15 இலட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு

இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான 15 இலட்சம் ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் செய்தி வெளியியாகியுள்ளது.

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் 6ஆம் திகதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தகுதியான வீர்ரகளை அனுப்ப வேண்டும்.

அதேபோல, இலங்கையில் ஏற்கனவே மே 9ம் திகதி நடக்கவிருந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த போட்டிகளும் ஜூன் 7முதல் 10 வரையிலான தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்தி, இதன்மூலமும் வீரர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிக்களங்களுக்கு அனுப்ப வாய்ப்புண்டு.

ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்புவதற்கான செலவைக் கையாளுவதில் பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசும்போது “முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும், தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிப்ப என்பது, பணம் ஏற்பாடு செய்யமுடியாத அதேசமயம் தகுதியுடையவர்கள் இருக்கும்போது முறையன்று.

எனவேதான் இதில் தனியாரின் உதவியை நாடுகிறோம் என்கிறார் இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்று ஐலேண்ட் ஆன்லைன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திட்டம் – சர்வதேச நிதி நிறுவனங்கள் கூட்டாக வெளியீடு

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான கூட்டுத்திட்டமொன்றை உலகவங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆசிய முதலீட்டு உட்கட்டமைப்பு வங்கி ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ளன.

இந்த கூட்டு திட்டத்தில் மருந்துதேவைகளை நிறைவேற்றுவதற்கான திட்டம்,நிதி உதவி எரிவாயு மற்றும் உரதட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Posted in Uncategorized

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

நாட்டில் தற்போதைய பொருளாதார இடரை கருத்தில் கொண்டும் நஞ்சற்ற காய்கறி உற்பத்தியினூடாக சுய பொருளாதாரத்தை அதிகரித்தல் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குதல் எனும் நோக்கில் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு தானிய விதைகள், நாற்றுகள் அதனோடிணைந்த பொருட்களை இலவசமாக வழங்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது குறித்த தீர்மானம் சபை உறுப்பினர் சி. கௌசலாவினால் முன்வைக்கப்பட்டது.நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார இடரை சிறிதளவேனும் குறைக்கும் வகையில் முன்வக்கப்பட்ட இந்த பிரேரணை ஏக மனதான நிறைவேற்றப்பட்டது .இதேவேளை குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் அதிகார பூர்வமான விபரங்களை உள்ளடக்கிய பத்திரிகை விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என சபை அறிவித்துள்ளது.

தமிழினப் படுகொலை தான் எனக் கனடா அங்கீகரித்தமை நீதி தேடும் நெடும் பயணத்தில் ஒரு மைல் கல் -ஐங்கரநேசன்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உலகின் முதல் நாடாக கனடா ஏற்றுக்கொண்டுள்ளது. இது தமிழ் மக்களின் நீதிதேடும் நெடும் பயணத்தின் ஒரு மைல்கல் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலையே என்பதை அங்கீகரித்துக் கனேடியப் பாராளுமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதற்கு இலங்கை அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு மிகக் கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துத் தமிழினப் படுகொலையை நிகழ்த்தியே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. அப்போதிருந்தே தமிழினம் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலக நாடுகளினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் கதவுகளைத் தட்டிவந்த நிலையில் கனடாவின் தீா்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி கனேடியப் பாராளுமன்றில் இலங்கையில் நடந்தது தமிழினப் படுகொலைதான் என்பதை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றியமை தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நடந்த யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே என்று அரச தரப்புப் பரப்புரை செய்து வருகிறது. இது ஓர் போர்க்குற்றமே என்று அரசாங்கத்தைக் காப்பாற்றும் முகமாகச் சில தரப்புகள் கூறிவருகின்றன. ஆனால், நிகழ்ந்தது தமிழினப் படுகொலையேயென தமிழினம் நீதிகேட்டுத் தசாப்த காலத்துக்கும் மேலாகப் போராடி வருகிறது. இந்நிலையிலேயே அவர்களது போராட்டத்துக்குக் கிடைத்த ஒருபெரும் வெற்றியாகக் கனேடியப் பாராளுமன்றத்தின் தீர்மானம் அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை ஏற்று ஆண்டுதோறும் மே-18 ஆம் திகதியைத் தமிழர் இன்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரிக்க வேண்டும்” என்ற பிரேரணையை முன்வைத்தபோது எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழினம் தன் இலக்கை நோக்கி முன்னேறிச்செல்ல கனேடியப் பாராளுமன்றின் இத்தீர்மானம் ஒரு கொழுகொம்பாக அமைந்துள்ளது.

கனேடியப் பாராளுமன்றில் இப்பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரிக்கும், ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பின்னால் நின்று உழைத்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கும் தமிழ்கூறும் நல்லுலகு தலைசாய்த்துத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு

அவசரகால நிலை பிரகடனம் நேற்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரம் அளித்து, மே மாத தொடக்கத்தில் இரண்டாவது முறையாக அவசரகால நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரகடனம் செய்தார்.இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவசரகால சட்டம் செயலில் இல்லை என ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அவசரகால நிலை பிரகடனம் நிறைவேற்றப்பட்டு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகரம் பெறப்பட வேண்டும். இதுவரை பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டிருக்காத நிலையிலேயே தன்னியல்பாக நேற்று முதல் ரத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இனப்படுகொலை நினைவு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கனடா அங்கீகரித்தமையை வரவேற்கிறோம் – ரெலோ

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

உலகத்திலேயே முதல் அங்கீகாரம் வழங்கிய நாடாக கனடா அமைந்துள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். இந்த முயற்சிக்கு பின்னணியில் இருந்த புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பிரேரணையை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கரி ஆனந்தசங்கரி அவர்கள் பாராளுமன்றில் சமர்ப்பித்த வேளை ஏகமனதாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதிக்கான போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தின் முதல் படியாக இதை நாம் கருதுகிறோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்காக நீதியைக் கோரி பல வருடங்களாக எமது இனம் போராடி வருகிறது. கனடியப் பாராளுமன்றத்தின் இந்த அங்கீகாரம் எமது முயற்சிக்கு நம்பிக்கை தருவதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.

இது போன்று ஏனைய நாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகளும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை ஒருமித்து முன்னெடுக்க வேண்டும் என கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

எதிரணி உறுப்பினர்களை விலைக்குவாங்கும் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – ஹக்கீம்

யுத்தத்தினால் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூறுவதற்கு கடந்த வருடம் தடை விதிக்கப்பட்ட போதும் இம்முறை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாலே நினைவேந்தல் நடைபெற்றது .இது ஒரு புதிய சமிக்ஜையை காட்டுகிறது . இதனை அங்கீகரிக்க வேண்டும்.

அத்துடன் அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் நிறுத்திக்கொள்ளவேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) மூன்றாவது நாளாக இடம்பெற்ற கடந்த 9ஆம் திகதி கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கவேண்டும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். அதேபோன்று அரசியல் தாமிகத்தையும் ஆளும் எதிர்க்கட்சியினர் பின்பற்றவேண்டும். குறிப்பாக அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

புதிய பிரதமரின் அரசாங்கத்தில் ஆரம்பத்தில் 15 அமைச்சர்கள் என்றார்கள் அதன் பின்னர் 18 என்றார்கள் ஆனால் தற்போது 22 அமைச்சர்கள் என கேள்விப்படுகின்றது. எதிர்க்கட்சியில் இருந்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக்கொண்டே இதனை செய்யப்பாேவதாகும் தெரியவருகின்றது.

பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி சபை ஒன்றை ஏற்படுத்தி நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம். அதற்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆளும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நாட்டை கட்டியெழுப்புவோம். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் கலாசாரத்தை நிறுத்தவேண்டும். இதந்த அறிவிப்பை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு சபை முதல்வரை கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் கடன் செலுத்த முடியாமல் போயிருப்பதால் நேற்றில் இருந்து நாடு வங்குராேத்து என சட்டரீதியிலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் யுத்தம் வெற்றிகொண்டு 13ஆவது வருடத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். ஆனால் அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.

காலிமுகத்திடலில் போராடும் மக்கள் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்கள். புலிகள் அமைப்பில் இறந்தவர்கள் அதேபோன்று உயிர் நீத்த ராணுவ வீரர்களையும் ஒரே நேரத்தில் நினைவு கூர்ந்தனர்.

கடந்த வருடம் முள்ளவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றபோது ராணுவத்தினர் அதனை தடுத்து, அவர்களை சிறையில் அடைத்தார்கள்.

ஆனால் இந்த வருடம் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே உயிரிழந்தவர்களை நினைகூரும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதுதான் யுகமாற்றம், புதிய சமிக்ஜை. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த வழியில் நாங்கள் செல்வோம்.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவரின் உரைக்கு பின்னர் உரையாற்றியவர்களே ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் செயற்பட்டனர்.

வன்முறையை தடுக்க தவறியது தொடர்பில் பொலிஸ்மா அதிபரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி கொண்டிருக்கிறார்கள் .

அத்துடன் நீதிபதி தடை உத்தரவு பிரப்பிக்கவில்லை என தெரிவித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிரதம நீதியரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு என தெரிவித்து செயலாளருக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பிரதம நீதியரசர் சட்டமா அதிபருக்கு தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கின்றது. இவை தவறான முன்மாதிரியாகும் என்றார்.

Posted in Uncategorized

ஹரீன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலரும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் விபரம்

  1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், விமான சேவைகள்2 சுசில்
  2. பிரேமஜயந்த – கல்வி
  3. கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
  4. விஜேதாச ராஜபக்‌ஷ – நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
  5. ஹரீன் பெர்னாண்டோ – சுற்றுலாத்துறை மற்றும் காணி
  6. ரமேஷ் பத்திரண – பெருந்தோட்டக் கைத்தொழில்
  7. மனுஷ நாணயக்கார – தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
  8. நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு
  9. டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு
Posted in Uncategorized

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் தோன்ற ஆரம்பித்துள்ளன என்பது தெளிவாகின்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது சர்வகட்சி அரசாங்கத்தையோ அமைக்க முன்வந்தபோதிலும், அமைக்கப்படும் அரசாங்கத்தில் அவை எதுவும் இல்லை என்றும், முன்னர் ஆட்சியில் இருந்த அதே ஆட்சிதான் தற்போதும் உள்ளது என்று நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவிதித்துள்ளார்

புதிய அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கு மாத்திரம் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதி அமைச்சரிடம் இதொகா கோரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளை வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்  இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரான  பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இந்த சந்திப்பின் போது இ.தொ.கா நன்றி தெரிவித்துள்ளதுடன், தற்போதைய இக்கட்டான சூழ்சிலையில் இருந்து இலங்கையை மீண்டெழ இந்திய அரசாங்கத்தின் ஒத்ழைப்பும் உதவியும் அதிகமாக தேவைப்படுகிறது.

அதேபோன்று இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக இந்த பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்தியா அவர்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் என்பதுடன், இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து விதத்திலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் இந்த சந்திப்பில் இ.தொ.கா இந்திய நிதி அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இக்கோரிக்கைக்கு சாதகமான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் இந்தியா முன்னெடுக்கும் என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.