35 பேரின் பெயர்களும், 300ற்கும் அதிகமான முக்கிய நபர்களின் பெயர்களும் இவற்றில் அடங்குவதாக அறிய முடிகின்றது.

இதில் இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சராக பதவி வகித்த அரச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ஸவின் பெயரும் இந்த பென்டோரா பேப்பர்ஸ் ஆவணத்தில் வெளியாகியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Posted in Uncategorized

சுமார் 8 மணி நேரம் முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!! காரணம் வெளியானது

முடங்கிய வட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை சுமார் 8 மணி நேரங்களுக்குப்பின் மீண்டும் செயல்படத்தொடங்கியுள்ளது.

முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர்.
இந்த பாதிப்பு உலகம் முழுவதும் ஏற்பட்டதால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சரி செய்யப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கியது. இருப்பினும், ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது.

தற்போது, 8 மணி நேரமாக பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் அவதிக்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம், எங்கள் பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளை அணுகுவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம் என்று பேஸ்புக் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் மற்றும் நண்பர்கள் இப்போது கொஞ்சம் சிரமப்படுகிறார்கள், அவற்றைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிக்கல்கள் இருக்கலாம். எங்களுடன் பொறுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அதில் இருக்கிறோம் என்று இன்ஸ்டாகிராமும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

மேலும், சிலர் தற்போது வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் ஒரு புதுப்பிப்பை இங்கு அனுப்புவோம் என்று வட்ஸ்அப் பதிவிட்டுள்ளது.

Posted in Uncategorized

ஊழல் நிறைந்த நாடாக இலங்கை – கொழும்பு பேராயர் ஆதங்கம்

நாட்டில் இன்று ஊழல் நிறைந்த நிர்வாக முறைமை தோற்றம்பெற்றுள்ளது. 70 வருடகாலமாக ஊழல் நிறைந்த ஆட்சிமுறைமையே தொடர்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“இன்றைய சூழ்நிலையில் பல பொதுப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. இதனால் நடுத்தர மக்கள்பெரும் சிக்கல்களை எதிர்க்கொண்டுள்ளார்கள். இருப்பினும் இவ்விடயம் குறித்து அரசாங்கம் அக்கறைகொள்ளவில்லை.

நீதி தமக்கு ஏற்றால் போல் மாற்றப்பட்டுள்ளது. இதனால்நீதி, நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாத சமூக முறைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

சுதந்திரத்திற்கு பின் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் சட்டத்திற்கு புறம்பாகவே செயற்பட்டுள்ளன. இன்றும் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.

சாதாரண நபர் நியாயத்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறை சமூகத்தில் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. வறுமை, ஏழ்மையை துரிதப்படுத்தும் வகையில் மாபியாக்கள் தற்போது அதிகம் தோற்றம் பெற்றுள்ளார்கள். இவ்வாறான ஊழலையும், முறைக்கேடுகளையும் கட்டுப்படுத்த எவருக்கும் முடியாதுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை பெற்றுக்கொள்ளும் வழிமுறையும் இல்லாமல் போயுள்ளது.

இவ்விடயத்தில் அரசியல் அழுத்தம், அரசியல் இலாபம் ஆகியவை காரணமாக நீதியை பெறமுடியாதுள்ளது. அனைத்தையும் மறைக்கும் நடவடிக்கைகள் மாத்திரம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

Posted in Uncategorized

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில் இந்திய புலனாய்வு முகமை வெளியிட்ட தகவல்

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி மனிதர்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்புபடுத்தி இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது அறிக்கையிடலை சிறப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தமை தமிழகத்தின் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை கவலையடைய வைத்துள்ளது.

இலட்சத்தீவில் இருந்து இலங்கை சென்ற மீன்பிடி கப்பலில் இருந்து கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டதாக என்.ஐ.ஏ எனப்படும் இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் ராஜ் மற்றும் சௌந்தரராஜன் என அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இந்தச் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளே குறித்த கடத்தலை செய்துள்ளதாக என்.ஐ. ஏ சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நாடு, இலங்கை மற்றும் பிற வெளிநாடுகளில் அமைந்துள்ள அமைப்பின் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் இரகசியமாக வேலை செய்து வந்ததாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இந்திய கடலோர காவல்படையினர் கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி அரபிக்கடலில் இலங்கை மீன்பிடி கப்பலான ரவிஹன்சியை தடுத்து நிறுத்தி, ஏராளமான போதை மருந்துகள், ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் எம்எம் அளவுள்ள வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இதன்போது ஆறு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், இந்த வழக்கு பின்னர் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் போதைப்பொருள், தங்க கடத்தல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

‘ஜனநாயக முறைமையின் கீழ் பிரச்சினைகளுக்கு தீர்வு’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை, மிரிஹான பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் நேற்று (04) முற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மரபுகளுடன் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இலங்கையின் இணக்கம், இலங்கையுடன் இணைந்துப் பணியாற்றுதல் மற்றும் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றம் கொண்டிருக்கும் எண்ணப்பாடு போன்ற விடயங்களை, இந்த விஜயத்தின் போது, மேற்படி பிரதிநிதிகள் ஆராய எதிர்பார்த்திருக்கின்றனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்திய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், காலத்தை முன்னிலைப்படுத்திய தீர்வொன்றின் தேவை தொடர்பில் வலியுறுத்தினர். இந்த விஜயத்தின் போது தாம் ஆராய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு அறிக்கை ஒன்றைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தேவையான குழுக்களை நியமித்து, அவற்றின் அறிக்கைகளுக்கமைய, நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் காணப்படும் திருத்தப்பட வேண்டிய உறுப்புரைகளைத் திருத்த உடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அதேவேளை, தற்போதைய உலகின் மனித உரிமைகள் தொடர்பில் காணப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனால் அரசாங்கத்தின் திட்டமிடல்களை மேற்கொள்வதில் ஏற்பட்ட தடைகள் பற்றியும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இருப்பினும், நாட்டில் நிலவிய நீண்டகால யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியைப் போன்றே, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

விசேடமாக, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கவும் காணாமற்போனோருக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கும், தமிழ் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் அனைத்துத் தரப்பினருடனும் இணைந்துப் பணியாற்றுவதன் தேவை தொடர்பில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றும் போது தான் தெளிவுபடுத்தியதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சிவில் அமைப்புகளுடன் பரஸ்பர புரிதலுடன் பணியாற்றுவதோடு, நாட்டின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு அவற்றின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.

கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு, ஒருபோதும் தடியடிப் பிரயோகமோ தண்ணீர்த் தாரைப் பிரயோகமோ அல்லது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ நடத்த வேண்டாமென்று தான் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் போராட்டக்காரர்களுக்கென்றே, ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் தனியிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த அரசாங்கம், ஜனநாயக ரீதியில் செயற்பட்டாலும், அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சிறிய சம்பவத்தின் அடிப்படையில் பல்வேறு தரப்பினர் தவறான கருத்துக்களை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார்த் துறையினருடன் இணைந்துப் பணியாற்றவும் தனியார் துறையை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கச் செய்யவும், அபிவிருத்தியடைந்த நாடுகளின் தொழில்நுட்ப உத்திகளை, தரமான பொதுச் சேவைக்காகப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமாகக் காணப்படும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப மற்றும் பயிற்சி உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் ஊடாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குள்ள வாய்ப்புகள் தொடர்பிலும், ஜனாதிபதி தெளிவுபடுத்தப்பட்டது.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசாங்கத்தின் திட்டமிடல்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதிக்கு, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், தங்களுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர், வர்த்தகம் மற்றும் நிலையான அபிவிருத்தி, ஜீஎஸ்பி மற்றும் Environment Action Programme இன் வர்த்தக நடவடிக்கைகள் பணிப்பாளர் நாயகம் நிக்கொலொஸ் ஸையிமிஸ் (Nikolaos Zaimis), ஐரோப்பிய ஆணைக்குழுவின் வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சேவைகளுக்கான தெற்காசியப் பிரிவின் தலைவர் அயோனிஸ் ஜியோகாரகீஸ் ஆர்கிரோபோலோஸ், கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் ஷாயிபி (Denis Chaibi), ஜீஎஸ்பி வர்த்தகச் சலுகைகள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கயிடோ டொலாரா (Guido Dolara), வர்த்தகம், சமூக நடவடிக்கைகள் – தொழிலாளர், இயக்கம் – சர்வதேசப் பிரச்சினைகள் தொடர்பான பிரிவின் தலைமை அதிகாரியும் பணிப்பாளர் நாயகமுமான லுயீ ப்ராட்ஸ் (Lluis Prats), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கொள்கை அதிகாரி மொனிகா பைலெய்ட் (Monika Bylaite), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய நிதியில் அமைக்கப்பட்ட பெருந்தோட்டப் பகுதி வீடுகள் கையளிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரத்து 235 வீடுகள் நேற்று திங்கட்கிழமை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூம் தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதற்கமைய பிரதான நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.

இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பப்பட்டதுடன் பிரமுகர்களின் உரைகளைத் தொடர்ந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.

இதன்படி, காலி மாவட்டத்தில் 50 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும் கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும் ஹற்றன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும் நுவரெலியா- அக்கரபத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.

குறித்த பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதேவேளை இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டடமும் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் நுவரெலியா – இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ்வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை   நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.