இந்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு இன்று (22) வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அதற்கான நீதி வழங்கப்படாத நிலை உள்ளது. இது தொடர்பான விவாதம் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் இன்று மார்ச் 22ஆம் திகதி மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படி இலங்கை அரசு இந்தியாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக பிரிட்டன் உள்ளிட்ட ஆறு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கும் கடிதமும் எழுதியிருந்தோம். இந்நிலையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று அந்நாட்டு அமைச்சர் தெரிவித்திருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய நிலை குறித்து கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி, 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று இலங்கை தரப்பில் கூறியிருந்தாலும் இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த உறுதியான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இன்று ( 22 ) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை மார்ச் 23ஆம் திகதி நடைபெறும் என்று தெரிகிறது. பெரும்பாலான நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க உள்ள நிலையில் நிச்சயமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் இந்திய அரசு அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தாலோ அது முழுக்க முழுக்க தமிழர் விரோத நிலைப்பாடாகவே கருதப்படும். எனவே, இந்திய அரசு தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

ஈழத்தமிழர் பிரச்னைக்கு இந்தத் தீர்மானம் முழுமையான தீர்வளிக்குமென்றோ இனப்படுகொலைக்கு முழுமையான நீதியை வழங்குமென்றோ கூறமுடியாது என்றாலும், தொடர்ந்து இலங்கை அரசை சர்வதேசக் கண்காணிப்பில் வைத்திருக்கவும் ஈழத்தமிழர் அமைப்புகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுத்த கோரிக்கையான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்பதை நோக்கி நகர்த்துவதாகவும் இது நிச்சயம் அமையும். எனவே, அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: 2009-இல் தமிழ் மக்களை இலங்கை அரசு இனப்படுகொலை செய்தது. 12 ஆண்டுகளைக் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை. இப்போதும் தமிழா்களுக்கு எதிராக இன ரீதியான அத்துமீறல்கள் இலங்கை அரசால் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மாா்ச் 23-ஆம் தேதி தீா்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தீா்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்.

இந்தியாவுடனான நட்புறவில் இலங்கை எப்போதும் நாடகத்தன்மையோடு நடந்துகொண்டு, சீனாவுடனே உறவை மேம்படுத்தி வருகிறது. இது எதிா்காலத்தில் இந்தியாவுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும்.

பிரதமா் நரேந்திரமோடி சென்னையில் பிப்ரவரி 14-ஆம் திகதி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, இலங்கையில் தமிழா்கள் அமைதியாகவும், கண்ணியமாகவும், சமஉரிமையுடனும் வாழ்வதை உறுதி செய்வோம் என்று கூறினாா். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீா்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில், கொண்டுவரப்படும் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இலங்கைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளா் ஜெயநாத் கொலம்பகே அளித்துள்ள பேட்டியும் – அந்தப் பேட்டியின் மீது இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதி காக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் மௌனமும், உலகத் தமிழா்கள் இடையேயும், தமிழகத்திலும், பேரதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈழத் தமிழா்கள் மீதான இலங்கை அரசின் போா்க்குற்றம் தொடா்பாக ஐ.நா. மன்றத்தில் திங்கள்கிழமை எடுத்துக் கொள்ளப்படும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின் போது – அந்த தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது மட்டுமின்றி, இலங்கையின் போா்க்குற்ற விசாரணை சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குச் சென்றிடும் வகையில் – உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டி – உரிய திருத்தங்களுடன் அந்தத் தீா்மானம் நிறைவேறிட பிரதமா் நரேந்திர மோடி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைத் தமிழா்களை அவமதித்து, அவா்களுக்கு அநீதி இழைத்து, இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் எடுத்திட வேண்டாம் என்றும் – தமிழ் நெஞ்சங்களின் நிரந்தரமான பழிச்சொல்லுக்கு ஆளாகிட வேண்டாம் என்று பிரதமரைக் கேட்டுக் கொள்வதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளாா்

இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிக்கின்றது!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பின் போது, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா மேற்கொண்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிப்பதாக, தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலின் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என, இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்காமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது தமிழ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது கூட, ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறையுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற வாக்கெடுப்புகளில் இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களித்துள்ளமையை பா.ஜ.க அரசு மறந்து செயற்படுவதாகவும், மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இலங்கைத் தமிழர்களை அவமதித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Image

Posted in Uncategorized

ஜெனீவாவில் இலங்கை குறித்த பிரேரணை இன்று பலப்பரீட்சை!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை இன்று(22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்றைய தினமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு எனும் தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோ னியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

விவாதத்தின் இடைநடுவே சில நாடுகள் தலையீடும் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் பிரேரணை மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை வரை பிற்போடப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பிரேரணைக்கு கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ள நிலையில் பிரேரணையைத் தோற்கடிக்க இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு அங்கத்துவ நாடுகளுடன் பேச்சுநடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் 193 நாடுகள் மத்தியில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் அதிகாரத்தைக் கொண்ட நாடுகள் 47 இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, பிரேரணையை வெற்றிபெற வைப்பதற்கு அனுசரணை நாடுகள் ஆதரவு திரட்டி வருகின்றன. இதில் இந்தியாவின் ஒத்துழைப்பை பெற இருதரப்பும் முயன்று பெறுகிறது. இந்நிலையில் இந்தப் பிரேரணை வெற்றி பெறும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் தொலைபேசி உரையாடல்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச்செயலாளர் டாக்டர் யூசெப் பின் அகமட் அல்-ஒத்தெய்மினுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடலொன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இந்த உரையாடலின் போது, அவர்கள் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் நிலைமை குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

இஸ்லாமிய சடங்குகளின்படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்று, சர்வதேச அமைப்புகளை அணுகவும், அணுகவும் இலங்கை ஜனாதிபதியின் விருப்பத்தை அல்-ஓதமைன் இதன்போது பாராட்டினார்.

முஸ்லிம் சமூகங்களின் நிலைமைகளைப் பின்பற்றுவதற்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அல்லாத உறுப்பு நாடுகளில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆர்வத்தை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

திங்கட்கிழமை (22-03-21) ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைப் பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற உள்ளதும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முஸ்லிம் நாடுகள் வாக்களிக்கும் தகுதியை கொண்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் 13 கடைத்தொகுதி பிரதேச சபையிடம் கையளிக்காமல் நகரசபை கோள்விகோரல் அறிப்பு? ரெலோ விஜிந்தன்

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை ரெலோ கட்சியின் உறுப்பினர் க.விஜிந்தன் அவர்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை 20.03.21 அன்று நடத்தியுள்ளார்.

இதன் போது அவர் தெரிவிக்கையில். முல்லைத்தீவு நகரில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசையினால் 13 கடை தொகுதிகள் கட்டப்பட்டு பிரதேச சபையிடம் கையளிக்க்பபடவுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கட்டடங்கள் சபையிடம் கையளிக்காத நிலையில் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கேள்விகோரல் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்கு வழங்கப்படஇருந்த கடைத்தொகுதி யாருக்கும் தெரியாத இடத்தில் மாவட்ட செயலாளர்,ஆழுனர்,பிரதேச சபைக்கு தெரியாத நிலையில் இதன் உள்நோக்கம் என்ன என்று தெரியாத நிலை காணப்படுகின்றது

போருக்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகின்ற எந்த அரசியல் பிரமுகர்களாக இருந்தாலும் எவராக இருந்தாலும் சரி மாவட்டத்தினை மேம்படுத்த வேண்டும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று பேச்சளவில் அள்ளி வீசுகின்றார்கள் ஆனால் நகரசபையினால் கட்டப்பட்ட கடைத்தொகுதி கேள்விகோரலுக்கு விடப்பட்டுள்ளமையானது வசதிபடைத்த வேறு மாவட்டத்தனை சேர்ந்த தென்னிலங்கையனை சேர்ந்தவர்கள்தான் இதனை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி உரிய தரப்பினருக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளோம் இது ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் குறித்த கடைத்தொகுதி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட நகர அபிவிருத்தி சபையின் முகாமையாளர் தெளிவாக சொல்லி உள்ளார்.

இந்த குத்ததைக கோரலை நகரஅபிவிருத்தி சபை நிறுத்தி அதனை பிரதேச சபையிடம் ஒப்படைத்து உரியமுறையில் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் இது தொடர்பில் ஆளுனர்,பிரதம செயலாளர்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
இதை பிரதேச சபையிடம் ஒப்படைத்து பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கையினையும் எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை ரெலோ உறுப்பினர் க.விஜிந்தன் கண்டனத்தினையும் எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் நடவடிக்கை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நடவடிக்கை எடுக்காத நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பூகோள அரசியல்நிலையில் வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது’ ரெலோ செயலாளர் ஜனா எம்.பி

பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு – கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ((ஜனா)) தெரிவித்தார்.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் ரெலோ கட்சியின் மாவட்ட அலுவலகத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கு, ஒரு முக்கியமான காலட்டமாக இந்தக் காலகட்டம் இருப்பதாகவும் கட்சியை பலப்படுத்திக்கொள்ளும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் என்பவற்றின் பலம் தானாகவே பலப்படுமெனவும் கூறினார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இன்றும் கூட்டமைப்புக்குள்ளேயே போராடிக்கொண்டிருப்பதாக் தெரிவித்த அவர் கூட்டமைப்பில் இருந்து பிரிநித்து சென்றவர்கள் இன்று 10 தமிழ் கட்சிகளை உருவாக்கி, தங்களையும் சேர்த்துகொண்டு, சில விடயங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்களெனவும் கூறினார்.

இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து, “தமிழ்த் தேசிய பேரவை” என்று ஒன்றை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்பட வேண்டுமெனவும் பதிசெய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கான, தமிழ்த் தேசியகத்துக்கான ஒரே குரலாக பிரிந்து சென்ற கட்சிகளையும் நபர்களையும் இணைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய நிலையில், பூகோள அரசியல்நிலையில், தமிழ் மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மாகாணசபை தேர்தல் மிகவிரைவில் வரக்கூடிய நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

“அந்தவகையில், நடைபெற்றுக்கொண்டிருப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, ஒரே குரலாக மக்களின் உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்” என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நான்கு சகோதரர்களும் முக்கிய மந்திராலோசனை

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஒரு முக்கியமான கலந்துரையாடல் கடந்த வாரம் ராஜபக்ஷ குடும்பத் தலைவர்களிடையே நடைபெற்றது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஷ குடும்பங்கள் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் சாமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் அரசாங்கம் செயல்பட வேண்டிய விதம் உட்பட பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என தெரியவருகின்றது.

Posted in Uncategorized

ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தால் நெருக்கடிகள் அதிகரிக்கும் : 3 தெரிவுகளே அரசுக்கு உள்ளன என்கிறார் தயான்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய பிரேரணையில் இலங்கை பற்றி மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக நிரகாரித்தால் மேலும் மேலும் நெருக்கடிகளே அதிகரிக்கும் என்று ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப்பிரதிநிதியும் எதிர்க்கட்சித்தலைவரின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி.தயான் ஜயத்திலக தெரிவித்திருந்தார்.

தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன என்றும் அதில் எதனைத் தெரிவு செய்யப்போகின்றது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் நிறைவேற்றப்படும் இலங்கை பற்றிய தீர்மானத்தினை நிராகரிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை உள்ளிட்ட நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

துரதிஷ்டவசமாக, தற்போது பதவியில் உள்ள ஆளும் தரப்பினருக்கு அவ்விதமான சமிக்ஞைகள் எதனையும் கடந்த காலத்திலும் சரி தற்போதும் சரி வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அதனை எதிர்ப்பதாக கருத்தக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் தற்போதைய பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ளது. அந்த விடயங்களை மேற்கொண்டே ஆக வேண்டும்.

ஏனெனில் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் காலம் ஆறு மாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் நல்லிணக்க, மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களுக்கான செயற்பாடுகளைக் காண்பிக்க வேண்டும் அவ்வாறு இல்லாது விட்டால் மேலும் மேலும் நெருக்கடிகளே ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகரிக்கும்.

தற்போதை நிலையில் ஆட்சியாளர்களுக்கு மூன்று தெரிவுகளே காணப்படுகின்றன. முதலாவதாக முற்றாக ஐ.நா.தீர்மானத்தினை எதிர்த்து சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டு நடைபெறுவைக்கு முகங்கொடுப்பதாகும்.

இரண்டாவதாக, மாகாண சபைமுறைகளின் அதிகாரங்களை நீக்கி தேர்தலை நடத்தவிட்டு பின்னர் புதிய அரசியலமைப்பின் பெயரில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நீக்கிவிட்டு அதிகாரக்குவிப்பைச் செய்து இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தினை காலங்கடத்தி ஏமாற்றுவதோடு அவ்வப்போது நெருக்கங்களையும் விரிசல்களையும் காண்பித்து சீரற்ற நிலைமைகளை பேணுதல். அதுமட்டுமன்றி இனக்குழுமங்களை மையப்படுத்திய நெருக்கடிகளை ஏற்படுத்துதல் மூன்றாவதாக, நிலைமைகளைப் புரிந்து ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக உள்நாட்டில் தேசிய ரீதியிலான வெளிப்படைத்தன்மையுடனான பொறிமுறையொன்றை ஏற்படித்தி ஒவ்வொரு ஆறுமாதகாலத்திற்கும் மீளாய்வு செய்யப்படும்போது முன்னேற்றகரமான நிலைமைகளை வெளிப்படுத்தல்.

இந்தத் தெரிவுகளுக்குள் ஒன்றை கையிலெடுக்கும் போது அதற்கான பிரதிபலன்களும் உடனுக்குடனே கிடைக்கும் என்றார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களிற்கும் ஊடகவியலாளர்களிற்கும் ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர் தான் நினைக்கும் விதத்தில் நாட்டை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவது குறித்தும் எச்சரித்துள்ளார்.

வலப்பனையில் இடம்பெற்றுள்ள கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஊடகங்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஊடக சுதந்திரம் குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது

ஊடக நிறுவனங்களில் புதுமையானவர்களே உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவனத்தின் உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. அதுவல்ல ஊடக சுதந்திரம். அது ஒரு மாஃபியா. ஊடக உரிமையாளருக்கு தேவையான விதத்தில் நாட்டைக் கொண்டு செல்வதற்கு முயல்வதாக இருந்தால் அது ஒரு மாஃபியா. அதுவே இடம்பெறுகின்றது.

நாட்டில் அரசர்கள் இல்லை. மகாராஜாக்களும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவில் இருந்தார்கள். இங்கு மாஃபியாவே இடம்பெறுகின்றது. மன்னர் நிர்வாகிகள் நாட்டை நிர்வகிக்க முயல்வதாக இருந்தால், அது என்னுடன் முடியாது.

அதற்கு பாடம் கற்பிக்க எனக்குத் தெரியும். தேவையெனின் கற்பிக்கும் முறையும் எனக்குத் தெரியும். நான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளேன். 14 மாதங்கள் நான் நாட்டை நிர்வகித்துள்ளேன். எந்தவொரு ஊடகத்திற்கும் எந்தவொரு அழுத்தத்தையும் விடுக்கவில்லை. எனினும், அவர்கள் இதனை தவறாக பயன்படுத்தினால் அதற்கும் சட்டங்கள் உள்ளன. செய்ய முடியுமான முறைகளும் உள்ளன. அதனை நான் செயற்படுத்துவேன்.

அந்த ஊடகம் மாத்திரம் அல்ல தேசிய சிந்தனையில் உள்ள ஊடகங்களிலும் சிலர் கும்புக் மரங்களை வெட்டியதாக பொய்யான தகவல்களை வௌியிட்டிருந்தனர். யார் என்று நான் தேடிப் பார்த்தேன். அந்த ஊடகமே யுத்த காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்டது. அவர்களே தற்போது நுழைந்து இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமக்கு எதிராக செயற்பட்ட குழுவினரே மீண்டும் எழுந்துள்ளனர்.