இலங்கையர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்துமாறு சுவிஸ் அரசிடம் OMCT கோரிக்கை

மருத்துவ சிகிச்சை தேவைப்படும் இலங்கையர்களான புலம்பெயர்ந்தோர் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை சுவிட்சர்லாந்து உடனடியாக நிறுத்த வேண்டும் என சித்திரவதைக்கெதிரான உலக அமைப்பு (OMCT) கடிதம் ஒன்றின் ஊடாக  கோரியுள்ளது.

மேலும்  குறித்த கடிதத்தில்,

இலங்கையில் தற்போது நிலவும் சூழல் பயங்கரமானது, பொருளாதார நெருக்கடிகள் வன்முறைக்கு வழிவகுத்துள்ள நிலையில், அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட நிச்சயமில்லை.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், புகலிடக் கோரிக்கையாளர்களையும், புலம்பெயர்ந்தோரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயல்.

அவர்களில் சிலருக்கு இன்னமும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அப்படி அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, சுவிட்சர்லாந்தை அதன் சர்வதேச சட்ட ரீதியான பொறுப்புக்களை மீறவைப்பதாக அமையும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் பலருக்கு இப்போது சுவிட்சர்லாந்தில் போதுமான சிகிச்சை கிடைத்து வருகிறது. அவர்களில், பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளான இலங்கைத் தமிழர்களும் அடங்குவர்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், அவர்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்புவது அவர்களுக்கு மேலும் பிரச்சினைகளை உருவாக்குவதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ புனர்வாழ்வு சேவைகள் கிடைப்பதற்கும் தடையாக அமையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துங்கள்! தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை

பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு ஸ்ரீ தேசிய சமாதான ஆணைக்குழு (NPC) கோரியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , “உலகில் அரிதாகவே காணக்கூடிய அரசியல் புரட்சியை இலங்கை கண்டுள்ளது. மக்களால், மக்களுக்காக ஒரு நிராயுதபாணியான எதிர்ப்பு இயக்கம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. எதிர்ப்பு இயக்கம் அதன் அளவு, செயல்திறன் மற்றும் வன்முறையற்ற தன்மை காரணமாக சர்வதேச சமூகத்தின் வரவேற்பை பெற்றுள்ளது. போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கு அதன் தன்னிச்சையான மற்றும் அமைதியான தன்மையே காரணம்.

மக்களின் உண்மையான மனக்குறைகளே போராட்ட இயக்கத்தை உருவாக்கி அதை வெகுஜன இயக்கமாக மாற்றியது. நாட்டில் நிலவும் பேரழிவு நிலைமைக்கான பொறுப்பை முன்னாள் அரசாங்கம் மறுத்ததுடன், நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது. வன்முறையைத் தொடங்கியதே அரசுதான். தற்போது புதிய ஜனாதிபதியுடன் ஒரு புதிய அரசாங்கம் உள்ளது, ஆனால் 2022 மே மாதம் இராஜினாமா செய்த அமைச்சரவையே பெரும்பான்மையாக உள்ளது. இது எதிர்ப்பாளர்களின் விரக்தியை அதிகப்படுத்தியுள்ளது.

பொருளாதார சரிவுக்கான காரணங்களை ஆராய்ந்து அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அமைதி கவுன்சில் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் காரணமாக நாடு அனுபவித்த பல சீரழிவுகள் காரணமாக மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இழந்துள்ள பாராளுமன்ற ஆணையை புதுப்பிப்பதற்கு முன்கூட்டியே தேர்தலை அறிவிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என இலங்கை தேசிய சமாதானப் பேரவை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் தொடரும் பொருளாதர நெருக்கடி- ஆடை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

பொருளாதார நெருக்கடியால் ஆடை உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய வர்த்தக வலய சேவை மையம் தெரிவித்துள்ளது.

வர்த்தக வலய தொழிலாளர்களுக்கான தேசிய மத்திய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகள் உள்ளிட்டவற்றால் ஆடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்மையால் தமது பொருட்களை உரிய நேரத்தில் வழங்க முடிவதில்லை எனவும் இதன் காரணமாக சர்வதேச சந்தையில் இலங்கை பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு நிதி உதவி வழங்க இத்தாலி தீர்மானம்

உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு 300,000 யூரோக்கள் பெறுமதியான அவசர உதவியை வழங்க இத்தாலி தீர்மானித்துள்ளதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

“உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் இந்த நிதி பங்களிப்பு வழங்கப்படும், மேலும் உணவு உதவி மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வவுச்சர்களை விநியோகித்தல் ஆகிய வேலைத்திட்டங்கள் இந்நிதி மூலம் மேற்கொள்ளப்படும் என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சர்வதேச சமூகம் தனது முயற்சிகளை முடுக்கி விடுவதும் இலங்கைக்கு தனது ஆதரவைக் காட்டுவதும் மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அவசர உதவி நடவடிக்கை இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய வலுவான கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் வருகிறது மற்றும் கடந்த ஏப்ரலில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக 350.000 யூரோகள் வழங்கப்பட்டன .
மேலும் கடந்த காலங்களில், 2004 சுனாமிக்குப் பின்னரும் உட்பட, இலங்கைக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் இத்தாலி தொடர்ந்து ஆதரவளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, விவசாயத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளுக்கு இத்தாலி ஆதரவளித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன கப்பல் விவகாரம் – இந்தியா சீனாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனாவின் கப்பல் வர அனுமதிதொடர்பில் சுமூகமான தீர்வை காண்பதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவுடனும் இந்தியாவுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் யுவான் வான் 5 கப்பல் தொடர்பிலேயே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது

ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னரே குறிப்பி;ட கப்பல் இலங்கைக்கு வருகை தருவதற்கு வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் துறைமுகங்கள் அதிகாரசபையும் அனுமதிவழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,கப்பல் 11 ம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளது.

எனினும் இந்தியா இந்த நடவடிக்கைகுறித்து அதிருப்தியடைந்துள்ளது இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கை குறித்தும் இந்தியா உன்னிப்பாக அவதானித்து என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இந்த வாரம் தெரிவித்திருந்தார்.

.இதனை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளது இதுவே தெளிவான செய்தி எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கைக்கு அதிகளவு கடனையும் ஒத்துழைப்பையும் வழங்கிய சீனா இந்தியாவுடன் இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.

Posted in Uncategorized

நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கம் அமைய தமிழ் தரப்பினர் பரீசீலிக்கலாம். – முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருக்கும் இந்தவேளையில் தமிழ் மக்கள் மத்தியில் புரையோடியிருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டுவதற்கு முதலில் நல்லெண்ண செயற்பாடாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதன் மூலம் தமிழ் கட்சி தரப்பினர் சர்வ கட்சி அரசு அமைவதற்கு சாதகமாக அமைய வாய்ப்பு ஏற்படும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தூரநோக்கு சிந்தனையாளரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் ஜனாதிபதி சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பாக தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் செய்தியில்

நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதன் தொடர்பாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்

உண்மையிலேயே சர்வ கட்சி அரசாங்கம் அமைய பெறுவதற்கு சிங்கள பெரும்பான்மை கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் அவற்றிற்கு ஆதரவு வழங்க இருக்கின்றனர்

அந்த வகையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவையும் அவர் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்த்து இருக்கின்றார்

உண்மையில் தமிழ் தரப்பு கட்சினர் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கிய செயல்பாடாக ஜனாதிபதியிடம் தெரிவித்து நல்லெண்ண வெளிப்பாடாக அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் உடனடி மற்றும் நீண்ட கால பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் பரிசீலிக்க கூடியதாக இருக்கும்

ஏனென்றால் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனைகள் பல தீர்க்கப்பட வேண்டி இருக்கின்றது

இதில் முதன்மையாக இருப்பது அரசியல் கைதிகளின் விவகாரம் இந்த அரசியல் கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படும்போது சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பான விடயத்தை தமிழர் தரப்பு பரீசீலிக்க முடியும்.

அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் காணி அபகரிப்பு மற்றும் வடகிழக்கு பகுதிகள; மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புலம்பெயர்ந்தோரை இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு சாதகமான செயற்பாடாக அமையும் .

குறிப்பாக மாகாணங்களுக்கு உள்ள நிதி அதிகாரங்கள் சம்பந்தமாக பேசப்பட வேண்டும் அத்துடன் இதற்கான உடனடி தீர்வுகள் கிடைக்கப்பெற வேண்டும்

அத்துடன் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைகளுக்கு சர்வ கட்சி அரசாங்கத்தின் மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வின் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உடனடி தீர்வு எட்டப்பட வேண்டும்

இவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது தமிழ் தரப்பு சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பாக சாதகமாக பரீசீலிக்க கூடியதாக இருக்கும்

ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவற்றை சரியாக தமிழ் தரப்பினர் பயன்படுத்த வேண்டும். ஆகவே முதலில் அரசியல் தமிழ் கைதிகள் விடுதலை நல்லெண்ண வெளிப்பாடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெறுமாகில் தமிழ் மக்களின் நீண்டகால மற்றும் உடனடி பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்வதன் மூலம் ஜனாதிபதியின் அழைப்பு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

22ஆவது திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி !

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.

நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அகிலம் போற்றும் நல்லூர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்: கொடிச் சீலை பிரதம குருக்களிடம் கையளிப்பு

அகிலம் போற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் பாரம்பரிய நிகழ்வு இன்று திங்கட்கிழமை(01.8.2022) காலை-9 மணிக்குப் பக்திபூர்வமாக
நடைபெற்றது.

ஆலய மரபிற்கு அமைய நல்லூர் கிழக்கு சட்டநாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை ஆராதனைகளைத் தொடர்ந்து கொடிச் சீலை தயாரிக்கும் மரபினை உடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

இதேவேளை, இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(02.8.2022) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்ற உற்சவத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்தும் 25 தினங்கள் வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழா சிறப்பாக இடம்பெற உள்ளது.

இவ்வாலயப் பெருந் திருவிழாவில் எதிர்வரும்-11 ஆம் திகதி மாலை-4.45 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-4.45 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-4.45 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-6.45 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு வேல்விமான(தங்கரதம்) உற்சவமும், 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6.45 மணிக்கு தெண்டாயுதபாணி உற்சவமும், அன்றையதினம் மாலை-4.45 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 24 ஆம் திகதி புதன்கிழமை மாலை-4.45 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 25 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-6.15 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-6.15 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-5 மணிக்கு கொடியிறக்க உற்சவமும், மறுநாள் சனிக்கிழமை மாலை-4.45 மணிக்குப் பூங்காவன உற்சவமும் இடம்பெறும்.

கோட்டாபய ராஜபக்ஸ இலங்கை வர உகந்த சந்தர்ப்பம் இதுவல்ல: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருகை தருவதற்கான உகந்த சந்தர்ப்பம் இது அல்லவென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவர் வருகை தரும் பட்சத்தில், நாட்டிற்குள் அரசியல் நெருக்கடி ஏற்படலாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விரைவில் இலங்கைக்கு வருகை தருவதற்கான சாத்தியம் தென்படவில்லையென அமெரிக்காவின் Wall Street Journal பத்திரிகையுடனான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேலும் சில காலங்கள் செல்லும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Wall Street Journal பத்திரிகைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மடு ஆவணித் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல் – பல்வேறு தீர்மானங்கள் முன்வைப்பு

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று முதலாம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், மடு திருத்தல பரிபாலகர் எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார், சுகாதார திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், ராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருவார்கள் என்ற காரணத்தால் அதற்கு அமைவாக திணைக்களங்கள் தொடர்பான சேவைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசேட புகையிரத சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் ,அநுராத புரத்தில் இருந்து மடு புகையிரத நிலையத்திற்கும் எதிர்வரும் 13ஆம், 14ஆம், மற்றும் 15 ஆம் திகதிகளில் வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மடு புகையிரத நிலையத்தில் இருந்து மடு திருத்தலத்திற்கு பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று மீளவும் ஆரம்பித்துள்ள மையினால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து திருவிழா திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Posted in Uncategorized