அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன உண்டு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும் உள்ளது. இத்தகைய சுதந்திரமும், பாதுகாப்பும் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்.

இதனை விடுத்து விசாரணை என அழைப்பு விடுப்பது, தங்களை இரகசிய பொலிசாரும், புலனாய்வாளர்களும் பின்தொடர்கிறார்கள் என்று உணரச் செய்வதும் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இது தொடரக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆட்சியாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் அரசியல் கைதியான வவுனியாவை சேரந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கைதியாக இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்கள் கழுகு கண்களோடு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த பின்னர் விடுதலையானோர் தன் குடும்ப உறவுகளோடு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நடமாடி விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் உணர்வுக்குள் அவர்களை தள்ளுவதும், விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் மகிழ்வை இல்லாதொழித்து திறந்தவெளி சிறைக்குள் நாம் இருக்கின்றோம் எனும் மனநிலையை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட்டோம் என வெற்றிவிழா எடுப்பவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் தன் குடும்ப உறவுகளோடு வாழ்வை தொடர அனுமதிக்க வேண்டும். இது மறுக்கப்பட்டு நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? போர் வெற்றி என்பது மக்களை அடிமையாக்குவதல்ல.

மக்களது சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்வதாகும். அது இன்றும் முன்னாள் அரசியல் கைதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதனையே விசாரணைக்கான அழைப்பு வெளிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநா மனித உரிமை ஆணையகம் வருடாந்த திருவிழாவை நடத்துவதோடு நின்றுவிடாமல் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

Posted in Uncategorized

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு ஒத்துழைக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன்

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  தாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும்  ஒற்றமைபட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால், அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

ஆகவே மாவை,  சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து, இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது  கோரிக்கை எனவும், சித்தார்த்தன் கூறினார்.

பாதீடு தோல்வி: வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் பதவி பறிபோகும்?

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றைய தினமும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றைய தினம், தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு  வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால்  வரவு – செலவுத் திட்டம்  மீண்டும்  தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு  செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, புதிய தவிசாளராக என். செல்வேந்திரா, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரு வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எரிவாயு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு

உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் கூடவுள்ளது.  பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

இதே நேரம்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG) சிலிண்டர் தீ விபத்துக்கு உள்ளாகின்றமை,​ைவெடிப்புகள் ஏற்படுகின்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையில் செங்கோல்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

Posted in Uncategorized

மின்சாரத் தடை – விரைவில் மின்சாரம் வழங்கப்படும்…!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை, காலி, இரத்மலானை, குருநாகல், அதுருகிரிய, பியகம, ஹபரணை, பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரத் தடை இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

கேஸ் வெடிப்புச் சம்பவங்கள்: மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பரிந்துரைகளை பெற நடவடிக்கை

சயைமல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் வெளி மாவட்டங்களிலிருந்து 20 மாதிரிகள் நேற்று (28) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைசச்ர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்றைய தினமும் (28) சில பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆளுகின்றது அரசு – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது, முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும், திருகோணமலையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் ஒரு போராட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இதன் காரணமாக இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாமல் நாங்கள் நிற்கின்றோம். தெற்கிலே இறந்தவர்களைத் தாராளமாக நினைவுகூரக்கூடிய நிலை இருக்கும் போது வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களாகிய நாம் எமக்காக இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது.

இந்த அரசிற்குச் சர்வதேசத்தினால் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அதன் நிமித்தம் அச்சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கி அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பல குற்றச் செயல்களைச் தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்படுத்தி வந்த அந்தத் தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமித்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் புதிய அரசியலமைப்பிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையிலே சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்றே அது உருவாகும் என அறிய முடிகின்றது.

13வது திருத்தச் சட்டம் வடகிழக்கிற்கு மாத்திரம் தேவையானது அல்ல. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதனூடாக மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் தான் வடகிழக்கு மாத்திரம் அல்ல தெற்கில் கூட பொலிஸ் அதகாரங்களை அந்தந்த மாகாணங்கள் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே சர்வதேசம் இந்த நாட்டில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய நிகழ்விற்கான தடைவிதிப்பினைக் கூட சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவே சர்வதேசம் இந்த நாட்டின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் எமது போராட்டம் தொடர்ச்சியாக இருக்கும். நாங்கள் எப்போதும் ஊடகவியலாளார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சித்தார்த்தன் தலைமையில் மாவை இணைவது பெருமகிழ்ச்சி – ரெலோ தலைவர் செல்வம்

சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் ஒருமித்த செயற்பாடு குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற வேண்டும். அந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து கொண்டுள்ளோம். இதன் முதல்கட்ட கலந்துரையாடல் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்றது. அதற்குப் பெரும் ஆதரவினை அனைவரும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் சித்தார்த்தன் அவர்களே எங்களோடு முனைப்பாக தொடர்ந்தும் செயலாற்றினார். மற்ற கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கும் கூட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் அளப்பரிய பங்களிப்பை செய்தவர் சித்தார்த்தன்.

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் வகையிலே கடந்த சில மாதங்களாக சந்திப்புகள் நடைபெற்று வருகின்றதன. இதில் காத்திரமான வெற்றியும் கண்டிருக்கிறோம். தற்போது பல கட்சி தலைவர்கள் சேர்ந்து முன்னெடுக்கும் நிலைமைக்கு இது வளர்ச்சி கண்டுள்ளது.

இதில் பல கூட்டங்களில் மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்துகொண்டு இருந்தாலும் இறுதி நேரங்களில் பின்வாங்கும் போக்கினை கடைப்பிடித்து இருந்தார். அதற்கான காரணத்தை இப்போதுதான் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். இதனை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்தால் இன்னும் துரிதமான முன்னேற்றத்தை இவ்விடயத்தில் அடைந்திருக்க முடியும்.

இருப்பினும் இந்த விடயங்களை சித்தார்த்தன் அவர்களும் இணைந்தே முன்னெடுத்திருந்தார் என்பதை மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.

சித்தார்த்தன் அவர்கள் தலைமை தாங்கும் ஒருமித்த நிலைபாட்டு முன்னெடுப்பில் மாவை சேனாதிராஜா கலந்து கொள்ளவதில் விருப்பத்தை தெரிவித்திருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நாம் வரவேற்கிறோம்.

முன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவருக்கே, இவ்வாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 1ஆம்  திகதி, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 01ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் அமைந்துள்ள 3ஆம் மாடிக்கு  சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized