இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் ஆரம்பம்!

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை 1 மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்கான விழா பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும் என்றும் அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நீதியமைச்சர் பதவியில் தொடர முடியாது : நீதி அமைச்சர் அலி சப்ரி

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால் நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற எண்ணக்கருவை முன்னெடுத்து செல்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

இந்த நியமனமானது அனைத்து இனங்களுக்கும் நியாயமான வகையில் செயற்பட தடையாக இருக்கும் என்பது நீதியமைச்சரின் நிலைப்பாடு எனக் கூறப்படுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் சமய தலைவர்களான மௌலவிகள், அமைச்சரிடம் தமது கடும் எதிர்ப்பை முன்வைத்துள்ளதை அடுத்து, அமைச்சர் தனது எதிர்ப்பை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்குழு தொடர்ந்தும் இயங்கினால், தன்னால், நீதியமைச்சராக சேவையாற்ற முடியாது என அலி சப்ரி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பல கட்சித் தலைவர்கள், ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் தமது விருப்பமின்மையை தெரியப்படுத்தியுள்ளனர்.

Posted in Uncategorized

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாக மிகவும் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொள்கைகளையுடைய அனைத்துக் கட்சிகளினதும் சமூகக்குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடியவகையில் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின் பிரகாரமே நடாத்தப்படவேண்டும் என்று சிறிய அரசியல் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மை பேணப்படுவதை உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் சனிக்கிழமை கொழும்பிலுள்ள மெரினா பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாட்டிலுள்ள சிறுகட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ),தமிழரசுக்கட்சி, ,புளொட், தமிழ் முற்போக்குக்கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மேலும் சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கூறியதாவது:

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கிலான இந்தக் கலந்துரையாடல் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதக்கூடாது.

மாறாக இது நாட்டின் ஜனநாயகத்தையும் அனைத்து சிறுகட்சிகளினது பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலாகும். அண்மைக்காலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுகட்சிகளை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனால் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலுள்ள சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதன் ஊடாகவே நிறைவேற்றதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான சமநிலையை உறுதிசெய்யமுடியும்.

உண்மையைக் கூறுவதானால் தேர்தல் முறைமை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார முறைமையின் ஊடாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமன்றி தேர்தல் முறைமை விவகாரம் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்சினை என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும். பாராளுமன்றத்தில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதித்துவத்தைப்போன்றே பெண் பிரதிநிதித்துவமும் சமளவில் உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

அதனை முன்னிறுத்தி பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் அனைத்தும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையிலேயே நடாத்தப்படவேண்டும் என்ற பொதுநிலைப்பாடு எட்டப்படவேண்டும். அத்தோடு அம்முறையின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், அரசியலில் பெண்பிரதிநிதிகளை உள்வாங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமது கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டபோதிலும் அவர் ஏற்கனவே அரசியல் பின்புலமொன்றைக் கொண்டிருந்தமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் எல்லைநிர்ணய முறைமை நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலனை அடைந்துகொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள எல்லைநிர்ணய முறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று குறிப்பிட்ட அவர், இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக்கூடிய எல்லை நிர்ணயத்தின் விளைவாக விகிதாசார முறையின் ஊடாக உள்வாங்கப்படக்கூடிய சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவம் சிதைக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியதுடன் எல்லை நிர்ணயமுறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

அதேவேளை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்துப்பேசிய தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள வட்டாரங்களில் குறித்த எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்மூலமே அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், சமஷ்டி முறைமை தொடர்பில் கூட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய உறுதியான நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஒருபுறம் தேர்தல் முறைமை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் அதேவேளை, மறுபுறம் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றியடைந்ததாக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பதிவுசெய்யும் ஜனாதிபதியின் போக்கு மற்றும் சிறுபான்மையினக்குழுக்களின் செயற்பாடுகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற வெளிவிவகார அமைச்சரின் கருத்து என்பன நாடு பயணிக்கவேண்டிய பாதை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இதன்போது தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி உள்ளுராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரேவேளையில் தயார்செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புத்திருத்தமாகக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகனாணசபைத்தேர்தல்களை விகிதாசார முறைமையின்கீழ் விரைந்து நடத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இக்கலந்துரையாடலின்போது கூட்டாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீ;ம், வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் உள்ளடங்கலாக மேலும் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுக்கு எதிராக விசாரணை கோரும் GRC என்ற சட்ட நிறுவனத்தின் நடவடிக்கை சரியானதே- விக்னேஸ்வரன்

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLR (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இந்நிலையில், Global Rights Compliance LLR (GRC) இந்த நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையின் முழு விபரம்:

கேள்வி:- இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLR (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு நடத்துநருக்கு சமர்ப்பித்துள்ள ஆவணம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன? இது சாத்தியமா?

பதில்:- இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்றது இனப்படுகொலை தான் என்று மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணசபை தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த இனப்படுகொலை தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எல்லா தமிழ் கட்சிகளுமே கடந்த காலத்தில் வலியுறுத்தி வந்துள்ளன. அத்துடன், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் என்றும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டாகக் கடிதம் ஒன்றில் கையொப்பமிட்டு ஐ.நாவுக்கு அனுப்பியுள்ளன. ஆகவே, இந்த பின்னணியில், Global Rights Compliance LLR (GRC) செய்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் சரியானதும் அத்தியாவசியமானதும் காலத்துக்குப் பொருத்தமானதும் ஆகும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைத் ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பில் பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும் மற்றைய சாட்சியங்களின் அடிப்படையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உரிய சட்டக் கொள்கைகள், கோட்பாடுகள், வாதங்களுடன் இந்த முதலாவது தொடர்பாடலுக்கான ஆவணத்தை முறையாக Global Rights Compliance LLR (GRC) சமர்ப்பித்துள்ளது என்று நான் நம்புகின்றேன்.

கேள்வி:- இந்த சமர்ப்பணத்தின் அடிப்படையில் அடுத்து என்ன நடைபெறும்?

பதில்:- இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது. ஆனால், சர்வதேச நீதிமன்றம் இந்த ஆவணத்தை பரிசீலித்து எடுக்கவிருக்கும் முடிவிலேயே அது தங்கி இருக்கின்றது. சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி:- இந்த சமர்ப்பணத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- அவசியமாக செய்யப்பட வேண்டிய ஒரு விடயத்தை நல்ல முறையில் புடழடியட சுiபாவள Global Rights Compliance LLR (GRC) செய்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்திடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகவே, இந்த ஆவண சமர்ப்பணம் வலுவானதாக செய்யப்பட்டிருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் இந்தக் கால கட்டத்தில் அவசியமாகின்றன. இங்கு எமது வட கிழக்கு நிலங்கள் பறிபோகின்றன. பௌத்தர்கள் இல்லா இடத்தில் பௌத்த வணக்கஸ்தலங்கள் பலாத்காரமாக நிர்மாணிக்கப்படுகின்றன. தொல்பொருளியலைத் திரிபுபடுத்தி தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களை சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்த இடங்களாக எடுத்துக் காட்டி பல ஏக்கர் காணிகளை தொல்பொருள்த் திணைக்களமும் வேறு காரணங்களை முன் வைத்து மற்றும் அரசாங்க திணைக்களங்கள் பலவும் எமது காணிகளைக் கையேற்று வருகின்றன. அங்கு வாழும் தமிழ் மக்கள் இராணுவ ஒத்துழைப்புடன் விரட்டி அடிக்கப்படுகின்றனர். சிங்கள குடியேற்றம் தமிழர் தாயகத்தில் துரிதமாக நடைபெறுகின்றன. இனப்படுகொலையின் பல்வேறு பரிமாணங்கள் இவை. இவ்வாறான விசாரணைகளின் போது தற்போது இங்கு நடைபெறும் விடயங்களும் உண்மையை உலகம் உணர உதவி புரியும். நான் இந்த நடவடிக்கையை முற்றும் வரவேற்கின்றேன்.

Posted in Uncategorized

திருடன் கையில் பொலிஸ் வேலை கொடுக்கும் அரசாங்கம் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லின மக்களுக்கான சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காதவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதிய விடயமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி அமைந்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகம் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்தும் வகையில் காலங்காலமாக செயற்படும் கொள்கையே இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்களிடம் இருந்து வந்திருக்கிறது. இந்த வகையில் சிங்கள இனவாதத்தின் ஒருமித்த செயற்பாடே ஒரேநாடு ஒரே சட்டம். இத்திட்டம் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும். இல்லையேல் நாடு பாரதூரமான விளைவுகளையே சந்திக்கும்.

நான் ஒரு சிங்கள இனவாதி, சிங்களப் பெரும்பான்மை மக்களின் ஜனாதிபதி என்பதை நிரூபிக்கும் வகையிலேயே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தொடர்ச்சியாகச் செயறபட்டுவருகிறார். கொவிட் பரவல், பொருளாதார நெருக்கடி, விவசாயிகளது பிரச்சினைகளென மக்களது விடயங்களெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே கிழக்கு மாகாணத்துக்கென ஜனாதிபதி செயலணியொன்றினை தொல்பொருள் பாதுகாப்புக்கென தாபித்திருந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. மாகாண சபைகளினுடைய அதிகாரங்களைக் குறைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மாகாண சபையை இல்லாமற் செய்கின்ற முனைப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில் சிறுபான்மை மக்களினுடைய இருப்பிலும், அவர்களுடைய நம்பிக்கையிலும் மண்ணைப்போடும் ஒரு செயற்திட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியினுடைய சிந்தனைப் போக்கும், ஆதிக்கமும் இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கிறது. இதன் உட்பொருளை நாம் எல்லோரும் விளங்கிக் கொண்டு விமர்சிக்காமலும் அதற்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலும் இருக்க முடியாது.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சிப்பவர்கள் ஏதோ அதற்கு ஞானசார தேரர் தலைமையாக நியமிக்கப்பட்டமைதான் பிரச்சினை என்பதுபோல் காண்பிக்க முயல்கின்றனர்.

கொலைக் குற்றவாளிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவதும். அவர்களுக்கு அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்படுவதும், நாட்டின் நீதியை மதிக்காது, சட்டத்துக்கு விரோதமாகச் செயற்பட்டவர் சட்டம் தயாரிப்பதற்கு நியமிக்கப்படுவதும் இலங்கைக்குப் புதியவிடயமல்ல.

இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் என பல்லின மக்களைக் கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் என பல மதங்களைப் பின்பற்றுகின்ற, தமிழ் சிங்களம் என பல மொழிகளைப் பேசுகின்ற பல கலாசார பின்பற்றலைக் கொண்டுள்ள நாடாகும்.

இங்கு ஒவ்வொரு இனத்திற்கென்று பாரம்பரியமான தேசவழமை, முற்குக, கண்டிய, ஷரியா சட்டங்கள் காணப்படுகின்றன. இவற்றினைக் கவனத்திலெடுக்காத வகையில் சட்டங்கள் அமைக்கப்படுவது பாரதூரமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

மேலைத்தேயத்தவர்களது வருகையின் காரணமாக உருவான சட்ட ஒழுங்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பின்னர் பல சிக்கல்களை எதிர் கொண்டது. ஆனால் சுதந்திரத்துக்குப் பின்னர் ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைத்து சிறுபான்மை மக்களின் பாதுக்காப்புக்கான ஏற்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட சட்டம் இப்போதில்லை. அதனை பெரும்பான்மைத் தேசியம் இல்லாமல் செய்து விட்டது. அதன் பிரதிபலிப்பாக சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். எவ்வாறானாலும் சிறுபான்மை மக்களை பொருட்படுத்தாத அவர்களை அனுசரிக்காத நாட்டின் தலைவருடைய செயற்பாடு வீண் விளைவுகளைக் கொண்டுவரும்.

நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற சட்டத்தினை உருவாக்குவதற்கு என்ன தேவை ஏற்பட்டது என்பதனை இந்த இடத்தில் கேட்க விரும்புகின்றேன்.

நாட்டில் இன முறுகல் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய ஜனாதிபதி அதனை வலுப்புடுத்தும் வகையிலான செயற்திட்டங்களை உருவாக்குகிறார்.

வெளிப்பூச்சில் வெளிநாடுகளுக்கு ஒரு முகத்தையும், நாட்டுக்குள் சிங்களப் பெரும்பான்மை மக்களுக்கு பேரினவாத முகத்தையும் காண்பிக்கும் ஜனாதிபதி பௌத்தம் தவிர்ந்த ஏனைய சமயங்கள் மீது பகிரங்கமாக தமது வெறுப்புணர்வை கொட்டித் தீர்த்து வருகின்ற ஒருவரை பல்லினம் பல் சமய, பல மொழி பேசுகின்ற மக்களிற்கு சட்டத்தினை நிர்ணயிக்கப் பொறுப்பளிப்பது ஏதோ திருடன் கையில் பொலிஸ் உத்தியோகத்தைக் கொடுப்பதற்கே ஒப்பானதாகும்.

நாட்டில் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், ஆதிக்க ரீதியான செயற்பாடு என பல குற்றச்சாட்டுக்கள் இருந்து கொண்டிருக்கையில் மேலும் ஒரேநாடு ஒரே சட்டம் இன்னுமொரு படி மேலே நகர்த்தப்படுவது இலங்கை மக்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் சாபக்கேடாகும்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஸ்கொட்லாந்து நோக்கி பயணம்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (30) ஸ்கொட்லாந்து நாட்டிற்கு பயணமானார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதனை எதிர்கொண்டு செயற்படுவதற்காக உலக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் இந்த மாநாடு, நாளை (31) தொடக்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை க்லாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 02 ஆம் திகதி, உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

‘காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ் விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

எதிர்காலத்தில் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை தேவை?

பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகள் மற்றும் உணவகங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆலோசிக்க கொவிட் -19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 தடுப்புச் சட்ட விதிகளின்படி தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் குழு இன்று கூடிய இது தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், கிராமப் புறங்களில் தடுப்பூசி செயல்முறையை நிறைவு செய்ய நடமாடும் தடுப்பூசி வாகனத்தை
பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செயல்திறன் மற்றும் தடுப்பூசி செயல்முறை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன்

பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்ய வரமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரத்தடி என்னும் தமிழர் பகுதிக்குள் தொல்பொருள் செயலணியினால் எல்லைக்கற்கல் நடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சியினர் அப்பகுதிக்கு சென்று தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்குசென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் சிறிநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தன் , தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி வடகிழக்கு தலைவர் கி.சேயோன், ஏறாவூர்பற்று பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகியோர் மக்களுடன் இணைந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் தொல்பொருள் செயலணியின் எல்லைக்கற்களை நடும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டு அங்கிருந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,

தமிழர்களின் பல இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததும் நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்டதாகவும் இராணுவத்தினரையும் பௌத்த பிக்குகளையும் உள்ளடக்கியதாக ஒரு செயலணியை அமைத்து தொல்லியல் அடையாளங்களை கண்டுபிடித்து அதனை பௌத்த மக்களுக்கு உரியதென அடையாளப்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.

அதன் பிரகாரம் தொல்லியல் துறையினர் வடகிழக்கில் தமிழர்கள் வாழும் பல இடங்களில் தங்களது பௌத்த இடங்களாக அடையாளப்படுத்தி வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, வேரம் என்னும் பகுதியில் தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்து இது தங்களின் பகுதி இங்கு தொல்பொருள் அடையாளங்கள் இருக்கின்றது என காட்டுகின்றனர்.

பழங்கால செங்கல் இருந்த இடமெல்லாம் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுகின்றார்கள். இலங்கையில் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நாடு பூர்வீக தமிழர்களின் வாழ்விடமாகும். தமிழ் மக்கள் இந்த நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்தார்கள். பழங்காலத்தில் பௌத்தர்களுக்கு ஒருவிதமாகவும் தமிழர்களுக்கு ஒருவிதமாகவும் செங்கல் உற்பத்திசெய்யப்படவில்லை.

அக்காலத்தில் அனைவருக்கும் பொதுவானதாகவே செங்கற்கல் இருந்தன. ஆனால் தற்போது அந்த செங்கற்களை மையமாககொண்டு பௌத்தர்களின் வாழ்விடங்கள் என்று கூறுகின்றனர். இலங்கையின் முதலாவது மன்னனும் தமிழன்தான். இறுதி மன்னனும் தமிழனாகவே இருந்துள்ளான். தமிழர்கள் இந்த நாட்டினை ஆட்சி செய்துள்ளார்கள். அவ்வாறானவை தமிழர்களின் தொல்பொருள் இடங்களாக இருந்தால் அதனை தமிழர்களுடன் கலந்துரையாடி அவற்றினை பாதுப்பதில் எந்த தடையும் இல்லை.

ஆனால் எங்கு பழங்கால செங்கற்கள், பழங்கால கல்தூண்கள் காணப்படுகின்றதோ அவற்றினையெல்லாம் பௌத்தர்களின், சிங்களவர்களின் வாழ்விடங்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். பொலநறுவையில் 18 இந்து ஆலயங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் உள்ளன. அவ்வாறானால் ஏனைய பகுதிகளில் பெருமளவான சைவ ஆலயங்கள் இருந்திருக்க வேண்டும். இன்றும் பல ஆலயங்கள் அழிவுகளுடன் அங்கு இருக்கின்றன. அவற்றினை வைத்துக்கொண்டு இன்று நாங்கள் பொலநறுவைக்கு சென்று தமிழர்கள் உரிமைகொண்டாட முடியுமா?.

இன்று அநுராதபுரத்தில் உள்ள இசுறுமுனிய விகாரை அதுவொரு சைவசிவன் ஆலயம். இன்று அவர்கள் அதனை விகாரையாக மாற்றியுள்ளனர். இன்று தென்பகுதியில் உள்ள மிகவும் பழமையான பல சைவ ஆலயங்கள் பௌத்த விகாரைகளாக மாற்றப்பட்டுள்ளன.

தமிழர்கள் இவற்றினையெல்லாம் கேட்டுச்செல்வதுமில்லை, எங்களது இடமென்று சண்டை பிடிக்கவுமில்லை. எங்களது பகுதியென்று தொல்பொருள் பிரகடனப்படுத்துங்கள் என்று கூறவுமில்லை. இவ்வாறு இருக்கும் போது ஏன் வடகிழக்கு தமிழர் பூர்வீக பகுதியில் மட்டும் ஏன் அரசாங்கம் இவ்வாறான அட்டூழியங்களை செய்ய வருகின்றது. இதற்கு துணையாக இராணுவத்தினரை பயன்படுத்துகின்றனர்.

பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்யவரமாட்டார்கள்.

இன்று சிங்கள மயப்படுத்தவேண்டும், வடகிழக்கில் விகாரைகளை பரவலாக அமைக்க வேண்டும். தமிழர்களின் பூர்வீகம் என்று நிரூபிப்பதற்கு மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரகசியமாகவரும் அமைச்சர்கள் இங்கு சிங்களவர்களுக்கு இரகசியமான முறையில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கு எமது அரசியல்வாதிகளும் துணை நிற்கின்றனர். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான நிலைநீடிக்குமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிடும். அவ்வாறான நிலையேற்பட்டால் எமது சந்ததிக்கு வாழ்வதற்கு இடமில்லாத நிலையே ஏற்படும்.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் -ரெலோவின் தலைவர் செல்வம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எதிர்வரும் வாரம் முடிவெடுக்கப்படவுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை மற்றும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கூட்டம் ஒன்று இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

“இன்று ஆயர்கள், கிரிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பல விடயங்களை ஆராய்ந்தோம். குறிப்பாக இந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கூடுதலாக விவாதிக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் நாம் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது. இந்த நாட்டிலே நடக்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி அடுத்த கூட்டத்திலே என்னனென்ன முடிவெடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். என்றார்.

Posted in Uncategorized

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் கோட்டாபயவைக் கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலையாளி ராஜபக்சேவை கண்டித்து ஒளிரவிடப்பட்டிருக்கும் காட்சி.

முன்னதாக ஸ்கொட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பெரிய தாள் பத்திரிகையில் ஒன்றான , ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முதல் பக்கத்தில் பிரசுரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் தொடர்பாக வரும் 31ம் திகதி ஸ்கொட்லாந்து தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறீலங்கா அரசதலைவர் கோட்டாபயவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் சிறீலங்கா அரச அதிபரின் வருகையைக் கண்டித்து ‘WANTED FOR GENOCIDE PRESIDENT OF SRI LANKA’ எனக்குறிப்பிட்டு கோட்டாபயவின் படம் ஒளிரவிடப்பட்டுள்ளது.