இலங்கை வருகிறார் நரேந்திர மோடி !

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 5 ஆவது பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பிம்ஸ்டெக் அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் அரச தலைவர்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகிறது.

4 ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைப்பெறவுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பிம்ஸ்டெக் குழுவினர்களிடம் அறிவித்துள்ளார்.

கடந்த 6ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.ஜயசங்கருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிம்ஸ்டெக் மாநாடு குறித்தும்,மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு இம்முறை இலங்கையில் நடைப்பெறவுள்ளதை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் டென்சின் லெக்ப்ஹெலிடம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்..

2018ஆம் ஆண்டு தொடக்கம் 2020ஆம் ஆண்டு வரை பிம்ஸ்டெக் மாநாட்டின் தலைமை பொறுப்பினை இலங்கை வகித்துள்ளது.

பிம்ஸ்டெக் பங்களாதேஷ்,பூட்டான்,இந்தியா,மியன்மார்,நேபாளம்,இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் ஏழினை கொண்ட பன்னாட்டு அமைப்பாகும்.வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவது இவ்வமைப்பின் நோக்கமாகும்.

பிம்ஸ்டெக் முக்கிய 14 துறைகளை உட்படுத்திய வகையில் நடைபெற்றதோடு தற்போது அது ஏழு துறைகளாக குறைக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துறைக்கு இலங்கை தலைமை வகிக்கிறது.

பங்களாதேஷ் வியபாரம் மற்றும் முதலீட்டு துறைக்கும், பூட்டான் சுற்றாடல் மற்றும் காலநிலை சீர்கேடுட்டு துறைக்கும்,மியன்மார் விவசாயம் மற்றும் உணவுப்பாதுகாப்பு துறைக்கும்,இந்தியா பாதுகாப்பு துறைக்கும்,நேபாளம் தனிநபர் தொடர்பு மற்றும் தாய்லாந்து தொடர்பாடல் துறைக்கும் தலைமை வகிக்கிறது.

4ஆவது வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்பம் மற்றும் பொருளாதார உச்சி மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்றது.3ஆவது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு 2014ஆம் ஆண்டு மியன்மாரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஞானசார தேரர் பள்ளிவாசல் விஜயம் : முஸ்லிம் தரப்புக்களுக்கிடையில் முறுகல்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வேறு இனத்தை செந்தவர்களை அழைத்து பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

நிக்கவெரட்டிய தும்மல சூரிய பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 4ஆம் திகதி இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பள்ளிவாசலில் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.

விழா முடிந்ததும் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது, மோதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்த நெருக்­கு­வா­ரங்கள் தற்போது புதிய வடி­வத்தை எடுத்துள்ளன.

இது­வரை முஸ்லிம்களை வெளிப்புற சக்திகள் மூலம் சீண்டி வந்த தரப்­பினர், தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியிலேயே கருத்து முரணபாடு­களைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்­கி­யுள்ளதை அவதானிக்க முடி­கி­றது. இந்த சந்­தே­கத்தை சமூ­கத்தில் உள்ள பலரும் தற்­போது எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி’ தோற்றுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவ­கா­ரங்­களில் இந்த செய­லணி தீவிர அக்கறை காட்டுவதைக் காண முடிகிறது.

அரசாங்கத்தின் பூரண அனுசரணையோடு இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக முஸ்லிம்­களுக்குள் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் இந்த செயலணி மூலம் பூதாகரமாக்கப்படுகின்றன.

உலமா சபை­யினால் கடந்த காலங்­களில் வழங்­கப்­பட்ட பத்வா, காதி நீதி­மன்­றங்கள் மீதான விமர்­சனம் மற்றும் இஸ்லாம் பாட புத்­த­கங்­களில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் என்­ப­வற்றை உதா­ர­ண­மாகக் குறிப்­பி­டலாம்.

எதிர்­கா­லத்தில் மேலும் பல கருத்து முரண்­பாட்­டுக்­கு­ரிய விட­யங்கள் சந்­திக்குக் கொண்டு வரப்­ப­டலாம். இவற்றை முஸ்லிம் சமூகம் எவ்­வாறு சாது­ரி­ய­மாக எதிர்­கொள்ளப் போகி­றது என்­பதே விடை காணப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.

ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து குறித்த செய­லணி தொடர்பில் உள்­நாட்­டிலும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் பலத்த விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஏற்­க­னவே நாட்டில் இனங்­க­ளுக்கு மத்­தியில் முரண்­பா­டு­க­ளையும் வன்­மு­றை­க­ளையும் தோற்­று­விப்­ப­தற்கு முன்­னின்ற ஒருவர் எவ்­வாறு இவ்­வா­றா­ன­தொரு செய­ல­ணிக்குத் தலைமை தாங்­கலாம் என்ற கேள்­வியை பலரும் முன்­வைத்­தனர். இன்றும் அதே கேள்­விகள் தொட­ரவே செய்­கின்­றன. இந்த செய­ல­ணிக்கு ஞான­சார தேரர் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக, அதன் முன் தோன்றி கருத்­துக்­களை முன்­வைக்க முஸ்­லிம்கள் முன்­வ­ர­வில்லை.

விரல்­விட்டு எண்ணக் கூடிய ஓரிரு முஸ்லிம் அமைப்­பு­களும் தனி நபர்­க­ளுமே இந்த செய­லணி முன் பிர­சன்­ன­மாகி தமது கருத்­துக்­களை முன்­வைத்­தனர். இதனை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கருத்­தாக செய­லணி கருத முடி­யாது.

இதே­வேளை இச் செய­லணி தொடர்­பான முஸ்லிம் சமூ­கத்தின் சந்­தே­கங்கள் மற்றும் அதி­ருப்­தி­களை வெளிப்­ப­டுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கையெ­ழுத்து வேட்டை ஒன்­றையும் ஆரம்­பித்­துள்­ளது.

இக் கையெ­ழுத்­துக்கள் மகஜர் ஒன்­றுடன் இணைக்­கப்­பட்டு செய­ல­ணிக்கு அனுப்பி வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த செய­ல­ணியை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்கக் கூடாது என்றும் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தமது அபிப்­பி­ரா­யங்­களை முஸ்­லிம்கள் முன்­வைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களும் ஆங்­காங்கே முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­தையும் காண முடி­கி­றது, எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இச் செய­லணி முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான செய­ல­ணி­யாக தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது என்­பதே எமது கரி­ச­னை­யாகும்.

முஸ்லிம் சமூ­கத்­துடன் கலந்து பேசி தீர்­மா­னிக்க வேண்­டிய விட­யங்­களை அதி­கார பலம் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிக்­கு­மாயின் அது இருக்­கின்ற நெருக்­க­டி­களை மேலும் பூதா­க­ர­மாக்­கவே வழி­வ­குக்கும். அதனை விடுத்து, சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டு­வதன் மூலமே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முற்­பட வேண்டும்.

இதற்­கப்பால் , முஸ்லிம் சமூ­கத்­தினுள் நீண்ட கால­மாக நிலவும் மார்க்க ரீதி­யான கருத்து முரண்­பா­டு­களை பயன்­ப­டுத்தி சில தீய சக்­திகள் குளிர்­காய முற்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டை­யா­கவே காண முடி­கி­றது. டாக்டர் சாபி விட­யத்தில் முன்­னின்று பொய்­களைப் பரப்­பி­ய­வர்கள் இன்று முஸ்லிம் சமூ­கத்தின் மனித உரி­மைகள் பற்றி பாடம் எடுக்கத் தொடங்­கி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது. எவ்­வாறு தேர்­தலில் வாக்­கு­களை கொள்­ளை­ய­டிக்க டாக்டர் சாபியை எதி­ரி­யாக காட்டி முஸ்லிம் சமூ­கத்­தையே குற்­றவாளிக் கூண்டில் நிறுத்தினார்களோ அதேபோன்றுதான் அடுத்த தேர்தலுக்காகவும் முஸ்லிம் சமூகத்தையே தூண்டி, சீண்டி வேடிக்கை பார்க்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

எனவேதான் முஸ்லிம் சமூகத்தின் அங்கமாகவுள்ள சகல தரப்புகளும் இந்த யதார்த்தத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்கு விரோதமானவர்களைப் பழி தீர்க்கிறோம் என்ற போர்வையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவுக்குள் தள்ள களமமைக்க கூடாதென வினயமாக வேண்டுகிறோம்.

