அவசரகாலச் சட்ட பிரகடனம் – காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல்

இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது அதற்கான ஆணையை ஜனாதிபதி  பிறப்பித்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவில் வெளியாகும்

Posted in Uncategorized

” 36ம் ஆண்டு நினைவுகள் ” (சித்திரை 29 – வைகாசி 06)

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை
குலைந்த,குலைக்கப்பட்ட நாள்!!
ஈழக் கனவு கலைந்த,கலைக்கப்பட்ட நாள்!!!

சுதந்திரத்துக்காக போராட
சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள்!!!

எம் மீதும் எம் தலை(வன்) மீதும்
துரோகம் சூட்டப்பட்ட நாள்!!!!

“தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்!”

Posted in Uncategorized

பாராளுமன்றம் ஒத்திவைப்பு: ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் கைவிட்டனர்!

பாராளுமன்றம் மே 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நேற்று முதல் மாணவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று மாலையும், இன்று பிற்பகலும் மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன், இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்திற்குள் சென்று அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தாமும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு 200,000 யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.

இதன்படி 200,000 யூரோக்களை ( 74 மில்லியன் இலங்கை ரூபாய்) இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களின் தீர்வு விடய முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் தான் இந்த நாடு மீட்சி பெறும் – டெலோ பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார்

இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும். அவ்வாறான ஒற்றுமை வெறுமனே வாயளவில் இல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்களின் தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் இந்த நாடு மீட்சி பெறும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது வீரவணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினவினை எமது மட்டக்களப்பு காரியாலயத்தில் மேற்கொண்டுள்ளோம். 1986ம் ஆண்டு மே மாதம் 06ம் திகதி யாழ்ப்பாணம் அன்னங்கை என்ற இடத்தில் வைத்து எமது தலைவர் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

நாங்கள் எமது தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள். இன்றும் அவர் கொள்கைகள் மாறாவண்ணம் எமது மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஹர்த்தாhல் அனுஸ்டிக்கும் தினமாகையால் எமது இந்த நிகழ்வினை குறிப்பிட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொண்டுள்ளோம்.

இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றதற்கு இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த இனவாதத் தலைவர்களே காரணம். தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக போரும் அதன் பின்னரான பொருளாதாரச் சீரழிவுகளும் இடம்பெற்று தற்போது இந்நிலையில் வந்திருக்கின்றது. இன்று இந்த நாடு உலகலாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கிழுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கின்றது.

தமிழர்கள் தங்கள் உரிமைகளை முன்நிறுத்தி தங்கள் போராட்டத்தை எங்கு ஆரம்பித்தார்களோ அதே காலி முகத்திடலிலே இன்று சிங்கள மக்கள் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இந்த அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரப் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டிப் போராடும் சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைப் பிரச்சனை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதன் வரலாறுகளை அறிந்து ஏற்பட்ட தவறுகளைத் திருத்தவும் முன்வர வேண்டும்.

புழர்ழஅநபுழவவய போராட்டம் நடைபெறுகின்ற பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகம் முன்பாகவுள்ள காலி முகத்திடலில் தான் தமிழ் மக்களின் உரிமை போராட்டமும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வடிவிலான அடக்கு முறையும் அத்திவாரமிடப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் காலி முகத்திடல் பல போராட்ட வரலாறுகளை கொண்டிருந்தாலும் முதலாவது போராட்டமாக 1956 தமிழர்களின் சத்தியாகிரக போராட்டம் தான் பதிவாகியுள்ளது. அந்த பூமியில் தான் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையிலான வன்முறைகளுக்கும் அடித்தளம் இடப்பட்டது.

தமிழர்களின் உரிமை போராட்டத்தில் முதல் ரத்தம் சிந்திய பூமி காலி முகத்திடல். இலங்கை நாடாளுமன்றத்தில் 1956 யூன் 05 தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் மொழி தேசிய மொழி அந்தஸ்த்தை இழந்;தது. சிங்கள மொழியில் பணிபுரிய முடியாத தமிழ் அரச ஊழியர்கள் பணி இழக்க நேரிட்டது. இச்சட்டதிற்கு எதிராக தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழர்கள் சத்தியாகிரகப் போராடத்தை முன்னெடுத்தனர். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட 1956 யூன் 05ல் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக இருக்கின்ற அப்போதைய நாடாளுமன்றுக்கு முன்னாலுள்ள காலி முகத்திடலில் ஆயிரகணக்கில் தமிழர்கள் அணி திரண்டனர்.

தந்தை செல்வாவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதம் தங்கிய இராணுவத்தினரும் காவல்துறையினரும் அங்கு காணப்பட்டனர். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க உட்பட மற்றைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேல்மாடியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்த்தனர். அமைச்சரான கே.பி.ராஜரத்ன மற்றும் சிங்கள மொழி பாதுகாப்புத் தலைவர் எல்.எச்.மேதானந்த ஆகியோரின் தலைமையிலான குண்டர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் குண்டுக் கட்டாக தூக்கப்பட்டு அருகிலுள்ள சகதிக்குள் வீசப்பட்டனர். இராணுவம், காவல்துறை முன்னிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. காலி முகத்திடல் தமிழர்களின் இரத்தம் சிந்திய பூமியானது.

அமிர்தலிங்கம் இரத்தம் சிந்திய நிலையில் நாடாளுமன்றத்திற்குள் சென்று அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்களைத் தந்தை செல்வா பொறுமை காக்குமாறு கோரினார். அஹிம்சைப் போராடத்தைக் கைவிட வேண்டாம் என்றும் தமிழர்களைக் கேட்டுக்கொண்டார். தமிழர்கள் இரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்த்த சிங்கள தலைவர்கள் நாடாளுமன்றின் உள்ளே சென்று தனிச் சிங்களச் சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். இந்த வரலாறு எத்தனை சிங்கள இளைஞர்களுக்குத் தெரியும்.

ஏன், இன்று நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் இரவு பகலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுகின்ற இதே காலி முகத்திடலில் தான் 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மக்கள் முன்னிலையில் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி பிரமாணமும் செய்து கொண்டார்.

இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி முகத்திடலில் மக்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் மக்களின் இவ்வாறான போராட்டங்களுக்கு செவி சாய்க்கின்றனர், மதிப்பளிக்கின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்திலே பல நாடகதாரர்களின் முகத்திரைகள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. வெறுமனே 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்கள் பக்கம் நிற்பதென்பது மிகவும் வேதனையான விடயம். இதனை சிங்கள மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும்.

அவ்வாறான ஒற்றுமை என்பது வெறுமனே வாயளவில் மாத்திரமல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்கள் இத்தனை காலம் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கான தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை சிங்கள இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவெடுக்கப்பட்டால் தான் இந்த நாடு மீட்சி பெறும். ஆனால் அதற்கு இந்த இனவாதத் தலைவர்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.

எனவே காலி முகத்திடலிலே போராடிக் கொண்டிருப்பவர்களே, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களே கடந்த காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைத் தடுத்து, தமிழ் மக்களுக்கான விமோசனம் கிடைக்கு வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்று காலி முகத்திடலிலே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ் இளைஞர்கள் நிரம்பியிருப்பார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்து மக்கள் மீண்டெழுவது மிகவும் கடினம். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தற்போது நாடியிருக்கிறார்கள். அதன் உதவி அந்தளவு விரைவில் கிடைக்கும் என்பதற்குச் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

Posted in Uncategorized

டெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்க காரியாலயத்தில் டெலோவின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்?-மே பதினேழு இயக்கம் கேள்வி

மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவி யாருக்கு பயன்படும்? எனக் கேள்வி எழுப்பியுள்ள மே பதினேழு இயக்கம், தமிழர்களின் வரலாற்றுத் தேவையை நிறைவேற்றிடும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு தவறவிடக் கூடாதெ வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைப் பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படை அதன் இராணுவதிற்கு மேற்கொள்ளும் ஆயுத செலவு. உலகின் மிகப்பெரிய இராணுவத்தை கொண்ட சீனா, ரசியா, அமெரிக்க போன்ற நாடுகளில் 1000 பேருக்கு 2 பேர் வீதமே இராணுவத்தினராக இருக்கும் பொழுது, இலங்கையில் 14 பேர் இராணுவத்தில் உள்ளார்கள்.

ஈழத்தின் தமிழர்-தமிழ்இசுலாமியர்-மலையகத்து தமிழ் மக்கள் தொகையை கழித்துவிட்டு பார்த்தால் இது இன்னும் அதிக விகிதமாக இருக்கும். ஏனெனில் இலங்கை இராணுவமென்பது சிங்களர்களுக்கு மட்டுமானது. இந்த கட்டமைப்பினை பாதுகாக்கவும், இதன் இராணுவத் தலைமைகளின் ஊழலாலும் இலங்கை பொருளாதாரம் பலியிடப்பட்டது.

2009 தமிழினப்படுகொலையின் போர் முடிந்து, கடந்த 13 ஆண்டுகளில் ரூ.1,85,000 கோடி இராணுவத்திற்கு செலவு செய்யப்பட்டது. இது இன்றும் தொடர்கிறது. இலங்கை மக்களுக்கு பெட்ரோல், டீசல், உணவு, மருந்து பற்றாக்குறை உள்ளதை கவலையுடன் பார்க்கும் உலகிற்கு, இலங்கை இராணுவத்தில் இதற்கான தட்டுப்பாடு இல்லாதது கண்களில் படுவதில்லை. இன்றும் அதிக செலவு பிடிக்கும் இராணுவ-கடற்படை பயிற்சிகளை செய்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்தியாவை தவிர வேறு நாடுகள் அருகில் இல்லாத பாதுகாப்பான நாட்டிற்கு அன்றாட இராணுவ பயிற்சி நிகழ்கிறது. மேலும், ஜெர்மனி-பிரான்ஸ்-இங்கிலாந்தை விட பெரிய இராணுவத்தை வைத்திருக்கிறது இலங்கை. இந்த பெரும்படை தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதியிலேயே நிலை கொண்டுள்ளது. தமிழர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதோடு தமிழர்களை படுகொலையும் செய்கிறது. மேலும், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கிறது.

இலங்கையின் இந்த இராணுவக் கட்டமைப்பை கலைக்காமல் இலங்கையின் பொருளாதாரம் மீளாது. இந்த இராணுவத்தை சர்வதேச விசாரணைக்கு ஒப்படைக்காமல் ஈழத்தமிழர்களின் வாழ்வு வளம்பெறாது. இந்த இராணுவத்தையும், அதன் தலைமைகளான இராஜபக்சே குடும்பம், சிங்கள பெளத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளாமல், இன்று நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முயல்வது சனநாயக விரோதம் என்பது மட்டுமல்ல, இனவெறி கூட்டத்தை பாதுகாப்பதாகிவிடும்.

மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தங்களை கைச்சாத்திடாமல், கொல்லபட்ட மீனவர்களின் கொலை வழக்கை நடத்தி இலங்கை கடற்படை மீது நடவடிக்கையை துவக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் கோரிக்கை வைப்பதன் மூலம் நம் மீனவ மக்களின் நலனை முன்னிறுத்த முடியும். இதற்கான சரியான காலகட்டம் இதைத்தவிர வேறென்னவாக முடியும்? இராஜபக்சே சகோதரர்கள், இராணுவத் தளபதிகளை சர்வதேச இனப்படுகொலை விசாரணைக்கு ஒப்படைப்பதும் தமிழ்நாட்டு தமிழர்களின் பெரும்பொறுப்பு.

இந்த நடவடிக்கைகளே ஈழத்தமிழர்களுக்கும், ஈழ இசுலாமியருக்கும், மலையகத் தமிழர்களுக்கும், சிங்கள ஏழைகளுக்கும் நாம் செய்யும் பேருதவியாகும்.

ஏனெனில், இம்மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிய சிங்கள ஆட்சியாளர்களையும், இன-மதவெறியர்களையும் பாதுகாக்கும் பணியில் இந்திய பார்ப்பனிய-இந்து மதவெறியர்கள் இறங்கியுள்ள நிலையில், அதே நடவடிக்கைகளில் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் ஈடுபடுத்துவது இந்துத்துவ-சிங்கள வெறியர்களை இப்போதிருக்கும் நெருக்கடியிலிருந்து பாதுகாக்கவே செய்யும்.

உலகெங்கும் இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களை பொருளாதார நெருக்கடி கொண்டே சனநாயக ஆற்றல்கள் வீழ்த்தினார்கள். இவ்வழியிலேயே இசுரேல் மீதான பொருளாதாரத் தடையை பாலஸ்தீனர்கள் கோருகிறார்கள். இவ்வழியிலேயே தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இனவெறி அரசை தனிமைப்படுத்தி பலமிழக்கச் செய்து வீழ்த்தினார்கள்.

இது போன்ற நிலைப்பாட்டையே வங்க இனப்படுகொலைக்காக பாகிஸ்தான் மீது இந்தியா கோரியது. கடந்த காலத்தில் தாலிபன்கள் மீது பொருளாதார ஒதுக்குதலை இந்தியாவும், உலகும் செய்தது. இந்நடவடிக்கைகளால் சாமானியர் பாதிக்கப்பட்டாலும், அம்மக்கள் மீதான நெருக்கடிக்கு காரணமான பயங்கரவாத அரச கட்டமைப்பு தகர்க்கப்பட்டது.

ஆகவே, எவ்வித மனித உரிமை-சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மனிதாபிமான உதவியென்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். குற்றவாளி சிங்கள ஆட்சியாளர்களை அப்புறப்படுத்தி தமிழர்களை இராணுவப் பிடியிலிருந்து மீட்டு, தமிழர் பகுதிகளுக்கான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டாத கட்டுபாடற்ற பொருளாதார உதவி, இராஜபக்சேக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பேருதவியாகும். அதை தவிர்த்து சிங்களப் பேரினவாதத்தின் கழுத்தில் தூக்குக்கயிரை மாட்டும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இழக்க வேண்டாம்.

சிங்கள பேரினவாதத்தோடு மோதி வீழ்த்தும் வாய்ப்புள்ள இச்சமயத்தை வீணடித்திடாமல் செயல்திட்டத்தை வகுக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டின் திமுக அரசிற்கு உண்டு.

இந்த வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழீழத் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, பொதுவாக்கெடுப்பு, அரசியல் சிறைவாசிகள் விடுதலை, தமிழர் பகுதியிலிருக்கும் இராணுவ வெளியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான பொறுப்புகூறல், மேலதிகமாக இனப்படுகொலை, போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணைக்கு கோரிக்கைகளை இந்திய அளவில் மாநில கட்சிகளிடத்தில் முன்நகர்த்தும் ஆக்கப்பூர்வ அரசியலே இன்றையத் தேவை.

இவற்றையே தமிழ்நாடு அரசிடம் உலகத் தமிழினம் எதிர்பார்க்கிறது. அதனையே தமிழ்நாடு அரசிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கையாக முன்வைக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

கோட்டா அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி – குரலற்றவர்களின் குரல் அமைப்பு

தற்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசின் செயற்பாடானது வடக்கிற்கு ஒரு நீதி தெற்கிற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை அழைப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கடந்த 30ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பானது நீண்ட காலமாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் அடிக்கடி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்படும் நிலை காணப்படுகின்றது.

அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பல தடவைகள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கொழும்பில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாத்திரம் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை இந்த நாட்டில் வடக்கு கிழக்கிற்கு ஒரு நீதி தெற்கு ஒரு நீதி என்பதைப் பறைசாற்றுகின்றது.

குறிப்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் ஆகிய நான் பல தடவைகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். எனவே எனது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாகவே இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன் என்றார்.

Posted in Uncategorized