அங்கொட லொக்காவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளரான சபேசன் உள்ளிட்ட சிலருக்கும், இலங்கை நிழல உலகதாதா அங்கொட லொக்காவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையைச் சேர்ந்த பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா கோவையில் தலைமறைவாக இருந்தபோது கடந்த 2020 ஜூலையில் திடீர் மாரடைப்பால் இறந்தார்.

அவரது உடல் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டமை தொடர்பாக அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த வழகறிஞர் சிவகாம சுந்தரி, அவரது நண்பர் தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்து தமிழ்நாட்டு சிபிசிஐடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கொடலொக்காவின் நெருங்கிய கூட்டாளியான சானுகா தனநாயக்கா, ஜெயபால் என்ற இருவரும் பெங்களுரில் தலைமறைவாக இருந்தபோது கைதாகியுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரித்த பொழுது அங்கொட லொக்காவிற்கும், சானுகா தனநாயக்காவிற்கும் விடுதலை புலிகளின் முன்னாள் உளவுபிரிவை சேர்ந்த சபேசன் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

முன்னாள் விடுதலை புலி நிர்வாகி சபேசன் குறித்து சிபிசிஐடி பொலிசார் விசாரணை செய்த போது சபேசன், இலங்கையை சேர்ந்த சின்ன சுரேஷ், சென்னையைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் ஆகியோர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் போது NIA அமைப்பினரால் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் கொச்சி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிபிசிஐடி பொலிசார் சிறையில் இருந்த சபேசன் உட்பட 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அங்கொட லொக்கா மற்றும் சனுக்கா தனநாயக்கா ஆகியோருடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து வெளியேறிய அங்கொட லொக்கா மற்றும் சனுக்க தனநாயக்க ஆகியோர் சபேசன், சின்னசுரேஷ்,இ ஜெயபால் ஆகியோர் மூலம் இலங்கைக்கு போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தி வந்திருப்பதும் கோவையை மையமாக வைத்து இந்த வேலைகளை இரகசியமாக செய்து வந்து இருப்பதும் சிபிசிஐடி பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்ததாகவும், அவர்கள் ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என்றும் தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக்கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்று நாமல் கூறியுள்ளார்.

மாட்டு வண்டிகளில் மண்ணெண்ணெய் விற்பனை நாடு எங்கே செல்கிறது!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான மக்களுக்கு மண்ணெண்ணைய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வரிசையில் கால் வலிக்க காத்திருந்து வாக்குவதை விட வீட்டிற்கு அருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியில் இருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக மண்ணெண்ணெய் விற்பனை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

5 தமிழ் கைதிகள் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஒப்பந்தத்திற்கு எதிராக மற்றுமொரு FR மனு தாக்கல்

திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்திக்காக இந்திய நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வண.எல்லே குணவன்ச மற்றும் வண.பெங்கமுவே நாலக தேரர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், அதன் தலைவர், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் பிரைவேட் லிமிடெட். பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய அரசு இலங்கையில் போலீஸாருக்கு இந்தி மொழியைக் கற்றுக் கொடுப்பது ஏன்?

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
“இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு – சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?”
கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை போலீஸ் சேவை அதிகாரிகள் அடங்களாக 70 பேர் பங்குப்பற்றியிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரின் சிறப்பு செய்தி குறிப்பு வாசிக்கப்பட்டது.
இந்தி மொழியின் பிரபலத்தையும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறப்பு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தி மொழி கற்பதில் இலங்கை போலீஸ் அதிகாரிகள் கொண்டுள்ள ஆர்வத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வரவேற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார மற்றும் மொழி உறவுகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலானது என பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் கூறியுள்ளார்;.
இந்த உறவு இந்தி மொழியின் ஊடாக, மேலும் வலுப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி படிப்பைத் தொடர்வதற்கு வருடா வருடம், இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு மறைந்த பேராசிரியர் இந்திரா தஸநாயக்க, பாரிய பங்களிப்பு வழங்கியதாகவும், அவர் மறைவின் பின்னர், அவரை கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, இந்திய ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம், இலங்கையுடனான கலாசார உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதை இது வலியுறுத்துகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தார்.

இலங்கை போலீஸாருக்கு, இந்திய அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வரும் உதவிகளுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்ள ஹிந்து பாடத்திட்டம் பாரிய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை போலீஸாருக்கு, ஹிந்து பாடத்திட்டத்தின் முதல் பகுதி விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை போலீஸாருக்கு ஏன் இந்தி மொழி அவசியம்?

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால், போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

”எமது மொழி என்பது மிகவும் முக்கியமானது. இந்தி, கொரியன், ரஷ்யன் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் எமக்கு முக்கியமானது. அதற்கு காரணம், இலங்கைக்கு அனைத்து நாட்டு பிரஜைகளும் வருகைத் தருகின்றனர். குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு மொழி என்பது மிக முக்கியமானது. வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தவுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணும் போது, சிலருக்கு ஆங்கிலம் தெரியாது.

அவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேணுவது போலீஸாருக்கு மிக கடினமான ஒன்றாகும். அதனால் போலீஸ் திணைக்களத்திலுள்ளவர்கள் அனைத்து மொழிகளையும் கற்பது அவசியமானது என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை பேணும் போதும், தூதரகங்களுடன் தொடர்புகளை பேணும் போது மொழி கட்டாயமானது.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்பிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

”போலீஸாருக்கு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மாத்திரம் கற்றால், அது போதுமானதாக இருக்காது. இதற்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் வேறு மொழிகளை கற்ற அதிகாரிகள் போலீஸ் திணைக்களத்தின் இருந்தனர். நாம் நிறுவனம் என்ற ரீதியில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்றுக்கொடுப்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தியுள்ளோம்.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.

 

  • BBC Tamil

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் – ரெலோ தலைவர் செல்வம்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று (11.01) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்தபோதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இக்கடிதம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்ததா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானம்

ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எதிர்வரும் 19 ஆம் 20ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கோட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும், முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் நாளை ஆரம்பிக்கப்படும் குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முழுமையடையும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Posted in Uncategorized