பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஆளுநர்களுக்கு அறிவுறுத்தல்

பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய, பாடசாலைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கல்வி அமைச்சர் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, மீள திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் சூழல், வகுப்பறை, கதிரைகள், உபகரணங்களை சுத்தம் செய்தல் மற்றும் புனரமைத்தல் தொடர்பில் ஆளுநர்களின் தலையீட்டில் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

200-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவையும் 100-க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளினதும் கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சில மதிப்பீடுகளுக்கு அமைய சுமார் 3,000 பாடசாலைகள் இந்த மாதத்தில் திறக்கப்படவுள்ளன என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம் – மீறப்படுகின்றன!

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமை குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இம்மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

13 ஆம் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும். மாகாணசபை தேர்தல்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மத்திய, மேற்கு, ஊவா, சப்ரகமுவ மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடைபெறவேண்டியமை நமக்கு அவசியமானதாகும். அதேபோல், 16 ஆம் திருத்தமும் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, தமிழ் மொழியின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் உள்ளடங்களாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவை சந்தித்து உரையாடியது. இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் உட்பட தூதரக அதிகாரிகள் இருந்தனர்.

16 ஆம் திருத்தம் முற்று முழுதாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின் மூலமாகவே தமிழ் மொழியும் ஒரு நிர்வாக மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

13 ஆம் திருத்தம், 16 ஆம் திருத்தம் இரண்டுமே இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே இலங்கை அரசியலமைப்பில் அரங்கேறியது. ஆகவே, இவை பற்றி இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

இலங்கையின்மிக பின் தங்கிய பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து மலையக தமிழர் நாடு கடத்தப்பட்டிருக்காவிட்டால், இன்றைய இலங்கை பாராளுமன்றத்தில், குறைந்தபட்சம் 30 தமிழ் எம்பீக்கள் தென்னிலங்கையில் இருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஆகவே, இந்த ஒப்பந்தம் இலங்கை மலையக தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைத்து விட்டது.

இன்று பேசப்பட்டு வரும் தேர்தல் முறை சீர்திருத்தம், இந்நாட்டில் சிதறி வாழும் நமது மக்களின் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இன்னமும் அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தை கொண்டுள்ளது. இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே அரசியல் பிரதிநிதித்துவ உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

1964 ஆம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த கைச்சாத்திடலுக்கு பின்னர் 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமைகள் குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இதேபோல்தான் 1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய ஒப்பந்தமும் முழுமையாக அமுலாகவில்லை. இவை தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருக்கின்றது. இந்திய அரசு கொண்டுள்ள கடப்பாடுகளின் அடிப்படையில் இவ்விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் ராஜதந்திர அடிப்படையில் உரிய அழுத்தங்களை வழங்கும்படி இந்திய அரசை கோருகிறோம்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவிடம் மனோ கணேசன் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இந்திய அரசுக்கான ஒரு மகஜர் ஆவணத்தையும் கையளித்தார்.

Posted in Uncategorized

கடுமையான நடவடிக்கை என சரத் வீரசேகர எச்சரிக்கை – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் காட்டுமாறு ஆசிரியர் சங்கம் சவால் !

தொழிற்சங்க போராட்டங்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பொது பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கைக்கு மத்தியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு திறப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேற்று முன்தினம் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்திருந்தார்.

ஒன்றுகூடல்களால் மற்றுமொரு கொரோனா அலை ஏற்பட்டால் நாடு கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் என்பதனால் மக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறியிருந்தார்.

இருப்பினும் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 312 போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் அறிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த கடுமையான நடவடிக்கைகளை முன்வைக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து 84 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான தீர்வினை வழங்க தவறியுள்ள அரசாங்கம் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்க முயற்சிக்கிறது என ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுசெயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி முதல் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சை நடவடிக்கைகளில் இருந்தும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை துறைமுகத்தை ஒட்டியுள்ள 100 எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் ஒப்படைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதற்காக  திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

1987 மற்றும் 2003 ல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் குறித்த எண்ணெய் தாங்கிகள் ஏற்கனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன இந்நிலையில் அவற்றினை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

இதேவேளை 85 எண்ணெய் எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்ற சோபித தேரரின் கருத்துக்களை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

இவை அனைத்தும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கீழ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.

Posted in Uncategorized

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் நிரூபமா ராஜபக்ஷ

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் ஞயிற்றுக்கிழமை (03) வெளியானது.

இதில் இலங்கையின் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினரும், நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில்,   நிரூபமா ராஜபக்ஷ, பிரதியமைச்சராக பதவி வகித்தார்.

2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நிரூபமா ராஜபக்ஷ பிரதி நீர்வளங்கள் அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யும் தகவலின் இரகசிய ஆவணங்கள், 2016 இல் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த ஆவணங்கள் வெளியானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் போன்செகா, ஒரு கோடிக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 201 இ6ல் வெளியிட்டது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும் இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தனர்.

பல தனி நபர்கள், நிறுவனங்களின் முறைகேடுகள் இதில் வெளியாகின. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் அதேபோல் பென்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் இரகசிய ஆவணங்கள் ஞயிற்றுக்கிழமை (03) வெளியிடப்பட்டன.

பாகிஸ்தான் அமைச்சர்கள் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும், அறக்கட்டளை என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்டான் மன்னர் அப்துல்லா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேயர் , ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் . செக் குடியரசு பிரதமர் எண்ட்ரேஸ் பாபிஸ், கென்ய ஜனாதிபதி உஹுரு உள்ளிட்டோர் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சைப்ரஸ் நாட்டு ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தேசியேட்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஈக்வடார் ஜனாதிபதி கில்லர்மோ லாசோ உட்பட பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்த ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் பிரபல பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்ஷர்களின் நெருங்கிய உறவினருமான நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாகும்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (04) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய பிரதமர்​ நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரது வாழ்த்துச் செய்திகளை பிரதமருக்கு முன்வைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இந்திய பிரதமர் மோதி அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார். அது பிரதமர் மோதியின் முன்னுரிமையான பணியாக விளங்கியதாக ஷ்ரிங்லா நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய – இலங்கை பிரதமர்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற இணையவழி இருதரப்பு மாநாட்டின் இறுதியில் இரு நாட்டு மக்கள் இடையிலான ஆழமான உறவை பலப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமரினால் பௌத்த உறவின் மேம்பாட்டிற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அறிவிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்ட உடன், இலங்கையிலிருந்து முதல் யாத்ரீக விமானம் வருகைத்தரும் என நம்புவதாக தெரிவித்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த இருதரப்பு மாநாட்டின் போது இதற்கான வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்மையினால் உறவை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஷ்ரிங்லா வலியுறுத்தினார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 18 சதவீதமாவதுடன், இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாகும்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்சியை முஸ்லிம்கள் முழுமையாக வெறுத்துள்ளனர் – ரவூப் ஹக்கீம் காட்டம்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்றும் அந்த நான்கு உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்றில் மெய்நிகர் ஊடாக வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசா்கத்தின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன் பின்னர் அது தொடர்பில் பல்வேறு பேச்சுக்களை கட்சிக்குள் நடத்தியிருந்தோம்.

கட்சியின் தலைமையினதும், உயர்பீடத்தினதும் மற்றும் போராளிகளினதும் தீர்மானத்திற்கு மாறாக செயற்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருந்தோம். அதற்கு அந்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருநதனர்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது கட்சிக்குள் பிளவுகள் என்ற அபிப்பிராயம் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் சென்று குழம்பங்களை ஏற்படுத்தக் கூடாது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்புக்களின் போது வாக்களிப்பதற்கு இணக்கமில்லாது விட்டால் ஆகக்குறைந்தது அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாரே அவர்களை வலியுறுத்தியிருநதோம். அதற்கும் சம்மதம் வெளியிட்டனர்.

ஆனாலும் புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின்  நிதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.

இது தொடர்பில் அவர்கள் பதிலளிக்கையில், நிதி அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்படும் அபிவிருத்தி நிதிகள் தமக்கு கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில்தான் ஆதரவாக வாகடகளிததோம் என தெரிவிக்கின்றனர்.

இந்த உறுப்பினர்கள் முதலில் அபிவிருத்தி என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள்.

அவ்விதமாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்குவதை எம்மவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் அதற்குரிய விலையை நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த உறுப்பிர்களை அரசாங்கத்திற்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது கட்சியிலிருந்து அகற்றுதல் போன்ற கடுமையான தீர்மானங்களை இதுவரையில் எடுக்காது இருக்கின்றேன்.

ஆகவே இவர்கள் தற்போதுள்ள யதார்த்தத்தினை புரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்சி என்பதை உணர்ந்து கொண்டு, அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போகாது தற்போதுள்ள இரண்டும் கட்டநிலையை கைவிட்டு முடிவொன்றை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும்: இந்திய வௌியுறவு செயலாளர் வலியுறுத்தல்

இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை கோருவதாக இந்திய வௌியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீரகேசரி வார வௌியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்திய வௌியுறவு செயலாளர் இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் ‘அயலுறவுக்கு முதலிடம்’ கொள்கையின் பிரதான இலக்காக, இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைவதாகவும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.

கேள்வி: ஜனாதிபதியின் செயலாளரின் தகவல்களுக்கு அமைவாக, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் தாமதமான கொடுப்பனவுகளை வழங்குவதற்கும் இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்கு இந்திய அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் பதில் என்ன?

பதில்: இலங்கையுடனான எமது பங்குடமையில் சக்தி துறைகள் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கைக்கு ​தேவையான உதவிகளை வழங்கவும் பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் தொடர்ந்தும் ஈடுபாட்டினை கொண்டிருக்கின்றோம். எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியாவிடமிருந்து இலங்கை ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் தொடர்பில் சாதகமான பேச்சுக்கள் இரு தரப்பு அரசாங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையுடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது என கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னேற்றங்கள், ஏனைய நாடுகளுடனான இந்தியாவின் உறவில் இருந்து சுயாதீனமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்க தொடர்புகள் மேலும் வலுவடையும் எனவும் இந்திய வௌியுறவு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். சென்றார் இந்திய வெளியுறவு செயலாளர்

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்தார்.
இவர் நேற்று இலங்கைக்கு வருகை தந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை சுற்றி பார்வையிட்ட நிலைியல், அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் உடனிருந்தனர்.

அவரது பயணத்தை முன்னிட்டு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்ட இலங்கை எதிர்பார்த்துள்ளது, – அமைச்சர் ரமேஸ் பத்திரண

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டிருந்தார்.

இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“அரசியல் கட்சி மற்றும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்த இனத்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இது தொடர்பில் நாம் திறந்த மனதுடன் இருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக நாம் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திருந்தோம்.

பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகமான கஸ்டங்களுக்கு உள்ளாகினர்.

எமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்தது மாத்திரமன்றி, தமிழ் மக்களும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக வடபகுதியில் உள்ள மக்களின் உயிர்களை மாத்திரம் காப்பாற்றவில்லை.

அப்போதைய காலக்கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

வடமாகாணத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இருக்கின்றார்.

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.

நாம் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடி வேறுபாடுகளைக் களைந்து கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டார்.