அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கு பல விடயங்களை வௌிப்படுத்தினார் ஆஸாத் சாலி!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும், முன்னாள் ஆளுநருமான ஆஸாத் சாலி மற்றும் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (26) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டமை மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல புத்திஜீவிகள் கைது செய்யப்பட்டு இன்னும் சிறையில் உள்ளமை குறித்து ஆஸாத் சாலி அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 800 வருடங்களாக முஸ்லிம் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்த கூரஹல ஜெய்லானி கட்டிடங்கள் தகர்க்கப்பட்டமை மற்றும் பல விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

குறித்த சந்திப்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளான மாட்டின் கெலி, ரூபி வூட் சேட், அரசியல் பொறுப்பாளர் நஸ்ரின் மரைக்கார் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது- ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும், தமிழ் மக்களையும் புலம் பெயர்ந்தோரையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாக கூற வேண்டிய பொறுப்பு உள்ளது.புதிய அரசியல் அமைப்பு வருமா வரதா என்று உறுதியாக கூற முடியாது.அப்படி வந்தாலும் அதில் சிங்கள, பெளத்த மேலாதிக்கம் மட்டுமே அதில் இருக்கும்.

இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது.எமது கடந்த கால அனுபவம் இது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுத்தப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது.அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். 13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்கு தீர்வு தரும் என்று ஒரு நாளும் கூறவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் ,சட்ட ரீதியாக அமுல் படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல் படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது. அழிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல் படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் என்றார்.

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் – சுரேஷ்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 13வது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒரு போதும் ஏற்க வில்லை அதனை ஏற்க போவதும் இல்லை.

ஆனால் தற்போதுள்ள பூகோள அரசியல் நிலையில் தமிழ் மக்களை பாதுகாக்க அதாவது வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்கள குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றின் மூலம் அனுப்பி வைத்துள்ளோம்.

அந்த கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டெல்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்தகட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தினை மேற்கொள்வது போல நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதை செய்ய நினைக்கிறார்களோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டியிடும் போது வடக்கு மக்களின் வாக்களிப்பு எனக்கு தேவையில்லை ஆனால் தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறியிருந்தார் அதனையே அந்த தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செய்திருந்தார்கள்.

அதாவது அந்த தேர்தலை புறக்கணிக்குமாறு கூறியிருந்தார்கள் தற்போது கோட்டாபய கூறுகின்றார் 13வது திருத்தம் தேவையில்லை அபிவிருத்தி மட்டும் போதும் என அதேபோல் அரசாங்கத்தில் உள்ளவர்களும் அதனை கூறுகின்றார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் வடக்கில் அந்தக் கோரிக்கையினையே செயற்படுத்துகின்றார்கள்.

கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே அதற்காகத்தான் 13வது திருத்தச் சட்டத்தினை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரச்சாரத்தினை மேற்கொள்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி கோட்டாபய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் எனவே மக்கள் போலிப் பிரச்சாரங்களை நம்ப கூடாது” என தெரிவித்தார்.

Posted in Uncategorized

13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது.புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும்.

இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும்.புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம்.

நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம்.இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

காங்கிரஸ் யாப்பில் ஒற்றையாட்சியை வலியுறுத்திக் கொண்டு வெளியில் இருதேசம் ஒரு நாடு என மக்களை ஏமாற்றுகிறார் கஜேந்திரகுமார்! சித்தார்த்தன் குற்றச்சாட்டு

கயேந்திர குமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கட்சியின் யாப்பு ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற நிலையில் தமிழ் மக்களை திசைதிருப்ப தமிழ் மக்கள் முன்னணி என்ற குழுவை அமைத்து 13 க்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன்.

மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

13 வேண்டாம் என்றால் 13பதிலாக என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறீர்கள்? அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீகள் எனக் கூறமுடியுமா.

கயேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என போட்டி நிலவுகிறது.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தை 75ரூபாய் முத்திரைக் காசு வழங்கி பார்த்தேன் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் என்ற பெயரில் போராட்டம் நடத்தினால் தமது கபடத்தனம் தெரிந்து விடும் என்பதற்காக முன்னணி என்ற ஒரு குழுவை ஆரம்பித்து 13ஐ தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்றிவிட்டார்கள் அதற்கு எதிராக போராட வாருங்கள் என மக்களை குழப்பி வருகிறார்கள்.

தமிழ் தேசியத்திற்காக ஒன்றிணைந்த தலைவர்கள் நாங்கள் ஒருபோதும் 13வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்களின் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் .

Posted in Uncategorized

தமிழ் மக்களை குழப்புவதற்காக ஒரு கட்சி பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது – மாவை சேனாதிராஜா

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து, தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது

என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சமஸ்டி கட்டமைப்பில்,சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம். நாங்கள் தெளிவாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.ஒரு நாளும் 13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தராது.அதிலும் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

இந்த நிலையில் ஒரு கட்சி எமக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக நினைத்து,தமிழ் மக்களை குழப்புவதற்காக பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது.நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாம் அவர்களிடமிருந்து பெறவேண்டியதை பெறுவோம்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் கத்தி கத்தி களைத்து விட்டோம்.அதற்காக அப்படியே இதை விட்டு விட்டோம் என்று நினைக்க வேண்டாம்.தமிழர் இருப்புக்கு நாம் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பா.உ. ஜனாவால் முன்னெடுப்பு 

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மகிழடித்தீவில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோவிந்தன் கருணாகரம்(ஜனா)வினால்  பொலிசாரின் கெடுபிடிகளையும் மீறி அனுஸ்டிக்கப்பட்டது.

இதன் போது,  முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளரும்   தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, கட்சியின் பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் உள்ளிட்டோர் பங்கு கொண்டிருந்தனர்.

போலிசாரிர்  தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில், குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணையில் பணியாற்றிய உள்ளுர் பணியாளர்கள் உட்பட 150 பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டிருந்தனர்.

நினைவுகூரல்களுக்கு தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக மீறல் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று   வெள்ளிக்கிழமை காலை, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபில் நடத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

கொக்கட்டிச்சோலை படுகொலை   என்று கூறப்படுவது 1987ஆம் ஆண்டு அகதிகளாக இந்த இறால்வளர்ப்புத் திட்டத்துக்குள் இருந்த அகதிகளாக இருந்த பொதுமக்களையும், இந்தப்பிரதேச மக்களுமாக 150க்கு மேற்பட்ட பொது மக்கள் இந்தப்பிரதேசத்தில் கொல்லப்பட்டார்கள் அவர்களது நினைவா இந்த நினைவுத்தூபி அமைக்கக்கட்டு வருடா வருடம் நினைவேந்தல் நடைபெற்றுவருவரு வழமை.

கடந்த வருடம் கூட இந்த இடத்தில் கொட்டில் அமைத்து மிகவும்விமர்சையாக இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இந்த வருடம் கொக்கட்டிச்சோலைப் பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டு பொதுமக்கள் தங்களது உறவுகளை நினைத்து நினைவேந்தக்கூடாது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தாலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைத்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நான் உட்பட உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார், பொருளாளர் விந்தன் கனகரெட்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கின்றார். இந்த நினைவேந்தலை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசு கடந்த காலங்களில் போராட்டத்தில் மரணித்த போராளிகள், பொதுமக்களை எதிர்காலச் சந்தத்தியினர் நினைவுகூரக்கூட விடுவதில்லை. அவர்களை நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்ற முடிவில் இருக்கிறார்கள். இந்தப்படுகொலை கூட இந்த ராஜபக்ச சகோதரர்களின் சிறிலங்கா சுதந்திரக்கட்சியையொட்டிய அரசினால் நடத்தப்படவில்லை. ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க ஆட்சிக்காலத்தில் இது நடைபெற்றிருந்தது.

இருந்தும் இலங்கை இராணுவத்தின், இராணுவத்தினரின் உதவியுடன் செய்யப்பட்ட படுகொலைகளை நினைவுகூருவதற்குத் தடைவிதிப்பது ஒட்டுமொத்த ஜனநாயக அத்துமீறலாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரியில்..!

விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற அலுவல்களுக்கான குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளரான தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டம், மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம், சிவில் நடைமுறைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம் உள்ளிட்ட பல சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டு

இலங்கை இராணுவத்திற்கு எதிரான தடைகளிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான தடைகள்குறித்து ஆலோசிக்கப்படுவதாக பிரிட்டன்தெரிவித்துள்ளது.
வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங் பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது எனதெரிவித்துள்ள அவர் எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பின்பற்றி இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிராக யுத்தகுற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதாரங்கள் வேண்டும் என தொழில்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மக்டொனாக் கேள்வி எழுப்பியவேளையே அமன்டா மில்லிங் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜெனீவாவில்இலங்கை தொடர்பான முதன்மை குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பிரிட்டன் மனிதஉரிமை ஆணையகத்தின் அடுத்த அமர்விற்கு முன்னதாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரிட்டன்திட்டமிட்டுள்ளது என இலங்கைஇராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.