மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல்

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது.

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது ஆண்டு  நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கைகளிலும் கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலமானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச்சூடு விளக்க மறியல் உத்தரவு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று சனிக்கிழமை (25) உத்தரவிட்டார்.

அதே நேரம் திருக்கோவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை  எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கறைபற்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

குறித்த பொலிஸ் நிலையத்தில் சமார் 30 பொலிசார் கடமையாற்றிவருகின்றனர். இந்த நிலையில் இங்கு கடமையாற்றிவரும் மொன்ராகலை மாவட்ட சியம்பலாண்டுவ அத்திமலை பொலிஸ் பிரிவில் வசித்துவரும் பொலிஸ் சாஜன் குமார என்பவர் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான தெயகமவிடம் அனுமதி கோரியிருந்தார். அதற்கான அனுமதியை அவர் வழங்கவில்லை.

இந்த நிலையில் வீடு செல்ல லீவு வழங்காததையடுத்து சாஜனான குமார கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் சம்பவதினம் இரவு இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்வு முடிந்து அங்கிருந்து சென்றனர்.

அதனையடுத்து இரவு சுமார் 11 மணியை நெருங்கி கொண்டிருந்தபோது குறித்த சாஜன் பொலிஸ் நிலைய முன்பகுதி வாசலில் கடமையில் இருந்த ஒருவரின் ரி 56 ரக துப்பாக்கியை பலவந்தமாக பறித்தெடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாகி பிரயோகம் செய்தார். பின்னர் அதனை தொடர்ந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் காரியாலய கட்டிடபகுதியை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோது அங்கு கடமையில் இருந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபில் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து வீதி சோதனை நடவடிக்கையினை பார்ப்பதற்காக அவரது சாரதியுடன் ஜீப்வண்டியில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீண்டும் பொலிஸ் நிலையம் நோக்கி ஜீப்வண்டியில் உள்நுழைந்த போது ஜீப் வண்டியை நோக்கி துப்பாகிதாரியான பொலிஸ் சாஜன் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையடுத்து சாரதி உயிரிழந்ததையடுத்து ஜீவ்வண்டி அருகில் இருந்த கட்டிடத்தில் மோதிநின்றது .

இதனையடுத்து அங்கு இருந்த பொலிசார் தமது உயிரை காப்பாற்ற அங்கிருந்து சின்னா பின்னமாக தப்பி ஓடி கட்டிடங்களில் கதவுகளை பூட்டி மறைந்து கொண்டனர். இதன் பின்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவந்த பெலிஸ் சாஜன் அங்கிருந்த இன்னுமொரு துப்பாக்கியையும் எடுத்து கொண்டு மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

துப்பாக்கி வேட்டுசத்தம் அடங்கியதையடுத்து மறைந்திருந்த பொலிசார் வெளியேறிபோது தம்மோடு கடமையாற்றிவந்த 3 பொலிசார் துப்பாக்கி சூட்டுகாயத்துடன் உயிரிழந்து இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்ததையடுத்து அதிர்ச்சியடைந்ததுடன் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட அனைவரையும் அருகில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களான சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய டி.எம்.துசார கேமந்த புஸ்பகுமார, கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த 30 வயதுடைய அழகரெட்ணம் நவீனன், பிபிலையைச் சேர்ந்த 30 வயதுடைய பிரபுத்த என்பவர்களே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனu;. இதில படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கலந்தர் லெப்பை முகமட் காதா உயிரிழந்துள்ளார்.

இதேவேளை அங்கிருந்து மோட்டர்சைக்கிளில் தப்பி ஓடிய பொலிஸ் சாஜன் மொன்ராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியுடன் சரணடைந்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து அந்தபகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சிரேஸ் பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.

குறித்த சம்பவ இடத்துக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் சென்று சம்பவம் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை பிரேத அறைகளில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பொலிசார் அம்பாறை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளர்.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும் -பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

கடந்த 2004 டிசெம்பர் 26ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்.

இலங்கையில் மட்டும் முப்பத்திஐயாயிரம் பேர் வரையில் கொல்லப் பட்டிருந்தனர். இனியொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

கடற்கோள் நினைவுநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில்,

“இயற்கைப் பேரிடரான கடற்கோளைத் தடுக்க முடியாது போனாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தணிவிக்க முடியும். இலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கண்டல் மரங்கள் அடர்ந்திருந்த கப்புஹென்வல கிராமத்தில் கடற்கோளால் இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருந்தது. ஆனால், அதே மாவட்டத்தில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆழிப்பேரலை ஆறாயிரம் உயிர்களை வாரிச் சென்றுள்ளது. கடல் அலைகளின் சீற்றத்தை 90 விழுக்காடு குறைத்துவிடும் வல்லமை கண்டற் காடுகளுக்கு உண்டு. ஆனால், கடற்கோள் “இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” என்று உலகு அதிரப் போதித்த பின்பும் பட்டும் திருந்தாத பாவிகளாக இயற்கையை நாம் தொடர்ந்தும் சூறையாடி வருகிறோம்.

கடலோரக் கண்டற்காடுகளை நாம் மென்மேலும் கபளீகரம் செய்துவருகிறோம். கடற்கரையோர மணல் மலைகள் தினம் தினம் கொள்ளை போகின்றன. சுண்ணக் கற்பாறைகள் அகல பாதாளத்துக்குத் தோண்டப்படுகின்றன. கடலருகே இறாற் பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. கடலக முருகைக் கற்பாறைகள் அழிக்கப் படுகின்றன. இழுவைப் படகுகள் கடலடி வளங்களை இடையறாது துவம்சம் செய்து வருகின்றன. இப்படி, தலைமுறை தலைமுறையாக வளமூட்ட வேண்டிய கடலையும் கடல் சார்ந்த வளங்களையும் தொடர்ந்தும் சூறையாடி வருகின்றோம். இவற்றுக்கும் மேலாக நாம் வளியில் குவித்துக்கொண்டிருக்கும் கரிக்காற்று பூமியைச் சூடுபடுத்துவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

மிகப்பெரும் மனிதப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எதுவுமே நடவாதது போல உறங்கிக் கிடக்கும் கடல் இன்னொரு முறை பொங்கிச் சீறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. இன்னுமொரு தடவை கடற்கோள் சூழ்ந்தால் அது ஏற்படுத்தும் அழிவு முன்பைவிட பன்மடங்கானோரைப் பலியெடுக்கும் பேரழிவாகவே அமையும். எனவே, கடற்கோளின் படிப்பினைகளை ஏற்று இயற்கையோடு இசைவுற வாழ்ந்து, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோமெனக் கடற்கோள் நினைவுநாளில் உறுதியேற்போம். இதுவே கடற்கோளில் மாண்ட நம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் தீ பந்த போராட்டம்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக சென்று சுன்னாகம் சந்தியில் நிறைவடைந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை தொகுதி அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரனின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் குறித்த தீ பந்த போராட்டத்தில் விவசாயிகளும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருக்கோவில் பொலிஸ் நிலைய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் உயிரிழப்பு

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நேற்றிரவு (24) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

திருக்கோவில், கல்முனை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் இருவரும் சாரதி கான்ஸ்டபிள் ஒருவருமே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சார்ஜன்ட் தனது பிரத்தியேக வாகனத்தில் அத்திமலை பகுதிக்கு சென்றுள்ளதுடன், T-56ரக இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 ரவைகளுடன் அவர் அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கைது செய்யப்பட்ட சார்ஜன்ட் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

தனியார் காணிகளை படைத்தரப்பிற்காக அபகரிக்கத் திட்டம்

யாழில் பாதுகாப்பு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை பகுதி 38 கீழ் அரச காணிகளாக்கி பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வலி.வடக்கு மீள் குடியேற்றக் குழுவின் தலைவர் சண்முகலிங்கம் கஜீவன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்காக பல தனியார் தேவைக்காக பல தனியார் காணிகள் அளவிட நில அளவைத் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அதனை தந்திரமான முறையில் கையாள்வதற்கான காணி சுவீகரிப்பு பகுதி -5இன் கீழ் அளவிடும் காணிகளின் விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் மக்கள் செல்ல முடியாத உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அளவீடு செய்வதற்காக காட்சிப்படுத்தப்படும் விவரங்களை மக்கள் பார்வையிட முடியாத வகையில் காட்சிப்படுத்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமல்லாது குறித்த விடயம் நடை பெற்று முடிந்ததாக பகுதி 38 இன் கீழ் தனியார் காணிகளை அரச காணிகளாக்கும் முயற்சிகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்று எதிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதோடு அதனை அறிந்து கொள்ளவும் முடியாது.

அகவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்தி காணி சுவீகரிப்பு வர்த்தமானியை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஐ. நா.வின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது; 17 நாடுகளின் தூதுவர்களிடம் பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமூகமான முறையில் இணைந்து செயல்படும் எனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ. எல். பீரிஸ், நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நாவின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது, எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.

தகவல்களை சேகரிப்பதற்காகவென விசேட பொறிமுறை ஒன்றை அமைப் பதற்காக ஐ. நா. முன்னெடுக்கும் முயற்சி களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.

அந்தத் தகவல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான வழிகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இவ் வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக் களிலுள்ள உண்மையை அறிந்துகொள் வதற்கான வாய்ப்புக்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 17 நாடு களின் தூதுவர்களை நேற்றைய தினம் சந்தித்த போதே அமைச்சர் பீரிஸ் இத னைத் தெரிவித்தார். குறிப்பிட்ட தூதுவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதியி டம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கொடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த தூதுவர்களை வரவேற்ற அமைச் சர் பீரிஸ், இந்த நாடுகள் ஒவ்வொன்றுட னும் நெருக்கமான உறவுகளைப் பேண அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், தடுப் பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் செய லகம், விசாரணை ஆணைக்குழுக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு போன் றனவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்த அமைச்சர், ஐ. நாவுடன் சுமூகமான முறையில் இணைக்கமாகச் செயல்படுவதற்கே அரசாங்கம் விரும்புவ தாகவும், அதிகமான தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன்

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் முகநுாலில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மனோ கணேசன்,

“எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கேபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது. இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.ஆகவே, இவரது செயலணியின் பெயரை “ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்” என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ மருத்துவ இடமாறுதல் வாரியத்தின் அனுமதியின்றி சிறப்பு மருத்துவர்களின் நியமனப் பட்டியலைத் தொகுத்தல், 2022ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் பட்டியலை வெளியிடாமை, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.