இலங்கை பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய்வு

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் அந்நாட்டு பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இலங்கைக்கு கடன் உதவித் திட்டத்தின் கீழ், எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் உணவு பொருள்களை வழங்கி இந்தியா உதவி வருகிறது.

இந்நிலையில் இலங்கை நிலைமை குறித்து வெளியுறவுத் துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத் துறை இணை மந்திரிகள் முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த ராஜ்தீப் ராய் மற்றும் ஜிவி எல் நரசிம்மராவ் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுக எம்பி திருச்சி சிவா, பிஜு ஜனதா தளம் சார்பில் சுஜீத் குமார் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி, அந்நாட்டில் வெளியேறி இந்தியாவிற்கு வருவோர் உள்ளிட்டவை குறித்து அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு விவகாரங்கள் மற்றும் இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவின் பங்கு குறித்த சாதகமான சூழ்நிலை குறித்து விவாதம் நடைபெற்றதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாடான இலங்கையுடன் நிற்பதன் அவசியத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் பாதிக்கப்படலாம் – UNICEF எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மேலும் மோசமாக பாதிக்கப்படலாம் என UNICEF எச்சரித்துள்ளது.

UNICEF அமைப்பின் இலங்கைக்கான பேச்சாளர் பிஸ்மார்க் சுவாங்ஜின் இதனை தெரிவித்துள்ளார்.

உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இலங்கையில் சிறுவர்களின் மந்தபோசனை நிலைமை மோசமாக பாதிக்கப்படலாம் என நாங்கள் அச்சமடைகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும்

-நிலாந்தன் –

நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை.

ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் கூறினார் 12 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 11 பேருக்கு உணவுத் தட்டுப்பாடு இருப்பதாக.அவர்கள் ஒரு வேளை அல்லது இரு வேளை உணவையே உட்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இம்மாணவர்கள் பெருமளவுக்கு கிழக்கு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.எனவே மாணவர்களுக்கு உணவு கொடுக்கும் விதத்தில் “கொம்யூனிட்டி கிச்சின்களை” உருவாக்கியிருப்பதாகவும்அவர் தெரிவித்தார்.

அவ்வாறான சமூகப்பொதுச் சமையலறைகளை குறித்து ஏற்கனவே மனோகணேசன் பேசிவருகிறார்.நகர்ப்புறத் தொடர்மாடிக் குடியிருப்பாளர்களுக்கு அவ்வாறு பொதுச் சமையல் அறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.கடந்தகிழமை அக்கரைப்பற்றில் அவ்வாறான முயற்சிகளை சில முஸ்லீம் நண்பர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள்.“வீட்டிலிருந்து ஒரு பார்சல்” என்ற பெயரில் அது மருதமுனை,சாய்ந்தமருது,மாளிகைக்காடு,கல்முனைக்குடி,பாலமுனை போன்ற கிராமங்களுக்கு வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சமூகப் பொதுச்சமையலறை மூலம் உணவூட்டப்பட வேண்டிய ஒரு தொகுதியினர் உருவாகி வருகிறார்கள் என்று பொருள்.இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்க முன்பிருந்ததைவிடவும் நிலைமை பாரதூரமானதாக மாறிவருகிறது என்று பொருள்.அவர் பதவியேற்க முன்பிருந்ததை விடவும் இப்பொழுது எரிபொருளுக்கான வரிசைகள் அதிகரித்த அளவிலும் மிக நீண்ட வகைகளாகக் காணப்படுகின்றன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை எரிபொருளுக்காக யாழ்ப்பாணத்தில் பல கிலோ மீட்டர் நீளமான வரிசைகள் காணப்பட்டன. யாழ்ப்பாணத்தின் நவீன வரலாற்றில் இவ்வாறான மிக நீண்ட வரிசைகள் காணப்பட்ட ஒரு நாள் அது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சிலர் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து அதில் வேலைக்கு வருகிறார்கள்.ஒரு நாளைக்கு சைக்கிள் வாடகை 150 ரூபாய்.

ஆனால் நாட்டின் பிரதமரும் அமைச்சர்களும் குறிசொல்வோராக மாறி விடடார்கள் என்று கடந்த வியாழக்கிழமை ஐலன்ட் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சித்திருந்தது.பிரதமர்,அமைச்சர்கள்,எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எனைய அரசியல்வாதிகளை, அந்த ஆசிரியர் தலையங்கம் ஞானா அக்காவின் மச்சான்கள் என்று வர்ணித்திருந்தது.

