பாண் தயாரிப்பில் முதலிடத்தை வென்ற ஈழத் தமிழருக்கு பாரிஸ் மேயர் பாராட்டு

பாரிஸ் நகரின் மிகச் சிறந்த பாணைத் தயாரித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞர் தர்சன் செல்வராஜாவின் வெதுப்பகத்தில் பாண் வாங்குவதற்குப் பலரும் முண்டியடிக்கின்றனர்.

“நான் எப்போதும் வேறு கடைகளில் பாண் வாங்குவேன். இந்தச் செய்தி அறிந்த பிறகு இடத்தை மாற்றிக் கொண்டேன். இங்கே கிடைக்கின்ற பாண் மொறு மொறு என்று மிகச் சுவையாக இருக்கிறது. வாய்க்கு இதமாக இருக்கிறது – என்று பாரிஸ்வாசி ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார்.

பாரிஸ் நகரின் சிறந்த பாணைத் தயாரிக்கின்ற பேக்கரியாளரைத் தெரிவு செய்வதற்காகப் பாரிஸ் நகரசபையால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற போட்டியில் நகரின் 20 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள “Au levain des Pyrénées” என்ற வெதுப்பகம் முதல் இடத்தை வென்றுள்ளது. அதன் உரிமையாளரே தர்சன் செல்வராஜா.

பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் அவருக்கும் அவரது வெதுப்பகத்துக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு நடுவர்கள் சபையால் மொத்தம் 175 வெதுப்பகங்களின் பாண்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் சரியான நிறை மற்றும் அளவுகளைக் கொண்டிராத 49 பாண்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டன. பொதுவாகப் பாண்கள் 50-55 சென்ரிமீற்றர் நீளம் மற்றும் 250 முதல் 270 கிராம் எடை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். 126 பேக்கரிகளது பாண்கள் பிரபல சமையலாளர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவினரால் சுவைத்துப் பரீட்சிக்கப்பட்டன.

அவற்றில் மிகச் சிறந்த பாண் என்ற தரத்தை “Aulevain des Pyrénées” வெதுப்பகம் வென்றது. அதன் உரிமையாளருக்கு 4 ஆயிரம் யூரோக்கள் பணப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் பாரிஸ் நகரசபை வழங்கவுள்ளது. அத்துடன் அவரது வெதுப்பகம் அடுத்த ஓராண்டு காலம் நாட்டின் அதிபர் மக்ரோனின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகையின் சமையலறைக்கும் பாரிஸ் நகரசபை மண்டபத்துக்கும் தினமும் பாணை விநியோகிக்கின்ற பெரும் வாய்ப்பையும் பெறுகிறது.

உப்பின் அளவு முதற் கொண்டு அதன் சுவை, தரம், பாரம்பரிய தயாரிப்பு முறை எனப் பல்வேறு அளவீடுகளில் சிறந்த பாண் தெரிவு செய்யப்பட்டது. பாணைக் கத்தியால் வெட்டும் போது அது எழுப்பும் ஒலியும் கூட கவனத்தில் கொள்ளப்பட்டது என்று நடுவர் ஒருவர் கூறுகிறார்.

தர்சன் செல்வராஜா இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்தவர். இத்தாலி உணவகம் ஒன்றில் பணியாற்றியவர். அங்கே ஏற்பட்ட ஓர் அறிமுகம் காரணமாகத் தனது உணவகத் தொழிலைக் கைவிட்டுச் சுயமாக வெதுப்பகம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்தி இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். “வெற்றிச் செய்தியை அறிந்தவுடன் அழுதுவிட் டேன்” என்று அவர் பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்றிடம் கூறியிருக்கிறார்.

“நாங்கள் ஆண்டு தோறும் போட்டியில் பங்குபற்றி வந்தோம். இந்த முறை வெற்றிக்காகக் காத்திருந்தோம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பாண் தயாரிப்புகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவை.” -என்று அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டித் தெரிவில் அவரது பேக்கறி மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முறை நகரசபை நடத்திய போட்டி முப்பதாவது ஆண்டுக்குரியது.

