திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை

தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே பெரும்பான்மையினரான பெண்களை அவமானப்படுத்தி விட்டு, இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவுக்கு எதிராக பெண்ணின வெறுப்பு மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளை, அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக சபையில் பிரயோகித்துள்ளார். இந்நாட்டு பெண்களை அவமானப்படுத்தும்முகமாக சபையில் சொல்லப்பட்ட இக்கருத்துகளை, பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய அமைப்பின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபிள்ளை மற்றும் எதிரணி எம்பி தலதா அதுகோரள ஆகியோர், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் சென்று கடுமையாக கண்டித்து தமது உரிமைக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மாத்தளை மாவட்ட எம்பி ரோகினி குமாரி விஜேரத்ன உரிமை கோரிக்கை எழுப்பி, தன்னையும், இந்நாட்டு பெண்களையும் நிமிர்ந்து நின்று மகிமைப்படுத்தியுள்ளார்.

அருவருக்கதக்க விதத்தில், பெண்களை அவமானப்படுத்துவதும் பின்னர் அவற்றை விளையாட்டு, கேலி, கிண்டல், அரசியல் என்ற பெயர்களில் மூடி மறைப்பதும், நமது சமூகத்தில் வழமையாக நடைபெறுகிறது. இதுவே அன்று அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி வாயில் இருந்தும் பாராளுமன்ற சபையில் வெளிப்பட்டது.

தனிப்பட்ட உரையாடல்களில் இத்தகைய கருத்துகள் கூறப்படுவதையும்கூட அங்கீகரிக்க முடியாது. ஆனால், சிலவேளைகளில் அவை தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவோரின் நட்பு நடத்தைகளாக பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கும் இன்றைய நவீன பெண்கள் முறையாக உரிய பதிலடிகளை அளிக்கின்றனர். ஆனால், இவை பகிரங்கமாக, அதுவும் நாட்டின் அதியுயர் நாடாளுமன்ற சபையில் கூறப்படும்போது, நிலைமை வரம்பு மீறுகிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

இன்று பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய பெண் எம்பி உறுப்பினர்களும், நன்னடத்தை கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களை கண்டித்திருப்பது, இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களை உலுக்கி விட்டு அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் நல்விளைவை ஏற்படுத்தி உள்ளதாவே நான் நம்புகிறேன்.

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி மறுப்பு

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், சில நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த முடியாது என இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23 ஆகிய திகதிகளில் வழங்கிய தடை உத்தரவை திருத்தி அமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியாதென நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமெனவும் முல்லைத்தீவு நீதிமன்றம், மாவீரர் நாள் தடை உத்தரவை திருத்தியமைத்துள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் நேற்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நேற்று (26) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமென்பதுடன், இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

மாவீர்களின் கல்லறைகளை சிதைத்து நாடே வெட்கத் தலைகுனியும் அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது – ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல. என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நினைவு கூர்தல் என்பது எமது உரிமையாகும். இன்றைய நிலையில் அவ் நினைவுகூறும் உரிமையினை இராணுவ பிரசன்னங்கள், அடாவடித்தனங்கள் ஊடாக தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு மேலாக பொலிசார் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தினை பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம். அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது. இன்றும் இந் நாட்டில் எமது இனம் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்றது.

இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்தடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது. உலகில் எங்குமில்லாத வன்முறை எண்ணம் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது. எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களைச் அரச படைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும். அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியவில்லை என்பதை கொடூரமாக யுத்தத்தினை முடித்து 12 ஆண்டுகளின் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு உணர்ந்தே வருகின்றது. இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும்.

போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ அவர்களது தேசியத்திற்கு எதிராகவோ போரிடவில்லை. எமது இனத்தின் அடையாளங்களும் நிலமும் பூர்வீகமும் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே போராடினர். எம் மூதாதையர் அகிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அகிம்சை வழியையும் ஜனநாயகப் போராட்டத்தினையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப்போராட்டம் ஆயுத மயப்படுத்தப்பட்டது.

