சீனா,இந்தியா எந்த கண்காணிப்பு கப்பலுக்கு வலிமை அதிகம்?

இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன.

இந்த சீன கப்பல் பற்றி சமீப வாரங்களில் மிக அதிகமாகவே சர்வதேச ஊடகங்களும், இந்திய, இலங்கை ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளன. உண்மையில் அந்த கப்பலில் எத்தகைய வசதிகள் உள்ளன என்பதும், அதன் அறிவியல், தொழில்நுட்ப திறன்களும் முழுமையாக அறியப்படவில்லை.

சீன கப்பலுக்கு நிகரான வசதிகளை கொண்ட கப்பல் இந்தியாவிலும் உள்ளதா என்று பலரும் சமூக ஊடகங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை பகுதியளவில் ‘ஆமாம்’ என்பதே. ஆனால், அந்த கப்பல் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக இல்லை.

சீனாவில் ‘செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘யுவான்வாங்-5’ கப்பல், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறனையும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங்’ கப்பல் இலங்கைக்கு வந்தது

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?

அதுபோல, இந்தியாவில் கடந்த ஆண்டு கடற்படை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் துருவ். இது கடல் பகுதியில் இருந்தபடி இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல வடிவங்களில் யுவான்வாங் கப்பல்கள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள யுவான் வாங் – 5 கண்காணிப்புக் கப்பல்

யுவான்வாங் என்ற சொல்லுக்கு சீன மொழியில் “நீண்ட பார்வை” அல்லது “தூர நம்பிக்கை” என்று பொருள் கூறப்படுகிறது. யுவான்வாங் என்பதற்கு நீடித்த ஆசை என்ற பொருளும் இருக்கிறது. சீன அரசாங்கம், கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது. அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு டிஷ்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆன்டனாக்கள், ராடார் மற்றும் ஸ்கேனர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.

உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன.

சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஷென்சோ விண்வெளி திட்டத்தின் அங்கமாக அதன் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக யுவான்வாங் கப்பல்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவதற்காக வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. அந்த வகையில், 1977ம் ஆண்டிலேயே இந்த ரக கப்பல்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை தமது சொந்த கடல் பரப்பைத் தாண்டி பிற கடல் பிராந்தியங்களில் இருந்து கொண்டு சர்வதேச செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்க 1986க்குப் பிறகு பயன்படுத்தப்பட்டன. அப்போது யுவான்வாங் 1, 2 ரக கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.

1995இல் யுவான்வாங் 3 ரகத்தில் இரண்டு கப்பல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் பிறகு 1999இல் யுவான்வாங் 4 கப்பல் சீன செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007இல் யுவான் வாங் ரகத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் யுவான்வாங் 5 மற்றும் 6 ரக கப்பல்கள் ஷென்சோ திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பெருங்கடல்களின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில், யுவான் வாங் கண்காணிப்பு கப்பல்கள் “மூன்று பெருங்கடல்களுக்கு” செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனை முறையிலான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அனுப்பப்படுகின்றன.

கடல் எல்லைகளைக் கடக்கும் யுவான்வாங் கப்பல்கள்

பாக, மேற்கு பசிஃபிக் பெருங்கடல், தெற்கு பசிஃபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியாவின் மேற்கு இந்திய பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல் ஆகியவற்றுக்கு இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த ரக கப்பல் முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நம்பரில் பெருங்கடல்களுக்கு செலுத்தப்பட்டன. அப்போது அதன் முதலாவது, இரண்டாவது வரிசைகள் பசிஃபிக் கடலுக்கு அனுப்பப்பட்டன. யுவான்வாங் 4 ரக கப்பல் இந்திய பெருங்கடலுக்கும் ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமான்டல் துறைமுகத்துக்கும் அனுப்பப்பட்டது. யுவான்வாங் 3 ரக கப்பல், டர்பனுக்கும் பிறகு அங்கிருந்து அட்லான்டிக் கடல் பகுதிகளுக்கும் அந்த கப்பல் செலுத்தப்பட்டது.

இதில் யுவான்வாங் 4 கப்பல், 2007ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அது பயிற்சிக்கான இலக்கு கப்பலாக மாற்றப்பட்டது. 2010இல் நடந்த சோதனையின்போது ஜியாங்யின் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது டிஎஃப்21 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையின் மூலம் இலக்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.

முன்னதாக, 2007இல் யுவான்வாங் 5 மற்றும் யுவான்வாங் 6 ரக மூன்றாம் தலைமுறைக்கான கப்பல்களை சீன கப்பல் கட்டுமான தொழில் கழகம் உருவாக்கியது. இதில் யுவான்வாங் 5 ரக கப்பல் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஏவுகணை செலுத்தும் கப்பலாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. யுவான்வாங் 6 ரக கப்பல், இன்டர்நெட் சேவைக்கு பயன்படும் கடலடி கண்ணாடி இழை வடம் அமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அதன் கசிவுகளை தடுக்கும் திறன்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வரை வசிக்கக் கூடிய நகருக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்த வரிசையில் யுவான்வாங் 7, யுவான்வாங் 21, 22 ஆகிய கப்பல்கள் உள்ளன. அவை சீன செயற்கைக்கோள் கடல்சார் கண்காணிப்புத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. யுவான்வாங் 21, 22 போன்ற கப்பல்கள், சீனாவின் லாங்மார்ச் ராக்கெட்டுகளை சுமந்து வர பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடமாட்டம் மற்றும் சேவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

நோக்கம் என்ன?

இதில், சீனாவின் யுவான் வாங்-5 செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்தான் இப்போது, இலங்கையின் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அங்கு அந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு வார காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் நீளம் 220 மீட்டர். அகலம் 25.2 மீட்டர். 25 ஆயிரம் டன் பொருட்களை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும். பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது.

சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ ஷென்ஸோ ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 ரக கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை. இது அடிப்படையில் ஒரு போர் கப்பல் கிடையாது. ஆனால், போர் கப்பல்களுக்கு மூளையாகவும் தொழில்நுட்ப ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் திகழ்கிறது.

அந்த நாட்டைப் பொறுத்துவரை, இதுவொரு வழக்கமான பரிசோதனை அளவிலான கடல் வழி பயணம் என்றே ஆரம்பம் முதல் கூறப்படுகிறது.

இந்தியாவின் துருவ் – சிறப்பம்சங்கள் என்ன?

சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக ‘ஐஎன்எஸ் துருவ்’ உள்ளது.

இந்த கப்பல் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது முழுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டியெழுப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை, என்டிஆர்ஓ, டிஆர்டிஓ ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு இயக்கி வருகிறது.

இந்த கப்பலில் டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன ரேடார் (ஏஇஎஸ்ஏ) சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஸ்கேன் செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது.

ஐஎன்எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது.

சென்சார்கள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ ஆன்டெனாக்களின் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 டன் ஆகும். முதல் முறையாக இந்த கப்பலின் திறன் 2018ஆம் ஆண்டில் விரிவாக சோதிக்கப்பட்டது.

இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும். இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை கூறுகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.725 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பற்றிய அலுவல்பூர்வ தகவல்களை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.

இத்தகைய வசதிகளுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.

ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது. துருவ் ஒரு போர் கப்பல் கிடையாது. அது போர் கப்பல்களுக்கும் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்ப ஆதாரவை மட்டுமே வழங்கும்.

BBC

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மௌனம் காத்து தடை செய்த அமைப்புகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (16.08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் கால சூழ்நிலையில் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றிற்கும், தனி நபர்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் என்பது தமிழர் அரசியல் நலன் சார்ந்த ஒன்று அல்ல அது பேரினவாத அரசியல் நலன் சார்ந்தது. தம்மால் பொருளாதார இருளுக்குள் வீழ்த்தப்பட்ட நாட்டை மீண்டும் உயிர்பிக்கும் சர்வதேச தந்திர உபாயமாகும் என்பதை தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளும், நபர்களும் புரிந்து கொள்வதோடு இத்தகைய நரி தந்திரத்திற்குள் வீழ்ந்து தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு புகழ் பாடுவோரும் தங்கள் அரசியல் நலன்களுக்காக தமிழர்களை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

தமிழர்கள் மிக நீண்ட காலமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும், பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படல் வேண்டும் என குரல் எழுப்பிய போதும் அது தொடர்பில் மௌனம் காக்கும் ஆட்சியாளர்கள் தாம் தடை செய்த அமைப்புகள் ஒரு சிலவற்றினதும் நபர்களினதும் தடைகளை நீக்குவது என்பது ஏமாற்று நாடகமே.

பேரினவாத ஆட்சியாளர்களின் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டின் யுத்த நீட்சியும் அவர்கள் மேற்கொண்ட பொது சொத்துக்களின் கொள்ளையிடலாலுமே நாடு இத்தகைய வீழ்ச்சிக்கு காரணமாயுள்ளது. தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மீளாதவர்கள் தேசத்துரோக செயற்பட்டார்கள் என அடையாளப்படுத்தியவர்களை தற்போது விடுவிப்பது என்பது சர்வதேச தேச ரீதியில் அவர்களை தமிழர்களுக்கு எதிராக பாவிக்க திட்டமிடுகின்றார்கள் என்பது தெரியும்.

தடை நீக்கம் செய்யப்பட்ட அமைப்புகளையும் நபர்களை மட்டும் அல்ல இதற்கு சார்பாக ஜனாதிபதிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நன்றி கூறி கூஜா தூக்கும் அரசியல்வாதிகளையும் ஒரு குடைக்கு கீழ் கொண்டு வந்து சர்வ தேசத்திலும், உள்ளூரிலும் தமிழர்களின் அரசியல் அவிலாசைகளை நீர்த்துப் போக செய்வதும் இதன் இன்னுமொரு நோக்கம். அடுத்ததாக தமிழர் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி என நாட்டுக்கு தேவையான டொலர்களை அள்ளிக் கொள்வதே அடுத்த இலக்காகும்.

இலங்கை ஆட்சியாளர்களையும் படையினரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என தமிழர்கள் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் தமிழர்களை பிரித்து, தமிழர்களின் அரசியலை சிதைத்து, நீதி குரலை நசித்து அழிக்கும் மும் முனை செயற்பாட்டின் அரங்கேற்றமே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை எதிர்க்கும் தமிழர்களை தேசத் துரோகிகள், பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவது மட்டுமல்ல பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யவும் எத்தனைகாலம்.

சொத்துக்களை இழந்தும், சொந்தங்களை இழந்தும், உயிரோடு உறவுகளை இராணுவத்திடம் கையளித்தும், சித்திரவதைகள் அனுபவித்தும், சிறைகளில் வாடியும், வலிகளை சுமந்தும் தமிழரின் தேசியம், ஜனநாயகம் உரிமை, சுதந்திரம் என்பவற்றுக்காக தமிழர்கள் தேசத்திலும், சர்வதேசத்திலும் தொடர் போராட்டம் நடாத்துவோரை இழிவு படுத்தவோ அதற்கு துரோகம் இழைக்கவோ நினைப்பவர்கள் ஜனநாயக ரீதியில் தூக்கி எறியப்படுவார்கள்”. என்று கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும் – விமல் வீரவன்ச

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள சீன இராணுவத்தின் யுவான் வாங் 5 கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கிறது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்கு சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனை பேணவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். யுத்த களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சிலர் இதனை உளவு கப்பல் என்றனர். நாம் இதனை தொழில்நுட்ப கப்பல் என்கிறோம்.

சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்கு கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

நாம் எதனை செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.

இந்த சந்தர்ப்பங்களில் கடன்களை விட முதலீடுகளால் அதிகம் சீனா எமக்கு உதவுமென நாம் எதிர்பார்கிறோம்.
இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும், ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச்செல்லமுடியும் என நாம் நம்புகிறோம் என்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த ஜப்பான் நிறுவனம் தீர்மானம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியதையடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அதன்படி, நிதி நிலைமை நன்றாக இல்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலக்குக் கோரும் திறன் உள்ளது.

Posted in Uncategorized

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி போட்ட உத்தரவு!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு செலவு செய்தால் அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையின் விதிமுறைகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது!

சீனாவில் இருந்து புறப்பட்ட சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது.

குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி அமைத்த குழு!

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுவார்கள்.

இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், நியாயமான காரணங்களுடன் இந்தக் குழுவிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பித்து முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன் உடன்பாடுகளின்றி, அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவ்வப்போது விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கைகள் மற்றும் சில முறைசாரா நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார். அதற்கான அடிப்படையை அரசு உருவாக்க வேண்டும் – மனோ கணேசன்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.  ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல்,இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால்,இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை.  சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று  பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட  இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது  தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நேபாளம், இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

புலம்பெயர் அமைப்புக்ளை பலவீனப்படுத்தவே பார பட்சமான தடை நீக்கம் ! ரெலோ சபா குகதாஸ்

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடை நீக்கம் என்பது புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு புதியவை அல்ல அத்துடன் இந்த தடை நீக்கம் நிரந்தரமானதும் அல்ல இதனை அத்தனை தமிழர் புலம்பெயர் அமைப்புக்களும் புரிந்து கொள்ள வேண்டும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் நிரந்தர தடை நீக்கம் கிடைக்கும் அதுவரை மாறி மாறி வரும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக தடை போடுவார்கள் தடை நீக்குவார்கள்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் சர்வதேச அரங்கில் தங்களை நம்ப வைப்பதற்கான செயற்பாடுகளை மேற் கொள்ளுதல் அதன் அடிப்படையில் தான் உள் நாட்டிற்குள் பல பிரச்சினைகள் தீர்க்க கூடியதாக இருக்கும் போது அவற்றுள் கரிசனை செலுத்தாது புலம்பெயர் அமைப்புக்களை தடை நீக்க முன் வந்துள்ளது.

தடை நீக்கத்தின் பின்னர் உள் நாட்டில் சிங்கள ஆட்சியாளர் பலரின் இனவாத கோரமான மன வெளிப்பாடுகள் வெளிக்கிம்பி உள்ளன அவை இனக் குரோத சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்கின்றது.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை தான் பேரப்பலத்தை உறுதி செய்ய முடியும் இல்லாவிட்டால் இலங்கை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்தி பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பேரப்பலத்தை அழித்து விடுவார்கள் கடந்ந நல்லாட்சி அரசாங்கத்தில் நடந்ததை நல்ல பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதனை மறந்தால் சர்வதேச நீதிப் பொறிமுறை கால நீடிப்பு என்ற கட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு நீர்த்துப் போகும் அபாயத்தையே உருவாக்கும்.

பொருளாதார மீட்சியால் மட்டும் இலங்கையை நிரந்தர அமைதியான நாடாக மாற்றிவிட முடியாது இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை ராஐதந்திரமாக கொண்டு காய்நகர்த்த ஒற்றுமையாக முன்னெடுக்க புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் தயாராக வேண்டும்.

Posted in Uncategorized