ரணிலுக்கு எதிராக திரும்பிய காலிமுகத்திடல் போராட்டம்

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதிவியேற்றிருக்கும் நிலையில், தற்பொது அவருக்கு எதிராக போராட்டம் தீவரமடைந்துள்ளது.

“ரணில் கோ ஹோம்’ என்ற ஆங்கில வாசகம் கொண்ட பட்டைகளை தலையில் கட்டிக்கொண்டு பலர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியாக போட்டியில் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதியாவற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

கோட்டாபயவின் கட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதால் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், காலிமுகத்திடலில் ரணிலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.

Posted in Uncategorized

ரஞ்சன் ராமநாயக்கவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய முடிவு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்றிருந்த போதும் அவருக்கு எதிராக அங்குள்ள மக்களும் புலம்பெயர் இலங்கை மக்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதே போல் சிங்கப்பூருக்கு சென்றுள்ள கோட்டாபயவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் இலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி தெரிவு- ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு , பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு

சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய சபை அமர்வில் சில முக்கிய விடயங்களை அறிவித்தார்.

அதன்படி, பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும்.

வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யுமிடத்து , 20 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

மாறாக ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் 19 ஆம் திகதி சபை அமர்விலேயே குறித்த உறுப்பினரின் பெயர் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவதாக என்னால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும்.

இந்தியா முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கும் இந்திய தூதரகம் தெரிவிப்பு

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Posted in Uncategorized

நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இருப்பினும் புதிய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் திறமைகளை கருத்திற்கொண்டு அவர் நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் என அவர்கள் கருதுவதாக அவர் கூறினார்.நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்ற ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அடிப்படைக் கொள்கைக்கு இது ஒரு சவால் என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார போட்டி!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அவசர நிவாரண வேலைத்திட்டம்: பதில் ஜனாதிபதி ரணில் தீர்மானம்!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்

இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்

மேலும், ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் நிவாரண பட்ஜெட்டில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

அக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு செயல் தலைவர் அறிவுறுத்தினார்.

எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் நல்ல திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது.

விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை. இந்த நிலையில் அது குறித்து உறுதிப்பாடு அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை

அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்றத்தினால் அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதன்போது இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.

விசேடமாக இந்த நடைமுறை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார். அத்துடன் இந்த நடைமுகைளுக்காக பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடும். அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● இதில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் இந்தத் தெரிவு நடாத்தப்படுதல் வேண்டும்.

● இதற்கமைய இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பதாகச் செயற்படுதல் வேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்படும் திகதியையும், நேரத்தையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

● அவ்வாறு பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். இதற்கமைய நியமனங்கள் அவரால் பெற்றுக்கொள்ளப்படுவதற்கான திகதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிப்பதுடன், கூட்டத் திகதியிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு முந்தாததும், ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான ஒரு திகதியாக அது இருக்க வேண்டும்.

● நியமனங்கள் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று பாராளுமன்றம் கூடவேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார். ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு சம்மதத்தைத் தெரிவித்த உறுப்பினர்கள் அன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும்.

● இங்கு ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அந்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியும், நேரமும் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும், அத்தகைய திகதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருக்க வேண்டும்.

● வாக்கெடுப்பை நடத்துவதற்கென நிர்யணிக்கப்பட்ட திகதியன்று செயலாளர் நாயகமே தெரிவத்தாட்சி அலுவராகச் செயற்படுவதுடன், வாக்களிப்புத் தொடங்குவதற்கு முன்னர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் இலச்சினையிடல் வேண்டும். இதற்கமைய வாக்களிப்புத் தொடங்கியவுடன் தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்படும் போது உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அலுவலரின் மேசைக்குச் சென்று வாக்குச்சீட்டொன்றைப் பெற்று தமது வாக்குகளை அடையாளமிட வேண்டும். அதன் பின்னர் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

● உறுப்பினர் ஒருவர் வாக்குச்சீட்டொன்றினை தற்செயலாகப் பழுதாக்கினால், அதனை அவர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து, தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய தற்செயல் பற்றித் திருப்தியுற்றால் அவருக்கு வேறொரு வாக்குச்சீட்டைக் கொடுக்கலாம். பழுதாக்கப்பட்ட வாக்குச்சீட்டு தெரிவத்தாட்சி அலுவலரால் உடனடியாக இல்லாததாக்கப்படும். பெயர் கூப்பிடப்பட்டபோது வாக்களிக்காதிருந்த எவரேனும் உறுப்பினரின் பெயரை இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தவராகக் கருதப்படுவார்.

● ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உரித்துடையதாக இருக்கும் என்பதுடன், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் ‘1’ எனும் எண்ணை இடுதல் வேண்டும். பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும். இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2, 3 எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.

● இவ்வாறு வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும். எவரேனும் வேட்பாளர் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் சமுகமளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது அவரது பிரதிநிதியாகச் சமுகமளிப்பதற்கு வேறொரு உறுப்பினரை நியமிக்கவும் முடியும்.

● அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளைப் ஒரு வேட்பாளர் பெற்றுள்ளவிடத்து தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

● அதேநேரம், வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாதவிடத்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகள் சரிபார்க்கப்படும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும்.

● வாக்கு எண்ணுகையின் முடிவில் வேட்பாளர் எவருமே செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

● அத்துடன், இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டு போடப்படும்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.