அதில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கடமையும் தெய்வீகக் கடமையும் ஆகும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஈகைச்சுடரினை ஏற்றி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகத்துறைக்கே நீதிவழங்க முடியாத ஜனநாயகமே நாட்டில் உள்ளது – பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை(25) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தொரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை பாதுகாப்பதும் ஊடகர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டில் போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்பாகவும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எதற்குமே நீதி கிட்டவில்லை.

தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன்(2000);, ஐயாத்துரை நடேசன் (2004);, தர்மரட்னம் சிவராம்(2005);, சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (2007), செல்வராஜா ரஜீவர்மன் (2007), லசந்த விக்கிரமதுங்க(2009), பரணிரூபசிங்கம் தேவகுமார்(2009) என நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

உதயன் மற்றும் மகாராஜா ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறாக ஊடகத்துறை மீதான அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிலேச்சத்தனமான கருத்துச் சுதந்திர மீறல்களும் இந் நாட்டின் கறை படிந்த வரலாறுகளாகக் காணப்படும் போது இந்த நாட்டில் இவை எவற்றுக்காவது நீதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்க விரும்புகின்றோம்.

ஊடக படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயமாக அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை காணப்படுகின்றது. ஆனால் தங்களது அரசாங்கத்தின் கடந்த ஆட்சியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் அவை அனைத்தினதும் கோவைகளும் இலாவகமாக முடப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் எந்த நீதியும் கிட்டாது தவிக்கின்றனர்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில் கணவன் ஊடகத்துறையில் பணியாற்றியதன் காரணமாக குடும்பத்தலைவனை இழந்து பல தாய்மார்கள் வாழ்வாதாரம் கூட இன்றி இன்னல் படுகின்றனர். தங்களது குடும்பத்தினை வாழ்வாதார ரீதியாகக் காப்பாற்ற வேண்டிய கணவனை, தந்தையை இழந்த நிலையில் மெனிகளாக நடைபிணங்களாக அழைகின்றனர். எனவே ஒவ்வொரு இழப்பினையும் சரியாக ஆராய்ந்து நீதியுடன் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும்.

அரசாங்கம் இந் வரவு செலவுத்திட்டத்திலே கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களுக்காக நூறு மில்லியன்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது குடும்பங்களுக்கு நிதியைப் பெற்றக்கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை வழங்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை உணர்ந்து செயற்படவில்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் வாழ்வாதாரமும் எவ்வாறாக அரசாங்கத்தின் கவனிப்பின்றி காணப்படுகின்றதோ அதுபோன்றே இழப்புக்களைச் சந்தித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை அரசியல் ரீதியில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான நிலைமைகளே பல தசாப்தங்கள் கடந்துள்ள போதும் ஊடகர் படுகொலை விசாரணைகள் கிடப்பில் கிடப்பதற்கான காரணங்கள் ஆகும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில், கடந்த நல்லாட்சிக்காலப்பகுதியில் நீதி விசாரணைகளுக்குப் புறம்பாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டில் குழு ஒன்று அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் நல்லாட்சியில் இடையில் நிலவிய குறுக்கீடுகளும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பும் அந் நடவடிக்கைகளை நிராகரித்துவிட்டன.
அடிப்படையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நீதி விசாரணையில் தலையீடு இன்றி மேலும் ஓர் செயற்றிட்டமாக வாழ்வாதார இழப்பீடு அளிக்கும் பொறிமுறையை ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அடிப்படையில் நேற்றுக் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக அமையத்தினருடன் நான் கலந்துரையாடிய போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

ஊடகவியலாளர்களைப் பொருத்தளவில் அவர்கள் மக்களின் நலன்களுக்காக தினமும் உழைப்பவர்கள். அவர்கள் இந்த கொவிட் காலப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறுபட்ட இடர்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு சலுகையளிக்க முன்வரவேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தில் இணைய இணைப்புக்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தில் கட்டணச்சலுகையளிப்பு போன்றவற்றினை ஏற்படுத்துவது சிறந்ததாகும்.

