ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

பொருளாதார நெருக்கடி தொடர்பான சர்வ கட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன கலந்துகொள்ளும்.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றது.

இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்?

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி – மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்வு

பட்டினிச்சாவுக்குப் பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணிநேரம் உயிருக்குப் போராடி குழந்தைகளுடன் வவுனியாவிலிருந்து தனுஷ்கோடியில் பலர் அகதிகளாய் தஞ்சமடைந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்குப் பின் இஞ்சின் சரி செய்து நேற்று இரவு எட்டு மணியளவில் தனுஷ்கோடி வடக்குப் பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வந்துள்ளதாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

சர்வக்கட்சி மாநாடு! – ஹக்கீம், ரிசாத் புறக்கணிப்பு

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது.

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுருத்தி வந்த போதும் இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சிகள் கலந்து கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை

இலங்கை அரசாங்கத்துடனும் அதேபோல், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனுமான சந்திப்புகளின் நிமித்தம் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் பல்வேறு முகவரமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவொன்றுடன் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் அமண்டா டோரி உள்ளிட்டோர் இந்த தூதுக்குழுவின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தல், மனித உரிமைகள், நிலையான பொருளாதார அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, மற்றும் கல்வி சம்பந்தமான கூட்டுறவு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நான்காவது அமெரிக்க – இலங்கை பங்காண்மை உரையாடலுக்கு (U.S.-Sri Lanka Partnership Dialogue) துணை இராஜாங்க செயலாளர் நூலண்டும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பிரிஸும் இணை- தலைமை வழங்கவுள்ளனர்.

உலகளாவிய தொற்றுப்பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையை பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடும் நிமித்தம் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

அனைத்து இலங்கையர்களும் செழிப்படையக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் சிவில் சமூக மற்றும் தனியார்துறை பிரதிநிதிகளின் முக்கிய வகிபாகங்கள் குறித்து கலந்துரையாடும் நிமித்தம் அவர்களையும் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !!

சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.

இதனையடுத்து குழுநிலை அமர்வின்போது திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

கொண்டு வரப்பட்ட திருத்தம் போதுமானதல்ல, அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் திருத்தத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வாக்கெடுப்பை கோரின.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Posted in Uncategorized

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய ரெலோ யாழ் மாவட்ட தலைவர் விசாரணைக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (24 ஆம் திகதி) காலை 9 மணிக்கு நுணாவிலில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். விஜயத்தின் போது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மட்டுவில் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அவ்வாறாக வருகை தந்த தாய்மாரை பொலிசாரும் இராணுவத்தினரும் கடுமையாக தாக்குவதை அறிந்து அப் பகுதிக்குச் சென்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருடன் இணைந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் தாய்மார் தாக்கப்பட்டதை கண்டித்தும் பொருளாதார மத்திய நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு பதாதைகள் எரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசாரினால் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் – இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன இன்று தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இரு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நாட்டில் இராணுவமயமாக்கல் என்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்த அரசாங்கத்தின் உத்தி என அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல், குறிப்பாக 1வது ராஜபக்ச ஆட்சியின் போது வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்தது. யஹபாலன அரசாங்கத்தின் போது 2019 நவம்பருக்குப் பின்னர் இராணுவமயமாக்கல் தீவிரப்படுத்தப்படவில்லை.

தற்போது, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை வெளியிட்டு வருகிறார்.

கடைசியாக 21 மார்ச் 2022 இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு, தடுப்புக்காவல் & புனர்வாழ்வு ஆகியவற்றின் இராணுவமயமாக்கலையும் நாங்கள் கண்டுள்ளோம், இவை அனைத்தும் உரிமை மீறல்களில் விளைந்துள்ளன.” என அவர் கூறியுள்ளார்.

அரசின் போலி வேடத்திற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்  – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வேடம் தொடர்பாக நீங்களும் குரல்கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள்மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும்எடுக்கத் தயங்காதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலைஇயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் (ஜனா) பா.உ செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்ட திருத்தம் தொடர்பிலானவிவாதத்தின் போது கருத்துத் தெரிவக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் குள்ளநரித்தனம் மிக்கவர் என்ற புகழுக்குரிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின்நரித்தனச் சிந்தனையின் வெளிப்பாட்டினாலேயே இன்று நாடும் எம் தமிழினமும் அனுபவித்து வரும் தற்காலிகஏற்பாடாகக் கொண்டு வரப்பட்ட 1979ம் ஆண்டின் 48ம் இலக்கப் பயங்கரவாதத்தடைச் சட்டம்.

அன்று நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் உணர்வு பூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாமல்சர்வதேச நியமங்களுக்குப் புறம்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாக குறுகிய காலங்கள் எனப்பாராளுமன்றத்தை ஏமாற்றி தனது குள்ளநரி இராஜதந்திரத்தைச் சாமர்த்தியமாகச் செயலில் காட்டி இந்த நாட்டின்தமிழ் இளைஞர்களை, தமிழ்த் தேசியவாதிகளை இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்டதே இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டம்.

ஆயுதப் படையினருக்கும், முப்படையினருக்கும், பொலிசாருக்கும் நாட்டின் குற்றிவியல் மற்றும் தண்டணைச் சட்டக்கோவைகளுக்கு அப்பால் தனித்துவமான அதிகாரங்களை வழங்கி தமிழன் எவன்மீதாவது சந்தேகம் இருந்தால் கைதுசெய்யலாம் அல்லது அவன் உயிரை மாய்த்து விடலாம், மரண விசாரணையோ எதுவித விசாரணையோ இல்லை.தனது உரிமையைக் கோரும் எந்தத் தமிழனையும் அழித்துவிடு, கைது செய், சித்திரவதை செய், முடிந்தவரைதமிழனைக் கொடுமைப்படுத்து, தமிழர்களின் அந்தரங்க உறுப்புகளை அசிங்கப்படுத்து, தமிழர்களின் ஆண்மையை, பெண்;மையை அழித்துவிடு என்ற இன்னபிற மனிதாபிமானம் கண்டிராத, மனித குலம் கண்டிராத சித்திரவதைகளைச்செய்வதற்கு அவர்களுக்கு அங்கீகாரம் அளித்ததே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம்.

சட்டம் கூறுகின்றது 18 மாதங்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவோடு தடுத்து வைக்கலாம் என்று. ஆனால்நடைமுறையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? முப்பது வருடங்களுக்கு மேலாக எதுவித குற்றச்சாட்டுகளும்சுமத்தாமல், குற்றச்சாட்டுப் பத்திரமும் நீதிமன்றத்தில் சமர்ப்;பிக்காமல் இளமையில் கைது செய்யப்பட்டு இன்றுமுதுமை வரைக்கு தம் வாழ்நாளைத் தொலைத்து விட்டு தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதேஇந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம்.

இதற்கும் மேலாக முகநூலில் பதிவிடும் இளைஞர்களைக் கூடக் கைது செய்கின்றது. கடந்த வருடத்தில்மட்டக்களப்பு மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார்கள். தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர்களோடு கைது செய்யப்பட்ட செங்கலடி வர்த்தகர்தியேட்டர் மோகன் என்பவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.

இன்று சர்வதேச நெருக்குவாரத்தால் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சடத் திருத்தம் பற்றி சட்டம்படித்த சட்டப் பேராசிரியர் அமைச்ர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு நாகன் வாயால் கூடச் சிரிக்கமுடியாதுள்ளேன். நீதி அமைச்சர் திறமையான மனிதன். இந்தச் சட்டத்திருத்தத்தைப் பொருத்தளவில் அவர்சூழ்நிலைக் கைதி. இந்தப் பதினெட்டு மாதத் தடுப்பை அவர்கள் ஒரு வருடம் என்று குறைக்கின்றார்கலாம் என்றுஇவர்கள் படம் காட்டுவது எதைக் காட்டுகின்றது?

ஒன்று மட்டும் உண்மை அன்று இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது இந்த நாட்டிலுள்ளதமிழர்களை, தமிழ் இளைஞர்களை இலக்காகக் கொண்டே. இன்று இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் மூவினமக்கள் மீதும் பாய்கின்றது. இந்த நாட்டில் பிறந்த இந்த நாட்டை நேசித்து தமிழ்த் தேசியத்திற்காக ஆயுதம் ஏந்திஒருங்கிணைந்த நாட்டில் சமத்துவமாக வாழ வேண்டும் என்று நம்பிக்கை கொண்ட நான் இந்த நாட்டின் அரசியலைஇயக்கும் மகாசங்கத்தினர், பௌத்த பீடங்களின் பிரதானிகள், பௌத்த, இந்;து கத்தோலிக்க, இஸ்லாமியமதகுருமார் உட்பட இந்த நாட்டின் மூவின மக்களையும் அன்புடனும் ஆதரவுடனும் அறைகூவல் விடுத்துஅழைக்கின்றேன்.

இன்று இந்த ஆட்சியாளர்களின் இத்தகைய சட்டத் திருத்தங்களின் போலி வெடம் தொடர்பாக நீங்களும் குரல்கொடுங்கள் இல்லையேல் நாளை இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மகாசங்கத்தினர் மீதோ மற்ற மதகுருமார்கள்மீதோ பாயாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாடு தொடர்பாக நல்லதொரு முடிவை காலம் கடந்தும்எடுக்கத் தயங்காதீர்கள்.

நாங்கள் கேட்பது இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தம் அல்ல. இந்தக் கொடிய சட்டம் முற்றுமுழுதாகஇலங்கை அரசியல் அமைப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். தூக்கி எறியப்பட வேண்டும். இந்தத் திருத்தம் சர்வதேசஅழுத்தம், ஐரோப்பிய பாராளுமன்றம் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இல்லாதொழிக்கும் என்ற பயத்தினால் கொண்டுவரப்படுகின்றதே தவிர தமிழர்களுக்கோ இந்த நாட்டு மக்களுக்கோ நிம்மதியான வாழ்வைக் கொடுக்க வேண்டும்என்பதற்காக அல்ல.

இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தத்தை நானும் எங்களது கட்சியும் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம் என்றுதெரிவித்தார்.

சர்வகட்சி கூட்டத்தை பகிஷ்கரிக்க விக்னேஸ்வரனும் முடிவு

கொழும்பில் நாளை மறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச மேற்கொள்ளவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்றமாட்டேன் என்பதை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் எம்.பி ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில் தான் தங்கியுள்ளது என்பதை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும்,

இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், தற்போதைய பொருளாதாரச் சூழல் தொடர்பில் எனது கருத்துக்களை எழுதுமாறு தொலைபேசி மூலம் உங்களின் பணியாளர் என்னை வலியுறுத்தினார்.

எனவே எனது கருத்துக்களை மிகச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்.

இன்று நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினையும் பொருளாதாரப் பிரச்சினையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பது சற்றே அசாத்தியமான விடயம்தான்.

நாட்டை தன் சக்திக்கு மீறி செலவு செய்ய வைத்துள்ளது இந்தப் போர். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் கடன் வாங்கப்பட்டது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே சாத்தியமான வழி, கூட்டாட்சி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதுதான் என்பது எனது புரிதல்.

அவ்வாறு செய்வது தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு வழி வகுக்கும் என்பது மட்டுமன்றி, இலங்கையை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு வளமான மற்றும் அமைதியான நாடாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும்.

நீங்கள் சிந்திக்கும் அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக உண்மையான அதிகாரப்பகிர்வைத் தைரியமாக நிறைவேற்ற முடிந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண பொருளாதார ஆதரவையும் புலம்பெயர் தமிழர்களின் முழு மனதுடன் ஆதரவையும் பெற முடியும்.

அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மிகக் குறுகிய காலத்திற்குள் மீண்டு தெற்காசியாவின் சொர்க்கமாக மாறும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பில் நாம் அனைவரும் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் எமது மனங்களிலிருந்து துடைக்கப்படட்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வந்து இந்த நாட்டை தெற்காசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் ஒரு சிறந்த, வளமான, ஒன்றுபட்ட நாடாக மாற்றுவோம். இது வெறும் கனவு அல்ல; அது நிஜத்தில் நடக்கலாம்.

நீங்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இந்த நாட்டில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவீர்களாயின் இலங்கை வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஜனாதிபதியே! உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடாதீர்கள். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized