கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு

மாவீரர் நாள் நிலைவேந்தலிற்கு கிளிநொச்சி நீதிமன்றிலும் தடையுத்தரவு இன்று பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு இன்றைய தினம் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன. குறித்த துயிலுமில்லங்களில் கடந்த 2017 மற்றம் 18ம் ஆண்டுகளில் மாவீர்நாள் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

இந்த நிலயைில் 2019ம் ஆண்டுக்க பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாவீரர் நாள் கிளிநொச்சி நீதிமன்றில் 51 பேருக்கு தடையுத்தரவு நினைவேந்தல்களிற்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டன. எதிர்வரும் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலயைில் இன்றைய தினம் தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாரால், 9 பேருக்கு எதிராக இன்று நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபைதவிசாளர் வேழமாலிகிதன், கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் தவபாலன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான, சுப்பையா, சிவகுமார், இயேசுதாசன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி ஆகியோருக்கே இவ்வாறு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை தர்மபுரம் பொலிஸாரால் 02 பேருக்கும், அக்கராயன் பொலிஸாரால் 02 பேருக்கும், பளை பொலிஸாரால்18 பேருக்கும் , முழங்காவில் பொலிஸாரால் 04 பேருக்கும், மருதங்கேணி பொலிஸாரால் 09 பேருக்கும், பூநகரி பொலிஸாரால் 07 பேருக்கும், தடையுத்தரவுகள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த நபர்கள் அல்லது அவர்களின் உறவுகளோ, ஆர்வலர்களோ சமய குருமார்களோ, ஒத்துழைப்பாளர்களோ, நபர்களுா யாவரும் தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்பின் இறந்தவர்களை நினைந்து எந்த செயலையும் குறித்த காலப்பகுதியில் செய்ய்கூடாது என கட்டளை வழங்குமாறு நீதிமன்றில் தடையுத்தரவு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக கமலா ஹாரிஸிற்கு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அதிகாரங்கள் தற்காலிகமாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.

இன்று, தலைநகர் வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு மருத்துவ மையத்தில், மருத்துவப் பரிசோதனைக்காக, ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பான கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வைத்தியசாலையில் வழக்கமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலோனோஸ்கோபி சிகிச்சையின் போது ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மயக்க மருந்து செலுத்தப்படும். இதன் காரணாக, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப் பொறுப்பு, துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்படுகிறது.

Posted in Uncategorized

கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது மேல் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கமராக்களில் அந்த காட்சிகள் இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

‘முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் மனமுருகி கோரிக்கை’

நவம்பர் 27 ஆம் திகதி விளக்கேற்ற அனுமதிக்குமாறு முன்னாள் போராளிகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனமுருகி கோரிக்கை விடுத்துள்ளனர். –எதிர்வரும் 27ஆம் திகதி எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி, அதில் விழுந்து அழுது, எங்களது கவலைகளை ஞாபகப்படுத்த அந்த தினத்தினை தருமாறு அன்பாக வேண்டுகின்றோம் என ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மனித உரிமை ஆணைக்குழு எதிரில், வடக்கில் வாழும் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் 7 பேர் ஆஜராகி இவ்வாறு கோரிக்கையினை முன்வைத்தனர்.

ஆணைக்குழுவின் தலைவரும், உயர்நீதிமன்ற நீதிபதியுமான நவாஸ் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, சட்டத்திணைக்களத்தின் அரச சட்டத்தரணிகளும் இவ்வமர்வில் சமுகமளித்திருந்தனர் முன்னாள் போராளிகளை ஆணைக்குழு முன் கருத்து தெரிவிக்க மலை

யக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணனும், அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சதீஷ்குமாரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது ,

நான் வவுனியாவில் வாழ்கின்றேன். யுத்த காலத்தில் நான் ஷெல்லடிபட்டு கால்களை இழந்துள்ளேன். எனது மனைவி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைத்துவிட்டு வேறொருவரை திருமணம் முடித்து வெளிநாடு சென்றுவிட்டாள். நான் வவுனியாவில் சில்லறைக்கடை ஒன்றை வைத்து எனது 2 குழந்தைகளையும் வளர்த்து வருகின்றேன். நான் கொழும்பில் பிறந்து வாழ்ந்தவன். எனது கல்வியை பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கற்றவன். எனது அடையாள அட்டை இன்றும் கொழும்பு முகவரியிலேயேதான் இருக்கின்றது. நான் 20 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தேன்.

அதன் பின்னர் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் காயங்களுடன் மக்களோடு மக்களாக முள்ளிவாய்க்கால் ஊடாக வவுனியாவில் அகதி முகாமில் இருந்தேன். அதன் பின்னர் என்னை இராணுவத்தினர் கைதுசெய்து பல சிறைச்சாலைகளில் வைத்தனர். என்மீது பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கொன்றினை வவுனியா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பின்னர் விடுதலையானேன். நான் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அரச கடன் ரூ. 2 இலட்சம் தரப்பட்டு சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பித்தேன்.

ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று விடுதலைப்புலிகளின் உறவினர்கள், தமது குடும்ப உறுப்பினர் மறைந்த தினத்தினை நினைவுகூர அனுமதிக்குமாறு அரசாங்கத்திடமும், இந்த ஆணைக்குழுவிடமும் கேட்கின்றோம். எங்களது உறவினர்கள், சக நண்பர்கள் அடக்கப்பட்ட இடத்தில் நாங்கள் விளக்கேற்றி அதில் விழுந்து அழுது எங்களது கவலைகளை ஞாபகப்படுத்தவே அந்த தினத்தினைத் தருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

இராணுவம் வெற்றி தினத்தினை நினைவு கூர்கின்றது. இந்திய இராணுவம் இலங்கையில் இறந்த தமது உறுப்பினர்களுக்குக் கூட கோப்பாயில் ஒரு தூபியமைக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் ஜே.வி.பி. புரட்சியில் இறந்தவர்களுக்கு 2 தினங்களை அரசாங்கம் நினைவுகூர அனுமதித்துள்ளது. ஏன் இந்த நாட்டில் பிறந்த எங்களுக்கு எங்களது உறவுகளை நினைத்து மெழுகுத்திரி ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கின்றனர்? எங்களது இறந்த உறவினர்கள், நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நினைவு கூர அனுமதி தர மறுக்கின்றார்கள். இது சாதாரண எங்களது உரிமையாகும்.

நாங்கள் நினைவு கூர ஆரம்பித்தால் எங்கள் வீடுகளில் இராணுவத்தினரும், சி.ஐ.டி யினரும் எங்களை சுற்றிவளைக்கின்றார்கள். கைதுசெய்கின்றார்கள். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் வீடுகளுக்கு அடிக்கடி சி.ஐ.டி. யினர் வருகை தருகின்றனர். இதனால் அயலவர்களும், எங்களது குழந்தைகளும் அச்சமடைகின்றனர்.

நாங்கள் தற்பொழுது இங்கு கொழும்பு வந்து ஆணைக்குழுவுக்கு சாட்சியமளிக்க வந்தால்கூட எங்கள் வீடுகளுக்கு சி.ஐ.டி.யினர் போய் எமது பிள்ளைகளிடம் விசாரணை செய்கின்றனர். எங்கள் வாழ்நாளில் இதுவே ஒரு ஆணைக்குழுவுக்கு வந்து எங்களது கருத்துக்களை கூறும் முதல் சந்தர்ப்பமாகும்.

நாங்களும் இந்த சமூகத்தில் எல்லோரும் போன்று சமமாகவும், சமாதானமாகவும், நற்பிரஜையாகவும் வாழவே விரும்புகின்றோம் . நாங்கள் எங்களது நாளாந்த வாழ்க்கையை நடத்த முடியாமல் உள்ளது. எங்களை முன்னாள் போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று பாதுகாப்புப் படையினரும், அரச அதிகாரிகளும் சமூகத்திலிருந்து விலக்கி வைத்துப் பார்க்கின்றனர். அதுமட்டுமல்ல, எங்களை சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றனர். கணவன், மனைவியை இழந்த போராளிகளுக்கு இரண்டாம் திருமண முடிப்பதற்குக் கூட முடியாமல் உள்ளது. பாதுகாப்புப் படையினரும், சி.ஐ.டி. அதிகாரிகளும் வீடு வருவதால் எவரும் எங்களைத் திருமண முடிப்பதற்கு முன்வருவதில்லை.

எங்களது வடக்கிலுள்ள காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், காணாமல் போன எங்களது உறவுகளுக்கு அவர்கள் பற்றிய உண்மையான நிலை தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இந்து மதத்திற்கும், பௌத்த மதத்திற்கு பாரிய சம்பந்தமுள்ளது. பௌத்த மத சின்னங்கள் எனச் சொல்லி வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள காணிகள், நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். இவை நிறுத்தப்படல் வேண்டும்.

எங்களது காணி நிலங்களை மகாவலி, சொர்ணபூமி, வீடமைப்பு, வனவளம், சுற்றாடல் சூழலியல் என திட்டமிட்டு ஆக்கிரமிக்கின்றனர். சகல சமூகங்களும் சமாதானமாக, சமமாக வாழ வழிவகுக்கப்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வதாரம், வீடு, புனரமைப்பு புனர்வாழ்வுத் திட்டங்களை உரிய முறைப்படி அரசாங்கம் வழங்குதல் வேண்டும்.
ஆசியாவிலேயே கடல் நீர்மூழ்கிக் கப்பல், ஹெலிகொப்டர் தயாரிப்புகளை செய்தது விடுதலைப்புலிகள் அமைப்பு. எவ்வாறு உதவி வழங்கப்படல் வேண்டும் என எங்களுக்குத் தெரியும். இன்றும் எங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துதான் வருகின்றோம். அதற்கான சக்தி எங்களிடம் உள்ளது – என்று குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

நிதி வேண்டாம்; நீதியே வேண்டும் – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி

எங்களுடைய போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா, தமக்கு அந்த நிதி வேண்டாம் எனவும் நீதியே வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வரவு – செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) 300 மில்லியன் ரூபாய் நிதி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், “நாங்கள் 1,838ஆவது நாளாக இன்று போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக பாராளுமன்ற வரவு – செலவுத் திட்டத்திலே, காணாமல் போனவர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளனர்.

“இவ்வாறு நிதி ஒதுக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எந்த ஒரு தாயும் இந்த நிதியை வேண்டுவதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், நாங்கள் இந்தப் போராட்டத்தில் உண்மையான ஆதாரங்களுடன், கண்கண்ட சாட்சியங்களுடன் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

“எங்களுடைய போராட்டத்துக்கும்,  எங்களுடைய பிள்ளைகளை எங்கே கொண்டு சென்று வைத்திருக்கிறார்கள் என்பதற்கும் பதில் கூற வேண்டும். எங்களுக்கு நிதியைத் தந்து ஏமாற்ற வேண்டாம்” என்றார்.

Posted in Uncategorized

பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர். 18 நவம்பர் 2021 வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் மற்றும் சட்டத்தரணி தயாபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் ஐநா பிரேரணை சம்பந்தமாகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.

பிரித்தானியாவின் தலைமையிலே ஐ.நா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணையின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள், அவற்றில் காணப்படுகின்ற முன்னேற்றங்கள், அதன் அடிப்படையில் செயற்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. கால வரையறை யோடு கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்ற 18 மாதங்களே உள்ளன. அதில் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள் ஒருபுறம் இருக்க தமிழ் தரப்பினரால் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவது பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன.

இதன் பிரகாரம் தமிழ் மக்கள் முகம் கொடுத்திருக்க முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக நிறைவேற்றுவது, மாகாணசபை தேர்தல்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

தமிழர்கள் ஒருமித்த நிலைப்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்துவது, அதன் முக்கியத்துவம், அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் முன்னேற்றம், ஆதரவு தரப்புக்கள், எதிர்கால நகர்வுகள் என்பன பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாடு எதிர்காண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள், தமிழ் மக்களும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அவலங்கள், கோரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என பிற விபயங்களும் கலந்துரையாடப்பட்டன.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்தார்.

நினைவேந்தலில் மாற்றம் விடுதலைப் போராட்ட உண்மைகளை திரிபு படுத்திவிடும் – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர்களின் உண்மையான பூர்வீக வரலாறுகளை மறைக்கும் பாரிய நிகழ்ச்சித் திட்டத்தில் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டு வரும் போது தமிழர்கள் தடைகளுக்கு மத்தியில் அந்த வரலாற்று உண்மைகளை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய தார்மீக கடமையை கொண்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு தமிழரும் மறந்து விட முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

அண்மையில் ஆயர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பிலும் நினைவேந்தலின் முக்கியத்துவம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழர்கள் தாம் வாழும் சம காலத்து வரலாற்று நிகழ்வுகளையே திரிபு படுத்தும் அபத்தமான காரியங்களில் இறங்கி விடக் கூடாது. காரணம் வரலாறு என்பது நிகழ்வுகள் நடந்த சம காலத்திலேயே பதிவு செய்யப்பட்டு ஆதாரப்படுத்தபட வேண்டும் அதுவே எதிர்காலத்தில் அதன் உண்மைத் தன்மைகளை உறுதி செய்யும். இவ்வாறான உண்மைகளை தொழில் நுட்ப முறைகளினில் மாற்றியமைக்க முடியாது.

உதாரணமாக மகாவம்சத்தில் அதன் உண்மைத் தன்மைகளை ஏற்க மறுப்பதற்கான காரணம் அந்த நூலில் இடம் பெற்ற சம்பவங்கள் கி மு 6 நூற்றாண்டில் நடந்தவை ஆனால் அதனை எழுதிய நூலாசிரியர் கி பி 6 நூற்றாண்டில் வாழ்ந்தவர் இந்த வேறுபாட்டுடன் குறிப்பிட்ட பல விடையங்களுக்கு ஆதாரம் இல்லை ஆகவே இவ்வாறான நிலை எதிர்காலத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது.

தமிழர்களின் விடுதலைப் போராட்ட உண்மைகளை சம காலத்திலேயே மாற்றியமைத்தால் இனத்தின் வரலாற்று இருப்புக்கு பாரிய பின்னடைவாக அமைவது மாத்திரமல்ல விடுதலைப் போராட்ட உண்மைகள் மறைக்கப்பட்டு விடும்.

சிங்கள் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள் நினைவேந்தல்களை செய்யும் போது பயங்கரவாத தடைச் சட்டம் பாயும் என்பதற்காக வரலாற்று உண்மைகளை மாற்றி நினைவேந்தல் செய்வது ஆரோக்கியமான பணி அல்ல.

1948 ஆண்டில் இருந்து இன்றுவரை தொடரும் அடக்குமுறைகள் அழிவுகள் தியாக செயற்பாடுகள் யாவும் திரிபு படுத்தப்படாமல் தடைகளுக்கு மத்தியில் அனுஸ்டித்து அதன் உண்மைகளை இளைய தலைமுறைக்கும் உலகிக்கும் சொல்ல வேண்டும். தடைகள் என்பது தமிழ் மக்களுக்கு புதிய விடையம் இல்லை.

வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தமிழர்களும் இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கும் இன ஒற்றுமைக்கும் தமிழன் என்ற அடையாளத்துடன் பணியாற்றியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தற்போது வடக்கு கிழக்கு ஆயர்களின் ஒன்றியம் எடுத்த முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள். யுத்தகாலத்திலும் அதற்கு பின்னதான மக்களின் புனர் வாழ்விலும் ஆயர்களது பணியை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது அவை மிக அளப்பரிய பணி.

தமிழர்கள் ஆகிய நாம் எங்களுக்குள் முரண்படும் நிலையை தோற்றுவிக்காமல் வார்த்தைகளால் பொது வெளியில் விமர்சிக்காது ஒற்றுமையாக பயணிப்போம்.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை , நவம்பர் 27மாவீரர் நாள் உள்ளிட்ட அனைத்து நினைவேந்தல்களையும் தொடர்ந்து அதே காலப்பகுதியில் நடாத்தி சத்திய வேள்வியில் ஆகுதியாகிய அத்தனை தியாகிகள் மக்களினதும் வரலாறுகளையும் பாதுகாத்திடுவோம்.

Posted in Uncategorized

பாரபட்சம் நீடித்தால் தனியான நகரசபைக்காக போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தல் போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

புதன்கிழமை (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்முனை மாநகரசபையினால் தடுத்து நிறுத்தப்படும் அபிவிருத்திகள் தொடர்பிலான விடயங்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது. தனிப்பட்டவர்களுடன் கொண்ட கோபத்தின் காரணமாக கல்முனைக்கு வரும் அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருக்கிறார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்காக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளரினால் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் உள்ள பொதுமயான சுற்றுமதில் அமைக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பிரதேச செயலகத்தினால் அதற்கான முன்னெடுப்புக்கள் செய்யப்பட்டுவரும் சூழ்நிலையில் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் கல்முனை முதல்வர் மற்றும் ஆணையாளர் அதற்கான அனுமதிகளை வழங்காமல் தமக்கு சாதகமானவர்களின் அரசியல் இருப்புக்காக இழுத்தடிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அரச அதிகாரியான ஆணையாளர் அரசியல்வாதியை போன்று செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது. கல்முனை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியை விரும்பாதவர்களுக்கு கல்முனை முதல்வர் சாதகமாக செயற்படுகிறார்.

அது மட்டுமின்றி மழைகாலம் ஆரம்பிக்கவுள்ளதால் பாண்டிருப்பு பிரதேசத்தில் இந்த வார ஆரம்பத்தில் வடிகான்களை துப்பரவு செய்யும் பணியில் கல்முனை மாநகர சுகாதார ஊழியர்களும், இயந்திரமும் வேலை செய்து கொண்டிருந்த போது கல்முனை பொலிஸில் கடமையாற்றும் ஒரு உப பொலிஸ் பரிசோதகரும், அவருடன் வந்த இன்னும் சில பொலிஸாரும் மதுபோதையில் தடுமாறியவர்களாக வாக்குவாதப்பட்டு அந்த ஊழியர்களை பொய்யான வழக்கை பதிவுசெய்து கைதுசெய்வேன் என்று மிரட்டி தாக்க முற்பட்டார்கள். அப்போது அந்த வழியால் வந்த நான் இது தொடர்பில் தலையிட்டு நியாயம் கேட்டேன். இன்றுவரை இதுதொடர்பில் கல்முனை முதல்வரோ அல்லது அவருடன் இணைந்திருப்பவர்களோ, மாநகர நிர்வாகிகளோ அந்த சுகாதார ஊழியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்க முன்வராமல் மௌனியாக இருக்கிறார்கள். மட்டுமின்றி அந்த அப்பாவி சுகாதார ஊழியர்களையும் சிலர் அதிகாரத்தொனியில் மிரட்டுகிறார்கள். இது தொடர்பில் நாங்கள் மிகவும் கவலையுற்றுள்ளோம்.

பொதுமயான சுற்றுமதில் அமைக்கும் பணிகளை கிராம அபிவிருத்தி சங்கம் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு ஆரம்பித்துள்ள போது மாநகர சபையினால் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கடந்த சபை அமர்வில் நான் கேள்வியெழுப்பினேன். அப்போது முதல்வர் அவரது ஒலிவாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிட்டார். இந்த நிலை நீடித்தால் பிரதேச செயலக போராட்டத்திற்கு மேலதிகமாக நாங்களும் எதிர்காலத்தில் எங்களுக்கான தனியான நகரசபைக்கான கோரிக்கையை முன்னிறுத்தி போராடவேண்டிய நிலையேற்படும் என்றார்.

Posted in Uncategorized

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை அடுத்த மாதம் முதல் இருளில் மூழ்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தீர்ந்துவிடும் என்றும் அன்றிலிருந்து நாட்டு மக்கள் இருளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பழுது நடவடிக்கை காரணமாக சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவில்லை என்றும் மசகு எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய டொலர்கள் இல்லாத காரணத்தினால்தான் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திற்கான எரிபொருள் நிறுத்தப்பட்டு ஸ்ரீலங்கன் விமானச் சேவையும் நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு நீதிமன்றால் தடையுத்தரவு

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸாரினால் இன்று மாங்குளம் நீதிமன்றில் AR 868/21 வழக்கினூடாக முல்லைத்தீவு பொலிஸ் பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா (கரன்), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் (முல்லை ஈசன்), சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized