உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் அமைச்சர் பீரிஸ் உதவி கோரினார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையை அமைச்சர் எடுத்துரைத்தார். நிலையான தீர்வுகள் கிடைக்கும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பாராட்டத்தக்கதாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. அலுவலகம் போன்ற ஏனைய நிறுவனங்களுடன் தனது அலுவலகம் இணைந்து செயற்படுவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவை ஏற்கனவே அர்ப்பணித்துள்ள திட்டங்களை ´மீண்டும் செயற்படுத்துமாறு´ ஊக்குவிப்பதாகவும் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 21ஆவது திருத்தம் தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் யோசனைகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்கள் என்பவற்றை உள்ளடக்கி 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தை ஜனாதிபதி நாளை(30) கூட்டவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நாளை(30) மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான தமது கட்சியின் யோசனைகளை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உபுல் ஜயசூரிய, ஶ்ரீநாத் பெரேரா மற்றும் திசத் விஜேகுணவர்தன உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனவே, இந்த திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தமது கட்சியால் இணங்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 21ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு கட்சியின் ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தயாரிக்கப்படவுள்ள புதிய வரைவுக்கான முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு தமது கட்சி எதிர்பார்ப்பதாக அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது கட்சி பங்கேற்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

எமக்கான நீதியினை எந்த அரசாங்கமும் வழங்கவில்லை. அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம்.எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை.

எனவே எமக்கான நீதி கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு இனியாவது சர்வதேசம் முன்வர வேண்டும்.எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி 13 வருடங்களாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.(

Posted in Uncategorized

தமிழக அரசின் நிவாரண பொதிகள் யாழில் விநியோக நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றைய (30) தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன் -வைத்தியர் சத்தியமூர்த்தி

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன்.ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கல்விக்கான நிதி பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஓட்ட நிகழ்வு சமகாலத்தில் நடைபெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி.இலண்டன் கிளிநொச்சி மக்கள் அமைப்பு மிக சிறப்பாக ஒருங்கினைப்பை செய்தார்கள். என்னுடன் பல மைல்கள் பயணித்து நிகழ்வில் என்னை ஊக்கவித்தமை மிக்க மகிழ்ச்சி.

கிளிநொச்சியை சேர்ந்த உதயன் பல மரதன் ஓட்டங்களை முடித்தவர். இன்று அவருடன் சேர்ந்து எடின்பரோ மரதன் ஓடியமை மகிழ்ச்சியான விடயம்.உடல், உள, மற்றும் ஆத்மா ஒருங்கிணைந்த பயிற்சியில் மரதன் ஓட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

சுகதேகியாக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது தற்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.குறிப்பாக பொருளாதார புயலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இலவச மருத்துவ சேவை நலிவுற்றிருக்கும் இக் காலத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்க வேண்டியமை காலத்தின் தேவை என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.

அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.

அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.

அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.

எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் யோசனை

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

நேற்று  விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தன்னுரையில்,

இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.

அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக பாராளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது.

20வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.

இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.

பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்” என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்- மனோ கணேசன்

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.

இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

21ம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.

தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன.

இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு.

ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம் வட-கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர்… என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும்.எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம்.

பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரக்க கூறினேன்.

இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சி தலைவர்களையும், எம்பீகளையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

கச்சதீவை இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள் -ரெலோ

கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (29) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பாரதப் பிரதமர் தமிழ் நாட்டிற்கு வந்திருந்த போது கச்சதீவு பிரச்சனை அதில் எழுப்பப்பட்டுள்ளது. கச்ச தீவை மீட்பதற்கு இது சரியான தருணம். ஆகவே அதனை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ முதலமைச்சர் ஊடாக பாரத பிரதமரிடம் முன் வைத்தது மன வருத்தம் தருகின்றது.

இந்திய அரசாங்கம் இலங்கையில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்ட போது முதன் முதல் உதவி செய்த அரசாங்கமாக உள்ளது. பல உதவிகளை அவர்கள் செய்து வந்தார்கள். அதே நேரத்தில் தமிழ் நாட்டு முதலமைச்சர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றோம் என்ற கருத்தை முன் வைத்த போது எங்களுடைய தரப்பில் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் தமிழ் நாடு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைத்தோம். இந்த பொருளாதாரப் பிரச்சனை சிங்கள மக்களையும் பாதித்திருக்கிறது. இது தான் தமிழர் பண்பாடு என்ற விடயத்தை முதலமைச்சருக்கு எடுத்துக் கூறினோம். இலங்கை பூராகவும் அவர்களுடைய உதவி வந்து கொண்டிருகிறது.

அத்துடன் இந்தியாவில் ஒரு சிறுமி சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கின்ற நெகிழ்ச்சியான விடயத்தைப் பார்க்க முடிந்தது. அன்றாடம் பிச்சை எடுத்து வாழும் ஒரு பெரியவர் தனது பணத்தை இலங்கை மக்களுக்கு கொடுக்கின்ற நிகழ்வையும், ஒரு தேநீர் கடைக்காரர் பலரையும் கூப்பிட்டு தேநீர் அருந்த வைத்து அவர்களிடம் விரும்பிய பணத்தை தரும்படி கேட்டு அதனையும் வழங்கியிருந்தார். இவ்வாறு தமிழ் நாட்டு மக்கள் இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனைக்கு பாரிய நல்லெண்ணத்துடன் உதவி செய்துள்ளார்கள். அந்த உதவி எங்களால் மறக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்தை நாம் மறக்க முடியாது. தமிழ் நாட்டு அரசாங்கம் அன்று முதலே தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுகிறது.

உண்மையில் கஸ்ரப்படுகின்ற நிலையில் இருக்கும் போது கச்சதீவைப் பெறுவதென என தமிழக முதல்வர் எண்ணியது கவலை தருகிறது. இதனால் மனவருத்தம் அடைகின்றோம். தமிழர்களுக்கு தற்போதைய தமிழக முதல்வரின் தந்தையார் பாரிய சேவைகளை செய்துள்ளார். இந்த நிலையில் கஸ்ரமான நிலையப் பயன்படுத்தி கச்சதீவை இந்தியா பெற முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாது. கச்சதீவைப் பொறுத்தவரை அதில் எங்களது மீனவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கூட இருக்கிறது. கச்சதீவை விட்டுக் கொடுக்க முடியாது. அது தமிழர்களின் தீவாக உள்ளது.

வடக்கில் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் தீவாக இருக்கின்ற போதும், இந்தியாவிற்கு பங்கம் ஏற்படும் வகையில் அதனை பயன்படுத்த தமிழ் மக்கள் ஒரு போதும் அனுமதியளிக்க மாட்டார்கள். அதனால் இந்திய தனது பாதுகாப்பு விடயத்தில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாரத பிரதமர் கூட இலங்கை தமிழர்களை காப்பாற்ற முயற்சிப்போம் என கூறிய நிலையில் தமிழக முதல்வர் கூறியதை ஏற்க முடியவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு மைத்திரி அவசர கடிதம்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல யோசனைகளை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவிடம் இந்த திருத்தத்தில் உள்ளடக்குமாறு அவர் முன்வைத்துள்ளார்.

21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியப்படுத்துவதற்கான கலந்துரையாடலும் அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.