ஐநா அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் செல்கிறார் அலி சப்ரி!

ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் திங்கட்கிழமை (19) நியூயார்க் செல்லவுள்ளார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

கடந்த 13 ஆம்  திகதி ஆரம்பமான பொதுச்சபையின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஒக்டோபர் 7 இலங்கை தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பு!

தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தலைமையிலான 7 நாடுகள் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக அறிய முடிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார்.

மேலும் இலங்கைக்கு எதிராக பல நாடுகள் ஏற்கனவே கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு ஐக்கிய நாடுகளின் 77 ஆவது அமர்வு செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வகிக்கும் அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி நாட்டில் இருந்து வௌியேறியுள்ள காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும், நிதி, பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகளின் பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக கீதா குமாரசிங்கவும், தொழிநுட்ப பதில் அமைச்சராக கனக ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே இலங்கை உள்ளது – ஜனாதிபதி

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர்.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன.

இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை.

தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ரணிலுக்கு 4ஆவது இடம்

எதிர்வரும் 19ஆம் திகதியன்று, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குக்காக லண்டனுக்குச் செல்லும் முக்கிய பொருளாதாரங்களின் தலைவர்களைக் காட்டும் ஒரு கிரஃபிக் (வரைகலையை) ஏஃப்பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 4ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் ஜப்பானிய பேரரசர் நருஹிடோவுக்கு அடுத்த இடத்தில் ஜனாதிபதி ரணில் பெயரிடப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

திணறும் அரச நிறுவனங்கள்: சம்பளம் வழங்குவதில் சிக்கல்?

பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களை கொள்வனவு செய்வது மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கடுமையான நெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது, இருப்பினும், பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால், மனிதாபிமான உதவிக்கான உயர்ந்த தேவை வெளிப்பட்டது என அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஏழு நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மன்னார் மற்றும் அம்பாறையின் இரண்டு நகரங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நகர சபைகள் கலைக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும்-ரணில்

நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது.

இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளை, இந்தியாவுக்கு எந்தவொரு பாதகமான விளைவும் ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் சுரேந்திரன் வலியுறுத்தல்

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சுரேந்திரன் மேலும் கூறுகையில், பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.