காணி அளவிட வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில், கடற்படையினரின் தேவைக்காக,  தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக, இன்று (17) முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள், மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளன.

மாதகல் – ஜே150 கிராம சேவையாளர் பிரிவில், தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள்,  இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்படவிருந்தன.

இதன் போது, காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள், கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.

பதவியிலிருந்து ஞானசாரரை தூக்குங்கள் – ரவூப் ஹக்கீம்

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டுமென ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்
வலியுறுத்தினார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (16)
விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
போராட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் இப்படி பயப்படுகிறது என்றும் அவர்
கேள்வியெழுப்பினார்.
கொரோனா வைரஸ் பரவலைக் காரணங்காட்டி அரசாங்கம் போராட்டங்களை
அரசாங்கம் தடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பான்மை நீதிமன்றங்கள் தடை
உத்தரவை பிறப்பிக்க மறுத்துள்ள நிலையில், அதனை மதிக்காது
போராட்டங்களுக்கு வருபவர்களை பொலிஸார் தடுத்துள்ளனர் எனவும்
தெரிவித்தார்.

உரத் தடையின் பிரதிபலனை பெரும்போகத்துக்குப் பின்னர் பார்க்க முடியும்.
நாட்டில் பாரிய பெரும் பஞ்சமொன்றுக்கு நாட்டு மக்களை அழைத்து செல்லும்
செயற்பாடாகவே நாம் பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக நாட்டில்
இனவாதத்தையும், வெறுப்பையும் பரப்பும் பௌத்த பிக்குவை தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளார். அவரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்க
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

‘கஞ்சா வளர்ப்போம் – கடன் தொல்லையை தீர்ப்போம்’என அரசாங்கத்திற்கு டயானா கமகே ஆலோசனை

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2025 ஆம் ஆண்டளவில் கஞ்சாவுக்கான உலக சந்தை மதிப்பு $8.6 பில்லியன் முதல் $10.5 பில்லியன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பாலான மருந்துவ பயிர்களை முறையாக பயிரிட்டு, ஏற்றுமதி செய்து, அந்நியச் செலாவணியைப் பெற முடியும். நாம் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.

யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. தேயிலை, இறப்பர், தெங்கு போன்றவற்றுக்கு கடந்த காலங்களில் சர்வதேச அரங்கில் காணப்பட்ட கிராக்கி தற்பொழுது கிடையாது.

கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இயற்கை வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பாரிய பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

நெடுங்கேணியுடன் அநுராதபுரத்தின் 3 கிராம சேவை பிரிவுகளை இணைக்க முன்மொழிவு

வவுனியா வடக்கு – நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு, மாவட்டச் செயலாளர், முன்மொழிவொன்றை, எல்லை நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஓர் இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி, இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துகள், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகள் எதையும் அறியாமல், வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக எல்லை நிர்ணயக் குழுவுக்கு அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுகு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு, எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? – நாடாளுமன்றில் ரிஷாட் கேள்வி

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இன்று நாட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் உரையாடினீர்கள் என்றால் விவசாயிகள் படுகின்ற வேதனைகள் புரியும். அரசாங்கத்தை உருவாக்கிய விவசாயிகள் கூட தங்களது எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்ற அச்சத்தில் காலம் கடத்துகின்றார்கள். அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இன்று பாதையில் நிற்கும் அத்தனை பேரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவைப்பாட்டை நிறைவேற்றக் கூடிய வகையில், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு விடயத்துக்காக நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று கூறும் போது, வெறுமனே ஆயுத ரீதியானது மட்டுமின்றி ஒரு மனிதனின் உணவு, வறுமையை நீக்குதல், இருப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் இன்னோரன்ன விடயங்களை வழங்குவதும் கூட பாதுகாப்புடன் தொடர்புபட்டதே. எனவே, அந்த விடயத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளது.

இந்த அரசாங்கம் மட்டுமின்றி, கடந்த காலங்களிலும் வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது, தேர்தலை மையமாக வைத்துக்கொண்டோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ செயற்பட்டதனால்தான், 70 வருடங்களுக்கு முன்னர் நாம் சுதந்திரத்தைப் பெற்ற போதும், இன்னும் அதலபாதாளத்தில் இருக்கின்றோம். இதனால்தான் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பொருளாதாரம் சீரழிகின்றது. உலக வரைபடத்திலே வறுமையான நாடாக பதியப்பட்டுள்ளது. எனவேதான், இந்த நிலையை மாற்றுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையில்தான் பாராளுமன்றத் தேர்தலிலே கிட்டத்தட்ட 142 ஆசனங்கள், அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வகையில் அவரது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.

இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம். இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவெடுத்த போதும், நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் அதனை எதிர்த்து ஒற்றுமையை பேணியதே கடந்தகால வரலாறு. இப்போது அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தூரநோக்கு இல்லாத ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தி, அதுவும், அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்திய ஒருவரை அதன் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். உலகின் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறி, அவரை ஏசிய ஒருவரை இவ்வாறு தலைவராக ஆக்கியுள்ளீர்களே. அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மன்னிப்பளிக்கப்பட்ட ஒருவரையே, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? அல்லது பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? எதிர்மாறாக பெரும்பான்மை சிவில் சமூகம் கூட இதனை எதிர்க்கும் நிலை இன்று வந்துள்ளதே.

இந்த இருவருட காலத்தில் நீங்கள் மிகவும் சண்டித்தனமான ஆட்சியே நடத்துகின்றீர்கள். நான் சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து, எனது கருத்தைக் கூட கூற முடியாது தடுத்தீர்கள்.. ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவனாக, ஜனநாயகவாதியாக மக்கள் தந்த ஆணையில் இங்கு வந்திருக்கும் நான், எனக்கு நடந்த அநியாயத்தை கூற விடாமல் மறுக்கின்ற விரோதப் போக்குடன் செயற்பட்டீர்கள். இவைகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் உங்களை சிறையில் அடைத்தார்கள் என்றீர்கள். இவ்வாறான சிறையடைப்புக்\கு நாங்களா காரணம்? நாங்கள் இருதரப்புடனும் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு துணை செய்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றோம். அனைத்து நல்ல விடயங்களுக்=கும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டிலே சில விடயங்களை நீங்கள் மறைமுகமாகக் கொண்டு வந்து மக்களுக்கு சுமையை கொடுத்திருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் என்ன நடக்குமென்று தெரியாது.

எனவே, இவ்வாறான நிலையிலே இனவாதத்தை கிளறி, நாட்டைக் குட்டிச்சுவராக்காதீர்கள். சட்டத்தை எல்லோருக்கும் சமமாகப் பிரயோகியுங்கள். அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் மலேசியா, அபுதாபி போன்றவை பாரிய முதலீடுகளை செய்தனர். நான் அமைச்சராக இருந்த போது, கட்டார் ஒரு பில்லியன் முதலீடு செய்ய தயாரானது. ஓமான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இவ்வாறு தயாராக இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிலே வேறு எந்த எண்ணத்தையும் அதாவது, வளங்களை சூறையாட வேண்டும் என்ற கபட நோக்கம் இருந்ததில்லை. இந்த நாட்டில் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை மட்டுமே சிந்திக்கின்ற இஸ்லாமிய நாடுகள் கூட, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக முஸ்லிம்களின் இறைவனை நிந்தித்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா? எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு நீண்டகாலம் அரசியல் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நான் கூற வேண்டும். அண்மையில் நடந்த திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரேயே வெளியாகின. இது தொடர்பில், நீதி அமைச்சரும் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அண்மையில் புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் பாதிப்புக்களை சரிசெய்வது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவாறு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டிசந்தி வரை பேரணியாக வந்தவர்கள் காலி முகத்திடல் நோக்கி பயணித்தனர்.

பின்னர் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடினர்.

இதனிடையே வாகனங்களில் கொழும்பிற்கு வருகை தருவோரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பு – களுத்துறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாணந்துறை வீதித்தடையில் கொழும்பு நோக்கி பயணித்த அனைத்து பஸ்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஹைலெவல் வீதியில் பயணித்த பஸ்கள் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரலகங்கில பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அணியினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மணம்பிட்டி, கத்துறுவெல ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்பட்டது.

குருநாகல் – ஹிரிபிட்டிய, குருநாகல் – மாவத்தகம, வாரியபொல, பலாங்கொடை, ஹல்துமுல்ல மற்றும் நொச்சியாகம உள்ளிட்ட பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெந்தோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அநுராதபுர எல்லையயை கடப்பதற்கு ராஜாங்கனை பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல, மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்பிற்கு வருகை தந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – அரசாங்கம்

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன கப்பலில் உரங்களை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் குறித்த கப்பல் கடற்பரப்பில் பயணிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை என கூறினார்.

இதேவேளை மாகாண சபைகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராவணனிடம் விமானம் இருந்ததா – ஆரம்பமாகும் ஆய்வு

இலங்கை வேந்தன் இராவணனிடம் விமானம் இருந்தாகவும் அதில் இந்தியாவரை அவர் பறந்தாகவும் இராமாயணத்தில் உள்ள குறிப்புக்கள் தொடர்பாக இலங்கை அரசு ஆய்வுகளை நடாத்தவுள்ளது.

இந்த ஆய்வு பணிகளில் இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன.

இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, இராவணன் ஆட்சியின்போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர்.

PTA மீளாய்வுக் குழுவால் ஜனாதிபதிக்கு அறிக்கை

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) கையளிக்கப்பட்டது.

அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021 ஜூன் 24ஆம் திகதியன்று, மேற்படி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சட்ட வரைவாளர் தில்ருக்ஷி சமரவீர, நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, வெளிவிவகார அமைச்சின் பிரதி சட்ட ஆலோசகர் திலானி சில்வா, வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மஹேஷா ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க, இந்த அதிகாரிகள் குழுவின்
செயலாளராகச் செயற்பட்டார்.

Posted in Uncategorized

உயிர்தத ஞாயிறு தாக்குதல் – மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக பல முறை ஒத்தி வைக்கப்பட்ட குறித்து மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, எல்.டி.பீ.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ்.துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஏழு பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் நீதியரசர்கள் குழாமின் உறுப்பினர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் காமினி அமரசேகர ஆகிய நீதியரசர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த மனு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் வருடம் மார்ச் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ள நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குண்டுத்தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்க்ளின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.