Category: தற்போதைய செய்திகள்
”சர்வதேச நாடுகள் தமிழர்களை ஏமாற்றுகின்றன” – பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடையங்களை பயன்படுத்துகின்றன என்று மிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு, கடைசியாக 2009 ஆம் ஆண்டு, தமிழ் இனத்தை இனப் படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.
ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில், இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி, அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.
சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.
தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும்,தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது, பிரேரணை எந்த வித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.
இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும், இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும், ஐ.நா பரிந்துரைகளுக்கும்,தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி தாங்கள் அதற்கு உடன் பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும், மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
திருக்கோணேஸ்வரத்தில் அத்துமீறிய செயற்பாடுகள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்பந்தன்
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாகவிருக்கும் நிலப்பரப்பை பாரதூரமானதொரு முறையில் மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை மாற்றுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச உடன்படிக்கையான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியிலுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வட மத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பு பதிலீடு செய்யப்படவுள்ளதென தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை கிழக்கு மாகாணத்திற்குள் கொண்டுவரும் அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கும் முன்மொழிவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது பாரதூரமான எதிர்வலைகளையும் உலகில் இரண்டாவது மிகச் சிறந்த துறைமுகமாக கருதப்படும் திருகோணமலை துறைமுக்திற்கு பாரதூரமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்துடன், வடக்கு மற்றும் தெற்கின் கடல்சார் எல்லைகள் ஊறுபடுவதற்கு வழிவகுக்கும் என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களோ அல்லது இலங்கையின் அயல் நாடோ அல்லது மிக அருகில் உள்ள நாடுகளோ இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தின் வடக்கிலும் தெற்கிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்வதே இதன் முழு நோக்கமாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழு
தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்றது.
யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(17)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று மதியம் 2மணியளவில் இடம்பெற்றது.
கடந்த கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கான அழைப்பாளர் குழு தெரிவு செய்யப்பட்டநிலையில் அந்தக் குழு, கலந்துரையாடலில் பங்கேற்காத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நினைவேந்தலை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டநிலையில் இன்றையதினம் மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளாவர்கள் கலந்துகொண்ட மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு
பிரிட்டனின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.
பூரண அரச மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடல், இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடைபெற்ற ஜெபக் கூட்டத்தை தொடர்ந்து, விண்ட்சர் கோட்டையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
புதிய அரசர், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹேரி, அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
திருகோணமலை:வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி போராட்டம்
வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோஷத்தை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் 50 வது நாளை குறிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் கையில் பாதாதைகள், பலூன்கள் மற்றும் பட்டங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்று குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலைக்கு பின்னரான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், காணிப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பெற வேண்டும், கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்படக்கூடாது, பயங்கரவாத தடைச் சட்ட திட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கு கேள்விக்குறியாக காணப்படுகிறது, எனும் கோரிக்கைள் பொறிக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இலங்கை தொடர்பில் ஐநா பிரதிநிதி வெளியிட்ட டுவிட்டர் பதிவு!
சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தற்போதைய நெருக்கடியின் காரணமாக அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க இலங்கையுடன் வௌிநாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தியா -கடந்த 4 மாதங்களில் இலங்கைக்கு 968 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி
கடந்த 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.
அதில் 809 மில்லிய் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.
இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன் யூரியப உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியாவுடனான நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் வேண்டும் – உலக தமிழர் பேரவை
ஜெனிவாவில் நடைபெறும், மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) இலங்கை தொடர்பில் வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென உலக தமிழர் பேரவை (GTF) வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பேரவை, போரின் போது பாரியளவில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், அனைத்து சமூகங்களினதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) ஆற்றிய பங்கு இந்த விடயத்தில் முக்கியமானது. கடந்த மாதம் வரை உயர் ஸ்தானிகராக மிச்செல் பெச்லெட்டின் முன்மாதிரியான சேவைக்காக, பேரவை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் புதிய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை பேரவை வரவேற்றுள்ளது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியானது, இனப்பிரச்சினை மற்றும் யுத்தத்துடன் தொடர்புடைய பொறுப்பற்ற நிர்வாகத்தின் செயற்பாடுகள் என்பது, உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. ஆழமடைந்து வரும் இராணுவமயமாக்கல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையின்மை, பொறுப்புக்கூறல் இல்லாமை, பாரிய மனித உரிமை மீறல்களுக்கு தண்டனையில்லாமை மற்றும் ஊழல் என்பன அதிகார துஷ்பிரயோகத்திற்கான சூழலை உருவாக்கியுள்ளது. எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கடுமையான அணுகுமுறையை அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) மாணவர் தலைவர்களை தடுத்து வைப்பதற்கும், நீண்டகாலமாக தமிழ் மற்றும் முஸ்லிம் கைதிகளைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கும் தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக ஆணையாளரின் அறிக்கை கூறுகிறது.
இலங்கையில் 2022 இல், பாதுகாப்புக்காக 373.1 பில்லியன் ரூபா அதாவது 1.86 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டது, இது மொத்த அரசாங்க செலவினத்தில் 15 சதவீதம் ஆகும். இது சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகமாகும். பெரும் நிதி நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டில் இத்தகைய உயர் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அதுவும் வடக்கு – கிழக்கில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படுவதை ஆணையாளரின் அறிக்கை கண்டித்துள்ளது. இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எந்தவொரு வெளிப்புறப் பொறிமுறைக்கும் இணங்காது, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ளக உண்மையைத் தேடும் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பை சர்வதேச சமூகம் அவதானிக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை கேட்டுள்ளது. இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலின் போது கருத்து தெரிவித்தமைக்காக இந்தியாவுக்கு தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்கான அர்ப்பணிப்புகளில் இலங்கை அரசாங்கத்தால் அளவிடக்கூடிய முன்னேற்றம் இன்மை குறித்து இந்திய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டதை பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை ஒரு குறுக்கு வழியில் இருப்பதாக உலக தமிழர் பேரவை கருதுகிறது. துரதிஷ்டவசமாக, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், ஆரோக்கியமான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை. எனினும் அதனை பொருட்படுத்தாமல், இலங்கை தொடர்பான பொறுப்புள்ள செயல் பாடுகள், சர்வதேச சமூகத்தால் மனசாட்சியுடன் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமே இது சாத்தியமாகும். 2022 பெப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களின் உயர் ஸ்தானிகரின் அறிக்கைகளில் பட்டியலிடப்பட்டுள்ள விரிவான பரிந்துரைகள், ஐக்கிய நாடுகளின் அமைப்புகளுக்கும் மற்றும் பொதுச் செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட வேண்டும். அத்துடன் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் பிற 3 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளான, மனித உரிமைகள் பேரவை, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை ஆகிய இரண்டுக்கும் ஒரு நிபுணத்துவ பொறிமுறையை நிறுவுவதன் மூலம், கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலுக்கான ஆணையை வலுப்படுத்த முடியும் என்ற யோசனையை அங்கீகரிப்பதாக தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கையின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த பரிந்துரைகளை வழங்குதல். தீர்மானத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய காலப்பகுதியில் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கான போதுமான நிதியளிப்பது என்பன, இலங்கை தொடர்பான முக்கிய குழு உட்பட உறுப்பு நாடுகளின் பொறுப்பாகும் என்று உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்!
விடுதலைக் கோரி மெகசின் சிறைச்சாலையில் கடந்த சில நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதத்தை கைவிட்டதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
நேற்று தான் மெகசின் சிறைச்சாலைக்கு சென்று, கைதிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு வழங்கிய உறுதி மொழியை அடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 11 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி எழுதிய கடிதத்தை தம்மிடம் கையளித்ததாகவும், அதனை சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
சட்ட விவகாரங்கள் தொடர்பில் அவ்விடத்திலிருந்தே கைதிகளின் சட்டத்தரணிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த மூன்று கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 13 கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 6 ஆம் திகதி மாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆரம்பித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று கைவிடப்பட்டது.
ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து, தற்காலிகமாக உண்ணாவிரதத்தை கைவிடுவதாகவும் தமது வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டால், தமது போராட்டம் தொடரும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.