உள்ளூராட்சிமன்ற தேர்தலை இந்த வருட இறுதியில் எமக்கு நடத்த முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

உள்ளூராட்சிமன்ற தேர்தலை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஒருவருடகாலத்துக்கு ஒத்திவைத்திருக்கின்ற போதும் தேவை என்றால் அதனை இந்த வருட இறுதியில் எமக்கு நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புன்சி ஹேவா தெரிவித்தார்.

தேர்தல் சர்ச்சைகளை தீர்ப்பதற்கான சட்டம் தொடர்பான பயிற்சி கருத்தரங்கு மாத்தளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்ககையில்,

உள்ளூராட்சிமன்ற தேர்தலை உரிய காலத்துக்கு நடத்த முடியாது என தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தேர்தலை ஒருவருட காலத்துக்கு ஒத்திவைத்துள்ளார். அரசியலமைப்பில் அமைச்சருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழுக்கு கிடைக்கின்றது. அதன் பிரகாரம் இந்த வருடம் பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியுமாகும்.

தேர்தல் மக்களின் ஐனநாய கஉரிமையாகும் அதனால் தேர்தல் ஆணைக்குழு என்றவகையில் நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருக்கின்றோம்.

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான தேவையான சூழல் நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றிக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என்றார்

‘கஜேந்திரகுமார் தனிநாட்டுக்கு போராட தயாரெனில் நானும் தயார்’: என்.சிறிகாந்தா!

தனிநாட்டுக்கு போராடுவதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எது சாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சிறிகாந்தா.

இன்று (16) யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் 6 தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1988 நவம்பரில் பிரேமதாசா ஜனாதிபதியானதும் விடுதலைப் புலிகளுடன் பேச்சை ஆரம்பித்தார். இந்த பேச்சில் என்ன பேசப்பட்டது என எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்லலாம். இனப்பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. பேச்சின் மையப்பொருள், அப்போது வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையை எப்படி திருப்பி அனுப்புவது என்பதுதான்.

விடுதலைப் புலிகளிற்கு, தமிழீழத்திற்கான போராட்டத்தை தொடர்வதற்கு அந்த தேவையிருந்தது.

பிரேமதாசவை பொறுத்தவரை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை சிங்கள தீவிரவாதியாக எதிர்த்தவர்.கையெழுத்திட இந்திய பிரதமர் வந்த போது, அந்த நிகழ்வை புறக்கணித்தார்.

இரு தரப்பிற்கும் பொதுவான நலனிருந்தது. அமைதிப்படை வெளியேறிய பின்னர் அந்த பிணைப்பு அல்லது கருத்தொற்றுமை அடிபட்டு போய்விட்டது. இதுதான் பிரேமதாச காலத்தில் நடந்தது.

அதன்பின்னர் விஜயதுங்க வந்தார். அவரைப்பற்றி பேசுவதை விட, பேசாமல் விடலாம்.

அதன் பின்னர் சந்திரிகா அம்மா வந்தார். அவர் 1994 கார்த்திகையில் மகத்தான வெற்றியை பெற்று வந்த பின்னர், பேச்சுவார்த்தை ஆரம்பித்தது. ஒரு வருடம் புலிகளுடன் தேன்நிலவு நீடித்தது. 1995 இல் திருகோணமலையில் புலிகள் தாக்குதல் நடத்தியதுடன், அறுந்து போனது.

சந்திரிகா – புலிகள் பேச்சு, பூர்வாங்க நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே இருந்தது என்றுதான் கொள்ள முடியும் .

பிறகு யுத்தம் நடந்த போது, 2000 இல் தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கிற்கு சில அதிகாரங்களை கொடுத்து, இலங்கையை பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமாக மாற்றும் திட்டத்தை கொண்டிருந்தார். அதில் முன்னேற்றகரமானது. ஆனால் மற்ற விடயங்களில், பௌத்தத்திற்கு முன்னுரிமை, மத்திய அரசு சில விடயங்களை தக்க வைத்திருந்தது. குறிப்பாக காடுகள் மத்திய அரசின் கீழிருக்குமென்றும், வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பேரில் 3 மாநிலங்களாக பிரிக்கும் திட்டத்தை முன்வைத்தார்.

அப்போது தமிழ் கட்சிகள் எதுவும் அதனை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.கவினர் அந்த பிரேரணையை நாடாளுமன்றத்திற்குள்ளேயே தீ வைத்தனர். நாடாளுமன்றத்திற்குள் ஆவணம் தீ வைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது.

2001 ஒக்ரோபர் மாதத்தில் ரணில் ஆட்சிக்கு வந்த பின் பேச்சுக்கள் மீள ஆரம்பித்தன. பேச்சு நகர்ந்து கொண்டிருந்த போது, சந்திரிக்கா முட்டுக்கட்டையிட்டார்.

புலிகள் முன்வைத்த உள்ளக தன்னாட்சி அதிகாரசபை யோசனை கிட்டத்தட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சந்திரிகா அதை தகர்ப்பதில் வெற்றிகண்டார். உயர்நீதிமன்றமொன்று துணை போனது.

ஒரு பாடம் தமிழ் மக்களிற்கு மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது. ஒரு கட்சி முன்வைத்தால் மறு கட்சி அதை எதிர்க்கும். சந்திரிகா முன்வைத்தால் ரணில் எதிர்த்தார். ரணில் முன்வைத்தால் சந்திரிகா எதிர்த்தார்.

பின் மஹிந்தவின் காலம். அதைப்பற்றி என்ன இருக்கிறது பேச?. யுத்தம் நடந்த போது 13 பிளஸ் என்றார். யுத்தத்தின் பின்னரும் அதையே சொன்னார். என்ன நடந்தது.

சிங்கள தலைவர்கள் தமிழர்களை ஏமாற்றியே வந்திருக்கிறார்கள். எமக்கு 13வது திருத்தத்தை நாடுவதை தவிர இப்பொழுது வேறு தெரிவுகள் இல்லை.

இன்னொரு தெரிவு உள்ளது. தனிநாட்டுக்கு போராடுவது. அதற்கு தம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயாரென்றால், நானும் தயாராக இருக்கிறேன். ஆனால் எமது மக்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியுள்ளது. 30 வருட காலத்தைவிட நீண்ட யுத்தத்தின் விளைவுகளை சுமந்து கொண்டிருக்கும் எமது மக்கள் இப்பொழுதுதான் மெல்லமெல்ல எழுந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு எதுசாத்தியம் என்பதை புரிந்துதான், நாங்கள் 6 கட்சிகள் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த கோரியுள்ளோம்.

13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமா? இதற்கும் அதே கதிதானா என நீங்கள் கேட்கலாம். அது இந்தியாவின் பிரச்சனை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது தமிழர்கள் அல்ல. இந்தியாவும், இலங்கையுமே கையெழுத்திட்டன. இந்தியாவே அதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்னொரு வாய்ப்பு உள்ளது. 1986ஆம் ஆண்டு வெளியான ரெலோவின் வெளியீடான ரெலோ ரைம்ஸ் என்ற ஆங்கில இதழில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களையும், அபிலாசைகளையும் தொட்டு ஒரு கடிதத்தை எழுதியிருந்தேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் பிரித்தெடுக்க முடியாதவை என குறிப்பிட்டிருந்தேன். அந்த கூற்றிற்கு வலுச்சேர்க்கும் சூழலே சீனாவின் தயவில் ஏற்பட்டுள்ளது.

சீனத்தூதர் இங்கு வந்து, இந்தியா எவ்வளவு தூரமென கேட்டது, தூங்கும் புலியை தட்டியெழுப்பும் சம்பவம்.

இப்பொழுது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களும், தமிழீழ மக்களின் தேசிய அபிலாசைகளும் முன்னெப்பொழுதுமில்லாதளவில் நெருங்கி வந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

தம்பி கஜேந்திரகுமார் சொல்வதை போல சமஷ்டியொன்றும் கிடைக்காது. நாங்களும்தான் சமஷ்டியை பற்றி பேசுகிறொம். சிங்கள தலைவர்கள் ஒருபோதும் சமஷ்டிக்கு சம்மதிக்க மாட்டார்கள்.

அப்படியாயின் ஏன் சமஷ்டியை கோருகிறோம் என கேட்கலாம். இன்றைக்குள்ள அரசியல் சூழலில் படிப்படியாகத்தான் முன்னேறி செல்லலாம். 13வது திருத்தம் ஒரு ஆரம்பப்புள்ளி.

எங்களது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தம்பிகள் முன்னொரு சந்தர்ப்பத்தில் சொன்னதை போல, ஒரு ஆரம்பப்புள்ளி. சமஷ்டியை நாம் விட்டுவிடப்போவதில்லை. இந்தியாவின் நலன்கள், இந்து சமுத்திர பாதுகாப்பு போட்டிகள் எமது மக்களின் விடுதலைப் பயணத்தை வழிநடத்தும்.

நம்பிக்கை மட்டும் போதாது. அதற்கு என்ன பொறிமுறை, ஸ்தாபன கட்டமைப்பு, தலைமைத்துவம், மக்களை வழிநடத்தும் ஆற்றல் எல்லாம் எங்களிடம் உள்ளதா என்பது அடுத்த கேள்வி.

வவுனியாவிலிருந்து வட்டுக்கோட்டை வரை வாகனங்களை விட்டு ஆட்களை ஏற்றியிறக்கியிருந்தால் எள்விழுந்தால் எண்ணெயாகும் அளவிற்கு மக்கள்கூட்டமிருந்திருக்கும். நாம் அதில் ஆர்வப்படவில்லை. ஆனால் மக்கள் அரசியல்மயப்பட வேண்டும். விடுதலை விரும்பும் மக்களிற்கு இந்த அரசியல் ஆர்வம் போதாது.

நாம் அனைவரும் பிரிந்து நின்று பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டிருக்காமல், ஒன்றுபட்டு ஓரணியாக வேண்டும். உடையது விளம்பேல் என்பார்கள். நாம் விளம்ப தேவையில்லை. காலம் பல தெரிவுகளை எமக்கு முன் கொண்டு வரும். நாம் பொறுமையாக இருந்தால் பொருத்தமானதை அடையாளம் காணலாம்.

நேற்று ரஷ்ய பாராளுமன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. உக்ரைனில் ரஷ்ய மக்கள் அதிகம் வாழும் 2 பிரதேசங்களை தனிநாடாக்குமாறு அரசை கோரியுள்ளது என்றார்.

11 அரசாங்க பங்காளி கட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது

11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை எதிர்வரும் மார்ச் மாதம் 02ஆம் திகதி அரசாங்கத் தலைவர்களிடம் கையளிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொலர் நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட நாடு எதிர்நோக்கும் பல பாரதூரமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இத்தீர்மானத்தின் மூலம் அரசாங்கத்திடம் முன்வைக்க 11 கட்சிகளைக் கொண்ட குழு தயாராகி வருகிறது.

Posted in Uncategorized

நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்!

நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) இன்று (வியாழக்கிழமை) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி (தூதுவர்) இன்று (வியாழக்கிழமை) காலை 8.45 மணி அளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டிமெல் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது தூதுவர் வரவேற்கப்பட்டு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் மற்றும் சந்திப்பு இடம் பெற்றது.

மன்னாருக்கு வருகை தந்த நோர்வே தூதுவர் மன்னாரில் இடம் பெறும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தார்.

தொடர்ந்து மன்னாரில் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். மன்னார் மாவட்டத்தில் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக தான் கவனம் செலுத்துவதாகவும் மாவட்ட பெண்களின் நிலை குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் மன்னார் பகுதிகளில் இந்திய மீனவர்களின் பிரச்சனை , பறவைகள் சரணாலயம் , காற்றாலை மின்சாரம் , கழிவு மீன் திரவ உரம் தயாரிப்பு, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அரசாங்கத்தின் திருத்த முன்மொழிவுகளை ஏற்கமுடியாது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு ‘பயங்கரவாதம்’ என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இவ்வாண்டுக்கான செயற்திட்டம் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நோக்கிலான சந்திப்புக்கள் கடந்த 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

அச்சந்திப்பின்போது இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சித்திரவதைகள் மற்றும் மிகமோசமானதும் மனிதாபிமானமற்ற வகையிலும் நடாத்தப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் ஒரு ‘தேசிய தடுப்புப்பொறிமுறையாக’ மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஸ்தாபித்தது.

இருப்பினும் தேசிய தடுப்புப்பொறிமுறையானது தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் தனியொரு பிரிவாக நிறுவப்படவுள்ளது. தடுப்புக்காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு கட்டமைப்புக்களிலும் சித்திரவதைகளையும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படுவதையும் தடுக்கும் வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

அடுத்ததாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை நாம் ஆதரிக்கவில்லை. மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

‘பயங்கரவாதம்’ என்ற குற்றமானது அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையின்கீழ் உள்ளடக்கப்படவேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பயங்கரவாதக்குற்றம் தொடர்பில் சாட்சிகள் கட்டளைச்சட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருக்கத் தேவையில்லை என்றும் ஆணைக்குழு கருதுகின்றது.

உரியவாறு வரையறுக்கப்படாத தடுப்புக்காவல் காலம் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். ஆகவே இதனைச் சீர்செய்வதற்கு தண்டனைச்சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவை ஆகியவற்றில் திருத்தங்களும் நீதிமன்றக்கட்டமைப்புச்சட்டம், பிணைச்சட்டம் ஆகியவற்றில் ஏற்புடைய மாற்றங்களும் அவசியமாகின்றன.

அதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 10(டி) சரத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றப்பேரவையின் மேற்பார்வையுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டாலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் மாத்திரமே அவர்களை நீக்கமுடியும் என்பது குறித்தும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, அரச நிர்வாகக்கட்டமைப்புடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்காது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அங்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்தோடு காணாமல்போனோரின் குடும்பத்தினரை அடையாளங்கண்டு, அதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அதிகாரிகளை உள்வாங்குவது மிகவும் அவசியம் என்று பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவ்விரு மாகாணங்களிலும் தமிழ் அதிகாரிகளை இணைத்துக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். அத்தோடு இவ்விடயத்தில் இடம்பெறும் முன்னேற்றகரமான நகர்வுகள் குறித்த அறிக்கையும் பொலிஸ்மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள செயற்பாடுகள் மற்றும் கருத்துச்சுதந்திரம் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்தோடு பெருந்தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான செயற்திட்டமொன்று ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்தும் இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் நாளையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளும் ​நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது.

பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.

சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.

சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.

இரப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் திரு.பண்டாரநாயக்க அவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார். சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார்.

இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.

சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க விசேட பங்கு வகித்தார்.

1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும்.

இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

2012 ஆம் ஆண்டு முதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஆன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேசிய தேர்தல்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் 23ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,மாகாண சபை தேர்தல் ஆகிய இரு பிரதான தேர்தல்களை நடத்தவதற்கான தேவை அத்தியாவசியமானதாக காணப்படும் பட்சத்தில் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள் யோசனைகளை செயற்படுத்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

60 சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும் 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு கடந்தவாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைஇவிருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்தவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதித் தீர்வை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் ஜனா

மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய மற்றும் அவரது சகாக்ககள் குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இவர்கள் கூறுவது இலங்கைத் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இல்லை. இவர்களுக்கு உள்ளது பொருளாதா ரீதியான பிரச்சனையே என்று. பொருளாதாரப் பிரச்சனைக்காகவா இத்தனை வருடங்கள் இத்தனை உயிர்களை, பொருளாதாரத்தை, கலை, கலாச்சாரத்தை, பிரதேசங்களை பறிகொடுத்து வந்திருக்கின்றார்கள் எமது மக்கள்.

கோட்டபாய அவர்கள் வரும்போது திடீரென வானத்தில் இருந்து அல்லது சந்திரமண்டலத்தில் இருந்து குதித்து வந்தாரா என்றே கேட்கத் தோணுகின்றது. ஏனெனில் இலங்கை சுதந்திரமடைந்து தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகத் தான் சமஸ்டிக் கட்சி தமிழரசுக் கட்சி உருவாகி அகிம்சைப் போராட்டம் நடந்தது, அதற்கும் மேலாக இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சனைன இருக்கிறது என்று உணர்ந்த காரணத்தினால் தான் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், 1982ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1984ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியங்கள், ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இன்னும் பல வெளிநாடுகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு கொண்டு வரப்பட்டது, அவை நிறைவேற்றப்படாமல் போனதெல்லாம் எதற்காக?

தமிழரசுக் கட்சி உருவாகி எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியில் பல போராட்டங்களை நடத்தி அடி உதை வாங்கி தமிழர்களுக்கான தீர்வு பிரிந்து செல்வதற்கான தீர்வு என்பதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாக பல சகாப்தமாக கீரியும், பாம்புமாக இருந்து ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் போன்றவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இது ஐக்கியத்தின் உறுதிப்பாடு.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலே தமிழ் மக்கள் உறுதியாக ஐக்கியப்பட்டார்கள். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கொடுத்தார்கள்.

இதனைப் பார்த்துப் பயந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு அதிகாரமற்ற அதிகாரப் பகிர்வு என்ற ரீதியல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கினார். அதன் மூலமாக எங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக எங்களது குரல் ஓங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 1983ம்ஆண்டு பாரிய இனக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அகிம்சைப் போராட்டத்தில் வெறுப்படைந்து ஆயுதம்தான் முடிவு என்று போராட்ட இயக்கங்கள் உதித்துக் கொண்டிருந்த நேரம் ஏற்பட்ட இனக்கலவரமும் இந்தப் போராட்ட இயக்கங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.

அந்த நேரத்திலே இந்;தியா எமக்கு உதவி செய்தது. ஆயுதப் போராட்டம் ஓங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு பேச்சுவாhத்தை. திம்புப் பேச்சுவார்த்தை திம்புப் பேச்சுவார்த்தையிலும் ஐந்து முன்னணிப் போராட்ட இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். உறுதியான ஐக்கியமொன்று கட்டியெழுப்பட்டது. அந்த ஐக்கியம் குழப்பப்பட வேண்டும் என்று சர்வதேசம் கங்கணம் கட்டியது. நாங்கள் உறுதியாக, ஐக்கியமாக இருந்திருக்கின்றோம். ஆனால் துரதிஸ்டவசமாக எமது ஐக்கியத்தைக் குழப்ப வேண்டும் என்ற சர்வதேசச் சதியினூடாக எமது ஐக்கியம் குழப்பப்பட்டது. தமிழர்கள் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் அந்த ஐக்கியம் 2001லே மலர்ந்தது. கடந்த கால கசப்பான சம்பவங்களை நாங்கள் நினைத்துக் கொண்டு ஒருநாள் புதைகுழிகளைத் தான் தோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்;தக் கசப்பான அனுபவங்கைளயெல்லாம் மறந்து 2001லே தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த மிதவாதக் கட்சிகளும், போராட்டக் கட்சிகளும் உறுதியான ஐக்கியத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

பின்னர் 2009 மே 18 வரை உறுதியாக ஐக்கியமாகத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த கட்சிகள் இன்று அந்த ஐக்கியத்தை இழந்து நிற்கின்றோம். இன்று 2009க்கு முன்னர் இருந்த நிலையை விட வடக்கு கிழக்கிலே மிக மோசமான நிலையிலே இருக்கின்றோம். எனவே அந்த ஐக்கியம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு இன்று வடக்கு கிழக்கிலே எமது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மொழி உரிமை முற்றுமுழுதாக மீறப்பட்டிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். எமது வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கும்பிடுவதற்குப் புத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் புத்தர் சிலை உருவெடுக்கின்றன. எங்கெங்கெல்லாம் உயர்ந்த மலைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் புத்தர் வந்து உட்காரும் ஒரு நிலைதான் தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்றது. நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.

அண்மையில் அமைச்சர் நாமல் அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மக்கள்; விடுதலை முன்னணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று. ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி தங்கள் தலைவரையும் மறைந்த உறுப்பினர்களையும் நினைவு கூருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால வடக்கு கிழக்கிலே பொதுமக்களைக் கூட நாங்கள் நினைவு கூர முடியாத ஒரு நிலையிலே இருக்கின்றோம்.

ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் மாகாண சபைகளைக் கூட அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. மாகாணசபைகள் இருந்தால் அவற்றுக்கான நியதிச் சட்டங்களை அவர்களே உருவாக்கும் நிலை இருக்கின்றது. அப்படியாயின் ஒரு நாடு ஒரு சட்டம் அங்கு தோற்றுப் போகும். இந்த நிலையில் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும்.

எமது மறைந்த தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்கள் முன்னர் ஒரு தடவை குறிப்பிடுகையில், இலங்கையின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்று சொன்னார். இன்று அது யதார்த்தமாகவும், நிதர்சனமாகவும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் இன்று தேர்தல் அரசியலுக்காக பிரிந்து நிற்கின்றோம்.

இன்று ஆறு கட்சிகளின் கூட்டம்  நடைபெறுகின்றது. ஆனால் ஐந்து கட்சிகள் தான் இன்று மேடையில் இருக்கின்றன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அழுல்ப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது மாகாணசபைகள் தொடர்பில் அமுல்ப்படுத்தப்பட்ட சரத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் வரைந்துள்ளோம். ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எங்களுக்கு இறுதித் தீர்வு என்று ஒரு போதும் நாங்கள் சொல்லவில்லை.

நாங்கள் தனி ஈழத்திற்காகப் போராடியவர்கள். புலிகள் தமிழீழத்திற்காகப் போராடவில்லை தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதற்காகப் போராடியவர்கள் என்று சொல்கிறார் கஜேந்திரன் அவர்கள். புலிகளின் வாசகமே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதுதான் அதுகூட அவருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

ஆனால் நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முற்றமுழுதாக அமுல்ப்படுத்தக் கோருவது தற்போது இருக்கும் எமது பிரதேசத்தையாவது நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 2009 வரை தமிழீழம் தான் எமது இலக்கு, தமிழீழத்தை அடைய வேண்டும் என்பதற்காக அதற்கு முன் வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டிருக்கின்றோம். அவையெல்லாம் எமது கடந்த கால அனுபவங்கள்.

எங்களை நாங்களே ஆழ வேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் நாங்கள் வாழவேண்டும், எமது பிரதேசஙம் எங்களுக்குத் தேவை என்பது எமது இறுதி இலக்கு. ஆனால் அதுவரை எமது இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அங்கு தமிழர்களின் குடிப்பரம்பல் குறைக்கப்படுகின்றது. கிழக்கு மகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மாகாணசபைகளுக்கு பெரும்பான்மையாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது மட்டக்களப்பில் மாத்திரமே சிங்களப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாத நிலை இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இருபதாயிரத்திற்கு மேல் சிங்கள வாக்காளர்களை அங்கு கொண்டு வருவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் வழிகாட்டலில் எல்லைப் புறங்களில் மர முந்திரிகை என்றும், சேனைப்பயிர்ச் செய்கை என்றும் எங்களது பண்ணையாளர்களின் மேய்ச்சற் தரைகள் கபளீகரம் செய்யப்படுகின்றன.

எனவே இவற்;றைத் தடுப்பதாக இருந்தால் மாகாணசபை உருவாக்கப்படும் போது இருந்த காணி அதிகாரங்கள் முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போதே நாங்கள் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு நாங்கள் ஓரணியில் சேரும் போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 13வது திருத்தத்தைச் சவப் பெட்டிக்குள் வைத்துத் தூக்குகின்றார்கள்

இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் ஒற்றுமைப்படாவிட்டால் எதிர்காலத்தில் எங்கள் இருப்பு என்னவாகும் என்பதை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் போது இவர்கள் சிறுவர்கள். இவர்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றவும் இல்லை, உத்வேகம் கொடுக்கவும் இல்லை. தற்போது கஜேந்திரகுமார் சொல்லுகின்றார் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆயுதப் போராட்த்தைக் கொச்சைப்படுத்துவதென்று.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனுடாக ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்கள் எங்களுக்குப் போதாது என்று தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதம் எழுதியது. நாங்கள் ராஜீவ் காந்தி அவர்களை நேரடியாகவும் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. நாங்கள் அதை அடைவதற்கு ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.