Posted in Uncategorized

பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகளில் முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பை வெளியிட்டிருக்கும் அதேவேளை, மிகமுக்கியமான பல்வேறு விடயங்கள் அந்தத் திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறும் எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை புருசேல்ஸில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய, பசுபிக் வெளிவிவகாரசேவையின் பிரதி நிறைவேற்றுப்பணிப்பாளர் பவோலா பம்பலோனி மற்றும் இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் தலைமையிலான பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 24 ஆவது கூட்டம் நட்பானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் நடைபெற்றதுடன் இதன்போது இருதரப்பு நல்லுறவு குறித்த மீளாய்வும் இடம்பெற்றது.

அதுமாத்திரமன்றி ஆட்சி நிர்வாகம், நல்லிணக்கம், மனித உரிமைகள் தொடக்கம் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, காலநிலை மாற்றம், சுற்றாடல், பல்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, பயங்கரவாத முறியடிப்பு வரை இருதரப்பினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்வதற்கான இலங்கையினால் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதன் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேவேளை வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக உருவாகியிருக்கும் இயலாமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளும் கொவிட் – 19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வதற்கான கடப்பாட்டைத் தாம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தது. அதனைக் கேட்டறிந்துகொண்ட இலங்கை, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமத்துவமான முறையில் தடுப்பூசிகள் பகிரப்படுவதை உறுதிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவரும் தொடர்ச்சியான பங்களிப்பிற்குத் தனது பாராட்டை வெளியிட்டது.

அதேவேளை மேற்படி இருதரப்புக்கலந்துரையாடலின்போது ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சிறுபான்மையினர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய தரப்பினரின் உரிமைகள் உள்ளடங்கலாக மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் நல்லிணக்கப்பொறிமுறையிலும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்களின் நடவடிக்கைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெளிவுபடுத்தியது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனும் அதன் பொறிமுறையுடனும் நெருங்கிய தொடர்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பேணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை ஊக்குவித்தது.

அத்தோடு மேற்படி சுயாதீனக்கட்டமைப்புக்கள் சுதந்திரமாகவும் செயற்திறனுடனும் இயங்கவேண்டியதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. அதுமாத்திரமன்றி இக்கலந்துரையாடலின்போது சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உறுதிசெய்தல் என்பவற்றின் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டதுடன் இலங்கையில் நீதி மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளு;ககு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தது.

அதேவேளை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத் திருத்தங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் வரவேற்பை வெளியிட்டபோதிலும், மிகமுக்கியமான காரணிகள் வர்த்தமானி அறிவித்தல் வடிவில் வெளியிடப்பட்டுள்ள திருத்தங்களில் உள்ளடக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியது.

இதுவிடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்திய கரிசனை குறித்து அவதானம் செலுத்திய இலங்கை, சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு அவசியமான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பயன்பாட்டைக் குறைக்குமாறு அறிவுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம், எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிணையில் விடுதலை செய்வதற்குரிய சாத்தியமான நடவடிக்கைளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.

அடுத்ததாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் வர்த்தகத்தொடர்புகள் குறித்து இதன்போது இருதரப்பும் அவதானம் செலுத்தின. அதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உற்பத்திகள் இலங்கையின் சந்தைக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கின்ற இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவாகக் கேட்டுக்கொண்டது.

அதற்குப் பதிலளித்த இலங்கை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாட்டுக்கையிருப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கையாள்வதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெளிவுபடுத்தியது. அத்தோடு இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியான மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.

மேலும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய விதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தமது வரவேற்பை இலங்கை வெளிப்படுத்திய அதேவேளை, கடந்த 2021 செப்டெம்பரில் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் மீளாய்வு நடவடிக்கைகளின்போது இலங்கையைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினராலும் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் நினைவுகூர்ந்தது.

அத்தோடு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைத்திட்டத்தின்கீழ் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, சிறந்த நிர்வாகம் உள்ளடங்கலாக இலங்கை கொண்டிருக்கக்கூடிய 27 சர்வதேசக்கடப்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதுடன் அவற்றை உரியவாறு நிறைவேற்றுவதற்கான தமது கடப்பாட்டை இலங்கை மீளவலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது-சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகள் மூலம் அரசாங்கத்தின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் முடிவிற்கு வராது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மதிப்பிழந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் மோசமான துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், இந்த சட்டத்தை கைவிடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் ஏனைய வர்த்தக சகாக்களும் நிதி வழங்குநர்களும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் இலங்கை அரசாங்கம் இந்த சட்டத்தை கைவிட வேண்டும் என அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை முடிவிற்கு கொண்டுவருவதற்கு உதவாத உத்தேச திருத்தங்களை நிராகரிக்க வேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Posted in Uncategorized

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கியிருந்தது.

Posted in Uncategorized

13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு நகர்வே பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்-கருத்து வெளியிட்டார் விக்னேஸ்வரன்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக ‘ரைம்ஸ் எப் இந்தியா’வுக்கு கருத்துவெளியிட்ட போதே விக்;னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது. இந்தியா தமது நட்பு நாடு என அவர்கள் நடிப்பார்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவுக்கு கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அதன் விளைவாகத்தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் குஜாராத் முதலமைச்சராக இருந்த போது நான் அங்கு சென்றிருக்கின்றேன். அவர் இலங்கையின் போலி வாக்குறுதிகளை நம்பாமல் இலங்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் இந்தியப் பிரதமர் துணிச்சலாகச் செயற்படுவார் என இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எம்மை வலுப்படுத்துவதற்காக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். ஆக, பேராசிரியர் பீரிஸின் பேச்சுவன்மையில் இந்தியா ஏமாற்றுப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

Posted in Uncategorized

கடலில் இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம் – சார்ள்ஸ் எம்பி

இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம்: இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் கடலில் இறப்புக்கள் நடைபெறுகிறது. இது இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதிகார பகிர்வு வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் கொடுக்கப்பட்ட கடிதங்களின் பின்னணியில் சம்பவங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே கடிதம் கொடுத்ததன் பிற்பாடு இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் ஒரு அழுத்தத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கியது இந்தியா. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது.

எங்களுடைய தாய்நாடு இந்தியா, ஆகவே இலங்கையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எல்லா பிரதிநிதிகளும் இணைந்து ஒரு விடயத்தை முன்வைக்கின்ற போது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டையும், இலங்கை தமிழர்களையும் முரண்படுகின்ற வகையில் இலங்கை அரசாங்கம் தந்திரோபாய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் தற்போது ஒரு முரண்பட்ட நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய மக்களை தங்களுடைய சொந்த நிலங்களில், சொந்த கடலில் மீன் பிடிப்பதற்கு ஏற்ற நிலைமையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது வடக்கு கடலில், இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முரண்பட்டு மரணிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

அண்மையில் நான்கு உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதில் சந்தேகம் இருக்கிறது. இந்திய பிரதமருக்கு கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் இந்த சம்பவங்கள் கடலில் நடைபெறுகிறது. ஆனால் கடலில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சண்டை பிடித்தார்கள் என்பதற்கு எந்த விதமான ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் அவர்கள் இறக்கிறார்கள். எப்படி இறக்கிறார்கள்?

என்னை பொறுத்தவரையில், இது இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு ராஜதந்திர நகர்வாக கடற்படையினுடைய செயற்பாடாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? மனோ கணேசன் எம்பி

எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்க முடிவு.

