இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் ஏற்புடையதல்ல – சுரேஷ் பிரேமச்சந்திரன்

இந்திய மீனவர்களுக்கு எதிரான போராட்டம் நடத்துவது என்பதும் அதற்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது என்பதும் ஏற்புடையது அல்ல என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

பேசி தீர்க்கப்பட வேண்டிய ஒரு விடயத்துக்கு தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (19) மாலை, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், எல்லா மீனவர்களும் எங்கே மீன்வளம் இருக்கின்றதோ அந்த மீன் வளத்தை தேடிப் போவது என்பது இயற்கையான ஒன்று என்றார்.

இப்பொழுது இந்திய அரசாங்கத்துக்கு எதிராக, மீனவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது என்பது, சரியான வழிமுறை அல்ல எனத் தெரிவித்த அவர், தாங்கள் பாரிய ஒரு போராட்டத்தை நடத்த உதவி ஒத்தாசையாக இருந்தது தமிழகம் எனவும் கூறினார்.

‘தமிழகத்தில், இலட்சக்கணக்கான எங்களுடைய மக்கள் எதிலிகளாக போயுள்ளனர். அவர்களை பராமரிப்பது தொடக்கம் அனைத்து தேவைகளையும் தமிழக அரசே மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது என்பது உண்மை. ஆனால் அதை பேசி தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் ஒரு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு கண்டு, சுமூகமான முறையில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், அவர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களை எமது தொழிலாளர்கள் தாக்குவது, எமது மீனவர்களை இந்திய தொழிலாளர்கள் தாக்குவது ஏற்புடைய ஒரு விடயமல்ல எனத் தெரிவித்த அவர், தற்போதுள்ள மீன்பிடித்துறை அமைச்சரும் அவர் சார் அதிகாரிகளும் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்று ஒரு சந்தேகம் தங்களுக்கு தோன்றுவதாகவும் கூறினார்.

‘தென்பகுதி மீனவர்கள் தங்கி நின்று மீன்பிடி நடவடிக்கையில் மேற்கொள்கின்றார்கள். அதற்கு எதிரான எந்தத் தரப்பிலிருந்தும் எந்த அரசியல்வாதியும் போராட்டங்களை மேற்கொண்டதில்லை. அதேபோல், தென் பகுதியில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில், சிங்கள மீனவர்கள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். அதற்கு எதிராக எங்களுடைய அரசியல் வாதிகள் யாராவது போராட்டம் மேற்கொண்டார்களா? அவ்வாறான விடயங்கள் எதுவும் நடக்கவில்லை’ என்றும், சுரேஷ் கூறினார்.

Posted in Uncategorized

நாட்டில் பசுவதையை தடை செய்ய நடவடிக்கை

இலங்கையில் பசுவதையை தடை செய்வது தொடர்பிலான ஐந்து சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ 272 ஆம் அத்தியாயத்தின் 1983 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசுவதை கட்டளைச் சட்டம்

⭕ 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம்

⭕ 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 255 ஆம் அத்தியாயத்தின் நகர சபைகள் கட்டளைச் சட்டம்

⭕ 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம்

ஆகிய 05 சட்டங்களை திருத்தம் செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது உள்ளூர் விவசாயத் துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது.

ஆப்கானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்த திட்டம்

ஆப்கானிஸ்தானில் நாடளாவிய ரீதியில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களை நடத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

அடுத்த மாத ஆரம்பத்தில் இந்த முகாம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போலியோ தடுப்பு மருந்து முகாமை நடத்துவதற்கு தலிபான்களின் முழு ஆதரவு உள்ளதாக யுனிசெஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் போலியோ தடுப்பு மருந்து முகாமில் பங்கெடுக்கவும் முகாமை நடத்துவதற்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது.

பல வருடங்களின் பின் முதல்தடவையாக ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வட மாகாண ஆளுநர் – இரா. சம்பந்தன் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (19) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார்.

வட மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வினை காணும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வட மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா இதன்போது உறுதியளித்துள்ளார்.

தமிழர்களை அச்சுறுத்தி காணி அபகரிப்பு- இரவோடு இரவாக போடப்பட்ட வீதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சவுக்கடி, புன்னைக்குடா, களுவன்கேணி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களை அச்சுறுத்தி இரவோடு இரவாக சுமார் 10 கிலோமீட்டர் வீதி அமைக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக புன்னைக்குடா பிரதேசத்தில் உள்ள அரச தனியார் காணிகளை எந்த வித அனுமதியும் இன்றி இஸ்லாமிய அடிப்படைவாத குழுவைச் சேர்ந்த சிலர் கம்பி வேலிகள் கொண்டு அடைத்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நிறுத்துமாறு ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் அது தடுத்து நிறுத்தப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளுக்கு போலி உறுதிகளை முடித்து அதனை ஆக்கிரமித்து இஸ்லாமிய அடிப்படைவாத பள்ளிகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை இவ்வாறு அபகரித்து அவற்றை இரவோடு இரவாக அடைத்து குறித்த காணிகளுக்கு சுமார் 10 கிலோமீட்டர் வரையான வீதிகளையும் போட்டுள்ளனர்.

பிரதேச சபை மற்றும் அரச திணைக்களங்களில் எந்த வித அனுமதியும் பெறாமல் நடைபெறும் மேற்படி சட்டவிரோத வேலைத்திட்டங்களை உடன் நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் குறித்த பகுதியில் வீதிகளை நிறுவி வருகின்றனர்.

காணி மாபியாக்களின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்காக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியில் வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு வாகனங்களை ஏறாவூர் காவல்துறையிடம் பிடித்து கொடுத்ததுடன் மேற்படி பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத வீதி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்துமாறு ஏறாவூர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

ஆனால் முறைப்பாடு செய்த மறுநாள் இரவோடு இரவாக இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை சேர்ந்த காணி மாபியாக்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வீதிகளை அமைத்துள்ளதோடு பச்சை மரங்களை கொண்டு கம்பி வேலிகளையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து மீண்டும் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் சர்வானந்தன் ஏறாவூர் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள தமது காணிகளை அடைப்பதற்கு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி? – மனோ

கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை  நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது என முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் டக்ளஸ் தேவானந்தவிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,  எங்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் குரல் கொடுப்பேன். வடக்கு மீனவர்கள் பிரச்சனை என்பது பெரும் பிரச்சனை அவர்கள் ஏற்கனவே துன்பத்தை சந்தித்தவர்கள் யுத்தத்தை நாம் விரும்பவில்லை யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்தது. வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு  உள்ள தடையை அகற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் 30 வருடகாலமாக இலங்கை கடல்வளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவில் தற்போது இலங்கை வளத்தை பயன்படுத்திய  ஓர் தலைமுறையே உருவாகி விட்டது. இந்தியாவில்கூட  மாநிலம் மாறி வேறு மாநிலத்தில் மீன்பிடிக்க முடியாத நிலையில் இலங்கை எல்லைக்குள் வருவதும்  பிரச்சினைக்குரிய விடயம்.

இதற்கு இலங்கை மீனவர்களிற்கு பாரிய கப்பல்களை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சராக டக்ளசை நியமித்ததிலும் சதி உள்ளதோ தெரியாது.

இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டும் என அரசியல் தலைவர்களை கோர விரும்புகிறேன்” என்றார்.

Posted in Uncategorized

“25 ஆம் திகதி கடமைக்கு திரும்ப ஆசிரியர்களும் அதிபர்களும் எடுத்த முடிவு மிகச் சரியானது”

ஆசிரியர் – அதிபர்கள் மற்றும் விவசாயிகளினதும் போராட்டமும் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளும் நியாயமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எனவே அவர்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களுக்கு எதிராக செயற்படுவதை பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்களுக்கு எதிராக கருத்துரைக்கும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகள் அரச பாடசாலைகளிலா தற்போது கல்வி கற்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

அத்தோடு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கையை தொடங்க ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் எடுத்த முடிவை அனைத்து மக்களும் பாராட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

13 வது திருத்தம் கடனுக்கான முன்நிபந்தனை அல்ல – அரசாங்கம்

அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இந்தியாவிலிருந்து கடன் பெறுவதற்கான முன்நிபந்தனை அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் வாங்குவதற்காக கடன் பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இருப்பினும் இந்த விடயத்திற்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் ஒரு முன்நிபந்தனையாக வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளது.

நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் அடுத்த ஜனவரி வரை மட்டுமே போதுமானதாக உள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர், அதிபர்களுக்கு வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே விடுத்துள்ள எச்சரிக்கை!

21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமான பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தெரிவித்துள்ளார்.

அதேபோல், 25 ஆம் திகதியன்று யாராவது வந்தால், அவர்கள் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி, இணைய கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் அதிபர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் இன்று.

இந்தப் பின்னணியில், ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாடுக்கு எதிரான தேசியக் கூட்டமைப்பு கல்விச் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவை நேற்று (18) சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்து இருந்தனர்.

சம்பளப் பிரச்சினை தீரும் வரை தமது தொழிற்சங்கங்களின் ஆசிரியர் அதிபர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு செல்லமாட்டார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்வரும் நேற்று 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடங்க ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மடு கோயில் மோட்டை விவசாய காணியை ஒரு சிலரின் தூண்டுதலுடன் அபகரிக்க முயற்சி – மக்கள் போராட்டம்

மடு திருத்தலத்திற்கு உரிய  கோயில் மேட்டை விவசாய காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றமையை கண்டித்து மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மற்றும் சின்னப் பண்டிவிரிச்சான் கிராம மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் பஜார் பகுதியில் அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

நீண்ட காலமாக மடு திருத்தலத்திற்கு சொந்தமாக காணப்பட்ட குறித்த காணியை சிலரின் தூண்டுதலுக்கு அமைவாக அபகரிக்கப்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பகுதியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்துள்ள நிலையில்,தற்போது ஒரு சில தீய சக்திகளால் மத பிரச்சினையை தோற்றுவிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மடு திருத்தலத்திற்கான கோயில் மோட்டை காணியானது பல வருடங்களை கொண்டுள்ள நிலையில்,மடு ஆலய நிர்வாகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையிலே குறித்த காணி தொடர்பாக சில விஷமிகளால் மத பிரச்சனைகளை தூண்டி, குறித்த காணியை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த கிராமங்களில் ஏழை விவசாயிகள் இருக்கின்ற நிலையில் ஒரு குழுவினர் தாங்கள் ஏழை விவசாயிகள் என கூறிக்கொண்டு குறித்த காணியை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஜார் பகுதியில் இருந்து மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாக சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்தனர்.

பின்னர் வட மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிடம் கையளிக்கப்பட்டதோடு,துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.