தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக விடுக்கும் ஊடக அறிக்கை

இலங்கைத் தீவு தனது வரலாற்றில் சந்தித்திராத பாரிய பொருளாதாரப் பிரச்சினையால் மக்களின் அன்றாட வாழ்வே ஸ்தம்பிதம் அடைந்து விடக் கூடிய ஆபத்தான நிலைமை காரணமாக மிகத் தீவிரமானதோர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சாதாரணப் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் தாமாகவே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும், சுகாதாரத்துறையினர் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் உள்ளடங்கலாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்த அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு உடனடியான தீர்வு கோரிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையை ஜனாதிபதியும் அரசாங்கமும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் பொறுப்புணர்வோடு உரிய முறையில் கையாண்டு, அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காவிடில் முழு நாடும் சீர்குலைந்து அராஜகம் தலைவிரித்து ஆடக் கூடிய மாபெரும் ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கின்றது.

தீ பரவுவதற்கு முன்னர் அதனைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக அணைப்பதற்கான நடவடிக்கைகளே இப்பொழுது உடனடியான தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.

இந்த நெருக்கடி நிலைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையான காரணம் தனி ஒரு மனிதரின் கையில் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையே என்பதில் பரந்துபட்டதும் தீவிரமானதுமான கருத்தோட்டம் எழுந்துள்ளது.

இன்று கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் தேவைப்படுவதெல்லாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி, அதற்கு பதிலாக பாராளுமன்ற ஆட்சி முறைக்கு நாடு திரும்பிச் செல்வதே ஆகும்.

எனவேதான், இந்த முடிவு இலங்கையின் தேசிய மட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப் படுவதற்கு ஏதுவாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும் ஏகோபித்து உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என பகிரங்கமாக நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இன்றைய நிலையில் பொறுப்புணர்வு மிக்கவர்களாக சகல அரசியல் தரப்புக்களும் செயற்பட்டு, இந்த முடிவுக்கு வந்து, அதனை நடைமுறைப் படுத்திட உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுப்பதே நாடு எதிர்நோக்கி நிற்கும் மிகப்பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு, சரியான திசையில் எடுத்து வைக்கப்படும் முதலாவது அடியாக இருக்கும் என்பதையும் அழுத்திக் கூற விரும்புகின்றோம்.

மாவை சேனாதிராஜா தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(த.தே.கூ)
நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் – பா. உ. தலைவர் – தமிழ் மக்கள் கூட்டணி
(த. ம. தே.கூ)
அ.அடைக்கலநாதன்- பா.உ தலைவர்- தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(த.தே.கூ)
தர்மலிங்கம் சித்தர்த்தன் – பா.உ தலைவர்- ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி (த.தே.கூ)
க.பிரேமச்சந்திரன் தலைவர்- ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி ( த.ம.தே.கூ)
ந. சிறீகாந்தா தலைவர்- தமிழ் தேசியக் கட்சி (த.ம.தே.கூ)

ஜனாதிபதி செயலகம் முற்றுகை ! பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு அமைதிவழிப் போராட்டம் ! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம் !

கொழும்பு – காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.

பல்வேறு தொழிற்சங்கத்தினரும் இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின.

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலக பகுதியை முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் ஒட்டுமொத்த உலகிற்கும் கேட்கக்கூடிய அளவிற்கு மிகவும் வலுவானதாக இருக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு மற்றும் பால்மா போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதனால் அன்றாடம் இவ்வாறான பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பெறுமை இழந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.

Posted in Uncategorized

சதித்திட்டம் தீட்டி ஆட்சியை கைப்பற்ற முடியும், பாதுகாக்க முடியாது: கொழும்பு பேராயர் தெரிவிப்பு

சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு ஆட்சியை பாதுகாக்க முடியாமற்போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு – கிரீன்ஸ் விதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் இணைந்து கொண்டிருந்தார்.

அருட்தந்தையர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது,

இலங்கையில், மிகவும் மோசமான முறையில் இடம்பெற்ற தாக்குதலை எம்மால் மறக்க முடியாது. இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது, தாக்குதல் சம்பவத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டது. இந்த பேரழிவிற்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது. சதித்திட்டம் தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது தௌிவாகின்றது. அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆட்சியை கைப்பற்றினால் மாத்திரம் போதுமானதல்ல, அரசாங்கத்தை சரியாக நிர்வகித்து அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளில் அநேகமானவற்றை நடைமுறைப்படுத்தாது, முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி , தாக்குதலின் பின்னால் இருந்த அனைத்து சக்திகளையும் மறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கிடைத்த சாபமே தற்போதைய நிலைமையாகும். சட்டமா அதிபர் இந்த திட்டங்களுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் இந்நாட்டில் சட்டத்தை, நியாயத்தை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

என பேராயர் தெரிவித்தார்.

கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி பேரணி நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானது.

குறித்த பேரணி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை முன்னெடுக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

எதிர்க்கட்சித் தலைவருக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு – நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்!

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.

10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரன் அலஸ் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டில் நிலவும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடனடி அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சமகி ஜன பலவேகய கட்சி கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் வகையில் அனைவரும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர்.

இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிடவுள்ள கூட்டறிக்கையில் மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது ஐஎம்எவ்

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து , ஐக்கிய இராச்சியம் என்பவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒன்று கூடும் சுதந்திரமும் , கருத்து சுதந்திரமும் அமைதியாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் , அவை எந்தவொரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும்.

எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மையான முன்னெடுப்பாகக் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாய வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன், உரிய அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத்தன்மையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த பீரிஸ்!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் நிலவும் நிலைமை குறித்து இதன்போது அமைச்சர், இராஜதந்திரிகளுக்கு விளக்கியுள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில்   இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் பீரிஸ், மக்களின் கஷ்டங்களையும் அதன் அளவையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக புரிந்துக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன்படி கூடிய விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய பதவி விலக வாய்ப்பு உள்ளதா? முன்னாள் தேர்தல் ஆணையாளர் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பினால் தனது பதவியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

1953 ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பின்னர் 69 வருடங்களில் தென்பகுதியில் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அழுத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவி விலகினால் செயற்படுவதற்கு ஏதுவாக ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தினால் ஒருவர் நியமிக்கப்படும் வரை பிரதமரே ஜனாதிபதியாக செயற்பட முடியும்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்து- தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? என்பது குறித்தும் சிக்கல் உள்ளது.

மீண்டும் அவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்றால் சபாநாயகருக்கு ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதிகாரம் உள்ளது என்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும்- மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறித்த பிரேரணை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized