பயத்தினால் நாய் போல மாறியுள்ள வீரவன்ச, கம்மன்பிலவின் ஆடையும் அவிழ்ந்து போயுள்ளதாக தகவல்

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesri) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவங்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் எதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவங்ச கேட்டதை பார்க்க முடிந்தது.

சிங்கம் போல் இருந்து விமல் வீரவங்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றி பேசிய வீரவங்ச போன்றவர்கள் அமைச்சு பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் நாய் போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளை கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் டொலருக்கான அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் – தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 மீனவர்களையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அவர்களை விடுவித்து அவர்களது வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்குமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் இந்தியா அளித்த உறுதிமொழி

கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன்  தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார். இலங்கைக்கான கடனுதவியை நீடிப்பது தொடர்பாக மேலும் ஆலோசித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘அண்டை நாடுகளின் முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கையை முக்கியமான பங்காளியாக இந்தியா ஆதரிக்கும் என புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுவது தமிழீழத்துக்கான வரைவா? கேள்வி எழுப்பும் அமைச்சர் தினேஷ் குணவர்தன

லையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப் புலிகளின் கனவான தமிழீழத்துக்கான வரைவாகவே இருக்கும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப் புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் நேற்று ஒப்பமிட்டனர். இதில் மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் ஒப்பமிடவில்லை.

இது தொடர்பில் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில் – அதன் தலைவர்களுக்கிடையில் பொது வான இணக்கப்பாடு இல்லை; ஒற்றுமை இல்லை. இந்தியப் பிரதமருக்கான பொது ஆவண விவகாரம் இதை வெளிக்காட் டுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது. இலங்கை எனும் எமது நாட்டில் உள் ளகப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை.

நாட்டின் அரசுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும். தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தை நாடுவதுதான் விசித்திரமாகவுள்ளது” என்றார்.

Posted in Uncategorized

திருமலை எண்ணெய் குதங்கள்; கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

திருமலை எண்ணெய் குதங்கள்: திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு முயற்சி- மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்றித்தருமாறு உப்புவெளி காவல் நிலையத்தில் பௌத்த துறவி ஒருவரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்த காவல் துறையினர் அக்கடைகளை அகற்றுமாறு அறிவுருத்தியிருந்த நிலையில் ஒன்று திரண்ட அப்பகுதி வாசிகளால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் பொதுமக்களோடு இணைந்து பாராளுமன்ற உருப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படும் இக்காலகட்டத்தில் அரசு இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன். தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலான பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அரசால் முன்னெடுக்கபடும் இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் பாராளுமன்ற உருப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Posted in Uncategorized

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கை

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்படுவதாக இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அந்நிய செலாவணிநெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் மிகவும் அவதானமாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

கடன்பத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றன என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் ஏனைய வங்கிகள் ஏற்றுமதியாளர்களின் நிலை தொகை கடன்காலம் மற்றும் கடன்பத்திரங்களை வழங்கும் வங்கிகளின்நிலை ஆகியவற்றை அடிப்படையாகவைத்து கடன்பத்திரத்தை வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையால் தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என வங்கியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி ஒரு மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்பட்டது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஏற்றுமதியாளர்களின் ஆவணங்கள் மீது நாங்கள் முழுமையான தடையை விதிக்கவில்லை கடன்பத்திரத்தை வழங்கும் வங்கிகளின் நிலைமையை அடிப்படையாக வைத்து இதனை முன்னெடுக்கின்றோம் என ஸ்டேட் பாங் ஓவ் இந்தியாவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய வங்கிகளில் எச்டிஎவ்சி வங்கி இலங்கைக்கான ஏற்றுமதி கடன்பத்திரங்களை கையாள்வதில் அவதானமாக செயற்படுகின்றது. இலங்கைக்கான பல ஏற்றுமதிகளிற்கு நிதி வழங்கிய அக்சிஸ் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்இந்த விவகாரத்தை கையாள்கின்றது.

இலங்கை வங்கிகளில் எந்த தவறும் இல்லை ஆனால் கொடுப்பனவுகள் தாமதமாகும் போது அந்த நாட்டின் அந்நிய செலாவணி சந்தையில் போதிய அளவு டொலர்கள் கையிருப்பில் இருக்காது என வங்கியாளர் ஒருவர்தெரிவித்துள்ளார். 2020இல் இலங்கைக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 3.2 பில்லியனாடொலராக காணப்பட்டது.

Posted in Uncategorized

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை”: மனோ, திகா, இராதா கூட்டறிக்கை

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

அதேவேளை, பொது இணக்கப்பாட்டின் மூலம் பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் தனித்தனியாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் ஆவண கடிதம் எழுதப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இம்முடிவுகளை கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.

இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, தமுகூ மனோ கணேசனும், ஸ்ரீமுகா தலைவர் ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது.

எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.

இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது.

மேலதிகமாக இந்த ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம்.

‘இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம்’-செல்வம் அடைக்கலநாதன்

இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தாமும் ஆவணத்தில் கையொப்பமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் வௌியில் இருந்து இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குவதாக கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நாளைய தினம் (07) ஆவணத்தில் கையொப்பமிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தலைவர்கள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று வியாழக்கிழமை ஒப்பமிட்டன.

கடந்த டிசம்பர் 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்படதலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர். அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.

அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் – தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாத் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் நேரில் சென்று சம்பந்தனிடம் கையொப்பம் பெற்றதைத் தொடர்ந்தே ஏனைய தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து இன்றிரவு கொழும்பு வரும் மாவை சேனாதிராஜா (தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி) நாளை காலை அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.

தமிழ் தேசிய பங்காளி கட்சியான ரெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் என ஏற்பாட்டாளர்கள் ஆகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இச்செயற்பாட்டின் ஒருங்கிணைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized