சந்தர்ப்பத்தை சாதுரியமாக பயன்படுத்த வேண்டியது எமது கடமை: தர்மலிங்கம் சித்தார்தன்

அரசாங்கம் தற்போது பலவீனப்பட்டுக் காணப்படும் நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் பலப்பட்டுக் காணப்படுகிறோம், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளமையை சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டியது எமது கடமை என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களை எட்டிவிட்ட நிலையில் தனக்கும் தன்னுடைய அரசாங்கத்துக்கும் சர்வதேச ரீதியாகவும் உள்ளூர் முறையிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பைத் தமிழ் தரப்பினர் பலர் விரும்பவில்லை. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தானாக எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. சர்வதேசம் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம், மனித உரிமை பேரவையின் மறைமுகமான அழுத்தங்கள், அறிக்கைகள் மற்றும் இந்தியத் தரப்பினரின் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் ஆட்சி நெருக்கடி காரணமாகவே அதைச் சமநிலைப்படுத்த ஜனாதிபதி கூட்டமைப்பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இது தவிர கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்து சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விட்டிருந்தார்.

அதுவுமன்றி அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி மாளிகை முன்பாக காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்திருந்தோம். அவ்வேளையிலும் ஜனாதிபதியைச் சந்திக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

இவ்வாறான சூழ்நிலைகளே கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கக் காரணங்களாகும். மிக நீண்டகாலத்துக்குப் பின்பு இந்தியா – இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தது. அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இலங்கை தமிழ் மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். அதுவே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றமாட்டேன் என்று ஜனாதிபதி பிடிவாதம் பிடித்துவருகிறார். இது சர்வதேச ரீதியாக எமக்கு சாதகமாகவுள்ளது. நாட்டினுடைய இன்றைய பொருளாதார அரசியல் நெருக்கடிகள் எமக்கு சாதகமாகவுள்ளது.

ஜனாதிபதி எப்போது பலவீனப்பட்டுக் காணப்படுகிறாரோ அப்போதுதான் நாம் அவருடன் பேசமுடியும். அவர் தற்போது சகல வகையிலும் பலவீனப்பட்டுக் காணப்படுகிறார்.

குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகளுடன் சேர்ந்து ஆட்சியின் உள்ளக நெருக்கடிகள் அவரை கதிகலங்க வைத்துள்ளது. நாம் இப்போது பலப்பட்டு நிற்கின்றோம், அவர் பலவீனப்பட்டு நிற்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். சர்வதேசமும், மறைமுகமாக மனிதவுரிமை பேரவையும், இந்தியாவும் தமிழ் மக்களுடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வுகாணுங்கள் என்று அழுத்தங்களைப் பிரயோகத்து வருகிற நிலையில், நாம் ஜனாதிபதியுடன் பேசவில்லையாயின் அவர்கள் கொடுத்த அழுத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவேதான் பேசவேண்டுமென்ற முடிவை எடுத்திருக்கிறோம். எது எவ்வாறு இருந்தபோதும் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் ஜனாதிபதியுடன் பேச வேண்டியது அவசியமானது. மக்களில் பலரும் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தையை விரும்பவில்லை விசனத்தைத் தெரிவித்து வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

மக்களின் கருத்தில் நியாயம் இருக்கிறதென்பது உண்மையே. காரணம் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஜனாதிபதியோ அவருடைய அரசாங்கமோ ஆர்வம் காட்டவில்லை, உதாசீனம் செய்துவருகிறதென்பது உண்மையே.

இருந்தபோதிலும் தற்போது கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்ற நிலையில் நாம் அதை புறக்கணிப்பது பொருத்தமான விடயமல்ல. அவருடன் பேசினால் மட்டுமே அவர் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது அடுத்த நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க முடியும்.

அண்மையில் இந்தியா சென்று நிரம்பியுள்ள இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சு தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக இருக்கும்.

எனவே எமது பிரச்சனையை நாமே பேசித்தீர்ப்போம் என்ற வழி முறைக்கு அரசாங்கம் வந்திருக்கிறதென்ற சமிஞ்சையை காட்டியுள்ளார். எனவே வாய்ப்பை பயன்படுத்திப் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது.

ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பற்றி ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜப்பானிய அரசையும், மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, அரசியல் துறை மற்றும் முதலாம் செயலாளர் தகேசி ஒசாகி, அரசியல் துறை ஆய்வாளர் கநா மொரிவகி ஆகியோர் பங்கு பற்றினர்.

மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், ஐநா மனித உரிமை ஆணையகம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவிடவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமுகூ தலைவர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் குறித்துக்கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உறுதியளித்தார்.

ஐநா மனித உரிமை அறிக்கையில் மலையகம் பற்றி இன்னமும் முறையாக போதியளவு குறிப்பிடப்படாமை பற்றியும் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி வினவினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, தற்போது ஒரு அரசியல் தலைமையாக செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த படிவரிசையில் நாம் மலையக விவகாரங்களை படிப்படியாக சர்வதேச மயப்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையிலேயே மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இந்த சந்திப்பு நிகழ்கிறது. ஏனைய சர்வதேச நட்பு நாடுகளின் பிரதிநிதிகளையும், ஐநா வதிவிட பிரதிநிதியையும் சந்திக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜப்பான் எப்போதுமே இலங்கை மக்களால் பெரிதும் விரும்பப்படும் நட்பு நாடு என்ற முறையில் எமது மக்கள் தொடர்பில் ஜப்பானிய தூதுவரின் கருத்துகளை தாம் முழுமனதுடன் வரவேற்றதாகவும், அதேவேளை இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவை பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானை கேட்டுக்கொண்டதாகவும், மலையக மக்கள் தொடர்பில் கல்வி வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும்படி ஜப்பானிய அரசை கோரியதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை மருந்து உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசியப்பொருட்களிற்கு மோசமான பற்றாக்குறை நிலவுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளார் என அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதா?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தமக்கு பலமாக இருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது: பீரிஸ்!

இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்து பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆலோசனையை திருத்துமாறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் : சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கோரிக்கை

பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்கள் பேரவை, இலங்கை தமிழ்ச்சங்கம், தமிழ் அமெரிக்கர் ஒன்றியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐக்கிய அமெரிக்க தமிழ் செயற்பாட்டுக்குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இணைந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவிற்கு கூட்டாக அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகமோசமடைந்துவரும் நிலையில், அதனை சீரமைப்பதற்காக அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறிந்துகொள்ளமுடிந்தது.

தற்போதைய பொருளாதாரநிலையின் காரணமாக இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கக்கூடிய நெருக்கடிகளை நாம் உணர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, இதுகுறித்து எமது கரிசனையையும் வெளியிடுகின்றோம்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கு எவ்வித நிபந்தனைகளுமற்ற உதவிகளை வழங்குவதன் மூலம் தற்போது மக்கள் அனுபவித்துவரும் துன்பத்தை நீக்கமுடியாது என்றே நாம் கருதுகின்றோம்.

அதுமாத்திரமன்றி தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதக்கொள்கைகளால் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இது பங்களிப்புச்செய்யாது.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் தமிழ் மக்களின் உரிமைகளை மறுதலித்து வந்திருக்கின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுவதுடன், அவை கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களிலும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களிலும் இனப்படுகொலையிலும் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஆராய்வதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவானது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது சுமார் 40,000 பொதுமக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த தரப்பினரால் மதிப்பிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று கடந்த 2012 ஆம் ஆண்டில் சார்லஸ் பெட்ரியினால் தலைமைதாங்கப்பட்ட ஐ.நா உள்ளகக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில், இறுதிக்கட்டப்போரின்பேர்து சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது என மதிப்பிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு போர்க்குற்றங்களும் மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களும் இடம்பெற்றிருப்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன் உரியவாறான விசாரணைகளை மேற்கொண்டு, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் 30/1 தீர்மானம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இருப்பினும் தற்போதைய அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை நிராகரித்துவிட்டது. தற்போதுவரை இறுதிக்கட்டப்போரின்போது நிகழ்த்தப்பட்ட குற்றங்களுடனும் மனித உரிமை மீறல்களுடனும் தொடர்புடைய ஒருவர்கூட கைதுசெய்யப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை.

பல்வேறு கட்டமைப்புக்களிலும் நிலவும் தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு அதற்குக் காரணம் என்பதுடன் அது சிங்கள, பௌத்த மத அடிப்படைவாதம் எழுச்சியடைவதற்கு வழிவகுத்துள்ளது.

எனவே பொருளாதாரமீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் உதவிகள் வழங்கப்படும்பட்சத்தில், தாமாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உதவியை நாடவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் நிலங்களின் பூர்வீக, பாரம்பரியக் கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஒக்லான்ட் நிலையத்தினால் ‘என்ட்லஸ் வோர்’ என்ற தலைப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வலுகட்டாயமாக இடம்பெறும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் அவற்றினூடாக தமிழ் மக்களின் பாரம்பரிய, கலாசார அடையாளங்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் நீங்கள் (சர்வதேச நாணய நிதியம்) இலங்கை அரசாங்கத்திற்கு நிபந்தனை விதிக்கவேண்டும்.

மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப்பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்தும் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே சர்வதேச நாணய நிதியம் போன்ற கட்டமைப்புக்கள் இலங்கைக்குக் கடன்வழங்கும்போது நிபந்தனைகளை விதிப்பதன் ஊடாகவே பொறுப்புக்கூறலை நோக்கிய நகர்வுகளை வலுப்படுத்தமுடியும்.

அதேபோன்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவினால் மிகவும் மோசமான சட்டமாகச் சுட்டிக்காட்டப்பட்டதும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பிலும் உங்களது கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றோம்.

தற்போதைய அரசாங்கம் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகளைச் செய்திருந்தாலும், சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக அச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு அத்திருத்தங்கள் குறைந்தளவான பங்களிப்பையே வழங்குவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

எனவே கடனுதவிகளை வழங்குவதெனின், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் நிபந்தனை விதியுங்கள் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது: யாழ் இந்திய துணைத்தூதுவர் பேச்சு

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது, அதையும் தாண்டி இருக்க வேண்டும் என யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கடற்தொழில் சம்மேளனத்திலும் பூநகரி நக்ரா நிறுவனத்திலும் மற்றும் கௌதாரி முனை பொதுநோக்கு மண்டபத்திலும் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் தலா 6000 ரூபா பெறுமதியான 200 உலருணவுப் பொதிகள் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் இந்திய துணைத்தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் துணைதூதரகத்திற்கு வருகை தாருங்கள் அதனை உங்களது வீடாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்திய அரசு தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகத்தில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இவ் உதவிகளை வழங்கி வைக்கின்றது. எங்களது எண்ணங்கள் சிந்தனைகள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

இந்திய அரசு வடக்கில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகம் பயன்படுகின்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தொடர்பில் நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் காணாமல்போனோரின் பெரும்பாலான குடும்பங்கள் மரண சான்றிதழையோ இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்றிருக்கும் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்காக 25 விசாரணைக்குழுக்கள் நியமிக்க கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கவுமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது என சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்திய அதேவேளைஇ உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதே தமது பிரதான வாதமாக இருந்தது என பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

இதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைப் பிரதிநிதிகள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும்இ அதற்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அடுத்த சவாலாக இருக்கும் என்றும்இ அதனை சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் ஆதரவுடன் எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.