‘இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அனுப்ப தமிழக அரசு தயார்’ – தமிழக முதல்வர் மத்திய அரசிடம் தெரிவிப்பு

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்.7) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்போது நிலவும் தீவிரப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, வேதனையில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொண்டார்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலையகத் தமிழர்களின் நலன் கருதி, தமிழக அரசு அத்தியாவசிப் பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை உணவின்றித் தவிக்கும் தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் வினியோகிக்க உரிய அனுமதியையும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக இந்தியப் பிரதமரை கடந்த 31-3-2022 அன்று சந்தித்து, தான் முன்வைத்த கோரிக்கைகளை நினைவுகூர்ந்த முதல்வர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்றும் அப்போது கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தெரிவித்துக் கொண்ட முதல்வர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்வர் தெரிவித்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும் நுவரலியா வழியாகவும் ஹட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.

அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்தனர்.

தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. அவர் அங்கு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை நிலைவரங்கள் குறித்து நியூசிலாந்து உன்னிப்பாக அவதானம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதனால் இலங்கை எதிர்பாராத கொத்தளிப்பான ஒரு காலக்கட்டத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது என்று நியூசிலாந்து பிரமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்தார்.

இலங்கை தலைவர்களின் நடவடிக்கைககளை கண்டிக்குமாறு கோரி நியூசிலாந்திலுள்ள இலங்கையர்கள் மகஜர் ஒன்றில் கையெழுத்திட்டுவருகின்றார்கள்.

இந்நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் தற்போதைய நிலைமைகளை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய தாம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கை தலைவர்களை தாங்கள் கண்டிங்கின்றீர்களா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ஜெசிந்தா சில நிமிடம் தாமதித்தார். பின்னர் இலங்கை மக்களின் அதிகரிக்கும் விரக்தியை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அவர் அரசியல் ரீதியாக இது மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டம் என தெரிவித்ததார்.

இதேவேளை, நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுதா கூறுகையில், பேச்சு சுதந்திரம், அமைதியான போராட்டம் போன்ற ஜனநாயக விழுமியங்களை நியூசிலாந்து அரசு மிகவும் உறுதியாக கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை நியூசிலாந்து மிகுவும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், சகல அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இலங்கையில் நிலையான தீர்வுக்கு பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை , அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இலங்கை மக்களுக்க ஆதரவாக புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இது உலகளாவிய ரீதியில் கவனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆதரவை விலக்குமாறு முஸ்லிம் எம்.பி.க்களுக்கு மக்கள் அழுத்தம் – வீடுகளுக்கு முன்பாக போராட்டத்திற்கும் அழைப்பு

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சமூ­கத்தின் பல்­வேறு தரப்­பி­னரும் அழுத்­தங்­களை வழங்கி வரு­கின்­றனர்.
20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் எம்.பி.க்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், நஸீர் அகமட், எம்.எஸ். தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எம்.பி.க்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகி­யோ­ரையே இவ்­வாறு தமது ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு வேண்­டு­கோள் வி­டுக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­போன்று வரவு செலவுத் திட்­டத்தைத் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை வழங்கி வந்த அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்ரப் முது­நபீன், தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­ட­வுள்­ள­தாக நேற்று முன்­தினம் அறி­வித்­துள்ளார். அத்­தோடு, விமல் தலை­மை­யி­லான அரசின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் கூட்­ட­ணி­யோடு கைகோர்த்­துள்ள தேசிய காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அதா­வுல்­லாஹ்வும் நடு­நிலை வகிப்­ப­தாக அறிவித்துள்ளார்.

இத­னி­டையே பொது ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, காதர் மஸ்தான் மற்றும் மர்ஜான் பளீல் ஆகி­யோ­ரையும் அர­சாங்­கத்­திற்­கான ஆத­ரவை விலக்கிக் கொள்­ளு­மாறு மக்கள் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளனர்.

குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக ஆங்­காக்கே ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. பேரு­வ­ளையில் மர்ஜான் பளீ­லுக்கு எதி­ரா­கவும் கல்­மு­னையில் ஹரீ­சுக்கு எதி­ரா­கவும் ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது மக்கள் கோஷங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இதே­வேளை குறித்த எம்.பி.க்களுக்கு எதி­ராக அப் பகுதி மக்­களை போராட்­டத்தில் ஈடு­ப­டு­மாறு பலரும் சமூக வலைத்­த­ளங்­களில் கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ளனர். அத்துடன் இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு எதிர்காலத்தில் ஆதரவு வழங்கக் கூடாது என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன

பெரும்பான்மையை தக்கவைக்க பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு?

நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிஷாட் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக இன்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145, ஈபிடிபி – 02, தேசிய காங்கிரஸ் – 01, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01, எமது மக்கள் சக்தி – 01, ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01, முஸ்லிம் காங்கிரஸ் – 04, மக்கள் காங்கிரஸ் – 02, அலிசப்ரி (புத்தளம்) – 01, அரவிந்தகுமார் – 01, டயானா – 01 என அரசாங்கத்திற்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக இன்று 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

எனவே 159 – 40 = 119, விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். 119 – 01 = 118, இதில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் இன்று அறிவித்தார்.

இதன்காரணமாக 118 – 01 = 117, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. அரசுக்கு ஆதரவு வழங்கக்ககூடாதென கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் 117 – 04 = 113, அரவிந்தகுமார், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுத்தால் 113 -03 = 110 அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

அரசு கூறுவதுபோல இவர்களின் ஆதரவு தொடர்ந்தால் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

அதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை:ஆட்சி மாற்ற போராட்டங்களில் தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த முயற்சி

எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விளைகின்றார்கள் #P2P பேரெழுச்சி இயக்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் #P2P இயக்கம் இன்று வெளியிட்டுள்ள (05.04) ஊடக அறிக்கையில்,

“சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்கள தேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அறுபத்தி ஒன்பது லட்சம் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய சிங்கள ஜனாதிபதியை இன்று அதே மக்கள் வீட்டுக்கு போ என வீதியில் இறங்கி கோஷமிடுகின்றார்கள்.

தமிழராகிய நாமும் சிங்கள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசமும் இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணமாக எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு இனவழிப்பு யுத்தத்திற்காக உலக நாடுகள் எங்கும் வாங்கிக்குவித்த கடனே ஆகும். இக்கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் நாம் அந்த யுத்தத்தின் கடன் பளுவையும் சுமந்து நிற்கின்றோம்.

தமிழருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்திய அரசின் அனுசரணையுடன் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய் தமிழகமும், தமிழக அரசும் முன்னெடுத்துள்ள பொருளாதார உதவித் திட்டத்தை அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வுதவிகளை உங்களையும் எம்மையும் பிரிக்கும் கடலை தாண்டி நேரடியாகவே எமது மண்ணில் இந்திய நடுவண் அரசின் உதவியுடன் கொண்டுவந்து சேர்ப்பதுடன் தமிழ் மக்களின் கைகளிலேயே நேரடியாக கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறும் வேண்டுகின்றோம்.

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை. எமது பட்டறிவில், ஆட்சிக்கட்டில் ஏறும் எந்த சிங்கள அரசுமே எமது உரிமைகளை பறிப்பதிலும், எமது நிலங்களை அபகரிப்பதிலும், எமது வளங்களை சுரண்டுவதிலும், தமிழரின் குடிசன பரம்பலை மாற்றியமைப்பதிலும் பின் நிற்கப்போவதில்லை.

நாம் பொருளாதார மீட்சிக்காக போராடவில்லை. மாறாக எமது பிறப்புரிமைக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம். இழந்த எமது இறைமையை மீட்கவே போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் 20 வருடங்களுக்கு மேல் மின்சாரமின்றி, எரிபொருட்கள் இன்றி, அடிப்படையான அத்தியாவசியமான மருந்துகள் உட்பட்ட பொருட்கள் கூட இன்றி மிகக்கடுமையான பொருளாதார தடைகள் மத்தியிலும் சுதந்திர மனிதர்களாக, தன்னிறைவான தற்சார்பு பொருளாதாரத்துடன், சிறப்பான தலைமையை கொண்ட நடைமுறை அரசிலேயே வாழ்ந்து வந்தோம்.

இப்பொருளாதார நெருக்கடி எமக்கு ஒன்றும் புதியல்ல. ஆயின் தற்போது ஏற்படுள்ள நிலைமைகளை பயன்படுத்தி எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விழைகின்றார்கள். இது தொடர்பாக அனைத்துத் தமிழ் மக்களும் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டுகின்றோம். அவர்களை சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்.
இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கான மூல காரணங்களை ஆராயாது, சிங்கள தேசம் ஆட்சியாளர்களை மாற்றுவதன் மூலம் தீர்க்க விளைகின்றது. அதை விடுத்து, சிங்கள தேசம் தமிழ் மக்களின் நியாயமான உரிமை போராட்டத்தினை ஏற்றுக்கொள்வதுடன், எம்மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி பொறிமுறையினூடாக நீதி பெற வழிசமைப்பதுடன், இறைமையுள்ள வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதனூடாகவே மீட்சி அடைய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் – மனோ கணேசன்

அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், எமது இன மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகளையும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது முக நூல் பதிவில்,

‘தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி, அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே நாமும் போராடுவோம் என அவர்கள் எழுப்பும் அதே கோஷங்களை மாத்திரம் எழுப்பி போராடுவது உசிதமானதல்ல.

கோட்டாபய உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வெளியேற வேண்டும் என்பதில் எவரையும்விட நாம் மிக உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ராஜபக்சர்கள் வெளியேறுவதால் மாத்திரம், தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, நமது வீடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் பாலுந்தேனும் ஓடப்போவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க

மக்களின் கோரிக்கைக்கு அமைய அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் நேற்றையதினம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பில் விவாதிக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அமைக்கலாமெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த மக்கள் விடுதலை முன்னணி, இடைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளது.

இலங்கை தூதரகங்கள் சில மூடப்பட்டன!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

அவசரகால சட்டம் இரத்துச் செய்யப்பட்டது!

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இரத்து செத்துள்ளார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இது இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுக்குக்கு வரும் வகையில் இலங்கையில் அவசர கால நிலையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார்.

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டத்தை அமுல்படுத்துவதாக, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் ஜனாதிபதி அந்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார்.