இலங்கையில் பொருளாதார நெருக்கடி – மேலும் மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Posted in Uncategorized

சிங்களவர்களின் போராட்டமும் இலங்கை ஒற்றையாட்சி அரசும்

—–உண்மையில் மாற்றம் வேண்டுமென சிங்கள மக்கள் மனதார நினைத்தால் கோட்டாபயவை அல்ல, இலங்கை அரச கட்டமைப்பில் அரசியல் ரீதியான அதிகாரப் பங்கீட்டைச் செய்ய முன்வர வேண்டும். ரணில், சஜித் மற்றும் ஜே.வி.பி தலைவர்கள் தங்கள் மனட்சாட்சியைத் தொட்டு அரச கட்டமைப்பு மாற்றத்துக்கான நேர்மையான எண்ணக் கருவை வெளிப்படுத்த வேண்டும்—-

-அ.நிக்ஸன்-

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இரு பிரதான காரணங்கள் உண்டு. ஒன்று முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளில் வடக்குக் கிழக்கில் இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கல் மற்றும் முஸ்லிம்களின் பொருளாதாரக் கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள். இரண்டாவது பெருமளவு அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தி 1986 ஆம் ஆண்டில் இருந்து இரண்டாம் இடத்திற்குத் தள்ளியமை.

குறிப்பாக 1947 இல் இருந்து உருவாக்கப்பட்ட அரசியல். பொருளாதாரத் திட்டங்கள் இனவாத நோக்கில் அமைந்தமையே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்களப் பேராசிரியர் அசோக லியனகே கொழும்புரெலிகிராப் என்ற ஆங்கில செய்தித் தளத்தில் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி எழுதிய தனது கட்டுரையில் கூறுகின்றார்.

இலங்கைத்தீவின் மொத்தத்தேசிய உற்பத்தியில் மூன்று துறைகளில் மாத்திரமே கூடுதல் வருமானம் கிடைக்கின்றது. ஒன்று- தேயிலை ஏற்றுமதி, இரண்டாவது- தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி, மூன்றாவது- சுற்றுலாத்துறை. இந்த மூன்றிலும் 1986 வரை அதிகளவு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுத்தது தேயிலை ஏற்றுமதி.

1986 ஆம் ஆண்டு தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியை ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முதன்மைப்படுத்தும் உத்தியைக் கையாண்டதால், தேயிலை உற்பத்தி மற்றும் தேயிலை ஏற்றுமதி வருமானம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேமதாசா ஆட்சியில் 1992 ஆம் ஆண்டுதான் தேயிலைத் தோட்டங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் தேயிலை ஏற்றுமதியில் பெறப்படும் வருமானம் ஏற்ற இறக்கத்தில் அமைந்தது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2021 ஆண்டு அறிமுகப்படுத்திய ஓகானிக் கம் (Organic gum) அதாவது கரிம விவசாய முறையினால் (சேதனப் பசளை) தேயிலை உற்பத்தி, மற்றும் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் சரிவடைந்தது.

இதன் பின்புலத்திலேயே தேயிலை ஏற்றுமதி உலக அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சென்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குறுட்டு நியாயம் ஒன்றை வெளிப்படுத்தியிருந்தார்.

வேறு குடிபானங்களின் வருகையினால் தேயிலை நுகர்வு உலக அளவில் குறைவடைந்துள்ளது என்ற கற்பிதங்கள் உண்டு. ஆனாலும் 1986 ஆம் ஆண்டில் இருந்து தேயிலை உற்பத்தியை காலத்துக்குக் காலம் நவீனமயப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வர்த்தக உத்திகள் இலங்கையினால் உரிய முறையில் வகுக்கப்பட்டவில்லை.

மாறாக தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்தியமையே இலங்கையின் பொருளாதாரச் சரிவுக்குப் பிரதான காரணம் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்கத் தயாரில்லை.

அதாவது தேயிலை நுகர்வு குறைவடைந்து விட்டது என்று காரணத்தைக் கண்டு பிடித்துத் தேயிலை ஏற்றுமதிக்கு இனரீதியாக இழைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைப்பதிலேயே மாறி மாறி பதவிக்கு வரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் கவனம் செலுத்தியிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகூட ஆறு ஆண்டுகால போராட்டத்தின் பின்னரே கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெறப்பட்டது. அதுவும் சம்பள உயர்வு வழங்கப்படக்கூடாதென்று 180 இற்கும் அதிகமான மனுக்கள் கிடைத்ததாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அப்போது தெரிவித்திருந்தார். (அவை அனைத்தும் இனரீதியான அனாமதேயக் கடிதங்கள்)

ஆண்டுக்கு 1.3 பில்லியன் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் சுமார் இரண்டு இலட்சம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் முறை பற்றிக் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் ரோமாயா ஒபோகாடா கவலை வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேயிலை றப்பர் தோட்டங்களுக்கு நேரில் சென்று அவர் பார்வையிட்டிருந்தார்.

 

இலங்கைக்கு டொலர்களை அதாவது அதிகளவு அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் தேயிலை உற்பத்தியின் இன்றைய நிலை குறித்து ரோமாயா ஒபோகாடா கவலை வெளியிட்டிருந்தார்.

அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தேயிலை ஏற்றுமதியில் ராஜபக்ச அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தாமை அல்லது உரிய திட்டங்கள் செய்யப்படாமை குறித்த பல முறைப்பாடுகளையும் ரோமாயா ஒபோகாடா பெற்றிருந்தார்.

அதன்போதுதான் அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதிக்கான மூலப் பொருட்களையும் முடிவுப் பொருட்களையும் இறக்குமதி செய்ய ஆண்டுக்கு 280 மில்லியன் வரை செலவிடப்படுவதாக வரவு செலவுத் திட்ட அறிக்கை காண்பிக்கின்றது. அது மாத்திரமல்ல தைத்த ஆடைகள் உற்பத்திக்கான மூலப் பொருட்களைக் கொள்வனவு செய்ய சீனாவிடம் இருந்து 150 கோடி டொலர் கடனாகப் பெறப்படவுள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோகண்ண நேற்றுச் செய்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

ஆனால் தேயிலை உற்பத்திக்கு வளமாக்கிகள், மூலப் பொருட்கள் கிடைக்கின்றன. பிற செலவுகள், தோட்டத் தொழிலாளர் சம்பளங்களைத்தவிர வேறு செலவுகள் எதுவுமேயின்றி மொத்த வருமானத்தையும் ஈட்டிக் கொடுப்பது தேயிலை ஏற்றுமதிதான்.

ஆகவே தேயிலை உற்பத்தியை நவீன மயப்படுத்தி மேம்படுத்தாமல் செலவுகளை ஏற்படுத்தி வருமானத்தை ஈட்டும் தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதித் தொழிலையே 1986 இல் இருந்து, (கூடுதலாகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக) அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.

இன்று இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 33 சதவீதம் தைக்கப்பட்ட ஆடை உற்பத்தி மூலமே பெறப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு ஆண்டு அறிக்கை காண்பிக்கின்றது.

தேயிலை ஏற்றுமதி குறைவடைந்தமைக்கான காரணங்களும் அந்த ஆண்டு அறிக்கையில் சொல்லாமல் சொல்லப்படுகின்றது. அதாவது அறிக்கையைத் தயாரித்த அதிகாரியின் மனட்சாட்சி கொஞ்சமாவது உறுத்தியிருக்கிறது.

ஆகவே தைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கான உற்பத்திக்குரிய மூலப் பொருள், முடிவுப்பொருள் போன்றவற்றை இறக்குமதி செய்ய செலவிடப்படும் மில்லியன் கணக்கான நிதியைப் பயன்படுத்தி உள்ளூரிலேயே மற்றுமொரு ஏற்றுமதித் துறையை ஊக்குவிக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கை பரிந்துரைக்கும் தொனியும் அவ்வாறுதான் தொட்டுச் செல்கின்றது.

சுற்றுலாத்துறை வருமானம் 2009 இறுதிப் போரின் பின்னரான காலத்தில் அதிகரித்திருந்தாலும் கொவிட்-19 அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகளினால் அந்த வருமானமும் இல்லாமல் போய்விட்டது. சுற்றுலாத் துறை வருமானங்கள் ஒருபோதும் சம அளவில் போதியதாக இல்லையென கடந்த ஆண்டு டிசம்பர் மாத வரவு செலவுத் திட்ட அறிக்கையின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

அதேவேளை, இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் 2017- 2020 ஆம் ஆண்டுக்களுக்கான பொருளாதார முயற்சி 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி வடமத்திய மாகாணம் உள்ளிட்ட வேறு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டன.

வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட எட்டு சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்காக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் சர்வதேசக் கண்காட்சி நடத்தப்பட்டது.

இருந்தாலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க மேற்கொண்ட இம் முயற்சிகள் பெரிய வளர்ச்சிக்கு வழி வகுக்கவில்லை என்ற கருத்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் 2018 ஆம் ஆண்டு அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள், வரைபடங்களை அவதானிக்கும்போது தெரிகின்றது. இன அடிப்படையிலான பாகுபாடுகளும் வெளிப்படுகின்றன.

இவை இலங்கைப் பொருளாதாரக் கட்டமைப்பின் தொடர்ச்சியான பலவீனங்கள், தோல்விகளை எடுத்துக் காட்டும் சில உதாரணங்கள் மாத்திரமே.

புலம்பெயர் தமிழர்கள் உட்பட வெளிநாடுகளில் இருந்து வரும் டொலர்களுக்கான பெறுமதியை அரசாங்கம் இறுக்கிப் பிடித்ததாலேயே 2021/22 ஆம் ஆண்டுகளில் டொலர்கள் இலங்கை வங்கிகளில் இல்லாமல் போனதாக தனியார் வங்கி அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

ஏறத்தாழ ஏழு பில்லியன் டொலர் பணம் புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது என்றும் ஆனாலும் அரசாங்கத்தின் இன ரீதியான இறுக்கமான டொலர் கட்டுப்பாட்டுக் கொள்கையினால் தனியார் நிறுவனங்களில் அதிக விலைக்கு மக்கள் டெலர்களை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதுவும் அரசாங்கம் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்குக் காரணம் என்றும் சில பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிதியைக் கையாளக்கூடிய சரியான இடங்களில் உரிய நிபுணர்கள் பதவிக்கு அமர்த்தப்படவில்லை என்றும் மேற்கோள் காண்பிக்கின்றனர்.

ஆகவே 1947 இல் இருந்து இனரீதியான பொருளாதாரக் கட்டமைப்புகளை உருவாக்கியதன் பின்னணியிலும், 2009 இற்குப் பின்னரான இன ரீதியான பொருளாதார அணுகுமுறையுமே ஏற்றுமதித் துறை சரிவடைந்தமைக்குப் பிரதான காரணம் என்பது கண்கூடு.

பொருளாதார நெருக்கடி இன்று பூதமாகக் கிளம்பியதற்கு இதுதான் உண்மைக் காரணியும்கூட.

ஆகவே கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்ல 1947 இல் இருந்து ஆட்சியமைத்த அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களும் பொருளாதார நெருக்கடிக்கும் விலைவாசி உயர்வுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பி ரணில், சஜித் அல்லது வேறொரு சிங்களத் தலைவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழ்- முஸ்லிம் மக்களின் நிலைமைகளில் மாற்றம் ஏற்படாது. ஆகவே சிங்களம் அல்லாத ஏனைய சமூகங்களை ஓரமாக்கிச் செயற்படுத்தும் அரச கட்டமைப்பு (Unitary state constitution) மாற்றப்பட வேண்டும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் தமிழ் முஸ்லிம்கள் எவரும் உறுப்பினர்களாகவும் இல்லை. ஆலோசனைச் சபையிலும் இல்லை.

குறிப்பிட்டுச் சொல்வதானால் இனரீதியாகக் கையாள்வதெற்கென சிங்கள ஆட்சியாளர்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள சிங்கள உயர் அதிகாரிகளைக் கொண்ட அரச இயந்திரம் நீக்கம் செய்யப்பட்டு சிங்கள, தமிழ். முஸ்லிம்கள் உள்ளடக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

 

ஆனால் சிங்களப் புத்திஜீவிகளும் சிங்கள முற்போக்காளர்கள், சிங்கள இடதுசாரிகள் பலரும் இதனை ஏற்கத் தயாராக இல்லை. இனவாதத்தை மூலதனமாக்கி அரசியலில் ஈடுபடும் சிங்கள அரசியல்வாதிகளை விடவும் சிங்கள புத்திஜீவிகள் மிகவும் மோசமான மகாவம்ச மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் அறிய முடிகின்றது. சிங்கள சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பதிவுகள் அதனைப் புடம் போட்டுக் காண்பிக்கின்றன.

வடக்குக் கிழக்கில் 2009 இன் பின்னரும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு வேலைகள் ஒற்றையாட்சி அரச இயந்திரத்தினால் எப்படி செயற்படுத்தப்படுகின்றதோ, அதேபோன்று மலையகத் தமிழ் பிரதேசங்களிலும் கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களிலும் திட்டமிட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.

தென்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தகங்கள் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு சிங்கள மயப்படுத்தப்படுகின்றன. 2009 இறுதிப் போருக்குப் பின்னரான முஸ்லிம்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு அரங்கேறியது.

கொழும்பில் மலையகத் தமிழர்கள். ஈழத்தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பல வர்த்தக நிறுவனங்கள் சிங்கள முதலாளிகளினால் கொள்வனவு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பில் மலையகத் தமிழர்கள், முஸ்லிம்களின் வார்த்தக நடவடிக்கைகள் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஆகவே கோட்டாபயவை மாத்திரம் மாற்றினால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் என்பதல்ல, மாறாக ஈழத்தமிழர்களுடைய அரசியல் விடுதலை, மலையகத் தமிழர்களின் இருப்பு மற்றும் அரசியல் உரிமைகள், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் போன்றவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அதுவும் மாறி, மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள அரசியல் தலைவர்கள் இனவாத நோக்கில் செயற்பட முடியாத வகையில் இந்த சிங்கள அரச இயந்திரத்தில் மாற்றத்தைக் கோர வேண்டும்.

உண்மையில் மாற்றம் வேண்டுமென சிங்கள மக்கள் மனதார நினைத்தால் கோட்டாபயவை அல்ல, இலங்கை அரச கட்டமைப்பில் அரசியல் ரீதியான அதிகாரப் பங்கீட்டைச் செய்ய முன்வர வேண்டும்.

அதாவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முறையை மாற்றச் சிங்கள மக்கள் தயாராக வேண்டும். சிங்கள அரசியல் தலைவர்கள் தங்கள் மனட்சாட்சியைத் தொட்டு அரச கட்டமைப்பு மாற்றத்துக்கான நேர்மையான எண்ணக் கருவை வெளிப்படுத்தும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

இவ்வளவு பொருளாதார நெருக்கடிகளுக்குப் பின்னரும் சிங்கள பௌத்த தேசியவாதத்தை ராஜபக்ச குடும்பத்தில் இருந்து பிரித்தெடுத்து யாருடைய கையில் ஒப்படைப்பது என்பது பற்றியே பௌத்த தேரர்களும், சிங்கள சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் சிந்திக்கிறார்கள்.

இந்தப் பின்புலத்தில் கோட்டாபயவின் அதிகாரத் துஸ்பிரயோகம், ஊழல் மோசடிகள் மாத்திரமே இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சிங்கள முற்போக்குவாதிகள் எனப்படும் மிதவாதச் சிங்களவர்கள் பலரினாலும் முன்வைக்கப்படும் கற்பிதங்கள் தவறனானவை.

அதேநேரம் கோட்டாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை முற்று முழுதாகப் புறக்கணிக்கவும் முடியாது. ஆனால் இந்தப் போராட்டத்தின் மூலமே சிங்கள இனவாத நோக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல், பொருளாதாரக் கட்டமைப்புகளைச் சுட்டிக்காட்டி, அடிப்படையில் இருந்து மாற்றங்களைச் செய்யக்கூடிய அளவுக்கு குரல்கள் எழ வேண்டும்.

மாறாக கோட்டா வீட்டுக்குபோ என்ற வெறும் கோசத்தின் அடிப்படையிலான போராட்டத்தில் மலையகத் தமிழ்- முஸ்லிம் இளைஞர், யுவதிகள் பங்குபற்றுவது சிங்களத் தேசியவாதத்தைப் பாதுகாக்க முற்படும் சிங்கள முற்போக்குவாதிகள், சிங்கள இடதுசாரிகளுக்கு செய்யும் உதவியாகவே மாறிவிடும்.

இதே கருத்தை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உறுதிப்பட வலியுறுத்துகிறார்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருப்பதால் மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் அமைச்சுப் பதிவிகளில் இல்லை. ஏனெனில் 69 இலட்சம் பௌத்த சிங்கள வாக்குகளில் தெரிவு செய்யப்பட்டே பதவிக்கு வந்ததாக ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவர் கூறுகின்றார்.

அத்துடன் வடக்குக் கிழக்குத் தமிழர்களோ, மலையகத் தமிழர்களோ ஏன் முஸ்லிம்களோ ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு வாக்களிக்கவுமில்லை.

ஆகவே 69 இலட்சம் சிங்கள மக்களுமே கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்ப வீதிக்கு இறங்க வேண்டும்.

அப்படி சிங்கள அரச இயந்திரத்தை மாற்றுவதே சிங்கள மக்களின் எண்ணக்கருவாக இருக்குமானால், இப் போராட்டத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பங்குகொள்ள வேண்டுமெனப் பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும். அவ்வாறு அழைப்பு விடுக்கப்படுமானால் அதில் நூறுவீத நியாயம் இருக்கும்.

ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாற்றுவோமென உறுதியளிப்பது ஏற்புடையதல்ல.

ஆனால் 1986 இல் இருந்து தேயிலை ஏற்றுமதி வருமானத்தை கீழ் இறக்கும் இனவாதத் திட்டமும், முப்பது வருட போரும் அதன் பின்னர் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள மற்றும் இராணுவ மயமாக்கலும் 2009 இன் பின்னரான முஸ்லீம்களின் வர்த்தகச் செயற்பாட்டைத் திட்டமிட்டு அழித்தமையுமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்பதை சிங்கள புத்திஜீவிகள் பலரும் சிங்கள அரசியல் கட்சிகளும் இன்றுவரை ஏற்கத் தாயராக இல்லை.

ஆகவே கோட்டாபயவைத் தள்ளிவிட்டு ஆட்சியமைக்கலாம் என்று கருதுகின்ற சிங்களக் கட்சிகள் அதன் மூலம் அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கும் சில மலையக, முஸ்லிம் கட்சிகளின் சுய லாபங்களுக்கு இடமளிக்கும் கருவியாக மலையகத் தமிழ் இளைஞர்களும் முஸ்லிம் இளைஞர்களும் மாறிவிடக்கூடாது.

கோட்டாபய பதவி இறங்கினால் என்ன நடக்கும்? இன்னொரு கட்சி ஆட்சி அமைக்கும் அந்த அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தைத் தவிர ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த பலரும் புதிய அரசாங்கத்திலும் அமைச்சராகப் பதவி வகிப்பர்.

மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சர் பிரதியமைச்சர் பதிவிகள் கிடைக்கும். இதுதான் புதிய மாற்றம் என்றால், இந்தப் பேராட்டம் யாருக்கானது?

இலங்கையின் தளம்பல் நிலைமையை அமெரிக்க- இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் நோக்கில் தமக்குச் சாதகமாக வெவ்வேறு கோணங்களில் பயன்படுத்தும் என்பது வெளிப்படை. ஆகவே சிந்திக்க வேண்டியது தமிழ். முஸ்லிம் மக்களே.

இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க தீர்மானம்

இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒரு வார காலத்துக்கு நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் பிரசாரத்தை முன்னெடுக்க ‘தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பு’ தீர்மானித்துள்ளது.அதன்படி இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கி அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தால் பிரசாரம் மற்றும் நாடு தழுவிய தேசிய கறுப்பு எதிர்ப்பு பேரணிகள் இன்று முதல் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் குறித்த தேசிய எதிர்ப்பு தின போராட்டம் காரணமாக பல்வேறு துறைகள் முடங்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் இலங்கை முழுவதும் முடங்கலாம் எனவும் சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று ஆரம்பமாகவுள்ள ஹர்த்தாலைத் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அரச, அரச, தனியார் துறை என அனைத்துத் துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இன்றைய நாளை தேசிய எதிர்ப்பு நாளாகக் கருதுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த அவர், அரசாங்கம் பொது வாக்கெடுப்பை மதித்து முடிவெடுக்கும் வரை தனது தொழிற்சங்கக் கூட்டணி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என மேலும் தெரிவித்தார்

Posted in Uncategorized

பதவி விலகுவதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளதாக அறிவிப்பு!

பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி பதவி விலகுவார் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்படி சபாநாயகர் இடமளித்தால் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஏகமனதாக அந்த கோரிக்கையை விடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இலங்கைக்கான ஐ.நா வதிவிட பிரதிநிதி வௌியிட்டுள்ள அறிக்கை

றம்புக்கணை சம்பவம் தொடர்பில் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதுகாக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை றம்புக்கணை பொலிஸ் பிரிவிற்குட்ட பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

றம்புக்கணை பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்.

இவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மிஹிரி பிரியங்கனி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த இருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு, 12 பேர் காயம்

இரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இரம்புக்கனை நகரில் ரயில் மார்க்கத்தை மறித்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு இன்று மாலை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

முன்னதாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டிருந்த போதும், மக்கள் எரிபொருள் பௌசருக்கு தீ வைத்து, முச்சக்கரவண்டியை சேதப்படுத்தியதால் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டகாரர்களால் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.

துப்பாக்கி பிரயோகத்தின் போது சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பொதுமக்களும் பொலிஸ் அதிகாரிகள் சிலரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரம்புக்கனை நகருக்குள் செல்வதற்கான அனைத்து வீதிகளையும் மறித்து இன்று காலை முதல் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரம்புக்கனை – மாவனெல்ல வீதி, ரம்புக்கனை – கேகாலை வீதி, இரம்புக்கனை – குருநாகல் வீதி என அனைத்து பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் தோப்பு பாலம் அருகில் வீதியை மறித்து மக்கள் இன்று மாலை 3 மணியிலிருந்து மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

பதுளை – எட்டம்பிட்டிய நகரிலும், பதுளை – நுவரெலியா பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதுளை – எல்ல பள்ளக்கேட்டுவ நகரில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, மஸ்கெலியா நகரிலிருந்து வௌி இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களின் சாரதிகளும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், நோட்டன், கினிகத்தேன, ஹட்டன், சாமிமலை, நல்லதண்ணி ஆகிய பகுதிகளுக்கு மஸ்கெலியா நகரிலிருந்து பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை என செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதனிடையே மாத்தளை நகரிலும் தனியார் பஸ் ஊழியர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இயங்கும் அனைத்து தூர இடங்களுக்கான பஸ்களும் இன்று சேவையிலிருந்து விலகியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

A9 வீதியில் கட்டுகஸ்தோட்டை பகுதியை மறித்து தனியார் பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஹட்டன் நகரிலும் இன்று எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியையும் மக்கள் மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவிசாவளை – கொழும்பு பிரதான வீதியூடான வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, அநுராதபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டி – மஹியங்களை பிரதான வீதி தெல்தெனிய நகரில் மறிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். அதிகளவிலான மக்கள் கூடி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள சுற்றுவட்டம் அருகே பஸ்கள் நிறுத்தப்பட்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நகரிலும் வீதி மறிக்கப்பட்டு மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் விலையேற்றம், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளமையால், மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்,

கொழும்பு – பதுளை பிரதான வீதி – ஹப்புத்தளை நகரில் மறிக்கப்பட்டு இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பண்டாரவளை நகரிலும் பஸ் சாரதிகள் இன்று முற்பகல் முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

பேருவளையில் ஆரம்பித்த பேரணி கொழும்பை வந்தடைந்தது

மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் 3 நாட்களாக முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தது.

லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு தேசிய மக்கள் சக்தியின் தவைர் அனுரகுமார திசாநாயக்க தலைமை தாங்கினார்.

கடந்த 17 ஆம் திகதி பேருவளையில் ஆரம்பித்த இந்த பேரணி மொரட்டுவை, காலி வீதியூடாக வௌ்ளவத்தை, பாமன்கடை , ஹெவ்லொக் பகுதிகளின் ஊடாக இன்று கொழும்பை வந்தடைந்தது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை , அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறுபட்ட தொழிற்சங்கங்கள் , இளைஞர் அணிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெருமளவில் எதிர்ப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

கோட்டாபய ராஜபக்சே அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கு எதிரப்பு தெரிவித்து வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டா அரசை பதவி விலக வலியுறுத்தும் போராட்டம் காலி முகத்திடலில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டடுள்ளன. இதையடுத்து பெற்றோல் (ஒக்டேன் 92 ரகம்) 338 ரூபா, பெற்றோல் (ஒக்டேன் 95 ரகம்) 374 ரூபா, ஓட்டோ டீசல் 289 ரூபா, சுப்பர் டீசல் 329 ரூபா என அதிககரிக்கப்டப்டுள்ளது.

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

ஏற்கனவே அதிகரித்த எரிபொருள் விலை காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடியை மக்கள் சந்தித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கோட்டா அரசுக்கு எதிராக பற்றி எரியும் போராட்டம் – வீதிகளை மறித்து போராட்டம்

பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனைங்களை வீதிகளுக்கு குறுக்காக நிறுத்தியும், வாகன ரயர்களை போட்டு எரித்தும், தடைகளை ஏற்படுத்தியும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திடீரென ஒரே நாளில் நாடு தழுவியதாக மக்கள் வீதிகளை மறித்து மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானம்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்துவதற்கு மூடிஸ்(Moody’s) நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, இலங்கை Caa2 மட்டத்திலிருந்து Ca தரத்திற்கு தாழ்த்தப்பட்டுள்ளது.

வௌிநாட்டு கடனை மீளச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு Moody’s நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Posted in Uncategorized