மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கும் – பிரித்தானியா அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட், இலங்கை தொடர்பான புதிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையையும் இங்கிலாந்து பரிசீலிக்கும் என கூறியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று வெளியான நிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில்” இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.

எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பிரித்தானியா ஆதரவு வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் புதிய அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எந்த நாட்டிலும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை – ரெலோ கருணாகரம்

உலகின் எந்தவொரு நாட்டிலும் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை என மட்டக்களப்பு மாவட்ட ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைவர்கள், போராளிகள் இலங்கையின் தலைநகரிலே நினைவு கூரப்படும்போது தங்களது உறவுகளை இழந்த உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கு இந்த அரசு தடை விதித்திருக்கின்றதென்பது உலகத்தில் ஒரு அவமானமான அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபியருகே நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “இங்கு அப்பாவி பொதுமக்கள் கொத்தணியாக கொல்லப்பட்ட வரலாறு இருக்கின்றது.

உலகத்தின் பல நாடுகளில் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக பல விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன.

இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக, அடிமைகளாக நடத்தப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக நாம் போராடினோம்.

அந்தப் போராட்டத்தில் இறந்த எமது உறவுகளை நினைவு கூருவதற்குக்கூட இந்த அரசாங்கம் தடை விதிக்கின்றதென்றால் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு எப்படி இருக்கின்றது என்பதை உலக நாடுகள் தெரிந்துகொள்ள வேண்டும்.

உலகின் எந்தவொரு நாட்டிலுமே இறந்தவர்களை நினைவு கூருவதற்கு தடைவிதித்ததாக வரலாறுகள் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்

கொரோனா தடுப்பூசியை விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது ஒருவரின் தனிப்பட்ட தீர்மானம் என லலித் வீரதுங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள COVID தடுப்பூசியின் முதலாவது தொகுதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க தடுப்பூசி பரிசளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் Astrazeneca Covishield தடுப்பூசி மும்பையின் Serum Institute-இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் Astrazeneca Covishield தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் இன்று முற்பகல் 11.45 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இன்று கொண்டுவரப்பட்டுள்ள 2,50,000 தடுப்பூசிகளின் நிறை 1323 கிலோகிராம் ஆகும்.

குளிரூட்டபட்ட விசேட வாகனத்தில், Astrazeneca Covishield தடுப்பூசிகள், சுகாதார அமைச்சிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், 2 – 8 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் அவை களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை மேல் மாகாணத்தின் 06 வைத்தியசாலைகளில் நாளை (29) ஆரம்பிக்கப்படவுள்ளது.

COVID ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 1,50,000 ஆயிரம் சுகாதார சேவையாளர்கள், முப்படையின் 1,20,000 பேர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக சீனாவினால் 03 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளதாக COVID தடுப்பூசியை தருவிப்பது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயார்: பிரித்தானியா, கனடா

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிக முக்கியமானதெனச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள், இலங்கையில் நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை அடிப்படையாகக்கொண்டு செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஜுலியன் பிரெய்த்வெய்ட் இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், ‘இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கையில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி நாம் ஆதரவு வழங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இது குறித்து கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னே அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கின்றார்:

‘இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை அமைந்துள்ளது. இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு கனடா தயாராக இருக்கின்றது’ என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் – மிச்சேல் பச்லெட்

இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

அவ்வறிக்கையில், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிசெய்வதற்காக முன்னெடுக்கப்பட்ட உள்ளகப்பொறிமுறைகள் அவற்றுக்கான சிறந்த தீர்வைப் பெற்றுத்தருவதற்குத் தொடர்ந்தும் தவறியிருப்பதுடன், தண்டனைகளிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்திருக்கிறது என்றும் மிச்சேல் பச்லெட் சுட்டிக்காட்டியிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னைய நிர்வாகங்களினால் மேற்கொள்ளப்பட்ட சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் தற்போதைய கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது என்றும் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், விமர்சகர்கள் மீதான கண்காணிப்புக்களும் சுயதணிக்கைக்கான அவசியமும் அதிகரித்திருப்பதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கைப்படைகள் மருத்துவமனைகளின் மீதும் வான்வழி ஊடாகவும் கண்மூடித்தனமாகக் குண்டுவீச்சுக்களை நடத்தியதாகவும் சரணடைந்தவர்களைப் படுகொலை செய்ததாகவும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமலாக்கப்பட்டதாகவும் மிச்சேல் பச்லெட் அவரது அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதற்தடவையாகப் பரிந்துரைத்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், தமிழ் கிளர்ச்சியாளர்கள் உள்ளடங்கலாக போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமைமீறல் குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் மீது பயணத்தடை விதிப்பதற்கும் அவர்களது சொத்துக்களை முடக்குவதற்கும் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் ஆணைக்குழு நீதியை திசைத்திருப்பும் செயல் – சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையைத் திசைதிருப்பும் நோக்கில் ஜனாதிபதியினால் விசேட ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதா என்று சந்தேகம் வெளியிட்டிருக்கும் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழு, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சர்வதேச பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேச ஜுரிகள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஆராய்ந்த குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை மீள ஆராய்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில் மூவரடங்கிய விசேட குழுவொன்றை நியமித்திருக்கின்றார்.

பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமற்ற விசாரணைப்பொறிமுறை தொடர்பில் இலங்கை மிகமோசமான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. இது இவ்வாறிருக்க தற்போது புதிய குழுவொன்றை நியமிப்பதென்பது, பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரின் போது மேற்கொள்ளப்படத்தக்க நடவடிக்கைகளைத் திசைதிருப்பும் நோக்கத்தைக் கொண்டதா என்ற சந்தேகம் எழுகின்றது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது, இலங்கை தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார். 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் போது 30/1, 34/1, 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து விலகுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள விசேட குழு மற்றும் இதனையொத்த ஏனைய குழுக்கள் செயற்திறனற்றவையாகவும் தமக்கு வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் உரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் இயலுமை அற்றவையாகவுமே இருந்துவந்திருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புக்கள், அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களைத் தண்டிப்பதற்கும் தமக்கு வேண்டியவர்களைப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகின்றன என்று எமது அறிக்கையொன்றில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.

எனவே உள்ளகப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை உறுதிசெய்வதற்கான இயலுமை இலங்கைக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதுடன், உள்நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமும் ஆணையாளரிடமும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்கள் என்பதாலேயே தமிழக மீனவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10.15 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வின் இறுதியில் கண்டன அறிக்கை ஒன்றும் மாணவர்களால் வாசிக்கப்பட்டு, ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் என்று கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் அவசியம் – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்’ என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார்.

அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அதில் மேலும் கூறியிருப்பதாவது:

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு ஏற்றவாறான, தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை. ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியும் என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கேட்டுவிட்டார்கள்.

எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதையும் நோக்காகக்கொண்ட சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் ‘ஒருமித்த தீர்மானம்’ ஒன்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை.

ஆகவே இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை வலியுறுத்துகின்றோம் என்று மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு கவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் உள்ளடக்கங்களில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டிணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பு இணையவழியின் ஊடாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விருப்பத்தை இருதரப்பினது பிரதிநிதிகளும் பகிர்ந்துகொண்டதுடன் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விருப்பத்தை இருதரப்பினது பிரதிநிதிகளும் பகிர்ந்துகொண்டதுடன் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதாரம், விவசாயம், சுற்றுலா ஆகிய துறைகளை மீண்டும் மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட 22 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு நன்றியை வெளிப்படுத்திய இலங்கையின் பிரதிநிதிகள், தொற்றுநோய்ப்பரவலினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த பல்தரப்பு முறைமையின் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகக் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருப்பதுடன், இதன் விளைவாக இலங்கையின் 2 ஆவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் இறக்குமதித்தடைகள் விதிக்கப்பட்டமையின் விளைவாக ஐரோப்பிய வணிகங்களில் குறித்தளவான வீழ்ச்சியொன்று ஏற்பட்டமை தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

யாழில் இந்தியத் துணை தூதரகத்தில் இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்..!

72வது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக துணை தூதுவர் ச.பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.