த. தே. கூ. ற்குள் பிளவுகளை ஏற்படுத்த வெளியில் இருந்தும் உள்ளிருந்தும் சிலர் செயற்படுகின்றார்கள் – ஜனா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்தே செயற்படுவர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். கூட்டமைப்புக்கு உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கடந்த 1983ம் ஆண்டு வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 பேரின் நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் பல கட்டங்களாக இடம்பெற்றாலும், 1983ம் ஆண்டு ஜுலையில் இடம்பெற்ற இனக்கலவரம் தமிழின சுத்திகரிப்பாகவே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. கறுப்பு ஜுலை என்று உலகறிந்த இந்த நாட்கள் ஜுலை 23ம் திகதி அனுஸ்டிக்கப்படுவது ஒரு பிழையான விடயம் என்பதை தற்போதைய சந்ததியினர் அறிய வேண்டும்.

ஏனெனில் 1983ம் ஆண்டு ஜுலை 23ம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலே தமிழீழ விடுதலைப் புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள். அவர்களது சடலங்கள் கொழும்பைச் சென்றடைந்ததும் தான் அடுத்த நாள் தொடக்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இன அழிப்பு தொடங்கியது. ஜுலை மாதம் 25 மற்றும் 27ம் திகதிகளில் தமிழ் அரசியற் கைதிகள் வெலிகடை வென்சிறைக்குள்ளே இலங்கை பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் காடையர்கள் ஏவப்பட்டு 25ம் திகதி தமிழீழப் போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான தமிழீழ விடுதலை இயக்கத்தை உருவாக்கிய தங்கதுரை, குட்டிமணி, தேவன், ஜெகன் நடேசன் மாஸ்டர் உள்ளிட்ட 36 பேரும், 27ம் திகதி 17 பேரும் உட்பட 53 பேர் வெலிகடைச் சிறையுள்ளே மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தத் தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது குட்டிமணி அவர்கள் ‘என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் மலரும் தமிழீழத்தைத் தடுத்து விட முடியாது. என்னைத் தூக்கிலிட்ட பின்னர் என் கண்களை ஒரு பார்வையற்ற தமிழனுக்குக் கொடுத்து விடங்கள் அந்தக் கண்கள் மூலமாக மலரப் போகும் தமிழீழத்தை நான் காண்பேன்’ என்று கூறியதற்காக அவரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு சப்பாத்துக் கால்களில் போட்டு மிதிக்கப்பட்ட அநாகரிகமான வரலாறுகளும் அரங்கேற்றப்பட்டது.

வருடத்தில் மே மாதமும், ஜுலை மாதமும் தமிழர்களுக்கு மறக்க முடியாத மாதங்களாக இருக்கின்றது. இவ்விரு மாதங்களிலும் தமிழர்களுக்கு கொடுமைகளை அள்ளி இரைத்த சிங்களத் தலைவர்களுக்கும் தற்போது அவ்விரு மாதங்களும் ஒரு மறக்க முடியாத மாதங்களாகவே மாறியிருக்கின்றது.

கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து இன்று இந்த நாட்டு மக்களினாலேயே விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டிலுமே தங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்து இன்று அரசியல் அநாதையாக ஆக்கப்பட்டிருக்கின்றர். மே மாதம் முள்ளிவாய்க்காலிலே ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து மேற்பட்ட தமிழ் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் கோட்ட கோ கோம் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்ற மே மாதத்தில் மஹிந்த பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதேபோன்று தமிழர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட ஜுலைக் கலவரம் இடம்பெற்ற இந்த ஜுலை மாதத்தில் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டை விட்டு தப்பியோடும் நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த நிலைமைகளில் இரந்து தமிழர்களின் போராட்டம் எத்தனை நியாயமானது என்பதையும், நியாயமான உரிமைகளைப் பெறுவதற்காகத் தான் அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடினார்கள் என்பதையும் தற்போதை அரசாங்கம் சிந்திக்க வேண்டும்.

இன்று தேசியப் பட்டியல் மூலமாக, தனது கட்சியில் இருந்து ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் வந்தவர், அதுவும் பாராளுமன்றம் கூடி ஒரு வருட காலத்தின் பின்னர் பதவிப் பிரமானம் செய்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகவும், பதில் ஜனாதிபதியாவும், தற்போது பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியாகவும் இருக்கின்றார். அவர் சர்வகட்சி அரசாங்கத்திற்கு அறைகூவல் விடுத்திருப்பதோடு, ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

கடந்த 2015 தொடக்கம் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் அவரது தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கியிருந்தது. இன்று பாராளுமன்றத்திலே நடைபெற்ற புதிய ஜனாதிபதி தெரிவின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதானதொரு முடிவினை எடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக வாக்களித்திருக்கின்றது. இருந்தும் இது தொடர்பில் சில புனைக்கதைகள் தற்போது வெளிவருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. பல உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தாகக் கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றுமே யாரலுமே சிதைக்கப்பட முடியாத ஒரு கூட்டாகும். எத்தனையோ பாரிய பிரச்சனைகளின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாகவே பயணித்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற தமிழத் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் ஒன்றாகவே முடிவெடுப்பார்கள், ஒன்றாகவேதான் வாக்களிப்பார்கள். தற்போதை ஜனாதிபதி தெரிவில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்தே வாக்களித்திருப்பார்கள்.

முடிவெடுக்கும் சந்தர்ப்பத்தில் பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவது வழமை இருப்பினும், முடிவொன்று எடுக்கப்பட்டதன் பின்னர் அனைவரும் ஒருமித்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றார்கள்.

தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டின் பொருளாதார நிலைமை சிங்கள மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது. அதற்கும் மேலாக தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை, உரிமைப் பிரச்சனை இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நிலையான வேண்டுகோள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நாட்டிலே பொருளாதார ஸ்திரத்தன்மை ஒன்று பேணப்பட வேண்டும் என்பது அனைத்து மக்களதும் அபிலாசையாக இருக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சர்வ கட்சி அரசாங்கததிற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்காது, ஏற்கவும் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள். சர்வகட்சி ஆட்சியொன்று அமைய வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேலாக எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு அந்த சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலமாக ஏற்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் அவா.

இதற்கு நெடிய வரலாற்றுக் காரணம் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார்ந்து எட்டப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தங்களும், தீர்வுகளும் அப்போதைய எதிர்க்கட்சிகளுக்குப் பயந்து கிழித்தெறியப்பட்டதும், எரிக்கப்படடதுமே வரலாறாக இருக்கின்றன. இதிலிருந்து நாங்கள் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் எந்தவித எதிர்ப்புமே தெற்கு அரசியற் கட்சிகளில் இருக்கக் கூடாது. ஒரு கட்சி தீர்வினைக் கொடுக்க முன்வருகின்ற போது மற்றைய எதிர்க்கட்சி எதிர்க்கின்ற வரலாறு இருக்கின்ற காரணத்தினால் எதிர்வரும் இரண்டரை மூன்று வருடங்கள் இந்தப் பாராளுமன்றம் நிலைத்திருக்குமாக இருந்தால், அதில் சர்வ கட்சி அரசாங்கம் அமையுமாக இருந்தால் அந்த அரசாங்கத்தினால் பொருளாதார மீட்சிக்கு மேலாக இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு எட்டப்படுமாக இருந்தால் ஒரு எதிர்ப்பு இல்லாமல் அந்தத் திர்வு நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.

எனவே சர்வ கட்சி அரசாங்ககம் உருவாக்கப்பட்டு இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படும் 22ம் திருத்தச் சட்டத்திற்குள்ளே இனப்பிரச்சனைக்கான தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் கடந்த காலங்களிலே போராட்டங்களில் இறந்த ஆத்மாக்கள், அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டவர்கள், சிறைச்சாலைகளுக்குள்ளே படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு வர வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையிலே இருந்த காலகட்டத்திலே தமிழ் மக்களுக்கான அரசியற் குரலாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று மூன்ற கட்சிகளின் கூட்டாக இருக்கின்றது. தற்போது இந்த மூன்று கட்சிகளுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வெளியில் இருந்தும். உள்ளிருந்தும் சிலர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த நிலை இருக்கக் கூடாது. தமிழ் மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும். தமித் தேசியக் கூட்மைப்பில் இருந்து விலகிச் சென்றவர்களும் மீண்டும் வர வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களுக்கான ஒரு அரசியற் குரலாக, அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு எமக்காக உயிர்நீத்த அனைத்து ஆத்மாக்களுக்காகவும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

தமிழர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்! சபையில் செல்வம் அடைக்கலநாதன் ஆவேசம்

இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதேபோல அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்திலேயே இவை இரண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டன. அப்போது சிறையில் சிக்குண்ட எமது தமிழர்களை எங்கு கொண்டு புதைத்தீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்கள மக்கள் தாக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக இலங்கையில் போராடியவர்களை தாக்கியமை கண்டனத்திற்குரியது.

தாக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வடக்கு , கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எங்களுடைய தமிழ் மக்கள் தாக்கப்பட்டபோது யாருமே எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அது ஒரு பயங்கரவாதமாகவே பார்க்கப்பட்டது. தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலமாக மாறி வருகின்றது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர், யுவதிகள், எங்களுடைய தமிழ் தரப்பில் நடந்த போராட்டம் உண்மையானது என்பதை ஏற்றுக் கொண்டு வருகின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சியின் போதே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்தோடு அப்போது சிறையில் வைத்து கொல்லப்பட்ட எம் தமிழர்கள் எங்கே கொண்டு புதைக்கப்பட்டார்கள் என்பதை இப்போது வரைக்கும் கண்டுப்பிடிக்க முடியாமல் போயுள்ளது. அவர்கள் எங்கே கொண்டு சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

குட்டிமணி, தங்கத்துரையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

1983 ஆம் ஆண்டு ஆடி மாதம் 25 ஆம், 27 ஆம் திகதிகளில் சிங்களக் காடையர்களால் வெலிக்கடைச் சிறையில் வஞ்சகமான முறையில் அடித்தும், குத்தியும்,வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஆரம்பகாலத் தலைவர் குட்டிமணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி நடராஜா தங்கத்துரை, முன்னணிப் போராளிகளான ஜெகன்,தேவன், மற்றும் அவர்களுடன் படுகொலை செய்யப்பட்ட போராளிகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூர்ந்து 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு,‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ இன்று புதன்கிழமை(27.7.2022) யாழ்.மாவட்ட ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மெளன வணக்கத்தைத் தொடர்ந்து பொதுச்சுடரினை ரெலோவின் நிதிச் செயலாளரும், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவு உரையும் இடம்பெற்றது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் ரெலோவின் யாழ்.மாவட்டத் துணை அமைப்பாளரும், யாழ். மாநகரத் துணை மேயருமான து.ஈசன், ரெலோவின் யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவரும், நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளருமான இ.ஜெயகரன், ரெலோவின் நல்லூர்த் தொகுதி அமைப்பாளரும், நல்லூர் பிரதேசசபை உறுப்பினருமான கு.மதுசுதன்,ரெலோவின் யாழ். பணிமணைப் பொறுப்பாளரும், யாழ்.நகரப் பகுதிப் பொறுப்பாளருமான மு.உதயசிறி,ரெலொவின் சிரேஷ்ட உறுப்பினரான ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் வெலிக்கடைச்சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு அனுஷ்டிப்பு!

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை ) காலை 11 மணியளவில் நினைவு கூரப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கு ம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கட்சியின் முக்கியஸ்தர், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் ,கட்சியின் உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்திய மை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வெலிக்கடைப் படுகொலையின்  39ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு

வெலிக்கடைப் படுகொலையின்  39ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அலுவலகத்தில் நடைபெற்றது.

ரெலோவின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்,

ரெலோ வின் உப தலைவர் இந்திரகுமார் பிரசனன்னா, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் இளைஞர் அணி உப தலைவரும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினருமான இரத்தினையா வேணுராஜ், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள்,  உள்ளிட்ட பலரும் கநந்து கொண்டனர்.

Posted in Uncategorized

கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் – அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை எனவும், சிங்கபூரில் இருந்து அவர் விரைவில் நாடு திரும்புவார் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த 20 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 20 பேரை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட காணொளிகள் ஊடாகவே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு நுழைந்தவர்கள் மற்றும் இல்லத்திற்குள் நுழைய வழிவகுத்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் தலைமையகத்தினால் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சந்தேக நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் கடந்த 9ஆம் திகதி தீக்கிரையாக்கப்பட்டது.

தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் மகன் மறுநாள் துபாய் சென்றுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் துபாயில் இருந்து இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மேலும் நிவாரணப் பொதிகள்!

தமிழக அரசாங்கத்தினால் 3.4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதாபிமான உதவி, இந்திய உயர்ஸ்தானிகரினால் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அதனை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

தமிழக அரசினால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள், மூன்றாவது கட்டமாக இலங்கையை வந்தடைந்துள்ளன.

இதுவரையில், 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 100 மெட்ரிக் தொன் மருந்துகள் என மொத்தமாக சுமார் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

’ஆயுதமேந்தும் நோக்கமில்லை’ – ராஜித சேனாரத்ன

போராட்டக்காரர்களுக்கு ஆயுதமேந்துவதற்கான எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயகரீதியாக தேசிய சபை ஒன்றை அமைக்க வேண்டுமென்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளதாகவும், போராட்டக்காரர்கள் ஜனநாயகரீதியாக செயற்பட்டு வருகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்கிறார்கள். மார்ச் மாதம் இப்போராட்டத்தை ஆரம்பிக்கும்போது இப்போராட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இப்போராட்டத்துக்கு யார் தலைமைத் தாங்குகிறார்கள் என்பது தெரியாதென அவர்கள் கூறினார்கள். ஆனால் நானும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுமே இப்போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருந்தோம் என்றார்.

சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்பாக சர்வக்கட்சி மாநாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கக் கூட்டி அதில் போராட்டக்காரர்களையும் கலந்துக்கொள்ள செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்க சஜித் அணி முடிவு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் என்பன இன்று (26.07.2022) கூடி பின்வரும் முடிவுகளை எட்டின.

01). கருத்துத் தெரிவிக்கும் உரிமை போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

02). மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

03). பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized