அரசாங்கத்தில் இருந்து விலகிய 40 பேர் எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடிய போது, அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளனர்.

தாம் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும், சுயாதீனமானவர்களாகவே செயற்படுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் எதிர்க்கட்சிக்கு சென்றுள்ளனர்.

“19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அவசியமானது”: பிரதமர் மகிந்த

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின் பாராளமன்ற உரை வருமாறு,

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் இந்த சபையின் உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நமது நாட்டின் வரலாற்றில் நீண்ட காலமாக எதிர்கொண்ட பொருளாதார சவால் தற்போது மிகவும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது.

ஒரு அரசு தன் மக்களுக்கு ஒருபோதும் மனமுவந்து கஷ்டங்களை ஏற்படுத்தாது. ஆனால் இந்நாட்டு மக்கள் இன்று பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிவாயு நெருக்கடி ஆகியவை நம் கண்களுக்கு புலப்படும் சிரமங்களாகும். இதன் காரணமாக இன்று மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதை நான் அறிவேன்.

இந்த நெருக்கடியை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. மக்கள் எம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டை உண்மையாக நேசிப்பவர் யார் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எமது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியாது, இந்த நெருக்கடியை போக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக முன்வைக்க வேண்டும்.

எமது அரசியல் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு முன், நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். எனவே பாரபட்சமின்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சியினரை மனதார அழைக்கின்றோம். அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியாகும் என்பதை நினைவூட்டுகின்றேன்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க பொருளாதார முகாமைத்துவம் மிகவும் முக்கியமானது.

அதற்காக மக்கள் போன்றே இச்சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடின்றி மதிப்பிடப்படும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் சர்வதேச அனுபவமுள்ள மூன்று பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கி உள்ளிட்ட நிதி நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒருவரை இது தொடர்பாக நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.

மேலும், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம். அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைத்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான ஆதரவை எங்கள் நட்பு நாடுகள் எமக்கு வழங்கி வருகின்றன.

நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் நாட்டிற்கான தமது பொறுப்புகளையும் கடமைகளையும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறுகிய காலத்தில் நிலைமையை நிர்வகிப்பது குறித்தும், நீண்டகாலத்தில் நாட்டில் இவ்வாறான நெருக்கடிகள் மீண்டும் ஏற்படாதவாறு உறுதியான அடித்தளத்தை அமைப்பது குறித்தும் நாம் அதிகம் சிந்திக்க வேண்டும். அதனால்தான் எதிர்ப்புக்கு அப்பாற்பட்ட தலையீடு தேவை என்பதை நான் முன்பே உங்களுக்கு நினைவூட்டினேன்.

பேச்சுவார்த்தை மூலம் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். முன்னதாக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களின் பெறுமதியான யோசனைகளை எடுத்து தேவையான தலையீடுகளை செய்ய முன்வந்தோம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.

நீண்டகால மின்வெட்டுக்கான காரணங்களில் ஒன்று, சரியான நேரத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாமையாகும். சிலர் வேண்டுமென்றே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அடுத்த படியைத் தவறவிட்டனர். இப்போது அந்த பழியை கடந்த காலத்தின் மீது சுமத்துவதில் அர்த்தமில்லை. அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையை தீர்த்து வருவதாலும், மத்திய மலைநாட்டில் தற்போது மழை பெய்து வருவதாலும் இந்த பிரச்சனையை மிக விரைவாக தீர்க்க முடியும்.

இரண்டு நாட்களில் இந்தப் பிரச்சினை முடிந்துவிடும் என்று சொல்வதை விட, நம்மால் முடிந்த வரையில் தீர்வு காண்பதுதான் முக்கியம். மின்வெட்டை நிமிடத்திற்கு நிமிடம் குறைக்கிறோம்.

எதிர்வரும் சில வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் தேவையில்லை.

அன்றாட வாழ்வில் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய வலியை அறிந்து, இந்த நிலையைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொள்கிறோம். 24 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டாலும், உங்களை இனிமேலும் நாங்கள் வரிசையில் காத்திருக்க வைக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் நமது நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையும் மிக முக்கியமானது. இந்தப் பிரச்சினைக்கு விரைவான மற்றும் நடைமுறைத் தீர்வாக அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

அதன் முதல் படியாக, அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை அத்தியாவசிய மற்றும் சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான மிக சரியான தீர்வாகும் என்று நான் நம்புகிறேன்.

ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன், நாம் ஒரு விரிவான புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கி நகர வேண்டும். அதற்கான எமது முயற்சிக்கு கட்சி பேதமின்றி உங்கள் அனைவரதும் ஆதரவும், மக்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என நம்புகிறேன்.

Posted in Uncategorized

கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் படிக்காத ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம்

  • நிலாந்தன்

தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் ஒரு கிராமமாக அது மாறிவருகிறது. இலங்கைத்தீவில் அதுதான் மிகப் பிரசித்தமான ஒரு ட்ரெண்ட்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டது.இப்பொழுது கோட்டா கோகம என்ற கிராமம் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது.

அரசுக்கு எதிரான போராட்டங்களைப் பொறுத்தவரை இலங்கைத்தீவில் பெருந்தொற்று நோய்க் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்ட கபன் துணி போராட்டம் புத்தாக்கத் திறன் மிக்க ஒரு குறியீட்டுப் போராட்டம். அதுபோலவே கோட்டா கோகமவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கை.உருவாக்கப்பட்ட மிகச் சில நாட்களுக்குள் அதுபோல வேறு எந்தக் கிராமமும் வேகமாக வரவில்லை.அதில் குடியிருப்பவர்களைப் பொறுத்தவரை அது ஒரு புரட்சிக் கிராமம். கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்கும் எல்லாருக்கும் அது ஒரு புரட்சி கிராமம்.

இந்தியாவில் ஆந்திராவில் தெலுங்கானா விடுதலை போராட்டத்தின்போது கவிஞர் சொரபண்டார ராஜ் எழுதிய ஒரு கவிதை உண்டு. ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமம் என்று அதற்குத் தலைப்பு.ஆந்திராவில் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் மத்தியிலும் உலகம் முழுவதிலும் சுதந்திரத்துக்காகப் போராடிய எல்லாம் மக்கள் கூட்டங்களின் மத்தியிலும் அவ்வாறான ரகசியம் காக்கும் புரட்சிக் கிராமங்கள் காணப்பட்டன. விடுதலைப் போராட்டத்தை அவைதான் அடைகாத்தன.

ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஆர்பாட்டக்காரர்களின் குடியிருப்பு என்ற அடிப்படையில் கோட்டா கம கிராமத்துக்கு ஒரு புரட்சிகரமான பாத்திரம் உண்டு. அது இப்பொழுது அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு குறியீடாக மாறியிருக்கிறது.மேலும் அது இலங்கைத்தீவின் பல்லினத் தன்மையை நோக்கிய கட்டமைப்பு மாற்றத்தைக் கருக்கட்டும் கிராமமாகவும் வளர்ச்சி பெற்றால் அது மகத்தானதே.

இது நோன்பு காலம் என்பதனால் ஒருபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் அக்குடியிருப்புக்கு உதவுகிறார்கள்.தவிர கரு ஜயசூரியவால் நிர்வகிக்கப்படும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உதவிகளைச் செய்வதாக தகவல். மேலும் மாணவர் அமைப்புக்களும் அங்கே நிற்பதாக ஒரு தகவல். எனவே காலிமுகத்திடலில் தங்கியிருக்கும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தங்குமிட வசதிகளும் ஏனைய வசதிகளும் ஏதோ ஒரு விதத்தில் கிடைப்பதாக தெரிகிறது. இனி வெளிச்சக்திகளும் அக்கிராமத்தை தத்தெடுக்க முயற்சிக்கக்கூடும் .

கொழும்பில் உள்ள மேற்கத்திய நாட்டுத் தூதுவர்கள் தமது ருவிட்டர் பக்கங்களில் வெளியிடும் செய்திகள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக காணப்படுகின்றன.மேற்கத்தைய ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் விவகாரத்தை பெருப்பித்து எழுதுகின்றன. குறிப்பாக சில தமிழக யூடியூப்பர்களின் கற்பனையை தாங்கமுடியவில்லை.சில யூடியூப்பர்களின் பொய்களை மில்லியன் கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். ஆனால் சரியான தகவல்களைத் தரும் யூடியூப்களை அந்தளவு தொகையினர் பார்ப்பதில்லை.

நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் பொதுவாக இரண்டு வகைப்பட்டவை. ஒருபகுதி ஆர்ப்பாட்டங்கள் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்றன. மற்றொரு பகுதி தன்னியல்பானது.கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் தன்னியல்பாக தெருவுக்கு வருகிறார்கள். காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டமும் அத்தகையதே.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எந்தக் கட்சியின் கொடிகளும் காணப்படவில்லை. ஏந்தக் கட்சியின் கோஷமும் காணப்படவில்லை. ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கோஷங்களும் சிங்கக்கொடியும் மட்டும்தான் காணப்படுகின்றன. அவர்களை இரண்டு விவகாரங்கள் இணைக்கின்றன ஒன்று ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான கூட்டுணர்வு.இரண்டாவது, இலங்கையர்கள் என்ற கூட்டுணர்வு.சிங்கக்கொடி அதைத்தான் பிரதிபலிக்கிறது.மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கட்சிப் பிரமுகர்களைக் காணமுடியவில்லை. கட்சி முக்கியஸ்தர்களும் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் சற்று விலகி நிற்பதாக தெரிகிறது. அரசியல் கட்சிகளை நீக்கிவிட்டு மக்கள் தன்னியல்பாக ஆர்ப்பாட்டங்களை,போராட்டங்களை முன்னெடுப்பது என்பது இலங்கைத் தீவில் மட்டும்தான் நடக்கும் ஒரு விவகாரம் அல்ல.ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டக்களத்தில் தாற்காலிகமாகத் தங்கியிருந்து போராடுவதும் இதுதான் முதற்தடவையல்ல.அதற்கு உலக அளவிலும் பிராந்திய அளவிலும் உள்நாட்டிலும் முன்னுதாரணங்கள் உண்டு.

அமெரிக்காவின் வோல்ட்ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்தில் அவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்காலிகமாக தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.அரபு வசந்தத்திலும் அவ்வாறான ஏற்பாடுகள் காணப்பட்டன. இந்தியாவில் அண்மையில் வெற்றி பெற்ற விவசாயிகளின் போராட்டத்தின்போது டெல்லியில் விவசாயிகள் தற்காலிகமாக தங்கி இருப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன..இவைதவிர சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடாத்திய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மெரினா கடற்கரையில் அவ்வாறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

இவையாவும் நாட்டுக்கு வெளியே உள்ள உதாரணங்கள். நாட்டுக்குள் தமிழ்ப் பகுதிகளில் கடந்த 12 ஆண்டுகளில் துலக்கமான மூன்று உதாரணங்களை இங்கே காட்டலாம். முதலாவது உதாரணம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடையது.பல ஆண்டுகளாக தொடர்ந்து வீதியோரங்களில் போராடும் அன்னையர்கள் மிகச்சிலர்தான். அவர்களும் வீதியோரத்தில் குடில்களை அமைத்து தங்கி இருக்கிறார்கள்.அப்போராட்டங்கள் மக்கள் பயப்படவில்லை எனினும், தொடர்ச்சியாக நடப்பவை.அடுத்த போராட்டம் கேப்பாபிலவில் காணிகளை மீட்பதற்காக நடந்த போராட்டம். அதில் போராடிய பெண்கள் படையினரின் பெரும்படைத் தளங்களின் முட்கம்பி வேலிகளின் ஓரமாக அமர்ந்திருந்தது மழைக்கும் வெயிலுக்கும் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து தொடர்ச்சியாகப் போராடினார்கள். அப்படித்தான் இரணைதீவில் தமது வீடுகளை மீட்கச் சென்ற பெண்களும் போராடினார்கள். இந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதாரணங்களின் பின்னணியில்தான் காலிமுகத்திடலில் கோட்டா வீட்டுக்குப் போ என்ற கிராமம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

காலிமுகத் திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியிருப்பவர்களுக்கிடையே ஒரு கூட்டுணர்வு உண்டு. தன்னியல்பாக அவர்கள் அமைப்பாகி வருகிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து தலைமகள் மேலெக்கூடும். அரசியல் விழிப்புடைய தலைமைகளால் வழிநடத்தப்படாத போராட்டங்கள் ஒன்றில் தாமாகச் சோர்ந்து போய்விடும். அல்லது பலப்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கப்படலாம்.அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலத்தை பிரயோகிக்கும் முடிவை இதுவரை எடுக்கவில்லை.நேற்று-சனிக்கிழமை-காலிமுகத்திடலை நோக்கி போலீஸ் வாகனத்தொடர் அணி ஒன்று நகர்த்தப்பட்டது.எனினும் அது பின்னர் பின்னெடுக்கப்பட்டது. அது கோட்டா கோகமவின் மீதான ஓர் உளவியல் தாக்குதலே

அதேசமயம் எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தோடு இணக்கத்துக்கு வரத் தயாரில்லை.அவை அரசாங்கத்தை எப்படித் தோற்கடிக்கலாம் என்றே சிந்திக்கின்றன. ஆனால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது ஜனாதிபதியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்றே தெரிகிறது. அரசாங்கத்திடமிருந்து விலகி நிற்கும் அரசாங்கத்தின் முன்னாள் கூட்டாளிகளை நம்ப முடியாது. அரசாங்கம் அவர்களை ஏதோ ஒரு விதத்தில் சமாளித்து ஒரு புதிய அமைச்சரவையை உருவாக்கலாமா என்று தொடர்ந்து எத்தனிக்கிறது. இதனால் விவகாரம் இப்பொழுது ஒரு யாப்பு நெருக்கடியாக மாறிவருகிறது. யாப்பின்படி அரசாங்கத்தை கவிழ்ப்பது கடினம் என்று தெரிகிறது. அரசாங்கத்தை கவிழ்க்கத் தேவையான பலம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. யாப்புக்கு வெளியே போய் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாரில்லை. இதனால் ஏறக்குறைய அரசற்ற ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இந்த அரசற்ற நிலையினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்கள்தான் மேலும் பாதிக்கப்படுவார்கள். வர்த்தகர்கள் பொருட்களை விரும்பிய விலையில் விற்கிறார்கள். எரிபொருள் விநியோகம், எரிவாயு விநியோகம் எல்லாவற்றிலும் முறைகேடுகள் காணப்படுகின்றன.

ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் பொதுமக்களின் தன்னியல்பான எழுச்சிகள் மேலும் அதிகரிக்கும். அதேசமயம் ஐஎம்எப் போன்ற உலகப் பொது நிறுவனங்களும் அரசாங்கத்துக்கு உதவத் தயங்கும்.ஏனென்றால் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு பிரதான முன்நிபந்தனை அரசியல் ஸ்திரத்தன்மை ஆகும். பொருளாதார நெருக்கடிகள் இப்பொழுது யாப்பு நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை என்ற வளர்ச்சியை அடைந்துவிட்டன. எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது அரசியல் ஸ்திரத்தன்மைதான். ஆனால் அவ்வாறான ஓர் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கத்தால் முடியவில்லை.அதே சமயம் அப்படி ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தோடு ஒத்துழைக்க எதிர்க்கட்சிகளும் தயாரில்லை.எனவே அரசியல் ஸ்திரமின்மை அல்லது ஒருவித அரசற்ற நிலை தொடர்ந்தும் இருக்கப்போகிறது?

அதாவது கோட்டா வீட்டுக்குப் போக மாட்டார்.அவரை வீட்டுக்கு அனுப்புவதற்காக காலிமுகத்திடலில் திரண்டிருக்கும் மக்களும் இப்போதைக்கு வீட்டுக்குப் போக முடியாது என்று தெரிகிறது.ஒரு உல்லாச வெளி நாட்டின் உலைக்களமாக இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கொதித்துக் கொண்டிருக்கப் போகிறது?

இதே காலிமுகத்திடலில் 1956இல் தமிழ் சத்தியாக்கிரகிகள் வெண்ணிற ஆடைகளோடு தமது அறவழிப் போராட்டத்தை தொடங்கினார்கள். அவர்கள் தனிநாடு கேட்கவில்லை. சிங்கள மக்களுடைய சாப்பாட்டை தட்டிப் பறிக்கவில்லை. நாட்டைப் பிரிக்க சொல்லியும் கேட்கவில்லை.சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படுவதை எதிர்த்தார்கள்.சத்தியாகிரகிகள் மத்தியில் மக்கள் பிரதிநிதிகளும் இருந்தார்கள். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் என்ன செய்தது? அறவழிப் போராட்டத்தின் மீது குண்டர்களை ஏவிவிட்டது.குண்டர்கள் சத்தியாக்கிரகிகளை அடித்து மிதித்தார்கள்.சிலருடைய காதுகளைக் கடித்தார்கள்.போலீசார் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு நின்றார்கள்.இவ்வாறான வன்முறைகளின் தொடர் விளைவாக நாடு மீளமுடியாத வன்முறைச் சுழலுக்குள் சிக்கியது.யுத்தத்தின் சங்கிலித்தொடர் விளைவே இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடி.சுமார் அறுபத்தாறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களின் அறவழிப் போராட்டத்தை வன்முறை கொண்டு நசுக்கினார்கள். அதன் விளைவாக வந்த ஆயுதப் போராட்டத்தையும் 2009 ஆம் ஆண்டு நசுக்கினார்கள். அந்த வெற்றியை இதே காலிமுகத்திடலில் விமரிசையாகக் கொண்டாடினார்கள்.இப்பொழுது எல்லா வெற்றிகளும் தோல்விகளாக மாறிவிட்டன.அரை நூற்றாண்டுக்கு மேலாக இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு முட்டாள் தீவு மீண்டும் ஒருதடவை காலிமுகத்திடலில் போராடிக் கொண்டிருக்கிறது?

Posted in Uncategorized

CEYPETCO எரிபொருளின் விலையை அதிகரித்தது

பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை அதிகரித்துள்ளது.

நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.

இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை!

இலங்கையில் இன்று முதல் (18.04.22) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளின் போது அணிவதை தவிர, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என புதிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தவறு செய்து விட்டேன் – விலக மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.

இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர் என்ற முறையில் கூடுதல் சலுகைகள் எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

மேலும், உங்கள் கீழ் உள்ள நிறுவனங்களை ஊழலற்ற, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுங்கள். பல அரச நிறுவனங்கள் இன்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. அவை சரி செய்யப்படுவது மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைச்சுப் பதவிகள் கிடைத்தவுடன், தமக்குக் கிடைக்கும் அமைச்சுக்களிலும் நிறுவனங்களிலும் தொழில் வழங்குவதற்குத் தயாராகி வருவதை நாம் அறிவோம்.

இத்தகைய சூழ்நிலையில் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைச்சுக்கள் உண்மையில் செய்ய வேண்டியது தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதுதான்.

மக்கள் கோரிய முறைமையை (System Change) மாற்ற இன்றைய நெருக்கடி ஒரு நல்ல சந்தர்ப்பம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த இளைஞர்களிடம் அதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கொவிட் தொற்றுநோய் அதேபோன்று கடன் சுமை போன்ற விடயங்கள். அவ்வாறிருந்தாலும் எங்களாலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். அவற்றை சரி செய்து கொண்டே நாம் முன்னேற வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்திற்கு இதற்கு முன்னர் சென்றிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதே போன்று, இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு என நினைக்கிறேன்.அவற்றை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும், அசௌகரியமும், கோபமும் மிகவும் நியாயமானது.

கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும். எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.

தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.

அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

World Express Services
இந்த குழுவுடன் இணைந்து கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்த நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.

நாம் எப்போதும் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். மக்களிடம் யதார்த்தத்தை மறைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் பெறும் தகவல்களைப் பற்றி அறிவுபூர்வமாக விசாரித்து உண்மைகளைப் புரிந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிரச்சினையை புரிந்து கொண்டால் மட்டுமே தீர்வு காண முடியும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் அவசியம்.

இன்று நமது நாடு கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையையும் கடன் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது. இந்த நேரத்தில் எங்களிடம் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவசர அந்நியச் செலாவணி தேவைகளுக்குப் பணம் தேட வேண்டும்.

குறுகியகால வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள எங்களின் சிரமத்தை நாங்கள் ஏற்கனவே கடன் வழங்கியவர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதன்படி கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எனது பொருளாதார முகாமைத்துவக் குழு ஏற்கனவே எமது நட்பு நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்பு, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நிதி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர்.

எண்ணெய், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுள்ளோம். மேலும், உலக வங்கி எரிவாயு, உரம், பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் இறக்குமதிக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளது.

நாட்டு மக்களுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு தற்போது நாட்டுக்கு கிடைக்கப் பெற்றாலும், சமீப நாட்களாக அது முறையாக விநியோகிக்கப்படவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் நாம் தற்போது செயற்பட்டு வருகின்றோம்.

சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என சந்தேகித்து மக்களால் பெருமளவில் எரிபொருள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை ஆகும். இதன் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கான தேவை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

மக்கள் படும் இன்னல்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கும்பல் ஒன்றும் உருவாகி உள்ளது. இந்த நிலையை கட்டுப்படுத்தவும் அரசு தலையிட்டு வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில், இவ்வாறான விடயங்களை தவிர்க்குமாறு நான் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான தீர்வுகள் மற்றும் தீர்மானங்களையும் நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம். நாம் அவற்றைச் செயற்படுத்தி வருகிறோம்.

அண்மைக்காலமாக நீண்டகால மின்வெட்டுக்கு மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமையே காரணம் ஆகும்.

சிக்கல்களுக்கு மத்தியிலும் தேவையான எரிபொருளை பெற்றுக்கொண்டு, எதிர்வரும் காலத்தில் மின்வெட்டை இரண்டு மணித்தியாலங்களாக மட்டுப்படுத்திக்கொள்ள நாம் எதிர்பார்க்கிறோம்.

குறுகியகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தேடுவதோடு, இந்த நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பல தசாப்தங்களாக காலதாமதமாகி வரும் சில தீர்மானங்களை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை சரியான திசையில் வழிநடத்தி, நமது எதிர்கால சந்ததியினரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இப்போது நமக்கு உள்ளது.

இன்று நாம் எதிர்கொள்ளும் கடுமையான சவாலை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களைப் போன்று நட்பு நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மட்டுமே அந்த ஒத்துழைப்புகளைப் பெற முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையுமாறு நான் அழைக்கிறேன். மேலும், இந்த நெருக்கடியைத் தீர்ப்பதில் எங்களுடன் இணையுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் நான் அண்மையில் அழைப்பு விடுத்தேன். என்னுடைய அழைப்பை ஏற்று எங்களுடன் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது.

இந்த கடினமான காலங்களில், அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவும், சர்வதேச சமூகத்தை கையாளவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிக்க நான் முடிவு செய்தேன். புதிய அமைச்சரவையை நியமிப்பதில் ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தாமாக முன்வந்து அமைச்சரவையில் இருந்து விலகியதன் மூலம் இளைஞர்கள், படித்தவர்கள் என ஒரு புதிய குழுவுக்கு இடம் கொடுத்துள்ளனர்.

ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் இலங்கையும் ஒன்று. அனைத்து குடிமக்களின் பாதுகாப்பும் சுதந்திரமும் அரசியலமைப்பின்படி செயற்படும் ஜனநாயக ஆட்சிமுறையில் தங்கியுள்ளது.

சமூகத்தின் மிகவும் சுறுசுறுப்பான பகுதியினரான இளைஞர்கள் தங்கள் அழுத்தத்தை அவர்களுக்கே உரிய வழியில் வெளியிடுவதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யவும், போராட்டங்களை நடத்தவும் இன்று முழு சுதந்திரம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தமது போராட்டங்களை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்லும் போது, ஒழுக்கத்துடன் கடமையாற்றும் பொலிஸார், முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளை குறிப்பாக நான் பாராட்டுகின்றேன்.

உங்களுக்குத் தெரியும், கடந்த இரண்டரை ஆண்டுகளில், நான் போராட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்கு, ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்து இருந்தேன். சுதந்திரம் வழங்கியுள்ளேன். என் அலுவலகத்திற்கு அருகில் வந்த போராட்டக்காரர்களை கலைக்கக்கூட நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த எதிர்ப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் இளைஞர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் நாட்டுக்காக முன்வருவதை எதிர்காலத்திற்கான சாதகமான அடையாளமாகவும் பார்க்கிறேன்.

இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறுகளை திருத்தி நாட்டைக் கட்டியெழுப்பவே விரும்புகின்றார்கள், நாட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு அல்ல என்று நான் நம்புகிறேன். எனவே, உங்கள் ஜனநாயகப் போராட்டங்களை வன்முறைப் பாதையில் திசை திருப்ப சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்று இந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய மகாசங்கத்தினர், மதகுருமார்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் பல்வேறு அரசியல் குழுக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அந்த ஆலோசனைகள் அனைத்தையும் நான் உணர்வுபூர்வமாகக் கேட்கிறேன்.

அறுபத்து ஒன்பது இலட்சம் மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தி மிகுந்த நம்பிக்கையுடன் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தனர். எனது பதவிக்காலத்தில் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளேன். அதன்படி, தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்.

இந்த நாட்டு மக்களின் பணத்தை நான் திருடியதில்லை. அன்றும் இன்றும் என் கைகள் சுத்தமாகவே உள்ளன. நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டது பலரது கோரிக்கைகளுக்காகவே அன்றி அதிகார தேவைக்காக அல்ல. எனது வாழ்நாளில் முப்படையில் அதிகாரியாக 20 ஆண்டுகள் இந்த நாட்டிற்கு சேவை செய்துள்ளேன். நான் வெற்றிகரமாக சேவை செய்துள்ளேன். அத்துடன், பாதுகாப்புச் செயலாளராக நான் இந்த நாட்டுக்கு வெற்றிகரமாக சேவையாற்றியுள்ளேன். நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்ற முறையில், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் நான் எப்போதும் செயற்படுகின்றேன்.

நாட்டின் சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உள்ளது. எனவே, அரசியலமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களை பாராளுமன்றத்தில் கலந்துரையாடி தேவையான மாற்றங்களை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. அது தொடர்பில் அவசியமான ஒத்துழைப்பை எந்த நேரத்திலும் பாராளுமன்றத்திற்கு வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன்.

அதற்கிணங்க, நாட்டின் அதியுயர் அரசியலமைப்புக்கு மதிப்பளித்து, எதிர்காலத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை விடுவிப்பதாக நான் உறுதியளிக்கிறேன், மேலும் இது தொடர்பாக மக்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். மேலும் மக்கள் எதிர்பார்ப்பது போல் நேர்மையாகவும், திறமையாகவும், தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

Posted in Uncategorized

21 ராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம்   ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு   இடம்பெற்றது.

  1. G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்

3. அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க

4. லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

6. இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

7. சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

8. சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர்

9. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

10. சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்

11. பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

12. டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

13. டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர்

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

16. அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்

17. கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர்

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

19. கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

20. கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்

21. சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

காலி முகத்திடலில் தொடரும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள், கலைஞர்கள் என பலரும் இந்த தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை பதவியிலிருந்து விலகுமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் லலித் நந்தகுமார ஹேமாரத்ன நேற்று(17) ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று(18) காலை நிறைவிற்கு வந்தது.

அதன்பின்னர் விளையாட்டு வீரர் சஜித் மதுரங்க 24 மணித்தியால சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று(18) ஆரம்பித்தார்.

அரசியல் தலையீடுகள் இன்றி பெருமளவிலானவர்கள் இன்றும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Posted in Uncategorized

அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது; கோவிந்தன் கருணாகரம்!

சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்துகொண்டுதான்போராடவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினை வீட்டுக்கு செல்லுமாறு கோரி கடந்த எட்டு தினங்களாக காலிமுகத்திடலில் சிங்கள இளையோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகவேண்டும்,ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகவேண்டும் உட்பட ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடு இன்று பொருளாதார ரீதியாக அதாளபாதாளத்திற்கு சென்றுள்ளது.எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த பொருளாதாரத்தினை தூக்கிநிமிர்த்தக்கூடிய நிலையில்லை.இந்தநிலை எவ்வாறு ஏற்பட்டது என்பதன் தர்ப்பரியம் தெரியாமல் இந்த போராட்டம் நடாத்தப்படுகின்றது என்று நான்நினைக்கின்றேன்.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் அடக்கி ஒடுக்கப்பட்டபோது அகிம்சை ரீதியான போராட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதப்போராட்டமாக மாற்றம்பெற்றபோது தமிழ் மக்கள் மீதான யுத்ததிற்காக இந்த நாட்டினை மாறிமாறி ஆட்சிசெய்த அரசுகள் பில்லியன் கணக்கான டொலர்களை செலவு செய்ததே முதல்காரணமாகும்.

பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டபோது இந்த நாட்டில் ஒரு அரசியல் தீர்வு காணப்பட்டிருந்தால் மாறிமாறி வந்த அரசுகள் இந்தளவுக்கு யுத்ததிற்கு டொலர்களை செலவிடவேண்டிய தேவையேற்பட்டிருக்காது.

தற்போதுகூட சிங்கள இளையோர்களினால் முன்னெடுக்கும் போராட்டமானது தாங்கள் முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகளில் முதலாவதாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வரும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கவேண்டும் என்பது எனது கருத்தாகும்.

பண்டாரநாயக்க தலைமையிலான ஆட்சி சிங்கள மட்டும் சட்டத்தினை கொண்டுவந்தபோது தமது மொழி உரிமைக்காக இதே காலிமுகத்திடலில் ஜுன் மாதம் 05ஆம் திகதி தமிழ் தலைமைகள் சத்தியாக்கிரக போராட்டம் செய்தார்கள். அப்போராட்டத்தின்போது சிங்கள காடையர்கள் ஏவிவிடப்பட்டு தமிழ் தலைமைகளின் மண்டைகள் உடைக்கப்பட்டதுடன் காதுகள் கடித்து துப்பப்பட்ட வரலாறுகள் எங்களுக்கு தெரியும்.

தமிழ் மக்கள் தற்போதுள்ள நிலையில் இந்த போராட்டத்தினை நாங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றோம் என்பதை சற்று சிந்திக்கவேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டபோது தமது உறவுகளை ஒப்படைத்த,காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1800 நாட்களையும் தாண்டி வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

சிங்கள இளைஞர்களின் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இன்று ஒரு சில தமிழ் தலைமைகள் அறைகூவல் விடுக்கின்றனர்.இவ்வாறு அறைகூவல் விடுக்கும் அந்த பிரதிநிதிகள் வடகிழக்கில் தமது உறவுகளை தேடி போராடும் போராட்டத்திற்கு இளைஞர் யுவதிகளை ஒருங்கிணைப்பதற்கு எந்தவித அக்கறையும் அற்றவர்களாகவேயிருந்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்ட சமூகம். யுத்ததினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினால் இன்று மின்சாரத்திற்கும்,எரிபொருளுக்கும்,பால்மாவுக்கும் போராடுகின்றார்களே தவிர இந்த பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை நிவர்த்திப்பதற்கான எந்த முயற்சியும் காட்டப்படவில்லை.

எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது : தாய்நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பலத்துடன் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்

நாட்டில் தற்போது ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எனவே இனிமேலும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

ஊழலால் சீரழிந்துள்ள தாய் நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பலத்துடன் செயற்பட வேண்டும். அது எம்மால் முடியும் என்றும் பேராயர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை இரவு கொழும்பு – கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது இதனைத் தெரிவித்த பேராயர் மேலும் குறிப்பிடுகையில் ,

மக்கள் கடும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். சுயநலத்திற்காக கோபமும் , விரோதமும் தலைதூக்குகியிருக்கிறது.

இலங்கைக்குள் இந்த நிலைமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இந்த நிலைமையை நாம் என்று மாற்றப் போகின்றோம்? நாம் என்று புதியதொரு தொடக்கத்திற்குச் செல்லப் போகின்றோம்? அது தொடர்பில் சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது.

ஊழல் நிறைந்த யுகம் தோற்றம் பெற்றுள்ளது. எம்மால் தொடர்ந்தும் எவர் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது.

நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைவரையும் ஊழல்வாதிகளாகவே காண்கின்றோம். அதிகாரத்தில் உள்ளவர்கள் மாத்திரமின்றி , அதிகாரம் அற்றவர்கள் கூட ஊழல்வாதிகளாகவுள்ளனர். 74 ஆண்டுகளுக்குள் எமது அழகிய தாய் நாடு சீரழிந்துள்ளது.

பொய்களைக் கூறி ஏமாற்றுதல், நேர்மையற்ற தன்மையின் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது.

அதனுடன் தொடர்புடைய விசாரணைகளுக்கும் இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றுதல் , பொய் மற்றும் ஊழல் என்பவற்றின் உச்சகட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்களை எதிர்கொண்ட விதமும் , அவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் முறைமையுமாகும்.

முழு நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. எம் நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாகியுள்ளனர். நாம் நேர்மையாக செயற்பட வேண்டும்.

வரலாற்றில் பல தவறுகளை இழைத்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பலமடைய வேண்டும். அதனை எம்மால் செய்ய முடியும் என்றார்.