தமிழர்கள் மீதான அரச அடக்குமுறையை மேலும் இறுக்கவே திருகோணமலையில் புத்தர் சிலை

தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஓர் இடத்தில் ஆரம்பித்து வைக்கவும் அதனை சாட்டாக வைத்து தமிழ் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளும் நோக்கத்துடனே திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந. சிறீகாந்தா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரில்,

கடற்கரை வீதியில், விளையாட்டு அரங்குக்கு முன்னால் காணப்படும், நான்கு அரச மரங்கள் அமைத்திருக்கும் இடத்தில், புத்த பெருமானின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன், இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இலங்கையில் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கும் திருகோணமலை மண்ணில், இந்த புத்தர் சிலை நாட்டப்படுவதற்கு போலியான காரணங்கள் வரலாற்றை திரிபுபடுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புத்தரின் சிலைகளை ஆயுதமாக பயன்படுத்தி, தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே, இந்த புத்தர் சிலை பிரதிஷ்டம் நிகழ்த்தப்பட உள்ளது.

அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடு தான் இது மேற்கொள்ளப் படுகின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க முடியாது. இந்த, இன – மத ரீதியிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழர் தரப்பில் எழுப்பப்படும் குரல்களை மௌனிக்க வைக்கும் நோக்கத்தோடு, வடித்தெடுத்த இனவெறியரான அரசாங்கக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மிரட்டல் தொனியில் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். நிகழ்வை தடுத்து நிறுத்த முயன்றால், பாரிய அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் கர்ச்சித்திருக்கின்றார்.

அவரைப் போன்ற சிங்கள இனவெறியர்களின் மிரட்டல்கள், நீண்ட பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு பழகிப் போன சங்கதிகளாக இருந்தாலும் கூட, இனக் குரோதத்தை தூண்டுகின்ற இத்தகைய பேச்சுக்களை, இவரும் இவரைப் போன்றவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை பற்றி பேசிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த கலவரங்களை விட, மிக மேசமான கலவரம் வெடிக்கும் என, தனக்கே உரிய பாணியில் மிரட்டல் விடுத்திருந்தார். நாட்டின் அமைதியை குலைக்கக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய இனவெறிப் பேச்சுக்கள் தொடர்பில், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இந்தச் சவாலை நிதானத்தோடு எதிர்கொள்வதே உகந்தது ஆகும். தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை, ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும், அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்குமுறையை மேலும் இறுக்கிக் கொள்ளவும், நிகழ்ச்சிநிரல் தீட்டப்படுவதாகவே சந்தேகிக்க வேண்டி உள்ளது. நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் நெருக்கடி மிக்க சில பிரச்சினைகளுக்கு உடனடிப் பரிகாரமாகவும் இதனை சில சக்திகள் கருதக்கூடும்.

இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தே சமீபத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் உணர்த்தி நிற்கும் செய்தியாகும். கட்சி வேறுபாடின்றி தமிழ் மக்களை அணிதிரட்டி, பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் மக்களின் ஆதரவையும் கோரி, பாரிய அரசியல் போராட்டம் ஒன்றை மேற்கொள்வது என்பதே இன்றைய உடனடித் தேவையாகும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியிடையேயான பேச்சு ஒத்திவைப்பு

இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சு இரத்து செய்யப்பட்டது.

எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்தப் பேச்சு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ‘நலன்புரி நன்மைகள் வழங்குதல்’ தொடர்பான சட்டமூலம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் நோக்கில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. நேற்றைய பேச்சில் அதிகாரப் பகிர்வு, நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பேசப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காணி ஆக்கிரமிப்புகளை உடன் நிறுத்த ஜனாதிபதி இராணுவம்,திணைக்களங்களுக்கு உத்தரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் உட்பட சகல அரச திணைக்களங்களும் முன்னெடுக்கும் காணி ஆக்கிரமிப்பு – சுவீகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களின் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேற்று தமிழ் கட்சிகளுடனான சந்திப்பின்போது திணைக்களங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றிருந்த நிலையிலேயே அவர்களுக்கு இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின்பேரில் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடை பெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக பேசப்பட்டது.

காணிகள் ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவம், தொல்பொருள், வனவளத் திணைக்களம் என்பன காணிகளை ஆக்கிரமிப்பு செய்வதுடன் சுவீகரித்தும் வருகின்றன. இவை உடனயாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர்.

அத்துடன், இந்த மாகாணங்களில் ஒவ்வொரு திணைக்களங்களும் குறிப்பாக தொல்பொருள் திணைக்களம் எவ்வாறு விடயங்களை கையாள்வது என்பது தொடர்பில் ஒரு பொறிமுறை அமைத்து அது தொடர்பில் பேசி முடி வெடுத்தே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தின.

தொல்லியல்துறை மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ் பிரதிநிதிகள் வெளிப்படுத்தினர். அத்துடன், இது விடயத்தில் ஜனாதி பதியின் உத்தரவுகள்கூட பின்பற்றப்படுவதில்லை என்று சுமந்திரன் எம். பி. சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாலும் தொல்லியல் திணைக்களத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால் இந்தத் திணைக்களத்தை கலைத்துவிட்டு புதிய அமைப்பை உருவாக்கலாம் என்று சித்தார்த்தன் எம். பி. இதன்போது குறிப்பிட்டார்.

இதன்போது குறுக்கிட்ட தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் 20 இடங்களில் தாங்கள் தவறாக நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறினார்.

இதன்போது, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் பேச்சு நடத்தி இது தொடர்பில் தீர்வுகளை எட்டலாம். தீர்வு காண முடியாத விவகாரங்களை அடுத்த சந்திப்பில் பேசலாம் எனவும் ஜனாதிபதி யோசனை கூறினார்.

பயங்கரவாத சட்டம் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது. அதனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழ் கட்சிகள் வலியுறுத்தினர். எனினும், பயங்கரவாத தடை சட்டம் தேவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். இதனால், டக்ளஸூக்கு எதிரான நிலைப்பாட்டை சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் வெளிப்படுத்த அது கடும் விவாதத்தை கிளப்பியது.

அரசியல் கைதிகளாக தற்போது சிறைகளில் 30 பேர் இருக்கின்றனர். இவர்களில் 14 பேரின் வழக்குகள் நிறைவடைந்து விட்டன. இதில், பாதிக்கப்பட்ட இரு தரப்பினர் மன்னிப்பு அளிக்க முன்வரவில்லை. இதனால் இருவரை விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. மகேஸ்வரன் மற்றும் சரத் பொன்சேகா தரப்பினரே இதுவரை சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும், 12 பேரை விடுதலை செய்ய முடியும். 16 பேர் தொடர்பான வழக்குகள் நடைபெறுகின்றன. இதனால், அவர்கள் தொடர்பில் முடிவு எடுக்க முடியாது. எனினும், அவர்களை பிணையில் விடுவிப்பது குறித்து ஆராயப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டது. முகநூலில் பதிவிட்டவர்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர்களின் வழக்குகளை முடிவுறுத்துமாறும் இதன்போது தமிழ் தரப்பினர் கோரியிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ஆணைக்குழுவை நியமித்து நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.

1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆராய வேண்டும் என்று என்று டக்ளஸ் தேவானந்தா கூறினார். இது தொடர்பிலும் சுமந்திரனுக்கும் டக்ளஸூக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது.

இதில், தலையிட்ட ஜனாதிபதி 2000 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய குழு நியமிக்கலாம். தேவை ஏற்படின் மற்றொரு குழு 1983ஆம் ஆண்டிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி ஆராயலாம் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தின் பிரதிநிதி, இதுவரை 20 முறைப்பாடுகளை தமது பணிமனையால் ஆராயப்பட்டது என்றும் இராணுவம், தனிநபர்கள், சில அரசியல் கட்சிகள் பற்றியும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையின் பின்னரே இந்த விடயத்தை செயல்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பேச்சில் தென்னாபிரிக்க மாதிரியான நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சர்வதேச அங்கீகாரம் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் நாளை (இன்று) பேசுவோம் என்று ஜனாதிபதி கூறினார். இதன்போது, இந்த வகையான முடிவற்ற சந்திப்புகளால் எந்த பலனும் இல்லை என்று சம்பந்தன் சுட்டிக் காட்டினார்.

நாங்கள் யாரையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. பேச அழைத்தோம் – வந்தீர்கள் – பேசுவோம் – முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதி கூறினார்.

இந்த பேச்சில் தமிழ் கட்சிகள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், இரா. சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் எம். ஏ. சுமந்திரன், சி. சிறீதரன், த. கலையரசன், இ. சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா. சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் க. வி. விக்னேஸ்வரன் ஆகியோருடன் சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதன் எம். பியும் பங்கேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சி. சந்திரகாந்தன் (பிள்ளையான்), கு. திலீபன் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்

பிக்குகளிடம் பணம் வாங்கி தொல்லியல் ஆய்வு செய்ய முடியாது: ரணில் கண்டிப்பு!

தொல்லியல் இடமொன்று அடையாளம் காணப்பட்டால் அங்கு வீடு கட்டவோ, விகாரை கட்டவோ அனுமதியில்லை. நீங்கள் தனியார் துறையல்ல. பிக்குகளிடமோ வேறு எவரிடமோ பணம் பெற்று தொல்லியல் ஆய்வை செய்ய முடியாது. சிங்கள நாகரிகம் பிறந்த இடங்களில் கூட இன்னும் பணிகளை செய்யவில்லை என தொல்லியல் திணைக்களத்தின் பலவீனங்களை சுட்டிக்காட்டியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

தொல்லியல் திணைக்களத்துடனான கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொல்லியல் திணைக்களம் 2000 ஏக்கர் காணியை மீட்க சென்று இருந்தது. இறுதியில் 200 ஏக்கர் மட்டுமே மிஞ்சியது. அவற்றில் 100 ஏக்கர் அளவிலேயே தேவைப்பட்டது. நாம் எவ்வாறு அந்த பணிகளை செய்வது ஒரு வருடத்தில் நாம் முன்னெடுக்கப் போகும் வேலை திட்டம் தொடர்பிலான திட்டமிடுதல் உள்ளதா இல்லையா? என்றார்.

இதற்கு பதிலளித்த தொல்லியல் திணைக்களத்தினர், எம்மிடத்தில் உள்ளது. பிரச்சினை என்னவென்றால் கடந்த 30 வருடங்களாக நாங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்றவில்லை. அதனால் வடக்கு கிழக்கில் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை வழங்கினோம். அதனாலேயே அப்பகுதிகளில் அதிகம் பணிகளை முன்னெடுப்பதை போன்று விளங்கியது. அதற்கான பணம் நமக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. ஏனைய நிதி உதவி வழங்கும் நிறுவனங்களின் ஊடாகவே கிடைத்தது. சில நேரங்களில் பிக்குகள் வழங்குவர் என்றனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “அவ்வாறு செய்ய முடியாதல்லவா. மற்றவர்களிடம் பணத்தைப் பெற்று தேசிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது. எவராவது யாழ்ப்பாணத்தில் இதனை செய்யுங்கள், கொழும்பில் இதை செய்யுங்கள் என்று கூறினால் அதனை நாம் செய்ய முடியாது அல்லவா. இதற்காக பட்ஜெட் ஊடாக கிடைக்கும் பணம் மற்றும் இ ஆர் டி மூலம் கிடைக்கும் பணத்தை மாத்திரமே பயன்படுத்த வேண்டும். வேறு எங்கிருந்தும் செய்ய முடியாது. நீங்கள் தனியார் துறையல்ல.

வடக்கை விடுங்கள். அனுராதபுரம் மகாவிகாரையில் நான் கூறியவற்றை இன்றுவரையில் செய்யவில்லை. அடுத்ததாக திம்புலாகலவில் செய்யுங்கள். மகா விகாரையிலிருந்து திம்புலாகலைக்கு சென்றதன் பின்பே தாய்லாந்து சென்றனர். மாகலவில் இன்னும் செய்யவில்லை. சிங்கள நாகரிகம் ஆரம்பித்த மல்வத்து வளாகத்தில் இன்னும் பணிகளை செய்யவில்லை.

தொல்லியல் திணைக்களத்தின் அனைத்து திட்டங்களையும் அரசாங்கத்திடம் சமர்ப்பியுங்கள். நாம் அனுமதிப்போம்.

அத்தோடு இடம் ஒன்றை கண்டுபிடித்தால் அங்கு வீடு கட்டவோ விகாரை கட்டவோ எவருக்கு அனுமதி இல்லை. அது அரசாங்க சொத்தாகும்.

வடக்கில் உள்ளவர்களையும் நான் அறிவுறுத்தியுள்ளேன். அவர்கள் அது பற்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வதாயின் பிரச்சனைகள் இல்லை அல்லவா. அவர்கள் பார்த்துக் கொள்ள தவறினால் நாம் போலீசாரை அனுப்பி அந்த பணிகளை செய்வோம். அரசாங்கத்தினால் அதனை கண்காணிக்க முடியும். மாகாண சபைகளுடன் இணைந்து பணிகளை செய்வதாக கூறுவோம். எவரேனும் அவற்றை உடைக்க வந்தால் இராணுவத்தையும் போலீசாரையும் அனுப்பி பாதுகாப்போம். பிக்குகளாலும் அதனை பாதுகாக்க முடியாது என்றார்.

Posted in Uncategorized

பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் – இலங்கை மத்திய வங்கி

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

பொருளாதாரத்தின் நிலை, சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் 2022 வருடாந்த அறிக்கை என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊகங்கள் இருந்தாலும், நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கி எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஒருவித உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் இருந்தாலும், பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பது மற்றும் வங்கி அமைப்பின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி விகிதங்கள், குறிப்பாக சந்தை வட்டி விகிதங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்க புள்ளிகளுக்குக் குறையும் என்றும், குறிப்பாக முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறை அறிவிக்கப்பட்டவுடன் வட்டி விகிதங்களும் வேகமாகக் குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் விடுதலை

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் நேற்று கைது செய்தனர். தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. அங்கு கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

மீள் பிரதிஷ்டையின் போது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை ஆலய பூசாரியை யும் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்

இவர்கள் இருவரும் நேற்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்று நீதிவான் சுட்டிக் காட்டி அவர்களை விடுதலை செய்தார். எனினும், ஆலயத்தில் கட்டுமானங்களையோ அல்லது மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், பூசை வழிபாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அனுமதித்தார்.

இதேநேரம், ஆலயத்தின் இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டத்தரணி தி. திருவருள் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

“வெடுக்குநாறி எங்கள் சொத்து” வவுனியாவில் நேற்று போராட்டம்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர்களின் கைதை கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

வவுனியா மருத்துவமனை சுற்று வட்ட வீதியில் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று மாலை இந்தப் போராட் டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தமிழர்களின் தொன்மையை அழிக்காதே”, “வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி”, “நீதியில்லா நாட்டில் நீதிமன்றம் எதற்கு”, “கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்”, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது மக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் ஓர் அங்கமான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினமும் (10.05.2023) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , கிளிநொச்சி கந்த சுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினமும் (10-05-2023) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் முன்னதாக வர்த்தகர்கள் மற்றும் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் பிடியரிசி பெற்றுக் குறித்த ஆலய முன்றலில் கஞ்சி காய்ச்சப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு கஞ்சி வழங்கும் நடவடிக்கை இன்றைய தினமும் (10.05.2023) முன்னெடுத்துள்ளனனர்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் கஞ்சி காய்ச்சப்பட்டு முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சியினை நினைவுப்படுத்த வேண்டியதேவை குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும், முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மக்களுக்குக் கஞ்சி வழங்கிய ஒருவர் சாட்சியமாக வழங்கியுள்ளதை நினைவு படுத்தியுள்ளார்.