மேலும் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரியும் ஆசிரிய பீட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துமாறு கோருகின்றேன். பிராந்திய செய்தியாளர்களுக்கு இலகு கொடுப்பனவு மோட்டார் சைக்கிள் திட்டங்களை அமுல்படுத்தவேண்டும். நோய்வாய்ப்படும் ஊடகவியலாளர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டம் ஒன்றை முன்வைக்கக் கோருகின்றேன். இன்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் தனபாலசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் போன்றோர் இன்னல் படுகின்றனர். இவர்கள் போன்றவர்கள் நியாயத்திற்காக ஆற்றிய பங்களிப்பை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், ஊடகத்தறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். இன்றும் வடக்குக் கிழக்கு ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இது அவர்களது கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தையும் தகவல் பெறும் சுதந்திரத்தையும் மீறுவதாகும். கடந்த மாவீரர் தினத்தில் உதயன் பத்திரிகை படம் ஒன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. இதேவேளை மாவீரர் தின காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் தொழில் உரிமையினைப் பறிக்கும் வகையில் பொலிசாரினால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

இந் நிலைமைகள் அவர்களது தொழிலைச் சிக்கலுக்குள் தள்ளியள்ளது. எனவே ஊடகத்தறையின் சிறப்பு உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது இந்த நாட்டில் ஜனநாயகம் ஒரளவுக்கு ஏனும் வாழ்வதற்கு அவசியமானது. இவை குறித்து இந்த பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும். என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்தானந்தவினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடந்த அரசாங்கம் இறுதி வருடத்தில் 3.7 பில்லியன் ரூபா செலவிட்டிருப்பதாகவும், ஆனால் 2020ஆம் ஆண்டில் தற்போதைய ஜனாதிபதி 1.7 பில்லியன் ரூபா மாத்திரமே செலவினங்களுக்காக பயன்படுத்தியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்கு மாத்திரம் 2,000 மில்லியன் ரூபா நிதி செலவு செய்திருந்தோம். அதன் பின்னர் உணவு உற்பத்திக்கு 500 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம். 2019ஆம் ஆண்டு கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 4,000 மில்லியன் ரூபா செலவு செய்திருந்தோம்.

அதன்படி பார்க்கும்போது பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு பாரியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கிராம சக்தி வேலைத்திட்டம் நாடுபூராகவுமுள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால், இன்று அந்த வேலைத்திட்டங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. அவ்வாறாயின் அந்த வேலைத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக நீக்கப்படும்.

சிறுநீரக நோயாளர்களுக்காக கடன் வாங்காமல் நன்கொடை பெற்று பொலனறுவையில் வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை.

இதுவே இன்றைய நிலைமை. சுற்றுாடல் பாதுகாப்புக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், 5 ஆணைக்குழுக்கள் போன்றனவும் செயற்பட்டன. இவற்றுக்காகவும் நிதி செவிடப்பட்டிருந்ததது.

2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அதற்கு முன்னர் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நடவடிக்கைகள் இடம்பெற்றன. பண்டாரநாயக்கவுக்கு பின்னா் அரசாங்கத் தரப்பில் தவறு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்கு கடந்த ஜனாதிபதி ஒருவரே நடவடிக்கை எடுத்திருந்தாா் என்பதை மறந்துவிடவேண்டாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கும் தனியான விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. ஆகவே, 3.7 பில்லியன் ரூபா நிதியை அநாவசியமாக செலவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறோம்.

எங்களுக்கு யாரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால், நாங்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தோம். ஆனால், அதிகாரத்தை பெற்றுக்கொண்டு முழு அதிகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கே வழங்கினார்கள்.

மக்களின் நம்பிக்கைக்காகவே 2018 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் பிரதமராக்கினாா் என்பதை மறந்துவிட வேண்டாம். அதனால், இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது அவதானமாக இருக்க வேண்டும்.

கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 200 வாகனங்களை பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார். ரோஹித அபயகுணவர்தன அவரின் உரையில் கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி 386 வாகனங்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கின்றாா். இந்த கருத்தில் எது உண்மை.

தற்போதைய ஜனாதிபதி 3 வாகனங்களையே பயன்படுத்துகின்றாா். அது சிறந்த விடயம். ஆனால், வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வரையறைகள் இருக்கின்றன. இது யாவரும் அறிந்ததே. எதுவும் தெரியாத குழந்தைகளை போன்று பொய்கூற கூடாது.

இவ்வாறான கருத்துகளை முன்வைக்கும்போது பொறுப்புடன் சிந்தித்து உரையாற்ற வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் பேசினால் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உரையாற்ற முடியும்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறான விடயத்தை தெரிவித்தது இது முதல் தடவையல்ல. ஓரிரு தடவைகளில் இதனை நிறுத்தினால் பிரச்சினையில்லை. நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவருக்கு சேறு பூசும்போது எங்களால் பொறுமையாக இருக்க முடியாது.

நாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மயிலைபோன்று ஆடிக்கொண்டிருக்கினறாா். மஹிந்தானந்த சேற்றை கிளறிக்கொண்டிருக்கிறாா்.

தொடர்ந்து கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தாக்க வேண்டுமென்றால் நேரடியாக மோதுங்கள். எங்கள் கட்சி தலைமையின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.

அவ்வாறு செய்றபட்டால் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். இவ்வாறான கருத்துகள் தொடர்பில் சபாநாயகரும் கவனம் செலுத்த வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்!

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வதேச நாடுகளுடன் பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இதில் 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் மிக முக்கியம்.

எந்த அரசு வந்தாலும் அதனை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும். அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படக்கூடாது.

அவ்வாறு இன்னும் நடக்கவில்லை. நடந்தால் அது நாட்டுக்கு உகந்த விடயமாக இருக்காது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும்-திருத்திய கட்டளையை வழங்கிய நீதிமன்று

“இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு” என்று குறிப்பிட்டு இன்றைய தினம் ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வுக்கு எதிரான கட்டளையை இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாவீரர் நாள் தடை உத்தரவுகளை நீக்கக்கோரி நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக விண்ணப்பிக்கப்பட்டு விசாரணைகள் இன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான இந்த தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகனேசன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன்,வி.எஸ்.எஸ் தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராசா,க.கணேஸ்வரன் ஆகிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் ஆயராகி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றுக்கு எடுத்துரைத்தனர்

இதனடிப்படையில் குறித்த திருத்திய கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ளார்.

குறித்த கட்டளை தொடர்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவிக்கையில்,

நவம்பர் மாதம் 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் ஏழு வெவ்வேறு காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் மூலம் வழங்கப்பட்ட கட்டளைகள் அதாவது எதிர்வரும் நவம்பர் மாதம் 25ம் திகதி இன்று முதல் 27ம் திகதி வரை மாவீரர் நினைவுகூரல்களை நடாத்த கூடாது என்று செய்த விண்ணப்பத்தின் மீது நீதிமன்றம் தடைக்கட்டளையை வழங்கியிருந்தது.

அந்த தடைக்கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் சார்பில் இன்றைய தினம் நகர்த்தல் பாத்திரம் அழைத்து மன்றில் தோன்றி எங்களுடைய சமர்ப்பனங்களை செய்தோம். அந்த சமர்ப்பணங்களை செவிமடுத்தகௌரவ நீதிபதி, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றினுடைய சின்னங்கள்,இலட்சினைகள் அல்லது அவ் இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவு படுத்தக்கூடியதாக நினைவு கூரல்களை மேற்கொள்ளாமல் இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும். இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு ஏற்கனவே வழங்கிய மாவீரர் நிகழ்வு கொண்டாடுவதற்கு எதிரான கட்டளையை, இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து கட்டளையாக்கியிருக்கிறார்” என்றார்.

Posted in Uncategorized

இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற மாவீரர் தினமான இன்றைய தினம் மாவீரர் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழக மாணவர்களினால் மலரஞ்சலி செலுத்தி முழந்தாளில் மாணவர்கள் இருந்து வீரமறவர்களுக்கு தமது ஆத்மார்த்தமான அஞ்சலி செலுத்துகின்றனர்.

குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் இராணுவத்தினரும் காவல்துறையினர் இராணுவ காவல்துறை புலனாய்வுப் பிரிவினரும் மாணவர்களை அச்சுறுத்துகின்ற வகையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மாணவர்கள் ஆத்மார்த்தமான முறையில் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இலங்கை காவல்துறையினருக்கு பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தொடரும் சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பயிற்சியினை மீள் பரிசீலனை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டிலிருந்து அழைப்பு விடுத்து வந்த எம்மைப்போன்றவர்களுக்கு கிடைத்த ஓர் வெற்றியாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இலங்கையில் பல தசாப்தங்களாக சித்திரவதையானது குறைவடையாமல் தொடர்ந்திருக்கின்றது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்தப் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்ட்கொட்லாந்தில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். 2016 இலங்கையானது பெயர் போன சித்திரவதை இடத்திற்குப் பொறுப்பாக இருந்த ஓர் காவல்துறை அதிகாரியை ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான குழுவின் கூட்டத்திற்கு தனது பிரதிநிதியாக அனுப்பும் துணிவைக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டதில் இலங்கை அதிகாரிகள் சித்திரவதை இடம்பெறுவதை மறுத்ததுடன் யுகேயினுடைய பயிற்சி காரணமாக நம்பகத்தன்மையையும் பெற்றுக் கொண்டார்கள். இந்தப் பயிற்சிகளுக்கு மத்தியிலும் இலங்கையில் காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் சிததிரவதை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சர்வதேச சமூகமானது திட்டமிட்ட மீறல்களை நிறுத்த உதவி செய்யாத ஆதரவுப் பயிற்சிகள் மற்றும் ஆளுமைகளைக் கட்டியெழுப்பும் செயற்திட்டங்களுக்கு மட்டுமே தொடர்ந்தும் நிதி வழங்குவதை விடுத்து சித்திரவதைக்கான பொறுப்புக்கூரல் தொடர்பில் கவனத்தை செலுத்துவது அவசியமாகும்”

எத்தேர்தல் இடம் பெற்றாலும் பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நாம் நிர்வாகியாக்கியுள்ளமை கவலைக்குரியது. வியத்மக உறுப்பினர்களை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. இனி வரும் காலங்களில் எத்தேர்தல் இடம் பெற்றாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது என பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஷிராஸ் யூனுஸ் தெரிவித்தார்.

 

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாடு பெரும் பாதிப்புக்களை நோக்கி நகர்கிறது 51 வருட கால பழமை வாய்ந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை  50 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடியுள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினை தற்போதைய காலத்தில் மாத்திரம் தோற்றம் பெற்றதல்ல 51 வருட காலமாக பல்வேறு பிரச்சினைகள் சமூகத்தின் மத்தியில் காணப்பட்டது. ஆனால் எந்த அரசாங்கமும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு  மூடவில்லை.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் விற்கப்பட்டுள்ளதா என்று மக்கள் எண்ணும் அளவிற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் முரண்பட்டதாக காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்படுவதை காணும் போது பெரும் வேதனையடைகிறேன்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  நிர்வாகியாக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமிக்க அரசாங்கத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களிடம் கோரவில்லை. ஏனெனில் அதன் விளைவு எந்தளவிற்கு பாரதூரமானதாக அமையும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகரை அழகுப்படுத்தும் விதமான சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர் யுவதிகள் தற்போது நாட்டை விட்டு வெளியேறுவதற்காக குடிவரவு,குடியகழ்வு திணைக்களத்தின் முன்பாக வரிசையில் உள்ளார்கள் அந்தளவிற்கு நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருட காலத்திற்குள் மக்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. வியத்மக அமைப்பினரை மக்கள் மத்தியில் காண்பது மிகவும் அரிதாகவே உள்ளது.

இராஜாங்க அமைச்சுக்களை பெற்றுக் கொண்டு மகிழ்வுடன் உள்ளார்கள். மக்கள் கற்றவர்களை அல்ல புத்திசாலிகளை பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்ய வேண்டும்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் வருடம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எத்தேர்தல் இடம் பெற்றாலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன படுதோல்வியடையும்.

எந்த அரசாங்கத்திற்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை இனி வழங்கமாட்டார்கள் தேசிய அரசாங்கமே இனிவரும் காலங்களில் தோற்றம்பெறும் என்றார்.

Posted in Uncategorized