Category: தற்போதைய செய்திகள்
ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இணைப்பாளர் த.கனகராஜ் மேலும் கூறியுள்ளதாவது,
“முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் முல்லைத்தீவு தலைமைபொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன. மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் ஊடகவியலாளர், இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதேபோன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் படகு விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக்கருவிகளும் பறிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலைசெய்ய வலியுறுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை விடுதலைசெய், இராணுவமே ஊடகவியலளார்கள் மீது தாக்குதல் நடத்தாதே, கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய இராணுவத்தினரை கைதுசெய், அரசே ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, அரசே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்போது ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்ற ஊடகவியலாளர்கள், காந்திபூங்காவில் காந்தி திருவுருவச்சிலைக்கு அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!
விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.
(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;
(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;
(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை
(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;
(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;
(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;
(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;
(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;
(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.
– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.
– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.
– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.
– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84
காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்; பாராளுமன்றில் விக்னேஸ்வரன்
“நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தியவர்கள் கூறினார்கள். மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாளன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
போர் முடிந்த பின்னரும் வருடாவருடம் படையினருக்கு கூடிய நிதிகளை பாதீட்டில் ஒதுக்கிவருவது எதற்காக? மாலைதீவோ இந்தியாவோ எமக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத்தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவா இத்தனை பெரும் தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள் என்றும் கேட்டார்.
இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?, ரூபாய் 30 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒரு சிறிய நாடான இலங்கை பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது. அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர்தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.
பாதீட்டால் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை. நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்களுக்கு சமஷ்டி முறையிலான ஓர் அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.
என் பேச்சை முடிக்க முன் உறுப்பினர்களுக்கு ஒரு விடயத்தை நான் நினைவுபடுத்த வேண்டும். இந்த வாரம் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதிவிசேட தினம்.
இந்தத் தருணத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயதம் தாங்கிய சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.
‘நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றன. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால், தோல்வியுற்றார். ஆனால், யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?’
இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!” அகிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய (நேற்றைய) பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.
முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்:
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவுப் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் என்பவரையே நான்கு இராணுவத்தினர் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுத்த சமயம், ஏன் எடுக்கின்றாய் என கேட்டே ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமானசம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிசன்னமாகியிருக்கின்றார்.
வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பபட்டது
மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
03 2 வவுனியாவில் தீபம் ஏற்றி அஞ்சலி: சில ஆலயங்களில் மணியோசையும் எழுப்பபட்டதுஅதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் மன்னாரில் கைது
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற வகையில் அங்கீகரிக்கப்படவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி
இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
எனினும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார்.
மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நன்மை தரக்கூடிய அனைத்து செயற்திட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் பகிரப்படும் போது தொழிலாளர்கள் மத்தியில் அது பகிரப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ராமேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்தார்.
இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்
இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் (27.11) இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இராணுவக் கெடுபிடிக்கு மத்தியிலும் அஞ்சலி செலுத்திய பின் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.