அதாவது கோட்டா கோகம,மைனா கோகம,ஹிரு கோ கம போன்ற போராட்ட கிராமங்கள் உருவாக்கப்படுவதற்கு காரணமாக இருந்த பொருளாதார நெருக்கடிகளை இப்பொழுது மேலும் தீவிரமாகியிருக்கின்றன.இப்படிப் பார்த்தால் இப்பொழுதுதான் போராட்டமும் அதிகரிக்கவேண்டும். ஒன்றல்ல பல கிராமங்களை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். ஆனால் இருக்கின்ற கோட்டா கோகம கிராமமும் தற்பொழுது சோர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்பு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அக்கிராமத்தை நோக்கி ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்தார்கள்.இப்பொழுது அவ்வாறான திரட்சி காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் நிகழ்ந்த மாற்றங்களில் அதுவும் ஒன்று. போராட்டக் கிராமங்கள் சோரத் தொடங்கி விட்டன என்பது.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலர் குமார் குணரட்னம் அதை ஏற்றுக் கொண்டார். கோட்டா கோகம கிராமத்தில் வினைத்திறனோடு செயற்படும் பல்வேறு அமைப்புக்கள் மத்தியில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் அமைப்பும் காணப்படுகிறது. போராட்டத்தில் எழுச்சியும் வீழ்ச்சியும் உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் சோரத் தொடங்கியதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். அவற்றுள் முக்கியமானவை வருமாறு.

முதலாவது காரணம் ரணில் விக்கிரமசிங்கவின் வருகை.அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதோடு நடுத்தர வர்க்கத்தின் மத்தியில் ஒப்பீட்டளவில் நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.தென்னிலங்கையில் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கம் எனப்படுவது பெருமளவுக்கு யு.என்.பிக்கு ஆதரவானது.அதில் ஒரு சிறு பகுதி ஜேவிபியினால் ஈர்க்கப்படுகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக் கிராமங்களுக்கு மேற்படி நகர்ப்புற படித்த,நடுத்தர வர்க்கத்தின் ஆசீர்வாதம் அதிகளவு உண்டு என்று குமார் குணரட்னம் கூறுகிறார். ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட பின் மேற்படி நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் போராட்டத்துக்கான உத்வேகம் குறைந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம்.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து தலைமை தாங்கவல்ல பலமான கட்டமைப்புக்கள் எவையும் அங்கே கிடையாது. ஒரு சித்தாந்த அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட அமைப்போ கட்சியோ அங்கு இல்லை. போராட்டக்களத்தில் காணப்படும் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் தங்களுக்கிடையே இறுக்கம் குறைந்த இணைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் என்ற ஒரு ஒற்றைப் புள்ளியில் அவர்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் அந்தப்பிணைப்பு மேலிருந்து கீழ்நோக்கிய ஒரு மையத்திலிருந்து நிர்வகிக்கப்படுகின்ற, ஒரு தலைமைத்துவத்துக்கு கீழ்ப்பட்ட பிணைப்பு அல்ல.மாறாக பக்கவாட்டில் ஒருவர் மற்றவரோடு கொள்ளும் சுயாதீனமான பிணைப்புக்கள். இவ்வாறு பலமான தலைமைத்துவமோ அல்லது பலமான நிறுவனக் கட்டமைப்போ இல்லாத ஒரு பின்னணியில் இதுபோன்ற போராட்டங்கள் காலப்போக்கில் சோர்ந்து போகும் ஆபத்து உண்டு. இது இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம்.சனங்கள் நெருக்கடிகளுக்கு இசைவாக்கம் அடைந்து வருவது. நெருக்கடியின் தொடக்க காலத்தில் அவர்களுக்கு அது பாரதூரமாகத் தெரிந்தது.ஆனால் இப்பொழுது அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.இயல்பின்மையே இயல்பானதாக மாறிவிட்டது. இதுதான் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நடந்தது. ஏன் ஆயுத மோதல்களுக்கு பின்னரான காலங்களிலும் அதுதானே நிலைமை?அந்தக் கூட்டு அனுபவம்தான் பின் வந்த வைரஸ் பிரச்சினை,இப்பொழுதுள்ள பொருளாதாரப் பிரச்சனை போன்றவற்றை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பொழுதும் அவர்களுக்கு உதவுகின்றது. இப்பொழுது தமிழ் மக்களைப் போலவே சிங்கள மக்களும் நெருக்கடிகளுக்கு பழக்கப்பட்டு வருகிறார்களா?அதனால்தான் போராட்டத்தின் தீவிரம் குறைந்து வருகிறதா?

நாலாவது காரணம், மக்கள் எரிபொருளுக்கும் எரிவாயுவுக்குமாக நீண்ட நேரம் மிக நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கிறார்கள். தமது வயிற்றுப்பாட்டுக்காக இவ்வாறு நீண்டநேரம் காத்திருப்பதால் அவர்களுக்கு போராடுவதற்கு நேரம் குறைவாகவே கிடைக்கிறது.

ஐந்தாவது காரணம், எரிபொருள் விலை உயர்வினால் போக்குவரத்து ஒரு பிரச்சினையாக மாறியிருப்பது.நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்து காலிமுகத்திடலை நோக்கிப் பயணம் செய்வதற்குப் பெருந்தொகை பணத்தைச் செலவிட வேண்டியிருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

மேற்கண்ட காரணங்களின் தொகுக்கப்பட்ட விளைவாக போராட்ட கிராமங்களில் ஒருவித தொய்வு ஏற்பட்டிருக்கிறது.போராட்டங்களின் விளைவாக மஹிந்த வெளியேறிவிட்டார்.பஸில் வெளியேறிவிட்டார்.இது போராடும் தரப்புக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும். மஹிந்தவையும் பசிலையும் அகற்றியது போல கோட்டாபயவையும் அகற்றலாம் என்ற நம்பிக்கை இப்பொழுதுதான் அதிகரிக்க வேண்டும். ஆனால் நிலைமை அப்படியாகத் தெரியவில்லை.

எனினும் போக்குவரத்துச் செலவு காரணமாக காலிமுகத்திடலில் கூடுவோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும்,சிறிய பரவலான ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஆங்காங்கே சிறியளவில் எதிர்ப்புகளை அவ்வப்போது காட்டிவருவதாக கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.அதாவது ஒரு மையமான இடத்தில் பெருந்தொகையானவர்கள் கூடுவதற்கு பதிலாக சிதறலாக பரவலாக சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காட்டப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த குமார் குணரட்னம் தமிழ் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் காலிமுகத்திடலுக்கு வந்தால் போராட்டத்தின் பரிமாணம் வேறு விதமாக அமையும் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது. குமார் குணரட்ணம் வடக்கிற்கு வந்த அதே காலப்பகுதியில்தான் குருந்தூர் மலையில் புதிய தாதுகோப கலசத்தை பிரதிஷ்டை செய்யும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டன.தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.

ஆனால் அந்த மரபுரிமை ஆக்கிரமிப்பை குறித்து கண்டியிலும் காலிமுகத்திடலிலும் கோட்டா கோகம கிராமங்களில் எதிர்ப்புகள் காட்டப்படவில்லை. மாறாக இந்தியப் பெரு வணிக நிறுவனமான அதானி குழுமத்துடன் கோட்டாபாய அரசாங்கம் செய்து கொண்ட டீலுக்கு எதிராக காலிமுகத்திடலில் எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் விசாரித்தபொழுது அது தொடர்பான செய்திகள் தமக்கு உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்று கொழும்பு கோட்டா கோகம கிராமத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் தென்னிலங்கையில் போராடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு கிடைத்த மிகப்பிந்திய தருணங்களில் அதுவும் ஒன்று.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டா கோகம கிராமத்திலிருந்து செயற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தார்கள்.கோட்டா கோகம கிராமத்திலிருந்து யாழ்.நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நூல்களை கையளிப்பது அவர்களுடைய வருகையின் நோக்கம்.அது ஒரு நன்நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்மக்களின் கூட்டுக்காயங்களை சுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் உண்டு. அதேசமயம் தமிழ் மக்களின் கூட்டுக்காயங்கள் இதுபோன்ற நற்செயல்களால் மட்டும் சுகப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானவை,தொடர்ந்து புதுப்பிக்கப்படுபவை என்பதைத் தமிழ் செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். குருந்தூர்மலை ஆக்ரமிப்பு அதை நிரூபிக்கக் கிடைத்த ஆகப்பிந்திய உதாரணங்களில் ஒன்று.

