இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார்.

Posted in Uncategorized

கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வியடைந்து நாட்டையும் அதன் 22 மில்லியன் மக்களையும் ஆழமற்ற படுகுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக கூட்டி ஆலோசனைகளை வழங்குவதை ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இருவரும் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் போட்டியில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாளை 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு இரவு நகர்சேர் கடுகதி புகையிரதமொன்று சேவையில் ஈடுபட உள்ளது .இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட பொல்காவலை குருநாகல் அனுராதபுரம் வவுனியா கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி வவுனியா அநுராதபுரம் குருநாகல் கொழும்பு கம்பகா மருதானை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளையை சென்றடையவுள்ளது.

நகர்சேர் கடுகதிக்குரிய ஒரு வழி கட்டணமாக 2,800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் . இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Posted in Uncategorized

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்வதாக தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை இந்நாட்டுக்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.

Share

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு பல மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Posted in Uncategorized

பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.

இந்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது.

இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கைக்கு இறக்குமதிகளை செலுத்துவதற்காக கடனைப் பெற உதவுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்தச் சரத்தின் திருத்தமானது சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதால் அது சீனாவுக்குப் பயனளிக்கும் என்று இலங்கைத் தரப்பு தெரிவித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மகா பருவத்துக்கான இரசாயன உரத்தை கடனில் கொள்வனவு செய்வதற்கு பல சீன நிறுவனங்களுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எம்.பிக்களுடன் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை வழஙகினார்.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன் முன்வைக்க அனுமதிக்கும் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

எதிர்க்கட்சி சார்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார் வெல்கம, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு பணிகளில் ஈடுபடும் புலம் பெயர் தமிழர் கூட்டு

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை மீட்கும் பொருத்தமான வழிமுறைகள் பற்றி ஆராய இளையவர்களின் தலைமைத்துவம் கொண்ட புலம் பெயர் தமிழர் கூட்டு Tamil Diaspora Alliance பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி ஒரு கூட்டத்தை நடத்தி இருந்தது. இந்த கூட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தவுடன் Zoom வழியாகவும் பல நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

தாயகத்தில் பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்து கடந்த வருடத்திலிருந்து தாம் பரீட்சார்த்தமாக முன்னெடுத்து வந்த உற்பத்தி நடவடிக்கை முறைமைகள் பற்றி எடுத்துரைத்தனர். கற்றுக் கொண்ட பாடத்திலிருந்து தாயகத்திற்கு பொருத்தமான தாம் உருவாக்கிய முறைமை பற்றி விளக்கமளித்தனர்.

உற்பதிக்குழுக்கள், நுண் சமூகம், கூட்டு மூலதன உருவாக்கம், சமூக மூலதனத் திட்டம், சமூக நிறுவன வடிவம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு சபையில் முவைக்கப்பட்டது. இவை தமது பரீட்சார்த்த முயற்சிகளிலிருந்து பெறப்பட்ட அனுபவங்களை இணைத்து எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் விளக்கினர்.

மீன்பிடி மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து இக்கட்டமைப்பு இயங்கவைக்கப்படுகின்ற போதும் ஏனைய உற்பதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. மேலும் கூட்டத்தில் தம் அமைப்பு (Tamil Diaspora Alliance) புலம் பெயர் தேசத்திலும் தாயகத்திலும் முன்னெடுக்கும் பல்வேறு வகையான செயல் திடங்களையும் முன்வைத்தனர்.

தம்மோடு இணைந்து இந்த பொருளாதார மீட்சிக்கு பயணிக்க விரும்பும் அமைப்புகள் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஏற்கனவே முப்பத்தி ஆறு அமைப்புகள் தங்களது கூட்டில் பல்வேறு பணிகளில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சசி, சங்கீத், காயத்திரி, வேந்தன், ராகேஷ் மற்றும் கௌரிபரா ஆகியோர் கூட்டத்தில் விளக்கமளித்தனர். பொருளாதார நெருக்கடியின் அரசியல் பற்றி சிறப்பு பேச்சாளராக குணா கவியழகன் உரையாற்றினார்.

Posted in Uncategorized

கல்முனை கடற்கரை சூழலில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணி

கல்முனை கடற்கரை சூழலில் மாநகர சபை உறுப்பினர் என்ற கென்றி மகேந்திரனின் ஏற்பாட்டில் கல்முனை 3 கோயில் வீதி தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு தாழவெட்டுவான் எல்லை வீதி வரை உள்ள 2 km கடற்கரை அதனை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் இயந்திரங்கள், ஊழியர்கள் , சமுத்தி பயனாளிகள் ஆகிய வளங்கள் பங்கெடுத்தன.

கடந்த சனிக்கிழமை இந்த சிரமதான பணியை திறன்பட செய்து முடிக்க சகல விதத்திலும் உதவிகள், ஒத்தாசை வழங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், சமுத்தி முகாமையாளர் இதயராஜா, கிராம உத்தியோகத்தர், அருள்ராஜா, சமுத்தி அதிகாரிகள், சமுத்தி பயனாளிகள், கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவு அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர் செலஸ்றினா , ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வேலை திட்டத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உதவியமைக்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் நன்றிகளைத் தெரிவித்தார்.