இலங்கையை நம்பக்கூடாது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளையும் அலங்கரிக்கப்பட்ட வரவேற்புக்களையும் நம்பி அமைதியடைந்துவிடக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு, பலவருடகாலம் தண்டனையை அனுபவித்த சிறைக்கைதிகளைப் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்வதன்மூலம் சர்வதேச பங்காளிகளைத் திருப்திப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்விற்கு உட்படுத்துவதற்கான வலுவான அழுத்தத்தை வழங்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இரத்தினக்கல்இ தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச்சென்று, அங்கு தமிழ் அரசியல்கைதிகளை அழைத்து அவர்களில் இருவரை மண்டியிடச்செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி. குறித்துப் பேச இலங்கை வருகிறது  ஐரோப்பிய ஒன்றிய குழு

ஜீ.எஸ்.பி. வரிசலுகையை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டுக்கு வரவுள்ள பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பல உயர்மட்ட அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளது.

Posted in Uncategorized

யொஹான் ரத்தத்த விவகாரம் ; அரசியல் கைதிகளுக்கு நீதி கிட்ட வேண்டும் : அருட்தந்தை சத்திவேல்

பதவி விலகிய ராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதியும் கிட்ட வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (16) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறைச்சாலை புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சரின் பதவி விலகல் நீதியை எதிர்பார்ப்பது கண்களில் மண்ணை தூவுவதாக அமைந்து விடக்கூடாது.
பதவி விலகிய ராஜாங்க அமைச்சரின் செயற்பாடு அதிகார துஷ்பிரயோகம் மட்டுமல்ல அதனால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களுக்கும் நீதியும் கிட்ட வேண்டும்.
லொஹான் ரத்வத்த மீது மதுபோதையில் இருந்தமை, அரசியல் கைதி சுலக்சனை மண்டியிடச் செய்தமை, கை துப்பாக்கியை நெற்றியில் வைத்தமை, மண்டியிடச் செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, குடிபோதையில் இருந்தவர்களையும் சிறைச்சாலைக்குள் அழைத்து சென்றமை, அவசர தேவை இன்றி சிறைச்சாலைக்குள் அகால நேரத்தில் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றது.
சம்பவம் நடந்தபோது சிறைச்சாலை அதிகாரிகள் அருகில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் சம்பவத்தை தடுத்திருக்கலாம் அதனையும் செய்யாது சம்பவத்தை பதிவு செய்து மேலிடத்துக்கு உடனடியாக அறிவிக்காதது போன்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன.குற்றச் சாட்டுக்கு உள்ளாகின்ற அத்தனை பேர் மீதும் உரிய விசாரணை முன்னெடுக்கப்படல் வேண்டும்.
அதிகார துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதோடு, லொஹான் ரத்வத்தயின் ஏனைய ராஜாங்க அமைச்சி பதவியும் பறிக்கப்படல்
வேண்டும். அதுவே நீதியை எதிர் பார்ப்போருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனையும் விட இச்சம்பவத்தால் அனைத்து அரசியல் கைதிகளும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
குறிப்பாக அனுராதபுர அரசியல் கைதிகள் அவர்களின் உள ரீதியான பாதிப்பு மதிப்பிட முடியாது அவர்களுக்கு நீதி கிட்டுவதன் முதல் அடையாளமாக அனுராதபுர சிறையில் இருந்து பாதுகாப்பாக யாழ்பாண சிறைக்கு அவர்களை மாற்ற வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அவசர வேண்டுகோள் விடுக்கின்றது.
அத்தோடு உளவியல் ரீதியாக நேரடியாக பாதிக்கப்பட்ட அரசியல் கைதியான சுலக்சனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தோடு இதனால் பாதிக்கப்பட்டவருக்கு அவர் எதிர்பார்க்கும் நட்ட ஈட்டை வழங்க வேண்டும்.
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கின்ற இக்கால கட்டத்தில் பயங்கர வாத தடுப்புச் சட்டம் நீக்கப்படும் காலமும் அரசியல் விடுதலை செய்வதற்கான கால உத்திரவாதமும் நிர்ணயிக்க வேண்டும்.
மேலும் அரசியல் கைதிகளுக்கும், ஏனைய கைதிகளுக்கும், பொதுவாக நாட்டில் அனைத்து அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கருத்து சுதந்திரத்துக்கான பாதுகாப்போடு, வாழ்வு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொஹான் ரத்வத்த பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

லொஹான் ரத்வத்த அவரது நடவடிக்கைகளுக்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசியா பசுபிக்கிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கிமுனையில் கொலை செய்யப் போவதாக மிரட்டிய சம்பவம் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாமினி மிஸ்ரா மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கைதிகள் நடத்தப்படுவது குறித்த எங்களது கரிசனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அதிகாரிகள் சித்திரவதை செய்வது மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துவது குறித்த எங்கள் கரிசனைகள் உண்மையானவை என்பதை இந்த சம்பவம் குறித்த தகவல்கள் புலப்படுத்தியுள்ளன.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் குற்றவியல் நடவடிக்கைளில் ஈடுபட்டால் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது காணப்படுவதை இது வெளிப்படுத்தியுள்ளது.

உடனடி பக்கச்சார்பற்ற பயனுள்ள விசாரணை அவசியம். அமைச்சரை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக் கூற செய்ய வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வில், 16 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை குறித்து அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தம்பட்டம் அடித்தார்.

இவர்கள் ஏற்கனவே விடுதலை செய்யப்படவிருந்தவர்கள். லொஹான் ரத்வத்தயின் இந்த நடவடிக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையை சரி செய்வதற்கு அரசாங்கம் நல்லிணக்கம் என்ற பெயரில் முன்னெடுக்கும் சிறிய நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல் குறித்த எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான பொறிமுறையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு செயற்பாடுகளே அவசியம் என குறிப்பிட்டுள்ளார். லொஹான் ரத்வத்தவை அவரது நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச் செய்தால் மாத்திரமே உள்நாட்டு செயற்பாடுகள் குறித்த வெளிவிவகார அமைச்சரின் இந்த சொற்கள் தீவிரமானவையாக கருதப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் – வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம். வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அதன் கனதியை நீர்த்துப்போகச் செய்யவே எண்ணிக்கையைக் குறைக்கும் விசமத் திட்டத்தில் ஈடுபடுகிறார். இதை மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிப்பதா? கூடாது என பச்சலற் அம்மையாருக்குக் காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு எழுதியுள்ளது.

கடந்த 2000-2021 வரையான இருபது வருட காலப்பகுதியில் ஏறத்தாழ ஆறாயிரம் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விபரக் கோவையைத் தற்போது ஒப்புநோக்கி உறுதிப்படுத்தி வெளியிட இருப்பதாக இலங்கை அரசின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஜெனீவா ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கைக்கு முன்பதாகத் தகவல் வழங்கியிருக்கிறார்.

அதுவே குறைந்த ஒரு எண்ணிக்கை. அதைக்கூட நான்காயிரத்துக்கும் அல்லது அதற்கும் குறைவாகக் காட்ட முனையும் ஒரு கண்துடைப்பு நாடகத்தை அவர் ஆரம்பித்திருப்பதை எவ்வாறு மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஆமோதிக்க முடியும் என்று 2021 செப்ரம்பர் 15 ஆம் திகதி புதன்கிழமை காட்டமான திறந்த மடல் ஒன்றை வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பு உயர்ஸ்தானிருக்கு அனுப்பிவைத்துள்ளது.

ஆங்கில மொழியில் இரண்டு பக்கங்களில் வரையப்பட்ட அந்த மடலில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டவையும், கோரிக்கையாக முன்வைக்கப்பட்டவையுமான விபரங்களின் சுருக்கம் வருமாறு:

இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடந்த இருபது வருடங்களுக்குள் மாத்திரம் குறைந்தது 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும் அவர்களால் இயக்கப்பட்டவர்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்ல 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் ஆவர். இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல். இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை எவ்வாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் பீரிஸை ஆமோதிப்பதன் மூலமும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகப் பொறி முறையை வரவேற்பதன் மூலமும் அங்கீகரிக்க முடியும்?

இதற்கும் அப்பால், ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்வி கண்டுவிட்டது, எனவே ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க ஆவன செய்யவேண்டும் என்று கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும் கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை உயர்ஸ்தானிகர் எவ்வாறு கைக்கொள்ளலாம்?

இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? இது உறவினர்களுக்கு ஆபத்தானது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவைத்து, ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை முழுமையாகத் திரட்டமுடியும்.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்புக் குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும்.

எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தீர்க்கமாகக் கோருகிறோம்.

இன அழிப்புக் குறித்த உண்மையைக் கண்டறியும் பணிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்றும் கோருகிறோம் என குறித்த மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியமில்லை – அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

அதேபோன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக சட்டக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு, இன்று (வியாழக்கிழமை) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஜெனீவா குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ், இன்றைய ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத்தொடரின் போது, அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையின் போது, காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.டி.டி.ஈ சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியதென்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து, இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து, இலங்கையுடன் கைகோர்த்து நின்றன.

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு, அவர்களின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன என்றும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இலங்கையானது அமைதியான நாடாக விளங்குகிறது.

பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே, நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு, அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமென்றும் இதன்போது, இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செயலாளர் ஜயநாத் கொழம்பகே, அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அது தொடர்பில், உலகின் பல நாடுகளுக்கு, கடந்த மாதங்களில் பல்வேறுபட்ட அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரதிபலனாகவே, அந்நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றன, இது விடயத்தின் பாரிய ஒருங்கிணைப்புடன் செயலாற்றியிருந்தன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளன என்று, இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

தத்தமது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பான இணக்கப்பாடுகளுடன், கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்கு, இம்முறை கூட்டத்தொடர் பாரிய சந்தர்ப்பத்தை வழங்குமென்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கும், இம்முறை ஐ.நா கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திக்கொள்வார் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சட்டத்தின் ஆட்சி இலங்கையில் மிகவும் சீர்குலைந்துள்ளது : நெருக்கமாக கண்காணிக்க நடவடிக்கை அவசியம் : சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் சீர்குலைந்துபோயுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் என்ற போர்வையில் மனித உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் மிகநெருக்கமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானதுடன் அன்றைய தினம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் வாய்மூல அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற இரண்டாம்நாள் அமர்வில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றியிருந்ததுடன் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டின் அறிக்கை தொடர்பில் ஏனைய உறுப்புநாடுகள் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இன்று புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வின்போது ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பல்லெட்டினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் தமது நிலைப்பாட்டை அறிவித்தன. அதன்படி சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்திய அதன் சிரேஷ்ட சட்டத்தரணி மஸ்ஸிமோ ப்ரிகோ மேலும் கூறியதாவது:

ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையைப் பெரிதும் வரவேற்கின்றோம். குறிப்பாக ஆப்னாஸ்தானில் மிகமோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் உடனடி நடவடிக்கை அவசியமாகின்றது.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மிகவும் சீர்குலைந்துபோயுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளுதல் என்ற விடயம் (காரணம்) சட்டக்கடப்பாடுகளை மீறுவதற்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையில் தலையீடு செய்வதற்கும் மனித உரிமைகளைத் தன்னிச்சையாக மட்டுப்படுத்துவதற்கும் தன்னிச்சையான கைது மற்றும் தடுத்துவைப்பின் ஊடாக அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளமை தொடர்பில் பெரிதும் கவலையடைகின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில் மிகநெருக்கமான கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை உள்ளக விடயங்களில் சர்வதேச நாடுகளின் தலையீட்டுக்கு சீனா எதிர்ப்பு

மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்ளக விடயங்களில் மனித உரிமைகள் என்ற போர்வையில் சர்வதேச நாடுகள் தலையீடு செய்வதற்கு தமது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு, வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் நேற்று (14) பதில் வழங்கினார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வௌித்தரப்பிற்கு இடமளிக்கும் 46/1 பிரேரணையை அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் காணொளியூடாக உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

காணி விற்பதை தடுக்க பொதுக்கட்டமைப்பு வேண்டும்!ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

கல்முனை மாநகரசபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கினீர்கள். பொது அமைப்புக்கள் பல அதனை எதிர்த்திருந்தன. அது தொடர்பாக உங்கள் கருத்து?

கல்முனை மாநகரசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என்ற ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடைபெற்ற போது எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்குமிடையில் பேச்சுவார்தைகள் நடந்தன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மேயராக வருவதற்கு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதரவு வழங்க வேண்டும் எனவும் பிரதி மேயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க தாங்கள் ஆதரவு தருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதி மேயர் என்பது முக்கிய குறிக்கோள் இல்லை . கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்கள் கிடைக்க முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்ககூடாது அத்துடன் புதிய நகர அபிவிருத்தி திட்டம் தமிழருக்கு பாதகமாக அமையக் கூடாது தமிழரின் வயல்காணிகள் அபகரிக்ககூடாது என்ற கோரிக்கைகளுடன் கல்முனையில் வளப்பங்கீடு பக்கச்சார்பின்றி பகிரப்பட வேண்டும் இந்த உடன்படிக்கை எழுத்து மூலம் தரும் பட்சத்தில் ஆதரவு வழங்குவோம் என எமது கருத்தை முன்வைத்தோம். இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் நாங்கள் எதிர்த்திருந்தோம்.

காலப்போக்கில் அவர்களின் செயற்பாடுகளில் 100 வீதம் திருப்தி இல்லாவிட்டாலும் பொதுவிடயங்களில் ஓரளவு திருப்தி இருந்தது. தொடர்ச்சியாக 2 வரவு செலவு திட்டங்களையும் எதிர்த்தே வந்தோம். அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு எம்முடன் ஆதரவு கோரினார்கள். எமது கட்சி தலைவருடன் வினவியிருந்தோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எமது தலைமையுடன் பேசியிருந்தார்கள் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையை முன்வைத்தோம். அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வுக்கு தாங்கள் இனி எதிர்ப்பதில்லை எனவும் அதற்கான தீர்வு முஸ்லிம்களுக்கு பாதகமின்றி அமைய வேண்டும் என்ற கொள்கையுடன் வந்தார்கள். அத்துடன நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழர்களின் காணிகள் தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக திணிக்கப்படபடமாட்டாது வளப்பங்கீடு விகிதாசார அடிப்படையில் பகிரப்படும் எனவும் கொள்கையளவில் உடன்பட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவதத்தின் பொது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தாங்கள் எதிர்ப்பு இல்லை முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத தீர்வுக்கு தாங்கள் ஆதரவு என உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பாக நானும் சபையில் பேசியிருந்தேன் இந்த கருத்தை வலியுறுத்தி உறுப்பினர் றொசான் அக்தாரும் பேசியிருந்தார்.

எமது கட்சியின் தலைமையுடனான கலந்துரையாடலின் பின்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.

கல்முனை மாநகர சபையில் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 தமிழ் உறுப்பினர்கள் உள்ளார்கள் 29 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளார்கள.; இதில் தமிழர் ஒருவர் மேயராக வருவதற்கு வாய்ப்பு இல்லை . இந்த நிலையில் மேயராக யாருக்கு நாம் ஓப்பிட்டவில் ஆதரவளிக்கலாம் என்றும் யோசித்தோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகமே வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கம் அதாவுல்லாவின் பின்னால் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் சாய்ந்தமருது சுயேச்சைக்கு நாம் ஆதரவு வழங்குவதா அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கவதா என்ற நிலையில் இந்த முடிவை எடுத்தோம்.

வரவு செலவு திட்டத்துக்கு எதிர்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதற்கான மாற்று வழியையும் கூற வேண்டும்.

கொள்கை மாறாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எமது மக்களுக்கு எது ஒப்பீட்டளவில் பாதிப்பில்லை என்பதை வைத்து முடிவெடுப்பதே அரசியல் சாணக்கியம்.

வளப்பங்கீடுகள் மாநகரசபை சேவைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறுகின்றதா?

வரவு செலவு திட்டத்தின் பின்னர் மாநகரசபையில் வருமானம் இல்லை காரணம் கொவிட் நிலைமை. மாநகரசபைக்கு வருமானம் வரும் வழிகள் வர்த்தக வரி குத்தகை வரி சோலைவரி முத்திரை வரி நீதி மன்ற தண்டப்பணம். ஆனால் கொவிட் நிலைமைகளால் வருமானம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் இருக்கும் வருமானங்களைகொண்டு அத்தியாவசிய சேவைகளை மாநகர சபை செய்கின்றது. உதாரணமாக திண்ம கழிவகற்றல் தெருவிளக்கு பராமரிப்பு போன்ற சேவைகளே இடம்பெறுகின்றன. அது பக்கச்சார்பின்றி இடம்பெறுகின்றன. வளப்பங்கீடு செய்யும் நிலையில் வருமானம் இல்லாத நிலைதான் தற்போது காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் உள்ளது என்ற கருத்து தங்கள் கட்சி சார்ந்தோரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நேரடி வழிநடத்தலில் இருந்தது என்பது வெளிப்படையான உண்மை.

2009 ஆம் ஆண்டின் பின்பு சிறிய கட்சி பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் தமிழரசுக்க்சியின் சின்னம் பதிக்கப்படுவதும் த.தே.கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் ஆதிக்க போக்கு இருப்பதும் வெளிப்படையான உண்மை.
ஏங்களது கட்சியை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் தீர்வு நன்மை கருதி ஆதிக்க போக்கு உள்ளது இல்லை என்பதற்கப்பால் விட்டுக்கொடுப்புடன் வந்திருக்pன்றோம் ஒற்றுமையை கருதி இது தமிழரசுக்கட்சியின் தலைமைகளின் மனச்சாட்சிக்கும் தெரியும்.

அரசியல் கூட்டமைப்புக்குள் காலத்துக்கு காலம் கருத்து முரண்பபாடுகள் நடைமுறை முரண்பாடுகள் எழுவதென்பது யதார்த்தம் இது த.தே.கூட்டமைப்புக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை.

தற்போது எழுந்துள்ள விடயம் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பும் அறிக்கை அனுப்புவதில்தான் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தமிழ்க் கட்சிகளின் சம்மதங்களும் பெறப்பட்டு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து ஒன்றாக அறிக்கையை அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களை பொறுத்தமட்டில் எல்லோரும் ஒன்றாக அறிக்கையை அனுப்பபுவதுதான் அது பெறுமதியாக இருக்கும்.

இந்த விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
சில சில கசப்புகள் எங்களுக்குள் இருக்கலாம் அதனை எமக்கள் பேசி கதைத்து ஓரு குடையின் கீழ் ஒரு கொள்கையின் கீழ் ஒருமித்து பயணிப்பதுதான் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற வலுவாக அமையும். புதவி மோகத்துக்காக கட்சி பேதங்களுக்காக பிரதசவாதங்களுக்காக பிளவுபட்டால் அது எமது மக்களின் தீர்வைக்காண முடியாதுபோகும். மாறாக எமது மக்களுக்கு துரோகம் செய்யதாகவே அமையும்.

கல்முனை கண்ணகியம்மன் கோவில் வீதியில் விற்கப்பட்ட காணியில் மதரஷா ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று பேசப்படுகிறது.இதை தடுப்பதற்கு என்ன முயற்சி எடுக்கின்றீர்கள்?

இந்த விடயங்களுக்கு அடிப்படை காரணிகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். கல்முனை பிரதேசத்தில் உள்ள தமிழ்க் காணிகள் மாற்றாருக்கு விற்பனை செய்யப்படாமலும் இலாப நோக்கோடு வாங்கி விற்பவர்கள் மாற்றாருக்கு விலை போகாமலும் எப்படி தடுப்பது என்பதை தமிழ் சமூகம் என்ற அடிப்படையில் சிந்தித்து நாம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.

சமூக மட்டத்தின் ஊடாக இதனை தடுப்பது எப்படி என்கின்ற செயற்பாட்டை செய்வதற்கு எமது சமூகத்திலுள்ள அரசியல்வாதிகள் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் ஆலயங்களின் நிருவாகங்கள் இளைஞர் அமைப்புக்கள் கழகங்கள் உட்பட ஒருங்கமைத்து சீரான வேலைத்திட்டத்தை வகுத்து தடுப்பதற்கான நடவடிக்ககைய எடுக்க வேண்டும்.

இதனை நாங்கள் முன்னின்று செய்யும்போது அதனை அரசியலாக பாhக்கப்படும் அரசியலுக்காக செய்வதாக கூறப்படும். இவ்வாறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வரும்பொது அவர்களுக்கு முழுப்பக்கபலமாக நாமும் செயற்படுவோம்.

குறித்த காணியில் மதிரஷாவோ, பள்ளிவாசலோ அமைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது . இந்த இடம் முழுமையாக தமிழ் மக்கள் ( இந்து, கிருஸ்த்தவம்) செறிந்து வாழும் இடம். இங்கு இவ்வாறு குறித்த மதஸ்தலம் அமைப்பதாக இருந்தால் அது இனங்களுக்கடையில் வீணான பிளவுகளை ஏற்படுத்தும். இன நல்லிணக்கத்தை இல்லாமல் செய்துவிடும். இந்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்களிடம் ஒன்றை கூறுகின்றேன். சம்மந்தப்பட்வர்கள் இதனை தவிர்ப்பது நன்று. இலங்கையில் ஒரு வனக்கஸ்தலமோ மத பாடசாலையோ அமைவதாக இருந்தால் நாட்டின் சமய விவகார அமைச்சின் கீழ் தெளிவான சட்டதிட்டங்கள் உள்ளது. அங்கு உரிய சட்ட திட்டங்களுக்கமைவாக அனுமதி பெற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாம் அவர்களுக்கு முறைப்பாட்டை செய்வோம்.

லொஹான் ரத்வத்த இராஜினாமா- ஆனால் இராஜினாமா இல்லை?

சிறைச்சாலை மறுசீரமைப்பு பதவியிலிருந்து விலகிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ஏனைய அமைச்சுப் பொறுப்பகளில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இராஜினாமா கடிதத்தில் இந்த விடயம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் சார்ந்த தொழிற்சாலை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து அவர் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அவர் பதவி விலகியுள்ளார்.

லொஹான் ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சிறைச்சாலைகளில் தன்னால் இழைக்கப்பட்ட தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பதவி விலகியுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized