இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்கும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ” தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கினறோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.

எமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி என்றார்.

Posted in Uncategorized

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நா.வின் தலையீட்டை முற்றாக எதிர்க்கின்றோம் – ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை தாம் எதிர்ப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை சந்தித்த போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , புதிதாக நியமனம் பெற்ற அனைத்து தூதுவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல நாடுகளுடனும் இலங்கை அரசாங்கம் வலுவான மற்றும் கணிசமான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழான வெளியுறவுத் திட்டத்தின் போது, ஆபிரிக்க கண்டத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என இலங்கை உணர்ந்தது.

ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, ஆபிரிக்க ஒன்றியத்துடன் உறவுகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்பார்க்கிறது.

தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்ட நாட்டின் கட்டமைப்புத் திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் கட்டமைப்புக்கள் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டிருப்பினும் கூட, நாடு கணிசமான வெற்றியை அடைந்துள்ளன. 30 வயதிற்குட்பட்ட 90 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளும் வழங்கப்படுகிறது என்றார்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது, மக்கள் தொடர்ந்தும் தொழில் புரிவதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் ஆடைத்தொழில் போன்ற பொருட்களின் தன்மையை மாற்றிய தனியார் துறையின் பின்னடைவு குறித்து அமைச்சர் தூதுவர்களுக்கு சுருக்கமாக விளக்கினார்.

பணம் அனுப்புதல் குறித்து குறிப்பிட்ட அமைச்சர் , வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். பல நாடுகளுடனான அரசாங்கங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை 30 வருடகால மோதலினால் அழிக்கப்பட்டதாக விளக்கிய வெளிநாட்டு அமைச்சர், அத்தகைய அளவிலான மோதல்கள் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏனைய நாடுகள் மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும், எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல்களினால் எஞ்சிய பிரச்சினைகளை சமாளிப்பதில் பணியாற்றும் காணாமல் போனோர் அலுவலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து குறிப்பிட்டார்.

அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் , மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பெண் நீதியரசரால் தலைமை தாங்கப்படுவதாகவும், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கி இலங்கை பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை எதிர்த்ததாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தரவுகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஐ.நா. வின் ஒரே நோக்கமாதலால், அதனால் ‘விசேட வழிமுறை’ அமைக்கப்படுவதை அமைச்சர் எதிர்த்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் ஆதாரமாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் புரிந்துணர்வு மற்றும் சர்வதேச மேடைகளில் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஒரு தனிப்பட்ட நாட்டின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு இடமும் நேரமும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஈரானுக்கு ‘தேயிலை’ கொடுத்து கடனடைக்க முஸ்தீபு

ஈரானிடம் எண்ணை பெற்ற கடன் 250 மில்லியன் டொலரை இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்து அடைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.

மாதாந்தம் 55 மில்லியன் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்து குறித்த கடனை முடிக்கவுள்ளதாக அமைச்சது ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.

2022ம் வருடம் அரசாங்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார்.

பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளது.

Posted in Uncategorized

25 மாதங்களில் விவசாய அமைச்சிற்கு 5 ஆவது செயலாளர் நியமனம்

விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளார்.

D.M.L.D. பண்டாரநாயக்க, விவசாய அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐந்தாவது செயலாளராவார்.

இதனிடையே, தாம் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி மூலம் மாத்திரமே அறிவிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

உண்மையை உரைத்தமையே தாம் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் தாம் வினவிய போது, அவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்ததாக சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க கூறினார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக ஷானி அபேசேகர மனுத்தாக்கல்

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய செயற்படத் தவறியதன் மூலம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணையாளர்கள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்மானித்து அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஏனைய பிரதிவாதிகளாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களான தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையின் தலைவர் நிஸங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழு தமக்கு விடுத்த அழைப்பை ஆட்சேபித்து ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்தாக இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாணை மனு மீதான விசாரணையின் போது ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, நிஸங்க சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில், தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்ததாக ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு நீதிமன்றத்தில் வாக்குறுதியளித்திருந்த நிலையில், பிரதிவாதிகள் பரிந்துரைகளை முன்வைத்ததன் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியுள்ளதாக அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் நீதிமன்ற அவதூறு செய்துள்ளதாக தீர்மானித்து, அரசியலமைப்பின் 105 – 3ஆம் சரத்திற்கு அமைய அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு வழக்கை பதிவு செய்து, விசாரணை நடத்துமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளை குற்றவாளிகளாக தீர்மானித்து தண்டனை வழங்குமாறும் ஷானி அபேசேகர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது இலங்கைக்கு பேராபத்து – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்துள்ளார்.

யார் எவ்வாறான யோசனைகளை முன்வைத்தாலும் அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்றும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கடன் பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது மிக ஆபத்தானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார பிரச்சினையை சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்லாமல் உள்நாட்டிலேயே முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும்.

நிபந்தனைகளுக்கு அடிபணிந்து சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றால் நாட்டுக்கு முதலீடுகளோ சுற்றுலா பயணிகள் வருகையோ இடம்பெறாமல் விடலாம்.

அவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்வதற்குச் சென்றால் அவர்கள் கண்டிப்பாக வட்டி வீதத்தை அதிகரிப்பதாகவும் நாணயத்தின் பெறுமதியை குறைக்க இடமளிக்குமாறும் நாட்டின் வளங்களை விற்பனை செய்யுமாறும் ஓய்வூதியக் கொடுப்பனவை குறைக்குமாறும் கூற வாய்ப்புண்டு.

அதுமட்டுமன்றி பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டி வரும். நாட்டின் நெருக்கடி நிலைமையைச் சிறந்த முகாமைத்துவம் மூலம் தீர்க்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். மாணவன் கொலை: சகோதரனால் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தற்கொலை என மூடிமறைக்க முற்பட்ட சகோதரனின் கொலைச் சம்பவத்தை வெளிக்கொண்டுவர  முனைவதன் காரணமாக, இனந்தெரியாத நபர்களினால் பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொடர்பில், யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் சகோதரனால், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று (21) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருட மாணவனாக கல்வி கற்று வந்த மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் என்பவர், 17.11.2020 அன்று, அவர் வாடகைக்கு தங்கியிருந்து கல்வி கற்று வந்த வன்னியசிங்கம் வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள வீட்டில் கொலை செய்யப்பட்டு, தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை பொலிஸார் தற்கொலை என தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் அவரது சகோதரன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்துக்கு கடிதம் மூலம் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, பிரதமரின் பணிப்புக்கமைய, யாழில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த விசாரணைக் குழு, இவ்வாண்டு, மார்ச் மாதம் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், உறவினர்களால் இக்கொலை தொடர்பில் சந்தேகநபர்களும், முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன.

அதாவது, அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு, கதவு திறந்தவர்கள் ஊடாகவே மேற்படி மாணவன் உயிரிழந்த விடயம் தெரியவந்தது.

ஆனால், அதற்கு முன்பாக முற்பகல் 10.30 மணிக்கு சமூக ஊடகத்தில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்ததுடன், அவர்களின் ஊரிலும் பலருக்கு மாணவன் இறந்தமை தொடர்பான தகவல் தெரிந்திருந்தது.

இது தொடர்பான தகவல்களை விசாரணை குழுவுக்கு வழங்கியும் தற்போது அவர்கள் கொடுத்த தகவல்கள் சில இல்லை எனவும் மீண்டும் தகவல் தருமாறும் விசாரணைக் குழுவின் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(19) விசாரணை பிரிவுக்கு சென்று தாங்கள் வழங்கிய தகவல்கள் எவ்வாறு தவறவிடப்பட்டது என பொலிஸாருடன் முரண்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (20) இரவு இனந்தெரியாத நபர்கள் சிலர் பின்தொடர்ந்ததன் காரணமாக அவரது சகோதரன் தனது வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

எனவே, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதுவும் ஏற்படலாம் என்ற அச்சத்தினால் தமக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவரது சகோதரன் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில், நேற்று முன்தினம், (21) மாலை முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

Posted in Uncategorized

“நடக்க கூடாது” என விரும்பியவர்களை தோல்வியுற செய்த நிகழ்வு – மனோ கணேசன்

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. “நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு குறித்து தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரவந பதிவில்,

ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.

“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.

தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.

முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.

நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.

ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை. ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.

இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.

அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன். இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன். எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.