நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ப்பு

கடந்த நாட்களில், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பதவி விவகாரம் நீண்ட இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.இன்று புதன்கிழமை காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Posted in Uncategorized

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை

அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை பணிக்கு அழைக்க சுற்றுநிருபம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரச நிறுவனங்களில் செலவுகளைக் குறைப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

”இலங்கைக்கு உதவ முடியாது”: கைவிரிக்கும் உலக வங்கி!

முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தெளிவான கொள்கை கட்டமைப்பை இலங்கை வகுக்க வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக பல ஊடக அறிக்கைகள் தவறான செய்திகளை வௌியிட்டிருந்ததாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நிதி அமைச்சராக பதவியேற்கிறார் பிரதமர் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.

23 அமைச்சரவை அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான செயலாளர்களும் இன்றையதினம் நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரை நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் நியமனம், நாளை (25) இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Posted in Uncategorized

மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக கருத்து தெரிவத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளி விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

சீன நாட்டுத் தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்து பேச்சு

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhong இன்று (24) காலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 உலர் உணவுப் பொதிகளை தூதுவர் உத்தியோகபூர்வமாக விநியோகித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது வழங்கினார்.

இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

யாழில் தொடரும் எரிபொருளுக்கான நீள் வரிசைகள்: விலை அதிகரிப்புத் தொடர்பில் மக்கள் கடும் விசனம்

கடும் பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக யாழிலும் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் மீளவும் எரிபொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமையும்(24.5.2022) யாழ்.மாவட்டத்தில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காகப் பரவலாகப் பல்வேறு இடங்களிலும் மிக நீண்ட வரிசைகளில் மோட்டார்ச் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்த பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரித்தமை தொடர்பிலும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கான செயற்பாடு முன்னெடுப்பு; 2 நிறுவனங்கள் தெரிவு

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட நெருக்கடிகளால் மக்கள் துன்பப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பெற்றுக்கொண்ட சர்வதேச கடனை மறுசீரமைப்பதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கான நிதி ஆலோசனை சேவைகளுக்காக உலகின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் இரண்டை தெரிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச யோசனைகள் தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பிரான்ஸின் Lazard என்ற நிறுவனமே கடன் மறுசீரமைப்பிற்கான ஆலோசனை நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த ஆலோசனை சேவைகளுக்கான கட்டணமாக 5.6 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்ட ஆலோசனைகளை வழங்க Clifford Chance நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.