இதன்படி புதிதாக வந்த இந்த ஆட்சியில், காலியின் பழைய உப பிரதேச செயலகங்கள், புதிய முழு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே அரசாங்க வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்திற்கான ஐந்து மேலதிக முழு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உதாசீனம் செய்து விட்டு, இரண்டு உப பிரதேச செயலகங்களை மாத்திரம் பெயரளவில் இந்த அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம். இது இன பாரபட்சமில்லையா? அப்புறம் ஏன் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குருநாதன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்நாட்டில் இன பாரபட்சம் இருப்பதாக கூறியது கண்டு வெளிநாட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ், இந்த வயதான வேளையில், பூமிக்கும், வானத்துக்குமாக குதிக்கிறார்? என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா ஒரு நீண்ட கால மனித உரிமை போராளி. அவரை பான் 2005ம் வருடம் முதல் அறிவேன். கொழும்பில் வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிராக எமது மக்கள் கண்காணிப்பு குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்த பிரதேச செயலகங்கள் பற்றி கூறினாரோ என எனக்கு தெரியாது. ஆனால் இந்நாட்டு இன பாரபட்ச நடப்பில் இது ஒரு சிறிய உதாரணம்.

கடந்த 74 வருட காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு உரிமை பகிர்வு, அபிவிருத்தி இரண்டிலும், பித்தளை, தகர கரண்டிகள்தான் காட்டப்பட்டுள்ளன. அத்தனைக்கும் காலியை விட, நுவரேலியாவில்தான் இந்த பிரதேச செயலக பிரிவில் ஜனத்தொகை அதிகம். நீண்டகாலமாக அங்கே பிரதேச சபைகளே போதுமானளவு இல்லாமல் இருந்து அவற்றை நாமே பிரித்து பெற்றுக்கொடுத்தோம். இப்போது அவற்றுக்கு சமாந்திரமாக பிரதேச செயலகங்களை கேட்டால் கிடைக்கவில்லை. அமைச்சரவை தீர்மானம் எடுத்து வர்த்தமானி பிரகடனம் செய்தாலும் கிடைக்கவில்லை.

ஆனால், அதே வர்த்தமானியில் நுவரேலியாவுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட காலிக்கு கொடுக்கிறீர்கள். நுவரேலியாவில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஒருவேளை நுவரேலியாவில் தமிழர் வாழாவிட்டால் கிடைத்திருக்கும். அப்படியானால், இதுதானே இன பாரபட்சம்?

அரசாங்க உடன்பாடு ஏற்பட்டு வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்படுவதுதான், இதில் மிக முக்கிய அங்கம். அதை நாம் செய்து முடித்து விட்டோம். ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இன்றைய ஆட்சி நாம் விட்ட இடத்தில் இருந்து முன் கொண்டு செல்ல வேண்டும். காலிக்கு மாத்திரம் முன்கொண்டு செல்கிறார்கள். நுவரேலியாவுக்கு இல்லை. அப்படியானால், இந்நாட்டில் நாம் மாற்றாந்தாய் மக்கள். இதுதான் பாரபட்சம்.

வெள்ளி கரண்டி பெரும்பான்மை மக்களுக்கு என்றால், ஏனைய மக்களுக்கு பித்தளை கரண்டி. மலையக மக்களுக்கு பித்தளை கரண்டிகூட கிடைப்பதில்லை. வெறும் தகரம்தான். அதனால்தான் பிரதேச சபைகள் பெறுவதற்கே 1987ல் இருந்து முப்பது வருடங்கள் நமது மக்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்காளி ஆகும்வரை காத்திருந்தார்கள். இத்தகைய இன பாரபட்சங்களைதான் அம்பிகா சற்குருநாதன் எடுத்து கூறியுள்ளார் என்பதை படித்த பேராசிரிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எடுத்து கூறுகிறேன்.

சிறீதரனும் சாள்ஸும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் மாலை, கொழும்பு.3 இலுள்ள பிரதி உயர்ஸ்தானிகரின் வதிவிடத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது,

தமது வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கும், மாதகல் மற்றும், வத்திராயன் பகுதியில் சடலங்களாக கரையொதுங்கிய மீனவர்களின் இறப்புக்கு நீதிகோரியும் வடமராட்சி, சுப்பர்மடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கூர்நோக்குடனான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு மீனவர்களிடையேயும் தொடர்ச்சியாக நிலவிவரும் இம்முரண்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கும், தாய்த்தமிழக உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாக, இலங்கை மீனவர்களின் கடல் எல்லைகளை வரையறை செய்வதற்கேனும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், தமிழ்மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டது.