கிழக்கு முனையம் இந்திய அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படாது என்கின்றது அரசாங்கம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது.

இவ்வாறு துறைமுக தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் செலவில் அதற்கு சொந்தமான முனையமாக மாற்றுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுகத்தின் முனையத்தில் உள்ள கிரேன்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்திற்கு 270 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளில் கிரேன்கள் கட்டி முடிக்கப்படும் என்றும் மேலும் 39 மில்லியன் டொலர்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பொறுப்பு என நிமல் சிறிபால டி சில்வா குற்றம் சாட்டினார்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் கடனை மறுசீரமைப்பதற்கும் சரவதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுமாறு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தான் தெரிவித்ததாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

கோட்டா கோகமவிலிருந்து யாழ் பொதுநூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! நூலகம் எரிக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்தனர்

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக நிர்வாகத்தினரிடம் கையளித்தனர்.

அத்துடன் யாழ் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமையை நினைவு கூறும் வகையில் நூலக வாயிலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரலில் ஈடுபட்டனர்.

கோட்டாகம போராட்டக்குழுவினர் யாழ் பொதுசன நூலகத்திற்கும் மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கோட்டா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! கோட்டா கோகம போராட்ட குழுவினர் யாழில் தெரிவிப்பு

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டாகம போராட்டகாரர்கள் இதனை தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், கோட்டாகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நூல்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

நாட்டை ஆட்சி செய்த மோசமான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தவறான வழிநடத்தல் காரணமாகவும் எமது நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

தவறான ஆட்சியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எமது கோட்டாகம நூலகத்திற்கு கிடைத்த நூல்களை நாம் நாடளாவிய ரீதியில் கஷ்டப்படுகிற மாணவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்தோம்.அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் உள்ள மிகவும் கஷ்டப்பட்ட ஒரு பகுதியில் ஒரு நூல்களை வழங்கினோம். இரண்டாவதாக நாம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றோம்

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பொழுது நாம் பிறக்கவும் இல்லை. எங்கள் கண்முன்னே நாங்கள் அமைத்த போராட்ட களத்தை நெருப்பில் எரித்தார்கள் அதனை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

எமது கோட்டாகம நூலகம் எரிக்கப்படுமோ என அஞ்சியிருந்தோம். நூலகத்தை எரிப்பது என்பது சமூகத்தினை வீழ்த்துவதற்கு முக்கியமானதாகும்.

அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கவிருக்கிறோம். அத்துடன் காலிமுகத்திடல் கோட்டாகமவில் இணைய வழியிலான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம் என்றனர்.

Posted in Uncategorized

நல்லூரில் நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் நாளை ஞாயிற்றுக்கிழமை(19.6.2022) முற்பகல்-10 மணிக்கு நல்லூர் கைலாசபிள்ளையார் ஆலய முன்றலில் வடக்கு- கிழக்கு சிவில் அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

மேற்படி போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

பலாலி – திருச்சி விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

யாழ், பலாலியிலிருந்து இந்தியாவின் திருச்சி வரையிலான விமான சேவை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதக்க தெரிய வருகிறது.

மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் திருச்சி விமான நிலையம் வரையிலான விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ; யாழ்ப்பாணம் முதல் பாண்டிச்சேரி வரையிலான பயணிகளுக்கான மற்றும் சரக்குகளுக்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம் காங்கேசன்துறையூடாக கப்பல் போக்குவரத்துக்கு சேவையை ஆரம்பிக்க அனுமதித்தால் ஒரே இரவில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்-படையினர் துப்பாக்கி சூடு!
முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்நடவடிக்கையின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளநிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்தின் போது பொதுமகன்ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீது கண்ணாடி போத்தில்கள்,கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிலமணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்இதேவேளை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முரண்பாடான பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஜ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என இன்று எவருக்கும் வழங்கப்படாத நிலையில் மாலை வேளை தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து பொலீசார் அங்கு வரவளைக்கப்பட்டார்கள்.அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலீசாரிடம் காட்டியுள்ளார்கள்.

வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினர் மேலதிகமாக கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் நின்ற சாரதிகள் தமது வாகனங்களுக்கும் டீசல் வழங்கவேண்டும் என்று கோரி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல்வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளார்கள்.

முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அது அத்தியஅவசிய தேவைக்காகவும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் பிரிவு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு பெற்றுத் தருமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized