பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடுபவர்கள் பட்டியலில் கோட்டாபயவின் பெயர்-எல்லைகள் அற்ற நிருபர் அமைப்பு

பத்திரிகை சுதந்திரத்தை பெருமளவில் முறியடிக்கும் 37 அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களின் விபரங்களை ‘RSF’ என்று அழைக்கப்படும் எல்லைகள் அற்ற நிருபர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இடம்பிடித்துள்ளதுடன், முதல் முறையாக இரு பெண்களும் ஒரு ஐரோப்பியரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஃப் இன் பத்திரிகை சுதந்திர வரைபடத்தில் 19 பேர் சிவப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது அவர்களின் நிலைமை பத்திரிகை சுதந்திரத்தக்கு “மோசமானது”.

16 நாடுகளின் தலைவர்கள் கறுப்பு நிறத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது அவர்களின் நிலைமை பத்திரிகை சுதந்திரத்துக்கு “மிகவும் மோசமானது”.

பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிராக செயற்படும் கொடுங்கோலர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (13) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

” பத்திரிகை சுதந்திரத்தை சூறையாடும் 37 தலைவர்கள் தற்சமயம் உலகம் முழுவதும் உள்ளனர். இந்த பட்டியல் முழுமையானது என்று யாரும் சொல்ல முடியாது” என்று ஆர்எஸ்எஃப் பொதுச்செயலாளர் கிறிஸ்டோஃப் டெலோயர் கூறினார்.

“இவ்வாறான தலைவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது சொந்த பாணியைக் கொண்டுள்ளனர். சிலர் பகுத்தறிவற்ற மற்றும் சித்தப்பிரமை உத்தரவுகளை பிறப்பித்து பயங்கரவாத ஆட்சியை முன்னெடுக்கின்றார்கள். மற்றவர்கள் கடுமையான சட்டங்களின் அடிப்படையில் கவனமாக கட்டமைக்கப்பட்ட மூலோபாயத்தை பின்பற்றுகிறார்கள்.

பட்டியலில் புதிதாக நுழைந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சவூதி அரேபியாவின் 35 வயதான கிரீட இளவரசர் முகமது பின் சல்மான்.

அவர் தனது கைகளில் உள்ள அனைத்து சக்திகளின் மையமாகவும், பத்திரிகை சுதந்திரத்தை சகித்துக் கொள்ளாத ஒரு முடியாட்சிக்கு தலைமை தாங்குகிறார். அவரது அடக்குமுறை முறைகளில் உளவு மற்றும் அச்சுறுத்தல்கள் அடங்கும், அவை சில நேரங்களில் கடத்தல், சித்திரவதை மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத பிற செயல்களுக்கு வழிவகுத்தன.

ஜமால் காஷோகியின் கொடூரமான கொலை வெறுமனே காட்டுமிராண்டித்தனமான ஒரு கொள்ளையடிக்கும் முறையை அம்பலப்படுத்தியது.

பட்டியலில் புதிதாக நுழைந்தவர்களில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவும் அடங்குவர், ஊடகங்களைப் பற்றிய ஆக்ரோஷமான மற்றும் கசப்பான சொல்லாட்சி தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து புதிய உயரங்களை எட்டியுள்ளது.

மற்றும் ஒரு ஐரோப்பிய பிரதம அமைச்சர், ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் ஆவார். அவர் 2010 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊடக பன்மைத்துவத்தையும் சுதந்திரத்தையும் சீராகவும் திறம்படவும் குறைமதிப்பிற்கு உட்படுத்தியவராகவும் காணப்படுகிறார்.

முதன் முறையாக பட்டியலில் இரு பெண்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவார்.

ஒருவர் கேரி லாம், அவர் 2017 முதல் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி, லாம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் கைப்பாவை என்பதை நிரூபித்துள்ளார்,

இப்போது ஊடகங்களுக்கு எதிரான தனது கொள்ளையடிக்கும் கொள்கைகளை வெளிப்படையாக ஆதரிக்கிறார். ஜூன் 24 அன்று ஹொங்கொங்கின் முன்னணி சுயாதீன செய்தித்தாள் ஆப்பிள் டெய்லியை மூடுவதற்கும், அதன் நிறுவனர் ஜிம்மி லாய், 2020 ஆர்எஸ்எஃப் பத்திரிகை சுதந்திர பரிசு பெற்றவரை சிறையில் அடைப்பதற்கும் அவரது தலைமை வழிவகுத்தது.

மற்றைய நபர் 2009 முதல் பங்களாதேஷின் பிரதம அமைச்சராக இருக்கும் ஷேக் ஹசினா.

அவரது கொள்ளையடிக்கும் சுரண்டல்களில் 2018 இல் டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்வது 70 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பதிவர்கள் மீது வழக்குத் தொடர வழிவகுத்தது.

இந்தப் பட்டியலில் புதிதாக இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும் இடம்பிடித்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட இராஜினாமா – பசில் பாராளுமன்றத்திற்கு?

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பசில் ராஜபக்ஸவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸவின் பெயர் தமக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இன்று முற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இவரின் இராஜினாமாவால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்காக பசில் ராஜபக்ஸவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயார்!

இருதரப்பு மற்றும் பலதரப்பு அரங்குகளில் பரஸ்பர நலன்களை முன்னேற்றுவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்திலேயே மேற்கண்ட விடயத்தினை தெளிவுபடுத்தியுள்ளார்.

1948 இல் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுடனான இலங்கையின் உறவுகள் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.எங்கள் இரு நாடுகளின் மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த பன்முக மற்றும் துடிப்பான கூட்டாண்மை மேலும் பலப்படுத்தப்பட்டு ஆழமடையும் என்று நான் நம்புகிறேன்.

கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா அளித்த விலைமதிப்பற்ற ஆதரவையும் உதவியையும் அரசாங்கத்துடன் இணைந்து இலங்கை மக்களும் பாராட்டுகின்றனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி பைடனின் சமீபத்திய முயற்சி, தேவைப்படும் நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகள் அளவுகள் நன்கொடையாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் தினேஷ் குணவர்த்தன பாராட்டுக்களை தெரிவித்தார்.

இக் கடித்தில் வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவின் சுதந்திரத்தின் 245 ஆவது ஆண்டு விழாவின் சந்தர்ப்பத்தில் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரசாங்கம் குறித்து அதிருப்த்தியா..? தாரளமாக வெளியேறலாம், கதவுகள் திறந்தே இருக்கின்றன – பிரதமர் மகிந்த

அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறுவதற்கான கதவுகளை அரசாங்கம் திறந்துவைத்துள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் விதத்தில் சில அமைச்சர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஐலண்ட் நாளிதழிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எவரையும் பலவந்தமாக வைத்திருக்கவில்லை, என தெரிவித்துள்ள பிரதமர் அரசியல்கூட்டணியொன்றில் மாறுபட்ட கொள்கைகள் காணப்படுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியலில் உள்ள வேறுபலர் போல இல்லாமல், நாங்கள் உள்ளக ஜனநாயகத்தை பேணுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள எவரும் வெளியேறலாம், மக்களின் நம்பிக்கை எங்கள் மீது உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம், அதற்காகவே மக்கள் எங்களிற்கு பெரும் ஆணையை வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில அரசியல்வாதிகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர் அதனை பெரிதுபடுத்தக்கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கத்தை நாங்கள் முன்னெடுக்கும் விதம் குறித்து எவராவது உண்மையிலேயே அதிருப்தியடைந்திருந்தால் அவர்கள் வெளியேறுவதற்காக எங்கள் கதவுகள் எப்போதும் அகலத்திறந்திருக்கின்றன அதேபோன்று நாங்கள் ஆட்சி செய்யும் விதம் பொருத்தமானது என கருதி எவராவது எங்களுடன் இணைய விரும்பினால் எங்கள் கதவுகள் அவர்களிற்காகவும் திறந்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்து அழைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் புதன்கிழமை கொழும்பில் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோரும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தீர்மானத்தினை நிறைவேற்றிய நாடுகள் பிறிதொரு தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை எரிக்சொல்ஹெய்ம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் -வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்

டெய்லி மிரருடன் மேற்கொண்ட டுவிட்டர் உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

1998 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளில் மூன்றாம் தரப்பாக செயறபடுவதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை அணுகினார்.

ஏனைய நாடுகள் குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர் எனினும் நோர்வே தொலைதூர நாடாக காணப்பட்டதாலும் இலங்கை குறித்து தனிப்பட்ட நலன்கள் இல்லாததன் காரணமாகவும் இரு தரப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக காணப்பட்டதாலும் அவர்கள் நோர்வேயை தெரிவு செய்தனர்.

நோர்வே என்பது இந்தியாவிற்கும் இலங்கை விவகாரங்களில் தொடர்புபட்டிருந்த முக்கிய வெளிநாடுகளிற்கும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நாடாக காணப்பட்டது.

முதல் இரண்டு வருடங்கள் அனைத்தும் கொழும்பில் இரகசியமாக இடம்பெற்றன.
விடுதலைப்புலிகள் தரப்பில் சமாதான முயற்சிகள் தொடர்பில் என்ன நடைபெறுகின்றது என்பது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமருக்கும் மாத்திரம் தெரிந்திருந்தது.

2000 ம் ஆண்டு சந்திரிகா தாக்கப்பட்டு கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்டார் அதன் பின்னர் அவர் எங்களின் பங்களிப்பு குறித்து பகிரங்கப்படுத்தினார்

2001-2002 இல் நாங்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம்முதல் இரண்டு வருடங்கள் அது மிகவும் வெற்றிகரமானதாக காணப்பட்டது எவரும் கொல்லப்படவில்லை.

ஒஸ்லோ உடன்படிக்கை குறித்த இணக்கப்பாடு காணப்பட்டதுஅது இலங்கை பிரச்சினைக்கு இரு தரப்பும் சமஸ்டி உடன்படிக்கையை ஆராயவேண்டும் என தெரிவித்தது.

இது இடம்பெற்றவேளை விடுதலைப்புலிகள் மிகவும் பலமான நிலையிலிருந்தனர் பலர் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருந்ததன் காரணமாகவே சமாதானப்பேச்சுவார்த்தைக்குள் இழுத்து வரப்பட்டனர் என தெரிவித்தனர்

ஆனால் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் அவர்கள் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையிலிருந்தனர்.
விமானநிலையம் மீதான தாக்குதல் இலங்கை பொருளாதாரத்தின் மீதுமோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் மிகவும் பலமாகயிருந்தவேளையே சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

மெல்லமெல்ல சமாதானப்பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சி காணத்தொடங்கின இருதரப்பும் மற்றைய தரப்பை இலக்குவைக்க தொடங்கின.

ஆனால் விடுதலைப்புலிகள் அரசாங்கத்தை விட அதிகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
மகிந்த அதிகாரத்திற்கு வந்ததும்வீதியோர வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் அவரது ஜனாதிபதி பதவியை பலவீனப்படுத்துவதற்கு விடுதலைப்புலிகள் முயன்றனர்.

ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதளபதி அரசியல் தலைவரில்லை .
அவர் அனைத்து தவறுகளையும் செய்ய தொடங்கினார்பாரம்பரிய இராணுவத்தை போல செயற்பட தொடங்கினார்.

Posted in Uncategorized

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹக்கீமுடன் பிரிட்டன் தூதர் பேச்சு!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இஸ்லாமிய வஹாபிஸ அடிப்படைவாதம் இன்னும் முடிவுப்பெறவில்லை: கலகொட அத்தே ஞானசார தேரர்

இஸ்லாமிய மதத்தின் பெயரால் கடந்த காலத்தில் நாட்டில் மேலோங்கிய வஹாபிஸ, அடிப்படைவாத செயற்பாடுகள் இன்னமும் முழுமையாக முடிவிற்குக் கொண்டுவரப்படவில்லை. எந்தவொரு தரப்பினராலும் வெளிப்படையாக இனங்கண்டுகொள்ளமுடியாத பல்வேறு கோணங்களில் அவை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே தோற்றுவிக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஒஸ்தாத் மன்சூரின் மாணவரான, தற்போதைய நீதியமைச்சர் அலி சப்ரியினால் முன்னெடுக்கப்படும் பல நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாதுகாப்பு அமைச்சின் மிகவும் முக்கிய பதவியொன்றுக்கு சிங்கப்பூர் பிரஜையான ரொஹான் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வெட்கமடைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது,

நாடளாவிய ரீதியிலுள்ள பாரம்பரிய முஸ்லிம்கள் பலரின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்றோம். இலங்கையில் வியாபித்துவரும் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம். தற்போதும் பலராலும் கண்டறிய முடியாதவகையில் இஸ்லாமிய மதத்தின் பெயரால் அடிப்படைவாதத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய அரசாங்கத்தின் கீழ், சில அரசியல் தலைமைகளின் துணையுடன் நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவந்த தீவிரவாத மற்றும் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய நாம், இவற்றை முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் புதிய தலைமைத்துவமொன்று அவசியம் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தோம்.

அதற்கமைவாக கடந்த 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது பெரும்பான்மைச் சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தெரிவான ஜனாதிபதி இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு ஏற்றவகையிலான சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவார் என்று எம்மைப்போன்றே மேலும் பலர் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். புதிய தலைமைத்துவத்தின் கீழ் இத்தகைய சில செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பினும் கூட, வேறுபல வழிகளிலும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ‘ஜிஹாத்’ கொள்கையானது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தியதாக இருக்கும் அதேவேளை, அது உலகளாவிய ஜிஹாத் கொள்கையாக மாற்றமடையக்கூடிய போக்குகளும் காணப்படுகின்றன. அதேபோன்று அண்மையில் முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்த யோசனையானது கடந்த ஆட்சிக்காலத்தில் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். குறிப்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களின் திருமண வயதெல்லை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் மாற்றப்பட வேண்டும் என்று நாமும் குறிப்பிட்டோம். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயதில் பெண்கள் திருமணம் செய்வதென்பது பொதுச்சட்டத்தைப் பொறுத்தவரை குழந்தைத் திருமணமாகும். அது சிறுவர் துஷ்பிரயோகமாகவே கருதப்படும். ஆகவே நாட்டில் இவ்வாறான இரு சட்டங்கள் பேணப்படுவதை விடவும், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் உள்ள விடயங்களைப் பொதுச்சட்டத்திற்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும். எனினும் அதனைத் திருத்துவதற்கான அமைச்சரவையின் தீர்மானத்திற்கு உலமா சபை எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றது. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் அதன்மூலம் வழங்கப்படும் தீர்ப்புக்கள் போன்றவை அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்படுவதற்கான அழுத்தத்தை வீடுகளுக்குள்ளேயே ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் நிகாப் மற்றும் புர்காவைத் தடைசெய்வதற்கான யோசனை அமைச்சர் சரத் வீரசேகரவினால் கொண்டுவரப்பட்டது. அந்த யோசனைக்குத் தற்போது என்ன நடந்தது? முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் பேசுபொருளானதன் பின்னர் அவ்விடயம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்றார் .

Posted in Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு சஜித்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் காட்டமான அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறு அதன் செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டது. இது உண்மையான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களின் இணக்கத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கட்டது என்பது அதன் உறுப்பினர்களுக்கு தற்போது மறந்து போயுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கடந்த தேர்தல் நிரூபித்துக்காட்டியுள்ளது. அது எழுமாறாக நடந்தது அல்ல.

ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைந்து செல்வதற்கு காரணம் என்பது குறித்து சுயவிசாரணை செய்து கொள்வது அந்தக் கட்சிக்கு உள்ள ஒரே தீர்வு என்பதோடு எமது அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமான மத்திய வங்கியின் முறிகள் மோசடிக்காரர்களை பாதுகாப்பது மற்றும் அரசாங்கத்துடன் டீல்களை மேற்கொண்டு தந்திரமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் ஆதரிப்பார்களாக என்று பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரிதிநிதிகளை நீக்கியது மக்களுடை ஜனநாயத்தின் உயிர் நாடிக்கு கொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதோடு மக்கள் பிரிதிநிதிகளை பிணையாக வைத்துக்கொண்டுள்ள கட்சி இவ்வாறான கோரிக்கையை வைப்பது கேலியாக உள்ளது.

ஆரம்பகால ஐக்கிய தேசியக் கட்சியின் பெறுமதி மற்றும் முன்னுதாரண செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது முன்னெடுத்து வருகின்றது. அத்தோடு சகல இனங்களையும் உள்ளடக்கி ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அசுத்தங்களை நீக்கி சுத்தமாகிய பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாக இருந்தால் அதற்காக கதவுகள் திறக்கட்டிருக்கின்றது. இல்லை ஐக்கிய தேசியக் கட்சி அதே பாதையில் பயணிக்கும் என்றிருந்தால் அதற்காக கவலைப்படுவதே அல்லாமல் வேறு மாற்றீடு ஒன்றும் இல்லை.

ரஞ்சித் மத்தும பண்டார

பொதுச் செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தி

தமிழர் தரப்பு ஒன்றிணைந்தது காலத்தின் கட்டாயம் ஒற்றுமைக்காக தொடர்ந்தும் பேசுவோம்!ரெலோ தலைவர் செல்வம் எம்பி

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்றையதினம் (04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றதென ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மற்றொரு சந்திப்பொன்று இன்று மாலை யாழ்ப்பாணத்தில் ரெலோவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுடன் பேசும்போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது இனத்தை அழிக்க நினைக்கின்ற அரசாங்கத்திற்கு ஒரு பலமான சக்தியாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலே தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். இரண்டாவது முறையில் நாங்கள் விடுபட்ட தரப்புகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காரியாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.நாங்கள் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் . அதைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.ஏனையவர்கள் கலந்துகொள்ளவில்லை.

நாங்கள் இதன்பிரகாரம் இந்த வாரம் நாடாளுமன்றம் கூடிய பின்னர் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு கூட்டான பலமான அமைப்பாக செயல்படுவதற்கு ஒரு முடிவை நாங்கள் எடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் அடுத்து வரும் நாட்களிலேயே நாங்கள் அழைக்க விரும்பிய தலைவர்களோடு பேசி இறுதியாக ஒரு ஒரே குடையின் கீழ் ஒரே கூட்டாக செயற்படுவதற்கான ஒரு முடிவை நாங்கள் எடுக்க இருக்கின்றோம்.

உண்மையிலேயே எல்லோரையும் அரவணைத்து போக வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம். அந்த வகையிலே நாங்கள் மீண்டும் அந்த கட்சித் தலைவர்களிடம் நாங்கள் இது சம்பந்தமாக கலந்தாலோசித்து நேரே சென்று அவர்களுடன் பேசி அவர்களை இந்த பலமான ஒற்றுமைக்குள் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நாங்கள் கொண்டு வருவோம்

நாங்கள் சி.வி விக்னேஸ்வரன் தரப்புக்கும் அழைப்பு விடுத்திருந்தோம் விக்னேஸ்வரன் மற்றும் அவருடன் இருக்கின்ற அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். அந்த வகையில் நாங்கள் மீண்டும் அவர்களை சந்திக்க இருக்கின்றோம். அவர்களை சந்தித்து ஒற்றுமை தொடர்பில் பலமான கூட்டாக செயற்படுவதற்கு முயற்சியை நாங்கள் மேற்கொள்வோம். அவர்களும் அதற்கு விரும்புவார்கள் .

அந்தவகையில் ஒற்றுமையை உருவாக்கி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உடைய எதிர்ப்பை நாங்கள் தடுக்க வேண்டும். எங்களுடைய இனத்திற்காக
எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

சர்வதேசத்தில் எங்களுடைய சார்பாக பல நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றது .அந்த வகையிலே இந்த ஒற்றுமை பலம் சேர்க்கும் வகையில் அமையும் என்பதை நான் கூறுகின்றேன். புலம்பெயர்ந்த உறவுகளை இணைத்து இந்தியாவிலேயே உள்ள தமிழ்நாட்டு தமிழர்களை இணைத்து இதனை நாங்கள் பலமான சக்தியாக காட்டவேண்டும். அது காலத்தின் கட்டாயம் .

புளொட் மற்றும் ரெலோவுக்கு நாடாளுமன்றில் நேரம் ஒதுக்குவது சம்பந்தமாக கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்து இருந்தீர்கள் .அதே நிலையில் தான் தற்போதும் உள்ளீர்களா என்று கேட்டபோது,ஒற்றுமைக்காக நாங்கள் சில விஷயங்களை தவிர்த்து வருகிறோம். இந்த விடயங்கள் சம்பந்தமாக மக்கள் மத்தியிலே சில கேள்விகள் ஏற்படுகிறது.

பிரச்சனைகள் இருக்கின்றது. ஆனால் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த பலம் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் பிரச்சினை இருக்கின்றது ஆனால் பேசித் தீர்க்க வேண்டும். பேசி தீர்க்கலாம் என்ற வகையிலே ஒற்றுமை என்பது மிக முக்கியம்.பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அதனை தீர்க்காத பட்சத்தில் முடிவுகளை எட்ட வேண்டும்.

ஆண்டவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆண்டவர் மேல் பழியை போட்டுவிட்டு இருக்க முடியாது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடுகள் எங்களுடைய தேசத்தில் மிகத் துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை முறியடிப்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் காலத்தின் கட்டாயம்.

அரசாங்கம் மிக மோசமான செயற்பாட்டை செய்கின்றது. எங்களுடைய கடற்பரப்பில் கப்பல் தாழ்ந்ததன் பின்பு எங்களுடைய கடல் பரப்பிலேயே மிக மோசமான செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது .ஆமைகள் திமிங்கலங்கள் உயிர் இழந்து கரையொதுங்கி வருகின்றன .
மீனவ சமூகம் பெரிய பிரச்சனைகள் கண்டு கொண்டு இருக்கின்றது. அந்த வகையிலே அது தவிர்க்கப்பட வேண்டும். ஐரோப்பிய யூனியன் பல கோடி ரூபாயை மீனவ சமூகத்திற்கு கொடுக்கவுள்ளது. அந்த கொடுப்பனவு தனிப்பட்ட சிங்கள மீனவர் சமூகத்துக்கு மாத்திரம் சென்றடையக் கூடாது இதை கடற்றொழில் அமைச்சராக இருக்கின்ற டக்ளஸ் தேவானந்தாவும் இதில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும் எங்களுடைய வடகிழக்கில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் அந்த பணம் செல்வதற்கான கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார்.