இந்திய அரசு இலங்கையில் போலீஸாருக்கு இந்தி மொழியைக் கற்றுக் கொடுப்பது ஏன்?

இலங்கை போலீஸ் திணைக்களத்தில் கடமையாற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, இந்தி மொழி பாடத்திட்டமொன்றை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் (10) அனுஷ்டிக்கப்பட்ட இந்தி மொழி தினத்தை முன்னிட்டு, இந்த பாடத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கலாசார பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்த பாடத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
“இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு – சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?”
கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சிரேஷ்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கை போலீஸ் சேவை அதிகாரிகள் அடங்களாக 70 பேர் பங்குப்பற்றியிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரின் சிறப்பு செய்தி குறிப்பு வாசிக்கப்பட்டது.
இந்தி மொழியின் பிரபலத்தையும், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தின் அதன் பயன்பாடு அதிகரித்து வருவதையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது சிறப்பு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
அத்துடன், இந்தி மொழி கற்பதில் இலங்கை போலீஸ் அதிகாரிகள் கொண்டுள்ள ஆர்வத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வரவேற்றுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான கலாசார மற்றும் மொழி உறவுகள், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலானது என பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் கூறியுள்ளார்;.
இந்த உறவு இந்தி மொழியின் ஊடாக, மேலும் வலுப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இந்தி படிப்பைத் தொடர்வதற்கு வருடா வருடம், இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் ஏராளமான சந்தர்ப்பத்தை வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் 80 அரச பாடசாலைகளில் இந்தி மொழி கற்பிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இந்தி மொழியை ஊக்குவிப்பதற்கு மறைந்த பேராசிரியர் இந்திரா தஸநாயக்க, பாரிய பங்களிப்பு வழங்கியதாகவும், அவர் மறைவின் பின்னர், அவரை கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது, இந்திய ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கம், இலங்கையுடனான கலாசார உறவுகளுக்கு முக்கியத்தும் கொடுப்பதை இது வலியுறுத்துகின்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்தார்.

இலங்கை போலீஸாருக்கு, இந்திய அரசாங்கம் அவ்வப்போது வழங்கி வரும் உதவிகளுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

இந்திய மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்ள ஹிந்து பாடத்திட்டம் பாரிய உதவியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை போலீஸாருக்கு, ஹிந்து பாடத்திட்டத்தின் முதல் பகுதி விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கை போலீஸாருக்கு ஏன் இந்தி மொழி அவசியம்?

இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியர்கள் என்பதனால், அவர்களுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு இந்தி மொழி கற்பது கட்டாயமானது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
ஆங்கிலம் தெரியாத பெரும்பாலான சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருகின்றமையினால், போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு ஏனைய மொழிகளை கற்பது கட்டாயமானது என அவர் குறிப்பிடுகின்றார்.

”எமது மொழி என்பது மிகவும் முக்கியமானது. இந்தி, கொரியன், ரஷ்யன் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் எமக்கு முக்கியமானது. அதற்கு காரணம், இலங்கைக்கு அனைத்து நாட்டு பிரஜைகளும் வருகைத் தருகின்றனர். குறிப்பாக சுற்றுலாத்துறைக்கு மொழி என்பது மிக முக்கியமானது. வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகைத் தந்தவுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணும் போது, சிலருக்கு ஆங்கிலம் தெரியாது.

அவ்வாறானவர்களுடன் தொடர்புகளை பேணுவது போலீஸாருக்கு மிக கடினமான ஒன்றாகும். அதனால் போலீஸ் திணைக்களத்திலுள்ளவர்கள் அனைத்து மொழிகளையும் கற்பது அவசியமானது என்பதே பொதுவான கருத்தாகும். அதேநேரம், சர்வதேச நாடுகளுடன் தொடர்புகளை பேணும் போதும், தூதரகங்களுடன் தொடர்புகளை பேணும் போது மொழி கட்டாயமானது.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இதேவேளை, இலங்கை போலீஸ் திணைக்கள அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்பிக்கும் வகையிலான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

”போலீஸாருக்கு, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் மாத்திரம் கற்றால், அது போதுமானதாக இருக்காது. இதற்கு முன்னர் தனிப்பட்ட ரீதியில் வேறு மொழிகளை கற்ற அதிகாரிகள் போலீஸ் திணைக்களத்தின் இருந்தனர். நாம் நிறுவனம் என்ற ரீதியில் போலீஸ் அதிகாரிகளுக்கு அனைத்து மொழிகளையும் கற்றுக்கொடுப்பது குறித்து தற்போது அவதானம் செலுத்தியுள்ளோம்.” என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிடுகின்றார்.

 

  • BBC Tamil

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் – ரெலோ தலைவர் செல்வம்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று (11.01) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.

இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்தபோதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இக்கடிதம் இந்திய தூதுவரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்ததா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானம்

ஜனாதிபதி நிகழ்த்தவுள்ள கொள்கைப் பிரகடன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை நடத்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதியால் தற்போது நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து எதிர்வரும் 19 ஆம் 20ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கோட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நாளை ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.

முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும், முழு முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் நாளை ஆரம்பிக்கப்படும் குறித்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முழுமையடையும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும் தற்போது சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கருப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஒக்டோபர் 29 ஆம் திகதி ஒப்பந்தத்தை மீறியமையால் இலங்கை மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இணைத்தது.

கடன் பத்திரத்திற்கு அமைய குறித்த கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு மக்கள் வங்கி அறிவித்திருந்தது.அத்தோடு இன்றைய தினத்திற்குள் குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி நேற்று குறிப்பிட்டிருந்தது.

சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில், தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருந்தது.இந்த நிலையிலேயே நிராகரிக்கப்பட்ட உரத்திற்கான இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என சீனா கோரியிருந்தது.

எனினும் அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கியிருந்தது.இதன் காரணமாக மக்கள் வங்கியை கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள்

நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருவதை இந்த விஜயங்கள் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ , துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு , இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின்  இராஜாங்க அமைச்சர் லார்ட்  அஹ்மத் மற்றும் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்  ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பாராளுமன்றில் தைப்பொங்கல் விழா – 2022

கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பண்டிகைகளுடன் பாராளுமன்றத்துடன் பொங்கலைக் கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகம் உங்களை நட்புடன் அழைக்கிறது.
இலண்டன் சட்டசபையால் (London Assembly) தை பொங்கல் மற்றும் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தியதை கொண்டாட பிரித்தானிய தமிழ் சமூகத்தால் இந்த விழா ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது.
தைப் பொங்கல் என்பது தமிழ் சமூகத்தின் பூர்வீக அறுவடைத் திருநாளாகும், இது பல நூற்றாண்டுகளாக பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. இன்று உலகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 02 டிசம்பர் 2021 அன்று London Assembly இனால் ஜனவரி மாதத்தினை தமிழ் பாரம்பரிய மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதனை கொண்டாடுவதற்கும் மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கும், இவ்வருடம் Westminister இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம் உங்களை பிரித்தானிய தமிழ் சமூகம் அழைத்து நிற்கின்றது.
இடம்: Central Hall Westminster, Storey’s Gate, London, SW1H 9NH
திகதி: 17.01.2022
நேரம்: மாலை 6.00 மணி – மாலை 8.00 மணி
அனுமதி: இலவசம் – முற்பதிவு அவசியம்
முன்பதிவுகளிற்கு: https://www.eventbrite.com/e/pongal-in-westminster-2022-tickets-241748094057 இவ்விணைப்பினை அழுத்தி அல்லது பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தொலைபேசி இலக்கங்கள்:
07912253418
07737684104

அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு – ரெலோவின் இளைஞர் அணித்தலைவர் சபா குகதாஸ்

ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில் ஒரு ஐனநாயகத் தேர்தலை எதிர் கொள்ள முடியாது தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சமே ஒத்திவைப்புக்குகான பிரதான காரணம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித்தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தல்களை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர்,

கொரோனா அச்சத்தின் மத்தியில் பாராளுமன்ற தேர்தலை நடாத்திய ஐனாதிபதி தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு கொரோனா அச்ச நிலை ஓரளவு சாதாரண நிலையை அடைந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடையும் நிலையில் அதன் ஆயுட் காலத்தை நீடிக்கும் வர்த்தமானியை வெளியிட்டார் என்றால் அவர்களால் தேர்தலை எதிர் கொள்ளக் கூடிய சூழ்நிலை இல்லை என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.

வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை சாப்பாட்டிற்கு வரிசையில் நிற்க விட்ட சாதனையின் அறுவடையை இனி வரும் தேர்தலில் பெற வேண்டி வரும் என்ற தெளிவு ஆட்சியாளர்களுக்கு புரியும் அந்தப் புரிதலின் முடிவு தேர்தல் ஒத்திவைப்பு.

2024 ஆண்டு வரை தேர்தல் ஒன்றை எதிர் கொள்ள தற்போதைய ஆட்சியாளர்களினால் முடியாத நிலைமை உருவாகி விட்டது என பல தரப்பும் கூறி வருகின்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கூறுவது போல மாகாணசபை மற்றும் உள்ளூராட்ச்சி மன்றங்களின் தேர்தல்கள் நடாத்தப்படாது ஐனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை சர்வசன வாக்கெடுப்பு மூலம் தற்போதைய அரசாங்கம் கால நீடிப்பு செய்ய முயற்சிக்கலாம் என கூறுகின்றனர்.
அன்று ஐெ ஆர் செய்த மாதிரி இன்றைய ஐீ ஆர் செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைய இருந்த நிலையில், அவற்றின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

41 நகர சபைகள், 24 மாநகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized