அரசாங்கம் தீர்வினை தராது, சர்வதேசமே தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும் என வவுனியாவில் ஐந்து வருடங்களை கடந்து தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

தமது போராட்டம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவிக்கும் போது,

“எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக வந்து இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்.

வவுனியாவில் கடந்த 1847ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வருகின்றோம். தற்போது இடம்பெற்றுவரும் ஐநா சபை மாநாட்டில் எங்களுக்கு தீர்வு கிடைக்கும், எங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை எனவும் மாறாக, போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கச் செயலாளர் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் சர்வதேச மகளிர் தினத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலே, நாம் மகளிர் தினத்தினைத் துக்கதினமாக கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.யுத்தகாலத்திலே உறவுகளைத் தொலைத்துவிட்ட தாய்களாய், சகோதரிகளாய், துணைவிகளாய், ஏனைய உறவுகளாகவும் நாம் தற்போது வீதிவீதியாக கண்ணீரும் கம்பலையுமாக எமது உறவுகளைத் தேடிவருகின்றோம்.

இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகளையும், வெள்ளைவானில் கடத்தப்பட்ட உறவுகளையும், வீடுவீடாக இராணுவம் கைதுசெய்த உறவுகளையும் நாம் இதுவரை இலங்கை அரசிடம் கேட்டு பயனளிக்காதநிலையில், தற்போது சர்வதேசத்திடம் நீதிகேட்டு போராடிவருகின்றோம்.இந்தப் போராட்டந் தொடங்கி ஐந்துவருடங்கள் பூத்தியாகியுள்ள சூழலில் எங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றோம்.

இவ்வாறு நாம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, எமது தொடர் போராட்டத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான முயற்சிகளே இங்கு இடம்பெறுகின்றன. எமது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை என்பதுடன், எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கவேண்டுமென யாரும் எண்ணுவதாகவுமில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டுபோர் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்த உறவுகளைக் கேட்டு ஐந்துவருடங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். தற்போது நாம் எமது தொடர்போராட்டத்தின் ஆறாவது வருடத் தொடக்கத்தில் இருக்கின்றோம்.எனினும் இறுதி உயிர் இருக்கும்வரையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டமானது தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கெண்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கதும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் கேட்டுக்கொண்டார்.அத்துடன் சர்வதேச நாடுகளின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.(15)

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றிருப்பது அவசியம் என்பதுடன் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அதன் முதலாவது பயணம் சென்னையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி உள்ளடங்கலாக பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டியது?

யதீந்திரா

இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின் இராணுவத்தை ஆயுதங்களை கைவிடுமாறு ரஸ்யா அறிவித்திருக்கின்றது. தனது நாடு – எதற்காகவும் எவருக்காகவும் அச்சம் கொள்ளவில்லையென்று, உக்ரெயின் ஜனாதிபதி அறிவித்திருக்கின்றார். 2014இல், ரஸ்ய சார்பான உக்ரெயின் ஜனாதிபதி பதவிலிருந்து அகற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ரஸ்யா தாக்குதலை தொடுத்தது. உக்ரெயினின் கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தில், 14000 அளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டை சுதந்திர குடியரசுகளாக ரஸ்யா அறிவித்தது. இந்த பகுதிகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களை ரஸ்யா இயக்கிவருகின்றது.

ரஸ்யா, நேட்டோ விரிவாக்கத்தை தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றது. இந்த பின்னணியில் உக்ரெயினை, மேற்குலகத்தின் கைப்பாவையென்றே புட்டின் குற்றம்சாட்டிவருகின்றார். இந்த பின்னணியில்தான், 2014இல், ரஸ்ய ஆதரவு உக்ரெயின் ஜனாதிபதியின் வீழ்ச்சியை தொடர்ந்து, உக்ரெயினின் கிழக்கு பகுதியை ரஸ்யா ஆக்கிரமித்தது. உக்ரெயின், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைக்கப்படமாட்டாது என்னும் உத்தரவாதத்தை புட்டின் எதிர்பார்த்திருந்தார், உக்ரெயின் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்துவிட்டால், நேட்டோவின் விரிவாகத்தால் ரஸ்யாவின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிவிடுமென்று புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் உக்ரெயின் மீதான ரஸ்ய இராணுவ நடவடிக்கை தொடங்கியது.

ரஸ்யாவின் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உள்ளிட்ட நாடுகள் ரஸ்யாவின் மீது பொருளாதார தடையை அறிவித்திருக்கின்றன. ஆனாலும் புட்டின் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்கவில்லை. ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இராணுவ நடடிவக்கையை நிறுத்துமாறு கோரியபோதும், புட்டின் அதனை கருத்தில் கொள்ளவில்லை. ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் உக்ரெயினின் கிழக்கு பகுதிகள் இரண்டையும், சுதந்திர நாடுகளாக ரஸ்யா அறிவித்திருக்கின்றது. இப்போது, முழு உக்ரெயினையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது. அந்த பகுதியில் ரஸ்யாவின் நிரந்தரமான படைத்தளங்களை நிறுவுதற்கும் தீர்மானித்திருக்கின்றது.

ரஸ்ய – உக்ரெயின் பிரச்சினையானது அடிப்படையில் பனிப்போர் கால அரசியலில் தொடர்ச்சி. சோவியத் யூனியனின் உடைவிலிருந்து தோன்றிய நாடுதான் உக்ரெயின். உக்ரெயின் ஒரு நாடல்ல, ஒரு தேசத்திற்கான தகுதிநிலையையும் உக்ரெயின் கொண்டிருக்கவில்லை என்பதே புட்டினின் வாதமாக இருக்கின்றது. புட்டினின் வாதத்தின்படி, சோவியத் யூனியனிலிருந்து உடைவுற்ற அரசுகளில், ரஸ்யாவை தவிர, எவையுமே உண்மையான நாடுகள் அல்ல. இந்த அடிப்படையில்தான், சோவியத் யூனியனிலிருந்து பிளவுற்ற நாடுகளை ரஸ்யா அணுக முற்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் ஜோர்ஜியாவிலிருந்து, உடைவுற்ற இரண்டு பகுதிகளை கிறிமியாவுடன் இணைப்பதை ரஸ்யா அங்கீகிரித்தது. இதன் தொடர்ச்சியாகவே உக்ரெயினின் கிழக்கு பகுதிகளை சுதந்திர பகுதிகளாக ரஸ்யா அறிவித்தது.

ரஸ்யாவின் இராணுவ பலத்தை பொறுத்தவரையில், உக்ரெயினின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ரஸ்யாவின் ஆதிக்கத்திற்கு அடிப்படையானதொன்றாகும். முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியான ஜமி காட்டரின் பாதுகாப்பு ஆலோசகர், சிபிக்னியு பிரஸ்சன்ஸ்கி, 1990களில் இந்த விடயத்தை எதிர்வு கூறியிருந்தார். அதாவது, உக்ரெயின் இல்லாத ரஸ்யா, ஒரு பேரரசாக வரமுடியாது, உக்ரெயின் ரஸ்யாவிற்கு அடிபணிந்திருந்தால், ரஸ்யா தன்னிச்சையாகவே ஒரு பேரரசாகிவிடும். ஆனால் உக்ரெயின் மேலும், மேலும் மேற்கின் செல்லப்பிள்ளையாகிக் கொண்டிருக்கும் சூழலில், புட்டின், உக்ரெயினை அடிபணியச் செய்வதற்காக, இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை எடுத்திருக்கின்றார். ஏனெனில், நேட்டோ விரிவாக்கத்தை கட்டுப்படுத்துவதும், உக்ரெயின் ஜரோப்பிய ஒன்றியத்திற்குள் செல்வதை தடுப்பதும், சாத்தியமற்ற ஒன்றென்றே புட்டின் நிர்வாகம் கருதுகின்றது. இந்த பின்னணியில்தான் இராணுவ பலத்தை பிரயோகிக்கும் முடிவை ரஸ்யா எடுத்திருக்கின்றது. இது எப்படியானதொரு யுத்தமாக வடிவம் பெறும் அல்லது ஒரு சமர முயற்சிக்கான ஒத்திகையா என்பதை பொறுத்திருந்தே நோக்க வேண்டும்.

இந்த இடத்தில் எழும் கேள்வி? ரஸ்யா இவ்வாறு இராணுவ பலத்தை பிரயோகித்து, உக்ரெயினை ஆக்கிரமிக்க முற்படும் போது, உலக கட்டமைப்பான ஜக்கிய நாடுகள் சபையால் ஏன் எதனையும் செய்ய முடியவில்லை? எந்த சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் ரஸ்யா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்கின்றது? இந்த கேள்விக்கான பதில் தொடர்பில்தான் தமிழ் அரசியல் சமூகம் அதிகம் சிந்திக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சூழலில் சர்வதேச கட்டமைப்புக்கள் தொடர்பில் அளவுக்கதிகமான நம்பிக்கை ஊட்டப்பட்டிருக்கின்றது. ஜ.நா மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் அலாதியான கதைகள் சொல்லப்படுகின்றது.

ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். அதாவது, சர்வதேச ஒழுங்கு என்பது அடிப்படையில் பலம் பொருந்திய நாடுகளால் தீர்மானிக்கப்படுவதாகும். பலம்பொருந்திய நாடுகளின் தீர்மானத்திற்கு அடிப்படையாக இருப்பது அந்த நாடுகளின் இராணுவ பலமாகும். பலம்பொருந்திய நாடுகளின் பாதுகாப்பிற்கு நெருக்கடி ஏற்படுமாக இருந்தால் – அந்த நாடுகளின் இறுதி தெரிவு இராணுவ வழிமுறையாகவே இருக்கும். இந்த பின்னணியில்தான் அமெரிக்கா ஈராக்கின் மீது தாக்குதலை மேற்கொண்டு, சதாம் உசைனின் இராணுவத்தை அழித்தது. பின்லெய்டனின், செப்டம்பர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதலை மேற்கொண்டு, 20 வருடங்கள் அங்கு நிலைகொண்டது. இந்த அடிப்படையில்தான் ரஸ்யா தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகுவதாக குற்றம்சாட்டி, அயல் நாடான உக்ரெயின் மீது படையெடுத்திருக்கின்றது. எந்த சட்டங்களின் அடிப்படையில் இவைகள் நடக்கின்றன?

 

இந்த விடயங்கள் எதனை உணர்த்துகின்றன? அரசல்லாத மக்கள் கூட்டமான நாங்கள், அரசுகளின் உலகத்தில், இலங்கை அரசொன்றை எதிர்த்து நீதியை கோருகின்றோம். அரசுகளின் உலகத்தில் அவ்வளவு எளிதாக தமிழர்கள் கோரும் நீதி கிடைத்துவிடாது. இன்று தமிழ் சூழலில் மியன்மார் – ரொகியங்கா முஸ்லிம் மக்களின் விவாரம் தொடர்பில் சிலர் உணர்ச்சிவசப்படுகின்றனர். ஆனால் அவ்வாறானவர்கள் விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதில்லை. புரிந்துகொள்ளவும் முயற்சிப்பதில்லை. 2017இல், மியன்மாரிலுள்ள ரிங்கின் மானிலத்தில் வாழ்ந்த, ரொகியங்கா முஸ்லிம்கள் படுகொலைக்கு ஆளானார்கள். பர்மிய இராணுவமும், அங்குள்ள பிக்குகள் அமைப்பும்தான் இந்த படுகொலைகளை அரங்கேற்றியது. படுகொலைகளை தொடர்ந்து, சுமார் ஏழு லட்சத்திற்கு மேற்பட்ட ரொகியங்கா மக்கள் பங்காளாதேசில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் நாடான பங்களாதேஸ் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. பிறிதொரு ஆபிரிக்க-முஸ்லிம் நாடான காம்பியா, இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநிதீயென்னும் வகையில், உலகளாவிய முஸ்லிம்களின் கூட்டமைப்பான 57 நாடுகளை கொண்ட (Organisation of Islamic Cooperation) (OIC) இஸ்லாமிய ஒத்துழைப்புக்களுக்கான அமைப்பே, காம்பியாவை இந்த விடயத்தில் ஈடுபடுத்தியது. பங்களாதேஸ் அடைக்கலம் கொடுத்ததற்கு பின்னாலும் குறித்த அமைப்பே இருந்தது. உலகளாவிய இஸ்லாமிய ஒத்துழைப்பு என்னும் வகையிலேயே இந்த விடயம் கையாளப்பட்டது.

இதன் காரணமாக, பங்களாதேஸ் பிரமதமர் ஷேக் ஹசினாவை, ‘மனித நேயத்தின் தாய்’ என்று இந்த நாடுகள் வர்ணிக்கின்றன. ஆனால் அந்த மனித நேயத்தின் தாய், இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பான தீர்மானங்களின் போது, இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தார். ரொகிங்கியர்களின் விடயத்தில் மனித நேயம் காண்பித்த, பங்களாதேஸ், ஏன் இலங்கை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை? விடயங்களை ஆழமாக புரிந்துகொள்வதற்கு இது ஒரு நல்ல உதாரணம். ஏனெனில், நாடுகளின் முடிவுகள் எவையும் மனித உரிமைகளின் அடிப்படையிலோ, அல்லது மனித நேயத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதில்லை. மேற்குலக நாடுகளுக்கு மனித உரிமைகள் சார்ந்து கரிசனையிருந்தாலும் கூட, அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும், நாடுகளுக்கிடையிலான உறவுகளை கருத்தில் கொண்டுதான் அவர்கள் முடிவுகளை எடுப்பர். இதனை விளங்கிக் கொள்ளாமல் கருத்துக்களை முன்வைப்பது அபத்தம். யுத்தம் முடிவுற்று பன்னிரெண்டு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட, தமிழ் மக்களுக்கு பாரியளவில் அநீதியிழைக்கப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு, முழுமையாக தமிழர்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஒரு நாடு இருக்கின்றதா? சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் வாதங்கள் செய்வோர், இதுவரையில் ஒரு நாட்டின் ஆதரவையாவது பெற்றிருக்கின்றனரா? இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வது என்ன? நாம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கின்றோம்.

இந்த நிலையில் பலமான நண்பர் ஒருவர் இல்லாமல் இந்த அரசுகளில் உலகில் நம்மால் மூச்சுவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் நாம் இந்தியாவின் ஆதரவை எவ்வாறு பெறுவதென்று சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவென்பது வெறுமனே தமிழ் நாடு மட்டுமல்ல. ராஜீவ்காந்தியை ‘நாங்கள்தான்டா கொன்றோம்’ – என்று கூறுகின்ற கூட்டங்களோடு நிற்பதல்ல. இதன் மூலம் ஒருபோதும் புதுடில்லியை நோக்கி செல்ல முடியாது. புதுடில்லியை நோக்கி செல்லாமல் அரசுகளின் உலகத்தில் தமிழர்கள் மூச்சுவிட முடியாது. புதுடில்லியை நோக்கிச் செல்வதென்பது, பேசுவது போன்று, எழுதுவது போன்று, இலகுவானதல்ல. இந்தியா தமிழர் விடயத்தில் கரிசனை கொண்டிருந்தாலும் கூட, தமிழர் தரப்பால் விடப்பட்ட கடந்த காலத் தவறுகள் புதுடில்லிக்கு சில கசப்பான அனுபவங்களை கொடுத்திருக்கின்றது. இதனை போக்கும் வகையில் தமிழர் தரப்புக்கள் செயலாற்ற வேண்டும். அதிகம், அதிகம், புதுடில்லியோடு ஊடாடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியது ஒர் ஆரம்பமாக இருக்கலாம் – ஆனால் முடிவல்ல. முடிவிற்கு, இன்னும் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டும். ஏனெனில் நிலைமைகள் அதிகம் மாற்றமடைந்துவிட்டது. முன்னர் இந்தியாவிடம் எதிர்பார்த்ததை இப்போது எதிர்பார்க்க முடியாது. இப்போதைக்கு எதனை எதிர்பார்க்க முடியுமோ – அதனைத்தான் எதிர்பார்க்க முடியும்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தை  அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சமர்ப்பித்திருந்தார்.

இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியின் ஆட்சேபனைகளை பதிவு செய்துகொள்ளுமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டமூலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தங்கள் சபையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

Posted in Uncategorized

32 ஆண்டுகளுக்கு பின்னர் பேரறிவாளனுக்கு பிணை!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இவர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்குச் சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், தற்காலிக விடுப்பிலிருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியைக் கருத்திற்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தங்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

இவர்களில் பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது.
பேரறிவாளனின் 32 ஆண்டுக்கால சிறைவாசத்தில் இப்போது தான் முதன்முதலாகப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

“இவருக்குப் பிணை வழங்க மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை வழங்குகிறோம்” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இக் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அந்தத் தூக்குத் தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார்.

அடுத்ததாக, இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்குத் தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், “பேரறிவாளன் இந்தியத் தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்” என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

“302ஆவது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்” எனத் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “302ஆவது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார்.

மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். முடிவில், பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இராணுவத்தினரின் கீழ் செல்லும் முக்கிய பதவிகள்

பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் S.M.R.W டி சொய்சாவை நியமிக்க தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் இதற்கு முன்னர் இலங்கை நில மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு நாளைய தினம் தீர்வு காணப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டு டீசல் கப்பல்கள் தற்போது தரையிறங்கியுள்ள நிலையில், மொத்த எரிபொருள் திறன் 65,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை நாட்டின் பல்வேறு அமைச்சுகளின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம்! மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுப்பதற்காக, மத்திய வங்கியினால் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நெகிழ்வுத் தன்மைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி நேற்றைய தினம் 225 ரூபா 20 சதமாகவும், விற்பனைப் பெறுமதி 229 ரூபா 99 சதமாகவும் பதிவாகி இருந்தது.

இதற்கமைய, வெளிநாட்டுப் பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் அமெரிக்க டொலருக்காக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 8 ரூபா மேலதிக கொடுப்பனவுடன், அவர்களுக்கு டொலர் ஒன்றுக்காக 238 ரூபா அளவில் கிடைக்கும்.

எனவே, வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதற்கான ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்த வேண்டாம் – சீனா வலியுறுத்தல்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று சீனா பேரவையில் வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை மீதான விவாதத்தில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த நிலையில், இலங்கை தொடர்பான விவாதத்தின் இரண்டாம்நாள் அமர்வு நேற்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய சீனாவின் பிரதிநிதி,

“இலங்கை குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.

அதேவேளை எமது நட்புறவு நாடு என்ற ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்தல், மேம்படுத்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். அதேபோன்று நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக்கொண்ட செயற்பாடுகளும் பாராட்டத்தக்கவையாகும்.

எனினும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானமானது, பக்கச்சார்பற்ற தன்மை, அரசியல் ரீதியான பாகுபாடற்ற தன்மை, தேர்வுசெய்து இயங்காத தன்மை உள்ளிட்ட பேரவையின் ஸ்தாபகக்கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகக் காணப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் உறுதிப்பாடு, இறையாண்மை ஆகியவற்றுக்கு பேரவை மதிப்பளிக்கவேண்டியது அவசியமாகும். அதேபோன்று அந்நாட்டின் தேசிய ரீதியான வரையறைகளுக்கு அமைவாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கான பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இடமளிக்கவேண்டும்.

இலங்கைக்குள் தலையீடுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆயுதமாக மனித உரிமைகளைப் பயன்படுத்துவதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தவிர்த்துக்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Posted in Uncategorized