அரசின் 2/3 பெரும்பான்மை சுதந்திர கட்சியிலேயே தங்கியுள்ளது – மைத்திரிபால சிறிசேன

தற்போதைய அரசாங்கத்தின் 2/3 பெரும்பான்மை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறுபான்மை குழு என்பதை ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றிக்கொண்டது அமரிக்க வெளிவிவகாரச் செயலகம்

சுமந்திரன் குழுவினர், அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர். இவ்வமைப்புக்கள் இலங்கையில் தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்பதை ஓரம்கட்டும் வகையில் சிறுபான்மை குழுவாக தமிழ் மக்களை சித்தரிக்குமாறு தமது கீச்கத்தில் (twitter) செய்தி வெளியிட்டன. அரசியல் தீர்வுக்காக பேசச் சென்றதாக சொல்லிக்கொண்ட சட்ட நிபுணர் குழுவும் அதனை ஆமோதிக்குமாறு அச் செய்தியை தமது கீச்சக பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.

சிறுபான்மை குழு என தமிழ் மக்களை சிறுமை படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் {TAMIL DIASPORA ALLIANCE} என்ற புதிய அமைப்பு ஆட்சேபித்து ராஜாங்க திணைக்களத்திற்கு செய்தியிட்டது. அதனை தொடர்ந்து கீச்சகபக்கதில் சில முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். பேராசிரியர் ஓரின் யிவ்டாசல் Prof Oren Yiftachel சமூக விஞ்ஞானி, அனுராதா மிட்டேல் Anuradha Mittal ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மேத்தா பட்கர் Medha Patkar பிரபல மனித உரிமை, சமூக செயற்பட்டாளர், கலாநிதி சுவாதி சக்கரபூர்த்தி Dr. Swati Chakraborty என பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இன்று அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தில் துணை செயலர் டொனால்ட் லூ {Donald Lu] வுடன் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றம் செய்து கீச்சகத்தில் செய்தி வெளியிட்டனர்.

அதில் “நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது” என்று தெரிவிக்கப்ட்டிருக்கிறது.

இதையடுத்து தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற புதிய இளைய தலைமைத்துவ அமைப்புக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி-nationaltamil

Posted in Uncategorized

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது.

எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கு மற்றும் கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகள் – பிரித்தானியா கவலை!

2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம், தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையானது, கடந்த வருடத்தில் வெளிப்படும் போக்குகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் எதிர்கால மீறல்களின் கணிசமாக உயர்ந்த ஆபத்தைக் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) மார்ச் மாதம் 46/1 தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, இந்தப் போக்குகள் குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியதுடன், இலங்கையில் நடைபெறும் அனைத்து மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கும் விரிவான பொறுப்புக்கூறல் செயல்முறையின் முக்கியத்துவத்தை பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் வலியுறுத்தியது.

பாதுகாப்புப் படைகள் மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அவர்களின் கண்காணிப்பு, அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துதல், பல தன்னிச்சையான கைதுகளுடன் அதிகரித்தன. நீதிமன்றக் கண்காணிப்பு அல்லது அடுத்த செயன்முறைக்குத் தேவையில்லாமல், தனி நபர்களை கைது செய்து மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பும் அதிகாரங்களுடன் புதிய விதிமுறைகளை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதாகவும், காணாமல்போனோர் அலுவலகம் போன்ற சுயாதீன நிறுவனங்களை வழிநடத்த சர்ச்சைக்குரிய நபர்களை நியமித்ததாகவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல மனித உரிமை வழக்குகளில் பொறுப்புக்கூறலைத் தடுக்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்தது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருப்பதாக விவரித்த காவலில் பல மரணங்கள் இருந்தன என்றும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

டொலர் இல்லாமல் இரசாயன உர இறக்குமதி சாத்தியமா? – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

டொலர் இல்லாமல் இரசாயன உர இறக்குமதி சாத்தியமா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாய அமைச்சரது இன்றைய அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் இக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

இரசாயன உரங்களையும் களை நாசிகளையும் திரவ உர வகைகளையும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதி வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமான கம்பனிகளுக்கு அனுமதி வழங்குவதற்கா? இல்லை மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பில் இருந்து விடுபடுவதற்கான தந்திரமா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

காரணம் நாட்டில் போதிய டொலர் இல்லாமையே பல இறக்குமதிகள் தடை செய்யப்பட்டமைக்கு மூல காரணமாகும் அவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தாங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய உர இறக்குமதியை தனியாரிடம் கொடுப்பதிலும் டொலர் பிரச்சினை தான் உண்மையான காரணம் ஆனால் மக்களை ஏமாற்ற தனியாருக்கு அனுமதி கொடுப்பதாக ஒரு தந்திரோபாய நகர்வை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

தனியார் கம்பனிகள்இறக்குமதி செய்வதாக இருந்தாலும் இலங்கையில் உள்ள வங்கிகளே டொலர்களை வழங்க வேண்டும் ஆனால் வங்கிகளில் டொலர் இல்லை. இல்லாவிட்டால் ஒரு தடவை இறக்குமதி செய்த உரத்திற்கான டொலரை மீளப் பெறாமல் தனியார் கம்பனிகளாலும் மீள இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகும்.

ஏற்கனவே நாட்டின் கொழும்பு துறைமுகத்தில் நுற்றுக் கணக்கான கப்பல்கள் நாட்டில் டொலர் இல்லாமையால் சுங்கத்தால் பொருட்களை இறக்குவதற்கான அனுமதி வழங்கப்படமால் காத்திருக்கின்றன.

ஆகவே அரசாங்கத்திற்கு ஏற்படுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கவும் நாங்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கி விட்டோம் என்று கூறுவதற்குமாக இந்த வர்த்தமானியை கொண்டு வருகின்றனர். ஆனால் அரசாங்கம் உர இறக்குமதியை மேற் கொள்ள முடியாது உள்ளமைக்கு டொலர் இன்மையே காரணம். எனவே விவசாயிகளுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமா? என்றும் தெரிவித்தள்ளார்.

Posted in Uncategorized

ஜேர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

ஜேர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோருடனான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கொழும்பில் உயர்ஸ்தானிகத்தில் இவ் உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐ.நா.வின் 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐநா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் கூட்டமைப்பு தரப்பால் விளக்கமளிக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐரோப்பாவிலும் பிரதானியாகவும், சர்வதேச வல்லரசாகவும், இந்தியாவுடன் நெருங்கிய நட்பு நாடாகவும் விளங்கும் ஜேர்மனியுடனான தமிழ் தரப்பின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Posted in Uncategorized

எல்லைகளை மீள திறக்கும் நியூஸிலாந்து

நாட்டின் எல்லைகளை மீளத் திறக்கும் திட்டங்களை நியூஸிலாந்து வௌியிட்டுள்ளது.

அத்துடன் அடுத்த ஆண்டிலிருந்து வௌிநாட்டவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளது.

முழுமையாகத் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வௌிநாட்டவர்கள், அடுத்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதியிலிருந்து நியூஸிலாந்துக்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தைச் சென்றடைந்ததிலிருந்து 7 நாட்களுக்கு அவர்கள் சுயதனிமையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே கட்டுப்பாடுகளுடன் வௌிநாடுகளில் உள்ள நியூஸிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்புவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

8 அமைச்சுகளின் செயலாளர்கள் நியமனத்திற்கு அனுமதி

எட்டு அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (23) நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பிலான குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அனுமதி வழங்கப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் உள்ளடங்குகின்றார்.

அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிற்கான செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பரிசுத்த பாப்பரசர் கொழும்பு பேராயருக்கு கடிதம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தமது கையெழுத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தாம் கவலையடைவதாகவும் அது தொடர்பாக தாம் பிரார்த்திப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சரியென நினைக்கும் சிறந்த விடயத்தை செய்யுமாறும், தாம் விசுவாசித்து செய்ய வேண்டிய நல்ல விடயத்தை கூறுமாறும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஏப்ரல் 21 தாக்குதல் வழக்கு:  குற்றப்பத்திரத்தை தமிழில் வழங்குமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நௌபர் மௌலவி, ராஜித் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று உத்தரவிட்டது.

தமித் தொடவத்த, அமில ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பலத்த பாதுகாப்புடன் பிரதிவாதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தை தமிழ் மொழியில் வழங்குமாறு பிரதிவாதிகள் இதன்போது கோரிக்கை விடுத்ததுடன், அதனை தயார் செய்வதற்காக கால அவகாசம் அவசியம் என்பதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் 10 பேர் சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை.

அதற்கமைய, தமிழ் மொழி தெரிந்த சட்டத்தரணிகளை முன்வைக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்தல் அனுப்புமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.