“உணவின் விலை ஏற்றத்தை தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி” ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

உணவின் விலை ஏற்றத்தைத் தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இலங்கைத் தீவின் ஏற்றுமதி, இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் காத்துக் கிடக்கின்றன.

அத்துடன் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, இறப்பர் , மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமையால் இந்த ஏற்றுமதிகளும் டொலர் இன்மையால் தடைப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஏற்றுமதி இறக்குமதி தடைப்படுவதால் வருமானம் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரச் சரிவும் பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கமும் மக்களை வாழ்வாதார ரீதியாக பாரிய அளவில் பாதித்துள்ளது இதனால் மரக்கறி வகைகள் உள்ளடங்கலாக அடிப்படை உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மக்கள் ஓரளவு விடுதலை பெற ஒரே வழி தற்சார்புப் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடும்பங்களும் கூட்டாகக் கையில் எடுக்க வேண்டும் நமது நாட்டிலே அதற்குப் போதியளவு சாதகமான சூழல் காணப்படுகிறது.

உதாரணமாக யுத்த காலத்தில் வன்னியில் போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டு கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலிருந்து பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காணப்பட்ட போது அந்த மக்கள் தற்சார்பு பொருளாதாரம் மூலமாக மரக்கறிகள், அரிசி, பால் முட்டை, பழங்கள், இறைச்சி வகைகள், மீன், மூலிகை மருந்துகள், கைத்தறி நெசவு, மட்பாண்ட கைத் தொழில், ஏனைய சுய தொழில்கள் எல்லாம் வன்னி மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரத்தையும் சேமிப்பையும் உருவாக்கியது.

ஆகவே எல்லோரும் சிந்தித்து நீங்களும் வாழும் இடத்திலே சிறந்த தற்சார்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதீத விலை ஏற்றத்தை தடுப்பதுடன் நாட்டின் உள்ளக பொருளாதாரத்தையும் குடும்பப் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம் என அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஈழத் தமிழர் அரசியல் ? யதீந்திரா

நாலடியாரில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழிந்து செல்லும் நாட்கள் அனைத்தும் உனது வாழ்நாளாகும். நமது அரசியலுக்கும் இது பொருந்துமா? ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் – ஆண்டுகள் கழிகின்ற போது, நத ஆண்டுக்கான அடைவுகளை மக்கள் காணவேண்டும். ஆனால் ஈழத் தமிழ் தேசிய அரசியலை பொறுத்தவரையில், அடைவுகள் எப்போதுமே எட்டாக் கனியாகவே இருக்கின்றது. வரலாம் – நடக்கலாம் – நடக்கூடும் – இப்படியான சொற்களோடு, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்படி ஒவ்வொரு ஆண்டும் கழிந்து செல்கின்ற போது, தமிழர் அரசியலில் எவ்வித முன்னேற்றங்களும் பதிவாகவில்லை ஆனால் பல்வேறு விடயங்கள் நடக்கின்றன – நடப்பதாக காண்பிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் சிந்தித்தால், கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், ஈழத் தமிழர் அரசியலின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும் ஆண்டுகளா?

இலங்கையின் மீதான சர்வதேச அழுத்தங்களுக்கான பிள்ளையார் சுழியிடப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்றது. 2012இல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணை, அமெரிக்க ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது அப்போது அமெரிக்க பிரேரணை என்றே பரவலாக அழைக்கப்பட்டது. அப்படி பார்த்தால் அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்து பத்துவருடங்களாகின்றது.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல், என்னுமடிப்படையில்தான், இந்த ஆழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இப்போதும் தொடர்கின்றன. ஆனால் பத்துவருடங்களாகியும் இன்னும் இலங்கை அரசு பொறுப்புக் கூறவில்லை. சர்வதேச அழுத்தங்களின் மூலம் இலங்கை அரசை அடிபணியச் செய்யலாம் என்பது நமது நம்பிக்கையாக இருக்கும் போது, மறுபுறம், பொறுப்புக் கூறலை தொடர்ந்தும் வெற்றிகரமாக தட்டிக்கழிக்கலாம் என்னும் நம்பிக்கையுடன் சிங்கள ஆளும் வர்க்கம் செயற்பட்டுவருகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால் யுத்தத்தில் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட சிங்கள ஆளும் வர்க்கமானது, யுத்தத்திற்கு பின்னரான கடந்த பன்னிரெண்டு வருடங்களிலும், தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை தோற்கடிப்பதிலும் வெற்றிகண்டிருக்கின்றது. இந்த அனுபவங்களுக்கு சாட்சியாகவே, 2021ஆம் ஆண்டு, தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்துசெல்கின்றது. முன்னைய ஆண்டுகள் போல்!

2010இல், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதிலிருந்து, தமிழ் தேசிய தரப்புகளுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில், ஏராளமாகவே பேசப்பட்டிருக்கின்றது. ஒற்றுமைப்படுத்துவதற்கான ஏராளமான முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் எதுவும் வெற்றியளிக்கவில்லை. இந்த அனுபவங்களுக்கும் 2021 விதிவிலக்காக இருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதில் கூட, தமிழ்-தேசிய கட்சிகளால் ஒற்றுமையுடன் செயற்பட முடியவில்லை. 2021இல் இடம்பெற்ற, ஆக்கபூர்வமான விடயமென்றால் – ஒன்றைத்தான் குறிப்பிட முடியும். அதாவது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளுக்கிடையிலான சந்திப்புக்களைத்தான் குறிப்பிட முடியும். இந்தியாவை நோக்கி செல்லும் நோக்கிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவை நோக்கிச் செல்லும் அணுகுமுறை முற்றிலும் சரியானது. இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் குறித்த சந்திப்புக்களின் மூலமான இணக்கப்பாடு, ஒரு ஆவணமாக வெளியில் வந்திருக்கவில்லை. நாடு கடும்போக்கு ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற நிலையில் – தமிழ் மக்களுக்கு ஓரளவாவது பாதுகாப்பாக இருக்கும் மாகாண சபை முறைமையும் கூட, இல்லாதொழிக்கப்படலாம் என்னும் ஆபத்தான சூழலில்தான், மேற்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அரசியலில் எதிர்வுகூறல்கள் எப்போதுமே சிக்கலானது ஏனெனில் உலக அரசியலில் மாற்றங்களை எதிர்வு கூறமுடியாது. பேராசிரியர் நோம் சொம்ஸ்கி கூறுவது போன்று, நாளைய காலநிலையை இன்று எதிர்வுகூற முடியாது. நிலைமைகள் எப்படியும் மாற்றமுறலாம் ஆனால் அந்த மாற்றங்களின் தன்மையை ஒரளவு அனுமானிக்கலாம். இந்த அனுமானங்களின் அடிப்படையில்தான் அரசியல் ஆய்வுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எந்தவொரு ஆய்வும் முடிந்த முடிவல்ல.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் 2022இல் இடம்பெறப் போகும் நிகழ்வுகளில் முக்கியமானதாக இருக்கப் போவது இரண்டு விடயங்கள்தான். ஒன்று, தமிழ் பேசும் கட்சிகள் என்னுமடிப்படையில் இந்தியாவை நோக்கி முன்வைக்கப்படவுள்ள கூட்டுக் கோரிக்கை முக்கியமானதொரு விடயமாக இருக்கும். இது நடந்தால், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான சூழலில், புதுடில்லியை நோக்கி முன்வைக்கப்பட்ட கோரிக்கையாக இருக்கும். இந்தியா, தொடர்ந்தும் 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் வலியுறுத்திவருகின்ற நிலையில், மேற்படி கோரிக்கைக்கு, ஒரு முதன்மையான அரசியல் முக்கியத்துவமுண்டு.

அடுத்தது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா மீளவும் இணையவுள்ளது. 2024 வரையில் அமெரிக்கா இந்த பொறுப்பில் இருக்கப் போகின்றது. டொனால்ட் ரம் தலைமையிலான குடியரசு கட்சி ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, 2018இல், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறியது. இதனைத்தான் ஜனவரியில் அமெரிக்கா, இலங்கை தொடர்பில் சில விடயங்களை அறிவிக்கவுள்ளதாக சிலர் கூறிவருகின்றனர். ஒபாமா தலைமையிலான, ஜனநாயக கட்சியின் நிர்வாகம்தான் 2012இல், இலங்கையின் மீதான முதலாவது பிரேரணையை நிறைவேற்றியிருந்தது. இந்த நிலையில் மீளவும் ஜனநாயக கட்சியின் நிர்வாகம், மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்படவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமை விடயங்கள், மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க வாய்ப்புண்டு. இந்த இரண்டு விடயங்கள்தான், ஈழத் தமிழர் அரசியலில் செல்வாக்குச் செலுத்தவுள்ள பிரதான விடயங்களாக இருக்கப் போகின்றன. இதற்கப்பால் பலரும் பல விடயங்கள் தொடர்பில் பேசலாம் ஆனால் அவைகள் எவையும் பிரதான விடயங்களாக இருக்க முடியாது. ஏனெனில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் இந்தியாவின் உறுதியான தலையீடுகள் இல்லாவிட்டால், இந்த விடயத்தில் முன்னேற்றங்களை காண முடியாது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டு பிரதான விடயங்களின் அடிப்படையில்தான் 2022இற்கான தமிழர் அரசியல் நகரப் போகின்றது. ஆனால் இந்த விடயத்திலும் அளவுக்கதிகமான கற்பனைகள் கூடாது. இதனை விளங்கிக் கொள்வதற்கு, இந்துசமுத்திர பிராந்தியத்தில் இடம்பெறும் புவிசார் அரசியல் அதிகாரப் போட்டிகளை உற்றுநோக்க வேண்டும். புவிசார் அரசியலை கையாளுவதன் ஊhடாக, தமிழர்கள் வெற்றிகளை குவிக்க முடியுமென்று கூறுவதில் எப்போதுமே இந்தக் கட்டுரையாளர் உடன்படுவதில்லை. ஏனெனில் புவிசார் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பல்ல. ஒரு தரப்பாக இருப்பதற்கான பலமும் தமிழர்களிடம் இல்லை.

இலங்கையை மையப்படுத்தியிருக்கும் புவிசார் அரசியல் என்பது, அடிப்படையில் இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுடன்தான் தொடர்புறுகின்றது. இந்த அடிப்படையில் சிந்தித்தால், இலங்கைத் தீவின் மீதான வெறுப்பும் காதலும், சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் வெளிவிவகார முடிவுகளில்தான் தங்கியிருக்கின்றது. சிங்கள ஆட்சியாளர்கள் இந்திய-அமெரிக்க அதிகார சக்திகளுடன் ஒத்துப் போகும் போது, அது காதலாகவும், முரண்படும் போது – அது வெறுப்பாகவும் வெளிப்படுகின்றது. அன்று, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வெளிவிவகார அணுமுறையினால்தான், இந்திரா காந்தி-இந்தியா, சிங்கள ஆட்சியாளர்கள் மீது வெறுப்புற்றது. அந்த வெறுப்பின் விளைவாக வந்ததுதான், இந்திய-இலங்கை ஒப்பந்தம். எனவே, அதிகார சக்திகளின் காதலுக்கும் வெறுப்புக்கும் இடையில்தான் தமிழர்களின் அரசியல் சிக்கியிருக்கின்றது. இதனை விளங்கிக்கொள்ளாமல் புவிசார் அரசியல் தொடர்பில் சிந்தித்தால், அது ஒரு நல்ல பகல் கனவாகவே இருக்க முடியும்.

இலங்கைத் தீவின் இன்றைய அரசியலை ஒரு ஆட்சி மாற்ற தோல்விக்கு பின்னரான அரசியலாகவே நாம் நோக்க வேண்டும். 2015 ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இந்திய – அமெரிக்க பின்னணி இருந்ததாக பரவலாக நம்மப்பட்டது. தனது தோல்விக்கான காரணமாக, இந்திய உளவுத்துறையின் மீதே மகிந்த முதலில் குற்றம் சாட்டியிருந்தார். இதே 2015, இல்தான், நீண்டகாலமாக இராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியன்மாரிலும் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டது. அமெரிக்கா அதனை ஆதரித்திருந்தது. ஆனால் இந்த இரண்டு ஆட்சி மாற்றங்களுமே தோல்வியில் முடிந்திருக்கின்றன. தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ச கொம்பனி மீளவும் ஆட்சியிலிருக்கின்றது. மியன்மாரில் மீளவும் இராணுவ ஆட்சி ஏற்பட்டிருக்கின்றது. ஆங்சான் சூகி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றார். இவ்வாறானதொரு சூழலில், இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்குமா?

ஏனெனில் இலங்கையின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தால், கடும்போக்கு ராஜபக்ச தரப்பு, சீனாவை நோக்கி அதிகம் சாய்ந்துவிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. இலங்கையின் மீதான சீனாவின் பிடி மேலும் இறுகுவதை தடுக்கும் அதே வேளை, ஆட்சியாளர்களும் அதிகம் சீனாவை நோக்கி சாய்ந்துவிடாத வகையிலும்தான் அமெரிக்க அழுத்தங்கள் பிரயோகிப்படலாம். இந்த அழுத்தங்களின் இறுதி இலக்கு மீண்டுமொரு ஆட்சி மாற்றமாகவும் அல்லது ராஜபக்ச முகாமிற்குள்ளேயே ஒரு அரசியல் சீரமைப்பாகவும் இருக்கலாம். இதற்கிடையில் பிறிதொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, 2024இல் இடம்பெறவுள்ள தேர்தலில், மீளவும் அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிகாரத்தை கைப்பற்றினால், அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியேறிவிடும்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டுதான், 2022இல் இடம்பெறப் போகும் அரசியல் நகர்வுகளை நாம் அனுமானிக்க வேண்டும். ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, நிலைமைகள் எவ்வேளையிலும் நமக்கு பாதகமாக மாறலாம். எனவே நிலைமைகள் சாதகமாக இருக்கின்ற சூழலை கணித்து, அதற்கேற்ப செயற்படுவதன் மூலம்தான், பெறக் கூடியதை நாம் பெற முடியும். ஒரு தனி பாய்சலில் விடயங்களை தமிழர்களால் ஒரு போதுமே வெற்றிகொள்ள முடியாது. ஏனெனில் அதற்கான பலமோ, வாய்ப்புக்களோ, வெளியாரின் ஆதரவோ ஈழத்-தமிழர்களுக்கில்லை. இந்த பன்னிரெண்டு வருடகால அரசியல் அனுபவங்கள் இதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன.

எனவே 2022ம் அண்டு, இதுவரை கற்றுக் கொண்டதைக் கொண்டு செயற்படுவதற்கான முக்கியமான காலமாக இருக்கப் போகின்றது. ஆனால் தொடர்ந்தும் கற்றுக்கொள்ள மறுத்து அல்லது, கற்றுக்கொண்டதாக கற்பனையில் மிதந்து, காலத்தை விரயம் செய்தால் – இந்த ஆண்டும் முன்னைய ஆண்டுகள் போன்றே தோல்வியை தந்து, நம்மை சாதாரணமாக கடந்து செல்லும். கழிந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும், நமது அரசியலின் வீழ்ச்சியை மேலும் உறுதிப்படுத்தும். இறுதியில் தமிழர்கள் இருப்பார்கள் ஆனால் தமிழருக்கான தனித்துவமான அரசியல் இருக்காது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கவில்லை : உரிமத்தை வசமாக்கிக்கொண்டுள்ளோம் என்கிறார் கம்மன்பில

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறாகும். மாறாக 51 சதவீத பங்குகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன வசமாக்கி உரிமத்தினை உறுதிப்படுத்தியுள்ளோம் என்று அமைச்சரவை இணைபேச்சாளரும் வலுசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை (4) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் வாரத்திற்குள் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் குறித்த ஒப்பந்தத்தை கையெழுத்திட எதிர்பார்த்துள்ளோம்.

80 இலட்சம் எண்ணெய் தாங்கிகளை ஒரே சந்தர்ப்பத்தில் களஞ்சியப்படுத்தக் கூடிய திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொகுதியை அமைத்து நூறு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையிலும் , அவற்றில் பலவற்றை இன்னமும் பயன்படுத்தாத நிலைமையே காணப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட மூன்று ஒப்பந்தங்களின் காரணமாக கொலன்னாவை, முத்துராஜவெல ஆகிய இடங்களில் பல பில்லியன் செலவிட்டு பாரிய தாங்கிகளை அமைத்துள்ளோம்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறாகும். 1987 , 2003 ஆம் ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே மேலும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டது. எனினும் நாம் 14 எண்ணெய் தாங்கிகள் தவிர்ந்த ஏனைய 85 தாங்கிகளையும் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

எவ்வாறிருப்பினும் 16 மாதங்களுக்குள் பயன்படுத்தாமல் காணப்பட்ட தாங்கிகளை பயன்படுத்தக் கூடியவையாக மாற்றுவதற்கு எம்மால் முடிந்துள்ளது. அதற்கமைய கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அனுமதியின் ஊடாக அனைத்து தாங்கிகளும் மீள இலங்கைக்கு கிடைக்கப் பெறுகிறது.

அதன் பின்னர் 3 ஒப்பந்தங்களின் ஊடாக 24 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும் , 14 எண்ணெய் தாங்கிகளை இந்திய பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கும், 61 தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் என்பவற்றை இணைத்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள கூட்டு நிறுவனத்திற்கு 50 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 14 தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியுள்ள போதிலும், 85 தாங்கிகளை இலங்கை வசப்படுத்தியுள்ளோம்.

இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த ஒப்பந்ததத்தை கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டது. எனவே மீண்டும் இது தொடர்பில் கலந்துரையாடி ஒப்பந்தத்தினை கையெழுத்திடும் தினம் தொடர்பில் தீர்மானிக்கப்படும். எவ்வாறிருப்பினும் அடுத்த வாரமளவில் ஒப்பந்தத்தை கையெழுத்திட முடியும்.

99 எண்ணெய் தாங்கிகளில் 14 தாங்கிகள் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 24 தாங்கிகளும், எஞ்சியுள்ள 61 தாங்கிகளும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடட் என்ற நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ளதாகும். இது நூறு வீதம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாகும்.

இந்த 61 எண்ணெய் தாங்கிகளில் 49 வீதம் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும், 51 சதவீதம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமும் காணப்படுகிறது. அதற்கமைய இந்நிறுவனத்தின் பெரும்பான்மை நிர்வாகம் இலங்கை வசமே காணப்படுகிறது.

பணிப்பாளர் சபையின் 7 உறுப்பினர்களில் நால்வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே நியமிக்கிறது. அது மாத்திரமின்றி நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிக பங்கு இலங்கை வசமாவதன் ஊடாக அது அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உரியதாகிறது.

அரச நிறுவனமாகும் போது கணக்காய்வாளர் நாயகத்தினால் கண்காணிப்பிற்கு உட்படுத்தவும், போக் குழுவிற்கு பணிப்பாளர் சபையை அழைத்து கேள்வியெழுப்பவும், பாராளுமன்றத்தில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கேள்வியெழுப்பவும் முடியும்.

அதனடிப்படையில் முழுமையாக அரச பொறிமுறையின் கீழ் இயங்கும் ஒன்றாகவே இந்நிறுவனம் அமைந்துள்ளது. மாறாக இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்துடைய நிறுவனமாக அல்ல என்றார்.

Posted in Uncategorized

மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது இலங்கை

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, வாங்கிய கடன்களுக்கான மீள் செலுத்தும் தொகையை செலுத்தவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் 29 நாள் மீண்டும் 202 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் இலங்கை அரசு கடந்த வருட இறுதியில் பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 130 பில்லியன் ரூபாய்களும், ஜுலை மாதம் 213 பில்லியன் ரூபாய்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. கடந்த வருடம் இலங்கை அரசு மொத்தமாக 825 பில்லியன் ரூபாய்களை (ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள்) அச்சிட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை அதன் பொருளாதாரத்தில் நீண்டகால பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன், இலங்கை அரசு முழுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுக்காற்று காரணிகளின் அடிப்படையிலேயே சுசில் பதவி நீக்கம் – நாமல்

ஒழுக்காற்று காரணிகளை கருத்திற் கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் மர்சித்துள்ள ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் உரிய தீர்மானம் எடுக்கப்படும். ரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களில் குறைப்பாடுகள் காணப்படலாம். றைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு.

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.பொது இடங்களில் கருத்துரைக்கும் போது தவறான நிலைப்பாடுகள் தோற்றம் பெறும்.அமைச்சரவை உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று (04) தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

எனது பதவி நீக்கம் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் – சுசில் பிரேமஜயந்த

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.

மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமயந்த குறிப்பிட்டார்.

மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது.

எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்பு முனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சுக்கு நேற்று காலை வருகை தந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதில் வருமாறு

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன ?

பதில் ; தொலைநோக்கு கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கபபட்டுள்ளேன் என்பதை அறிந்துக் கொண்டேன்.இது பெரியதொரு விடயமல்ல.2000ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவுடன் அமைச்சு பதவி கிடைக்கப் பெற்றது.

3 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன்.நான் சட்டத்தரணி நாளை முதல் தொழிற்துறை நடவடிக்கையில் ஈடுப்படுவேன்.

கேள்வி ; பதவி நீக்கம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா ?

பதில் ; இல்லை பதவி நீக்கப்பட்டதாக காலையில் ( நேற்று) ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டேன்.நிறைவேற்று துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விரும்பிய ஒருவரை பதவிக்க நியமிக்கவும்,பதவி நீக்கவும் முடியும்.பதவி நீக்கத்திற்கான காரணம் கூற வேண்டிய அவசியம் தேவையில்லை.

கேள்வி ; பதவி நீக்கத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என கருதுகிறீர்கள்?

பதில் ; கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு சென்றிருந்த வேளை ஊடகவியலாளர்கள் என்னிடம் மரக்கறிகளின் விலை வாழ்க்கை செலவு உயர்வு குறித்து வினவினார்கள்.பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1200 ரூபாவிற்கு விற்கப்படுகிறது அதற்கான காரணம் என்ன என்று வினவினார்கள்.விவசாயத்துறை அமைச்சு தோல்வி,விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை தோல்வி என மக்களின் தரப்பில் இருந்து கருத்துரைத்தேன்.

கேள்வி ; அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்கள் .அவர்கள் ஏன் பதவி நீக்கப்படவில்லை ?

பதில் ; நான் சந்தையில் குறிப்பிட்ட விடயம் அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.கல்வி தகைமைக்கு அமைய நலன்புரி தொழிலாளராக முடியாதவர்களுக்கு கல்வியின் பெறுமதி பற்றி தெரியாது.

கேள்வி ; உங்களை பதவி விலக்கி அரசாங்கம் எதனை செய்ய போகிறது ?

பதில் ; அரசாங்கத்திற்கு நான் சிரேஷ்ட அரசியல்வாதியாக இல்லாமலிருக்கலாம் ஆனால் நான் மக்களுக்கு சிரேஷ்ட அரசியல்வாதி.அரசியலில் எனக்கான கடமையினை முறையாக நிறைவேற்றியுள்ளேன்.பதவி நீக்கம் எதிர்கால அரசியலுக்கான ஆசிர்வாதமாக அமையும்.

கேள்வி ; ஜனாதிபதி இவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்த்தீர்களா ?

பதில் ; அவ்வாறு தீர்மானம் எடுக்காமலிருந்தால் தான் பிரச்சினை.தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்திற்கமைய நாடு எதனை நோக்கி செல்கிறது என்பதை அறிய முடிகிறது.அது தொடர்பிலும், மக்கள் தொடர்பிலும் கருத்துரைப்பது அவசியமாகும்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினை குறித்து கவனம் செலுத்தவே மக்கள் எம்மை தெரிவு செய்கிறார்கள்.மக்களுக்காகவே கருத்துரைத்தேன்.

கேள்வி ; எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும்.

பதில் ; அரசியலில் இருந்து நான் புறக்கணிக்கப்படவில்லை.1991ஆம் ஆண்டு கோட்டை நகரசபையில் இருந்து சுதந்திர கட்சி ஊடாக எனது அரசியல் பயணம் ஆரம்பமானது.கூட்டணியின் செயலாளராக 11 வருடகாலம் பதவி வகித்துள்ளேன்.மூன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் நிர்வாகத்தில் கூட்டணியை ஒழுங்குப்படுத்தியுள்ளேன்.தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றிற்கு தெரிவானேன்.ஒரு முறை கூட தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லவில்லை.என்றார்.

பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீட்சி அளிக்கவும், இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதி பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் இலக்கு ஊடகத்தில் இருந்து தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கரு த்து தெரிவிக்கையில்,

தென் ஆபிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது. அவர் சர்வதேசத்துக்கு விட்டு சென்ற நல்லிணக்க செயற்பாட்டைப் புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு செய்யும் கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

புத்தாண்டில் இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் என்ன? ஆபத்தான சமிக்ஞைகள் என்கிறார் கலாநிதி தயான்

புத்தாண்டில் இலங்கை அரசியல், மற்றும் கட்டமைப்புக்களில் இலங்கை இராணுவம் வகிக்கப்போகும் வகிபாகம் தொடர்பான ஆபத்தான சமிக்ஞைகள் வெளிப்பட்டுள்ளன என்று கலாநிதி தயான் ஜயத்திலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

1931 ஆம் ஆண்டிலிருந்து ஜனநாயக நாடாக அடையாளப்படுத்தி வரும் இலங்கையில் இராணுவம் வெளிப் படுத்தியுள்ள சமிக்ஞைகள் 2022 ஆம் ஆண்டு ஆபத்தான நிலைமைகளை நோக்கியதாக அமைந்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தினது நாட்காட்டியும், நாட்குறிப்பும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட் டவர்களுக்கு பகிரப்பட்டது. இதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் புகைப்படம் பொறிக் கப்பட்டு ஆங்காங்கே பல்வேறுபட்ட பொன்மொழிகளும், பழமொழிகளும் பதிப்புச் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சார்லஸ் டிக்கன்ஸ், மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்க ளினது பொன்மொழிகளும் காணப்படுகின்றன. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, “இலங்கை இராணுவம் வளமான மற்றும் நிலையான தேசத்தை உரு வாக்கி பராமரிக்கும் திறன் கொண்டது’ என்ற வாசகம் பதிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்விதமான வாசகத்தை சீனவோ, ராஷ்யாவோ வெளிப்படுத்தவில்லை. குறி;ப்பாக இராணுவமான மக் கள் சீனப் படையோ அல்லது ரஷ்யா இராணுவமோ கூட வெளிப்படுத்தியது கிடையாது.

அவ்வாறிருக்கையில், இலங்கை இராணுவம் முதன்முதலாக தேசத்தை பாதிப்பது உள்ளிட்ட விட யத்தைக் குறிப்பிட்டுள்ளது. இதுவரையில் இவ்வித மாக பிரஸ்தாபிக்காத இராணுவம் இப்போது தமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதன் பின்னணியை கூர்ந்து அவதானிக்க வேண்டியுள்ளது. அதுநேரம், கிளிநொச்சிக்குச் சென்ற இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அங்கு புதிதாக நிறுவப்பட்ட கோப்ஸ் கட்டமைப்பினரைச் சந்தித்தபோது பசுமை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அது குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளுக்கு வழங்கு வதற்கும், இராணுவம் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளதோடு ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்வின் இலக்கை நோக்கி நகர்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் உரை யாற்றி உள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் எல்லாம் அடுத்த ஆண்டு இராணுவம் எவ்விதமாகச் செயற்பட போகின் றது. அதன் வகிபாகம் என்ன என்ற சமிக்ஞைகளை தெளிவாக வெளிப்படுத்துவனவாக உள்ளது. அதே நேரம், ஜனநாயக நாடொன்றில் இராணுவத்தின் இவ் விதமான பிரதிபலிப்புக்கள் மிகவும் ஆபத்தானவை“ என்றார்.

Posted in Uncategorized

கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது.

வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.