கொழும்பில் இராணுவம் குவிப்பு

கொழும்பில் பெருமளவில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தை அடிப்படையாக கொண்டு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதிவிசேட படையினர், சிறப்பு கொமாண்டோ, பொலிஸார், கலகம் தடுக்கும் குழுவினர், நீர் தாரகை வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கின்றன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கும் அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்கவுள்ளதால், வன்முறைகள் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழில் தமிழரசுக் கட்சி கூட்டத்தில் மோதல்; ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அலுவலகத்திற்குள், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட்டால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று (13) மாலை 5.30 அளவில் இந்த சம்பவம் நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் இன்று மாலை, யாழ் தொகுதிக்கிளை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவடைந்த பின், அலுவலக வளாகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழரசுகட்சியின் உறுப்பினரும் சிவசேனை செயற்பாட்டாளருமான ஜெயமாறன் என்பவரே தாக்கப்பட்டார்.

“சிவசேனையில் உள்ள உனக்கு தமிழ் அரசு கட்சியில் என்ன வேலை? நாங்கள் சொல்லும் சட்டத்திட்டத்தின்படிதான் நடக்க வேண்டுமென கூறி, என் கன்னத்தில் அடித்தார். நான் நிலத்தில் விழுந்து விட்டேன். கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள் பலர் அங்கிருந்தனர். யாரும் எதுவும் செய்யவில்லை. நான் எனது சகோதரனுக்கு தொலைபேசியில் அறிவித்து, வைத்தியசாலையில் அனுமதியாகினேன்“ என தாக்கப்பட்ட ஜெயமாறன் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வரும் நிலப் பகுதியில் தாய்லாந்திலிருந்து வரும் பெளத்த துறவிகளின் பங்கேற்புடன் சட்டவிரோதமாகப் புத்தர் சிலை ஒன்று நாளை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் இன்று காலை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

“திருமலை எங்கள் தலைநகரம், எமது நிலம் எமக்கு வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும், தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு?, மண் துறந்த புத்தனுக்கு தமிழ் மண் மீது ஆசையா?, பௌத்தமயமாக்கலை நிறுத்து” – என்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

போராட்ட இடத்துக்குச் சென்ற திருகோணமலை மாவட்ட அரச அதிபர், போராட்டக்காரர்களுடன் பேசினார்.

எனினும், “போராட்டம் செய்வது எமது உரிமை; அதற்கு யாரும் தடை போடக்கூடாது” – என்று போராட்டக்காரர்கள் கூறியதையடுத்து மாவட்ட அரச அதிபர் அவ்விடத்திலிருந்து வெளியேறிவிட்டடார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் கஞ்சி பரிமாறலும்

தமிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், மே 12 முதல் மே 18 வரை அனுஷ்டிக்கப்பட்டு வரும் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

 

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனது மகளைப் பார்ப்பதற்காக கனடா செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தை தடுக்க தவறியமை மற்றும் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், 13 முதல் செப்டெம்பர் 23 வரை வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது.

சோழர் கால பழமையான இந்து ஆலயத்தை அபகரிக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சி

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது.

வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து கரைச்சி பிரதேச சபையினால் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பதவி விலக மறுக்கும் ஆளுனர்களுக்கு எதிராக விரைவில் முறைகேடு விசாரணை?

ஜனாதிபதி செயலகத்தினால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆளுநர்களின் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளில் ஆளுநர்களைக் குற்றவாளிகள் என்று பெயரிட்டு அவர்களை நீக்கவும், ஆளுநர் பதவிக்கு வேறு நபர்களை நியமிப்பது மற்றும் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பணம் வழங்காமல் இருப்பது குறித்தும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் விருப்பத்துக்கு சாதகமாக செயற்பட்ட முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் புதிய ஆளுனராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கோணமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகள் ஏற்படும் – சரத் வீரசேகர

தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை பௌத்த சிங்கள நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியாம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் பாரிய அழிவு ஏற்படும் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது:

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்றும் இதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலில் எசிட் இரசாயன பதார்த்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை மறைத்தே கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2021.05.20ஆம் திகதி முதல் தீ விபத்துக்குள்ளாகி, 2021.06.02ஆம் திகதி கடலில் முழுமையாக மூழ்கியது. இந்த கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன பதார்த்தங்களினால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. ஆகவே, ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கோரி சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

அத்தோடு, தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு. ஆகவே, எக்காரணிகளுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை.

புராதன தொல்பொருள்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு அப்பாவி தமிழ் மக்களை யுத்த பகடைக்காயாக கொண்டு செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகள் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது முறையற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்துக்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானம் – சம்பிக்க

கோட்டாபய – கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனை தவிர்த்து எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இது முறையாக கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ. அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள்செல்கின்றனர்.

இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிட நேர்ந்தது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடப்பட்டது.மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய திறைசேரி உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச மற்றும் தேசிய கடன்களை மறுசீரமைக்கும் போது சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே சமூக கட்டமைப்பின் தோற்றம் பெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.