ஜனாதிபதியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ ) அவசர சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில்தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர்கள் அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பு இன்று காலை நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரனம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அரசியல் கைதிகள்

”முதலாவதாக குரல் அற்றோர் குரல் அமைப்பினரின் வேண்டுகோளை சுட்டிக்காட்டி கையளிக்கப்பட்ட அரசியல் கைதிகள் விபரம் இச் சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது.

24 கைதிகள் தண்டனை வழங்கப்பட்டு இருப்பதனாலே நேரடியாக ஜனாதிபதியின் உத்தரவில் விடுதலை செய்யப்பட முடியும் என்றும் கால தாமதம் இன்றி அவர்களை விடுவிக்குமாறும் கோரப்பட்டது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 22 கைதிகள் ஜனாதிபதியின் விசேட மன்னிப்பினால் விடுதலை செய்ய முடியும்.

தண்டனை வழங்கிய பின்னர் தான் விடுதலை செய்ய முடியும் என்ற அரசியல் யாப்பு நிலைப்பாட்டை கருத்தில் கொள்வதாக இருந்தால் இனி வழக்கு தொடுத்து தீர்ப்புகள் வழங்கப்படுவது இவ்வரசியல் கைதிகளின் விடுதலையில் காலதாமதத்தையே ஏற்படுத்தும்.

அதேநேரம் நல்லாட்சி அரசின் காலத்தில் புனர்வாழ்வு அளிக்கும் முறைமையின் கீழ் கைதிகளை விடுதலை செய்யலாம் என்ற திட்டத்தை அப்போது பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி நடைமுறைப்படுத்த முற்பட்டதும் நினைவு கூரப்பட்டது.

குரல் அற்றோர் குரல் அமைப்பினர் வேண்டுகோளின் அடிப்படையில் இவ்வரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய்யும் பொறிமுறை, அது குறுகிய காலப் புனர் வாழ்வின் அடிப்படையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டனை வழங்கப்பட்ட 24 அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றவர்களுடைய விடுவிப்பு சம்பந்தமாக நீதி அமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவான நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலதிகமாகத் தடுப்பில் உள்ள முப்பத்து எட்டு அரசியல் கைதிகளுக்கு எதிராக எந்த குற்றங்களும் இல்லாததனால் ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரிந்துரையின் படி அவர்களை விடுவிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்

இரண்டாவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றி பேசப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான தகவல்களை திரட்டுவதற்கு சர்வதேச மேற்பார்வை உடனான பொறிமுறையே அவசியம் என்பதை கூட்டமைப்பு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் அதையே வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையற்ற நிலையில் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பொறிமுறையே காணாமல் ஆக்கப் பட்டவர்களுகான நீதியை பெற்றுத் தரும் என தொடர்ந்தும் கோரி வருகிறோம்.

எனவே அதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஐ. நா அமர்வுகளுக்கு பின்னராக நீதி அமைச்சருடன் அதற்கான குழு ஒன்றை அமைத்து தமிழர் தரப்புடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்

மூன்றாவதாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற வேலைத்திட்டத்தை இனிமேலும் பின் போடாது நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஏற்கனவே நல்லாட்சி காலத்தில் அதற்கான அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது.

அது நிறைவேற்றப்படாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஒரு நிர்வாக ரீதியான தரம் உயர்த்தலுக்கு அரசியல் காரணங்களைக் காட்டிப் பின் போடுவது அந்த மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதாக அமையுமே தவிர எத்தரப்புக்கும் நன்மை பயக்காது என்று எடுத்துரைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி விரைந்து அதை செயல்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு

நான்காவதாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் குறிப்பாக வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள், தொழில் செய்ய முடியாமல் படும் தொடர் துன்ப நிலையும் அவர்களுடைய பிரச்சினை உடனடியாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டது.

வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு தாங்கள் முன்மொழிந்த சலுகைகளை வரவேற்கிறோம்.

அதேநேரம் விதைப்புக் காலம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், ஏற்கனவே உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளினாலும் எரிபொருள் விலையேற்றத்தினாலும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது அவர்களுக்கான உரம் மற்றும் கிருமிநாசினிகள் என்பவை சரியான நேரத்திற்கு வழங்கப்படாத விடத்து எதிர்வரும் போகத்தில் பாரிய சிக்கலை அவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இந்தப் போகத்தில் விவசாயம் பாதிக்கப்படுமாக இருந்தால் நாடு ஒட்டுமொத்தமாக உணவுப் பஞ்சத்தில் வீழ்ந்துவிடும்.

சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமாவது உதவிகளைப் பெற்று இந்த பிரச்சினைக்கு அவசர முடிவு காண வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தல், இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் என்பவற்றை பிரஸ்தாபித்த பொழுது காணி கையகப்படுத்தல் உடனடியாக தடுத்து நிறுத்துவதாகவும் இராணுவ பிரசன்னத்தை பாதுகாப்புச் சபையின் ஊடாக கட்டங்கட்டமாக குறைக்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்குவதோடு, புலம்பெயர் முதலீட்டாளர்கள் சம்பந்தமான அரசியல் அதிகார ரீதியான மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே அவர்களை நம்பிக்கை கொள்ள வைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் எல்லா விடயங்களுக்கும் அவசியமான மற்றும் அவசரமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஏன் மீண்டும் இலங்கை வந்துள்ளார்?

ஐம்பதுக்கும் அதிகமான நாட்களின் பின்னர் அவர் மீண்டும் வந்துள்ளார்.

இலங்கையிலிருந்ததப்பியோடி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது.

இலங்கையை ஒரு காலத்தில் இரும்புபிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண்ட விதம் காரணமாக சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவரது உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து அங்கிருந்து ஜூலை 13ம் திகதி மாலைதீவிற்கு தப்பியோடியபின்னர் அதிகளவில் கவனத்தை ஈர்க்காத வண்ணம் வாழ்ந்தார்.

நாட்டில் காணப்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் அவர் ஏன் மூன்று ஆசிய நாடுகளிற்கு சென்றார் என்பது குறித்து அவர் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.

ஏன் தான் திரும்பிவர தீர்மானித்தார் என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தவில்லை.

சில செயற்பாட்டாளர்கள் கோட்டாபய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் ஆனால் அவரின் சகாக்கள் ஆட்சியில் உள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டிற்கான அவரது மீள்வருகை மேலும் ஆர்ப்பாட்டங்களை தூண்டுமா என்பது நிச்சயமற்ற விடயமாக காணப்படுகின்றது.

மாலைதீவு சிங்கப்பூர் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருந்த பின்னர் அவரை அனுமதிப்பதற்கான நாடுகள் இல்லாத நிலையை அவர் எதிர்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடுகளில் அவரது வாழ்க்கை முறையை தொடர்வதற்கான செலவும் ஒரு காரணம் என விடயமறிந்த வட்டாரங்கள் 23ம் திகதி ரொய்ட்டருக்கு தெரிவித்தன,தனிப்பட்ட விமானம் மெய்பாதுகாவலர்கள் ஜனாதிபதிக்கான தங்குமிடம் போன்றவை. இவற்றிற்காக அவர் பெரும்பணத்தை செலவிட வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.

இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவிற்கான வீழ்ச்சி என்பது தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் பிரிவினைவாதிகளை தோற்கடித்தமைக்காக மக்கள் அவரை போர் அரசன் என வழிபட்ட நிலையிலிருந்து ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.

பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவரின் வீழ்ச்சிக்கு நான் எனும் அவரது அகங்காரமே காரணமாகயிருக்கலாம் என தெரிவிக்கின்றார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.

அவர் தங்கியிருப்பதற்கான இடத்தை கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது( வெளிநாட்டில்) என தெரிவித்த அம்பிகா சற்குணநாதன், அவர் கற்பனை செய்ததை விட அது கடினமாக காணப்பட்டது என்கின்றார்.

இவர் ஒருகாலத்தில் கடவுளின் சக்தி பொருந்தியவராக கருதப்பட்ட அரசியல்வாதி; பொறுப்புக்கூறலிற்கு உட்படும் அனுபவம் பழக்கம் அவருக்கில்லை எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லல்

ராஜபக்ச முதலில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றார்- கொழும்பிலிருந்து 90 நிமிடங்களில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றுவிடலாம்.

அவரது விமானம் தரையிறங்குவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்- தற்போது சபாநாயகர் தலையிட்டார் அதன் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது என உயர்வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இலங்கையர்கள் மகிழ்ச்சியடையவில்லை பலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிருந்து அவரை தூக்கி எறியுங்கள் மாலைதீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரின் கையில் காணப்பட்ட பதாகை தெரிவித்தது,அன்பான மாலைதீவின் நண்பர்களே குற்றவாளிகளிற்கு இடமளிக்கவேண்டாம் என உங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளுங்கள் என மற்றுமொரு பதாகை வேண்டுகோள் விடுத்தது.

இதற்கு 48 மணித்தியாலத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச சவுதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.

தனிப்பட்ட விஜயம் காரணமாக அவருக்கு நாட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு ஜூலை 14 ம் திகதி உறுதி செய்தது.

அவர் புகலிடம் கோரவில்லை நாங்கள் புகலிடமும் வழங்கவில்லை என அவ்வேளை சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதன் பின்னர் ராஜபக்ச சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடும் என பல செய்திநிறுவனங்கள் தெரிவித்தன ஆனால் அது இடம்பெறவில்லை.

அவர் ஏன் சவுதி அரேபியா செல்லவில்லை என்பதற்கான விடைகள் இதுவரை கிடைக்கவில்லை.

எனினும் 2020 இல் கோட்டாபய அறிமுகப்படுத்திய கடும் விமர்சனத்திற்குள்ளான கொவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை காரணமாகயிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நடைமுறை இஸ்லாமிய மத கொள்கைகளிற்கு முரணாணது என 2020 டிசம்பரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனம் தெரிவித்திருந்தது,சவுதி அரேபியாவும் இதில் ஒரு உறுப்பு நாடு,முஸ்லீம்களின் நம்பிக்கையை அடிப்படையாக உடல்களை புதைக்கும் நடைமுறை மதிக்கப்படவேண்டும் என ஓஐசி வேண்டுகோள் விடுத்திருந்தது.

பின்னர் அந்த கொள்கையை கைவிட்ட ராஜபக்ச எனினும் கொவிட்டினால் இறந்த முஸ்லீம்களின் உடல்களை தொலைதூரத்தில் உள்ள இடமொன்றில் குடும்ப உறுப்பினர் மத அனுஸ்டானங்கள் இல்லாமல் புதைக்கவேண்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

சிங்கப்பூரிலிருந்து அவர் இலங்கையின் தலைவர் என்ற பதவியிலிருது தனது hhஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருந்தவேளை கோட்டாபய ராஜபக்ச , இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்காக குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் சாத்தியப்பாடு காணப்பட்டது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் சட்டத்தரணிகள் ஜூலை 23ம் திகதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைதுசெய்து விசாரணை செய்யவேண்டும் என கோரும் மனுவை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தாக்கல் செய்தனர்.

இனி என்ன நடக்கப்போகின்றது

இலங்கை வியாழக்கிழமை பொருளாதார ஸ்திரதன்மையை நோக்கிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது,2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.

மோசமான உணவு எரிபொருள் மருந்து தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் அரசாங்க வருமானத்தை அதிகரித்து அதன் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் இலங்iயின் ஸ்திரதன்மையை உறுதி செய்வதே இந்த நான்கு வருட திட்டத்தின் நோக்கம்.

எனினும் சர்வதேச நாணயநிதியம் இன்னமும் கடனிற்கான அனுமதியை வழங்காத நிலையில் பொருளதார மீட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் இலங்கை பயணிக்கவேண்டியுள்ளது.

ராஜபக்சவின் வருகை மீண்டும் நாட்டில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 21 ம் திகதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர்.

சிலர் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை உட்பட பல குற்றங்களிற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்,இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகளும் எதிர்கட்;சிகளும் கண்டித்துள்ளன.

நிச்சயமாக அச்சமொன்று உள்ளது என்கின்றார் மனித உரிமை சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன்,மேலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமா என்பதை தெரிவிப்பது கடினமான விடயம் ஆனால் வாழ்க்கை செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுகின்றன பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது என்கின்றார் அவர்.

மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்தும் உணவு எரிபொருளை பெறமுடியாத நிலையில் உள்ள அதேவேளை இலங்கை திரும்பியவுடன் ராஜபக்ச வாழவுள்ள வசதியான வாழ்க்கை மீண்டு;ம் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்த உள்ளது.

இதுவே எனது மக்களை வீதிகளிற்கு கொண்டுவருகின்றது இந்த ஏமாற்று- நடவடிக்கைகளால் அவர்கள் சீற்றமடைகின்றனர் என்கின்றார் அம்பிகா.சற்குணநாதன் .

முன்னாள் தலைவர் யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கின்றார் உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா.

அரசியல்வர்க்கம் அவரை பாதுகாக்கும் அவர் தப்பியோடியபோதிலும் அவருக்கு தேவையான அவசியமான கட்டமைப்புகளும் அப்படியே உள்ளன என தெரிவிக்கும் ஜஸ்மின் சூக்கா ஆர்ப்பாட்ட இயக்கம் உடைந்து அச்சமடைந்து சிதைவடைந்ததாக காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார்.

துணிச்சலா சிவில் சமூக குழுவொன்று அவருக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்வதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் சட்டமா அதிபர் திணைக்களமும் காவல்துறையும் அதற்கு அனுமதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எப்போதும் உள்ளது என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.

நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளகூடாது கோட்டாவை உரிய விதத்தில் இலங்கை கையாள்வது எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை உலகிற்கு தெரிவிக்கும் என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.

Source:CNN

பாராளுமன்ற செங்கோலுக்கு இல்லாத மரியாதை சீனாவின் உளவுக் கப்பலுக்கு வழங்கப்படுவதுதான் இந்த நாட்டின் ஜனநாயகம் – பா.உ.  ஜனா

இந்தக் காலகட்டத்தில் இந்தியா உணவுக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது. அதைவிட வேதனையான விடயம் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து மரியாதை கொடுக்காத தேரர் சீனக்கப்பல் வரும் போது மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமாக கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
விவசாயக் கடன் தள்ளுபடி என்பது மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் உள்ளது. ஏனெனில் அம்மாவட்ட விவசாயிகள் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே இடைப்போக வேளாண்மையை முடித்து தற்போது பெரும்போகத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதால் அவர்கள் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியானது இல்லை. இததனை விவசாய அமைச்சர் கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பாதீட்டு விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உண்மையில் இந்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டம் விவாதித்துக் கொண்டிருக்கையில் சர்வதேச நாணய நிதியம் ஊழியர் மட்டத்தில் 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்குக் கடனாக வழங்க முன்வந்திருப்பதையிட்டு ஓரளவுக்கு இந்த நாடு மூச்சு விடக்கூடிய நிலைமைக்கு வரும் என்பது எல்லோருடையதும் எதிர்பார்ப்பு. அதே வேளையில் அவர்கள் சில நிபந்தனைகளைக் கூட வைத்திருக்கிறார்கள். வரியைச் சரியாக பேணிப்பாதுகாப்பது, மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வேலைத்திட்டம்,  ஊழல் அதுதான் இந்த நாட்டில் மலிந்து கிடப்பதும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானதும், அதைவிட மேலாக இலங்கைக்குக் கடந்த காலங்களில் கடன் கொடுத்த நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும்.
நேற்றைக்கு முதல் நாள் மத்திய வங்கியின் ஆளுனர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அவர் குறிப்பிடும் போது இந்த நாடு சுதந்திரமடைந்த காலமிருந்து தன்னிறைவடையவில்லை. கடன்கள் ஒவ்வொரு ஆண்டும் கடன்களைப் பெற்றிருப்பதாகச் சொன்னார். அதே வேளையில் 80 ஆண்டுகளில் பெற்ற கடன்களில் இந்த நாட்டை முன்னேற்றுவதாகக் கூறயிருந்தார்.
மகாவலி அபிவிருத்திக்கும் நீர் மூலமான மின்சார உற்பத்திக்குமாக கடன்களை அந்தக் கடன்கள் பெற்றிருந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் மகாவலி அபிவிருத்தி ஊடாக அரிசியில் தன்னிறைவடைந்திருந்தாலும் மகாவலி அபிவிருத்தி என்பது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இனப்பரம்பலைக் குறைப்பதற்கான குடியேற்றங்களை மையப்படுத்தியே அன்றிலிருந்து இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீர் மூலமாக 60 வீதம் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தாலும் ஏனைய தற்போதைய ஊழலின் மத்தியில் டீசலில் இயக்கம் ஜெனரேற்றர்கள் மூலமாகவும், நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களிலும் ஊழல்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவித வருமானத்தையும் ஈட்டாத முதலீடுகளுக்காக கடன்களைப் பெற்று அதன் மூலமாக மில்லியன் கணக்கான டொலர்களை தரகுப் பணமாகப் பெற்றிருக்கின்றார்கள் என்பதனையும் அவர் மறைமுகமாகக் கூறியிருந்தார்.
80 காலகட்டத்தில் மகாவலி மூலமாக அரிசியில் தன்னிறைவு அமைந்திருந்தாலும் தற்போது என்னுடைய மாவட்ட நெல் உற்பத்தி, விவசாயம் சம்பந்தமாகப் பேசவேண்டியுள்ளது. இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் கூறியிருந்தேன் நெல் விலையைத் தீர்மானிப்பதும் பசளை இறக்குமதி செய்வதும் பொலநறுவை, அனுராதபுர விவசாயச் செய்கையைப் பொறுத்தே செய்யப்படுகின்றது. கடந்த இரண்டு போகங்களில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் நஸ்டத்தையடைந்திருக்கிறார்கள். ஒரு அந்தர் யூரியாவை 43ஆயிரம் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். களை நாசினிகளுக்கு 20ஆயிரத்துக்கும் மேல் கொடுத்திருக்கிறார்கள். இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சபைக்கு நெல்லைக் கொடுத்தவர்கள் தற்போது வரை பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னர் நெல் விலை 7000 ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போது 8000 ரூபாவாக மாறியிருக்கிறது. ஆனால். அந்த நெல்லை விவசாயிகள் வைத்திருந்திருந்திருந்தால் 8000 ரூபாவுக்கு விற்றிருப்பார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்த நெல்லுக்கு பணம் இன்னமும் கொடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் டீசல் பற்றாக்குறை, களை நாசினி பற்றாக்குறை, யூரியா பற்றாக்குறையினால் மாவட்ட விவசாயிகள் வங்களில் கடன் பெற்று, நகைகளை அடகு வைத்து வேளாண்மை செய்கை பண்ணியிருந்தார்கள். ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியைச் செய்திருந்தார். கடன் தள்ளுபடி செய்ததும் கூட ஏனைய மாவட்டங்களின் அடிப்படையில் அந்தத் தள்ளுபடியைச் செய்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு அம்பாரைப் பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே வேளாண்மை செய்தவர்கள் என்பதால் பெற்ற கடன்களை அடைத்துவிட்டார்கள். அவர்களுக்கு இந்தக் கடன் தள்ளுபடியில்லை. ஏனெனில், அந்தப் போகத்துக்குரிய கடனைச் செலுத்திவிட்டால்தான் அடுத்து போகத்துக்கு கடன் பெறமுடியும். எனவே விவசாய அமைச்சரின் கவனத்திற்கு இந்தத் தடவை பெரும்போகச் செய்கைக்கு முன்னர் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட விவசாயிகளுக்கான யூரியா பசளைகளை ஏற்கனவே கொடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்குரியவை ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டதாக அறிகின்றோம். எங்களுடைய மாவட்டத்திற்கும் நேரகாலத்திற்கு முன்னர் யூரியா பசளையை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாவிட்டால் 2 இலட்சம் ஏக்கர் பெரும்போகம் செய்யும் மக்கள் இம்முறை செய்கை பண்ணமாட்டார்கள் என்ற ஒரு முடிவை மாவட்ட செயலக மட்டத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதனை மிக வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த காலங்களில் பெற்ற கடன்களினால் அம்பாந்தோட்டடைத் துறைமுகமாக இருந்தாலும் சரி, மத்தள விமான நிலையமாக இருந்தாலும் சரி, ராஜபக்ச விளையாட்டரங்காக இருந்தாலும் சரி, தாமரைக் கோபுரமாக இருந்தாலும் சரி இந்த நாட்டுக்கு எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பதாக இல்லை. எங்களைவிடச் சிறிய நாடான மாலைதீவிலிருந்து நாங்கள் கருவாடை இறக்குகின்றோம். மாசியை இறக்குகின்றோம். மீன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குகின்றோம். இப்படியான வருமானத்தைத் தராத முதலீடுகளைச் செய்ததற்குப் பதிலாக இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு இலங்கையைச் சுற்றிக் கடல் இருக்கின்றது. கடற்தொழில் செய்வதற்கான பயிற்சியும், அதற்கான படகுகளையும் வாங்கிக் கொடுத்திருந்தால் கூட மீன்களிலே, கருவாட்டிலே தன்னிறைவடைந்திருக்கும். வெளிநாடுகளுக்குக் கூட அதனை ஏற்றுமதி செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் இன்று அதளபாதாளத்துக்குள் இந்தப் பொருளாதாரம் சிக்கிக் கிடக்கின்றது.
இந்த நெருக்கடிக்குள் எமது நாட்டுக்கு உதவிய நாடு நமது அயல்நாடு இந்தியா மத்திரமே. இந்தியா கடந்த பொருளாதார நெருக்கடியில் 4 பில்லியன் கடன்களை வழங்கியிருக்கின்றது. குறைந்த வட்டியில் 800 மில்லியனை உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்காக வழங்கியிருக்கிறது. கடன் அடிப்படையில் 700 மில்லியன் எரிபொருளுக்காக வழங்கியிருக்கிறது. விவசாய உரத்துக்காக 55 மில்லியன் டொலர் உதவியிருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணை. அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு, பால்மா, மருந்துப் பொருட்கள் இங்கு கிடைத்திருக்கின்றன. இந்தியா இந்தக் காலகட்டத்தில் உணவுக்கப்பலை அனுப்புகிறது. உதவிக்கப்பலை அனுப்புகிறது. ஆனால், தங்களால் வழங்கப்பட்ட கடனைக் கூட மறுசீரமைப்புச் செய்யமுடியாது என்று சொல்கின்ற சீனா இங்கு உளவுக் கப்பலை அனுப்புகின்றது.
ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பாராளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்க முடியாத தேரர் சீனக்கப்பல் வரும் போது அதற்கு மரியாதை கொடுத்து எழுந்து நிற்கிறார். இதுதான் இந்த நாட்டின் ஜனநாயகமா என்று கேட்கின்றேன் என்று தெரிவித்தார்.
Posted in Uncategorized

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

“நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் மனித உரிமை, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலை நாட்டுவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று லிஸ் டிரஸ் கூறியுள்ளார்.

பிரித்தானியா தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினரால் பிரதம மந்திரி வேட்பாளரான லிஸ் ட்ரஸ் அம்மையாருடன் இணையவழி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இணையவழி கலந்துரையாடல்

இந்த இணையவழி கூட்டத்தில் ரெலோவின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் பங்கேற்றுள்ளார்.

இதன்போது, லிஸ் ட்ரஸ் அம்மையாரிடம் இலங்கை தமிழர்கள் நீண்ட காலமாக ஐநாவில் தங்களுக்கான நீதியை கோரி போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு தங்களுடைய ஆதரவு நிலை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,“வெளிவிவகார அலுவலர்களுக்கான செயலாளரைத் தெரிவு செய்கின்ற பொழுது இந்த விடயத்தில் நான் அதிக கவனம் செலுத்துவேன்.”என்றும் உறுதியளித்தார்.

பிரித்தானியாவின் உறுதி

அண்மையில் அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டும் பிரேரணையை நிறைவேற்றக் கோரி பிரதான அங்கத்துவ நாடுகளுக்கு வரைபு ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கான பிரேரணையை நிறைவேற்றுவதில் பிரதான நாடாக பிரித்தானியா தலைமை வகிக்கிறது.

பிரித்தானியாவின் எதிர்கால பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் குறித்த சந்திப்பும் லிஸ் ட்ரஸ் அம்மையாரி்ன் உறுதிமொழியும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும்: சந்திரிக்கா தெரிவிப்பு

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

The Hindu-விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பிற நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலகச் செய்த நிலையில், நாடு தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிறுபான்மையினரை அடக்கி ஆள முயற்சிப்பது ஒரு நாட்டின் கூட்டு பலவீனமாக உள்ளதாகவும் இத்தகையை நடைமுறை ஒருபோதும் இருக்கக்கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதி

2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச நாணய நிதியம்(IMF) தீர்மானித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இதற்கான இணக்கப்பாட்டிற்கு வந்ததாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் உதவி 48 மாத காலத்திற்காக வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, விரிவான கடன் திட்டத்தில் இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடன் சுமையில் இருந்து நாட்டை மீட்டெடுத்தல் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் மோசமடையாத விதத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் கடன் தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு!

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடனில் இருந்து விடுபட்டு நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவு மிகவும் அவசியமானது என கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நட்பு நாடு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னணி பங்குதாரர் என்ற வகையில், இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை சீனா எப்போதும் ஊக்குவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் – காதர் மஸ்தான்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகள் விரைவில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 01 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு முகம் கொடுத்துள்ள நெருக்கடியான காலகட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சிறந்த வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவு திட்டத்தை குறிப்பிட முடியும். மனிதநேய உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் அதனை பெற்றுக் கொடுக்க இதன் மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 30 வருட யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு ,கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு நடவடிக்கைகள் இன்னும் முற்றுப்பெறாமலே உள்ளன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அவை நிறைவு செய்யப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் சுகாதாரம், கல்வி,வீதி, நீர் வினியோகம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு 36 ஆயிரத்து 100 மில்லியன் ரூபாய் தேவை என சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிதி வழங்கப்பட்டு விரைவில் அந்த நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

அது தொடர்பாக நாம் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். கட்டம் கட்டமாக அதனை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கிலிருந்து முன்னாள் SP லக்‌ஷ்மன் குரே, செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்‌ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ‘மொரிஸ்’ என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார வழக்கின் தீர்ப்பை இன்று(01) அறிவித்தார்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி வெலிவேரிய காந்தி விளையாட்டரங்கிற்கு அருகில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்ட லக்‌ஷ்மன் குரே, குறித்த குண்டுத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபடடுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

நாடு வங்குரோத்து அடைந்த சந்தர்ப்பம்

இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வங்குரோத்து நாடாக மாறியிருந்தது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பெரும் வரிக் குறைப்புகளும், கடன்களை தீர்ப்பதற்காக பணம் அச்சிடப்பட்டமையும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியினால் தற்போது அமுல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை அடுத்த சில வருடங்களில் சரியாக நடைமுறைப்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் என நேற்று (31) பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.